Sunday, January 31, 2016

அங்காள பரமேஸ்வரி

மேல்மலையனூர் அங்காளம்மன் சக்தி எங்கும் பரவி புகழ் விளங்கிக் கொண்டிருந்த நேரம் அது. போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாத அந்த 14–ம் நூற்றாண்டிலேயே அன்னை அங்காளியின் அருளுக்கும் அன்புக்கும் ஆளான நான்கு பக்தர்கள், மைசூரில் இருந்தனர்.

அங்காள பரமேஸ்வரியை, அடிக்கடி வந்து தரிசனம் செய்ய முடியாத நிலையில் அங்காளிக்குத் தம் இருப்பிடத்தின் அருகிலேயே ஓர் ஆலயம் கட்ட தீர்மானித்தனர். ஆதி சக்தியாக விளங்கும் மேல் மலையனூர் அம்மனை, தாம் கட்டப் போகும் கோவிலுக்கு எழுந்தருளச் செய்து, அவளின் சக்தி அம்சமான புற்றிலிருந்து மண் எடுத்து வந்து சேர்க்க வேண்டும், மேல் மலையனூரிலேயே சிலை செய்து ஒரு மண்டலம் பூஜையில் அங்கேயே வைத்து அந்த மூல ஆற்றலோடு கொண்டு வந்து கோவில் அமைத்து வணங்க முடிவு செய்தனர்.

அம்மனின் புறப்பாடு

இதன்படி மேல்மலையனூர் சென்று வேண்டிக்கொண்டு ஆகமப்படி தேர்ந்த சிற்பி கொண்டு அங்காளி சிலையை வடித்து, ஒரு மண்டலம் பூஜை முதலியன செய்தனர். பின்னர் அம்மன் உத்தரவு பெற்று புற்று மண் எடுத்துக் கொண்டு, மைசூர் தேசம் பார்த்து புறப்படச் செய்தனர். அம்மன் சிரித்த புன்னகை தவழும் முகத்துடன் பயணம் புறப்பட்டாள்.

கொங்கு நாட்டிற்குள் நுழைந்து அதன் வழியாக கர்நாடகத்தில் உள்ள மைசூர் செல்ல திட்டமிட்டிருந்தனர். செல்லும் வழியில் இயற்கை வளம் நிறைந்திருந்த சத்தியமங்கலம் எனும் ஊரில் கொமாரபாளையம் என்ற பகுதியில் பவானி நதிக்கரையில், சந்தியா வந்தனம் செய்ய எண்ணி அம்பிகையின் சிலையைக் கீழே வைத்து விட்டு, நீராடி தங்கள் கடன் களை முடித்தார்கள்.

அதன்பிறகு பயணம் தொடர எண்ணி, கீழே வைக்கப்பட்டிருந்த அங்காளியின் சிலையை எடுக்க முயன்றார்கள். அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது. அமர்ந்தவாறு இருந்த அந்தச் சிலையை அவர்          களால் அசைக்கக் கூட     முடியவில்லை. நால்வருடன் அந்த ஊரில் இருந்த சிலரும் சேர்ந்து முயற்சி செய்தும் அம்மன் சிலையை கொஞ்சம்கூட அசைக்க முடியவில்லை.

எவ்வளவோ முயற்சித்தும் பலனில்லாமல் போனது. திடீரென கூட்டத்தில் இருந்த முதியவள் மாற்றுக் குரலெடுத்து தெய்வம் அருள் வந்து பேசத் தொடங்கினாள்.

அம்மன் வாக்கு

‘எவரும் கவலைப்பட வேண்டாம். கலி காலத்தில் உலகம் எங்கும் வியாபித்து அருள் செய்து அறம் வளர்த்து நல்லதற்கு நலமும் தீயதற்குத் தேய்வும் அளிக்க ஆங்காங்கே குடி கொள்ளப் போகின்றேன். அதற்காக இந்த இடத்தை நானே தேர்ந்தெடுத்துக் குடி கொண்டேன். யாரும் இல்லாத அநாதரவான இந்த இடம், சுற்றிலும் வெட்டவெளியாகவும் வானமே கூரை, வையகமே மாளிகையாக வயல் வரப்புகள் நடுவில் உகந்த இந்த இடம் சிறக்கும்’ எனக்கூறி மயங்கி விழுந்தாள்.

தெய்வம் நினைத்தது

அம்மனை கர்நாடக மாநிலத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என நினைத்துச் செயல்பட்ட நால்வருக்கும் கண்ணீர் பெருகியது. உள்ளம் கசிந்து உருகியது. ‘அம்மா! இது என்ன வேடிக்கை. எங்கள் ஊருக்கு அழைத்துச் செல்ல விரும்பி அழைத்து வந்தோம். நீயோ நடு வழியில் கோரைப் புற்கள் முளைத்த இடத்திலே பவானி நதிக் கரையில் கோவில் கொள்ள நினைத்து நடு வழியில் குடிகொண்டு விட்டாயே’ எனப் பரவசம் அடைந்து புலம்பினார்கள். பின்னர் ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு அம்பிகையின் எண்ணப்படியே, அந்த நான்கு அன்பர்களும் மனமுருகி அசைக்க முடியாத சிலைக்கு முறைப்படி வழிபாடு நடத்தி, அந்த இடத்திலேயே ஓர் சிறிய ஆலயம் கட்டினார்கள்.

இப்படிப்பட்ட திருவிளையாடலோடு அங்கே ஆட்சி புரிய வந்தவள் தான் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி. சாத்வீக குணமும், பார்வையும் கொண்டவளாய் நான்கு கரங்களில் சூலம், டமருகம், கதி, கபாலம் கொண்டு இடக்கால் மடக்கி, வலக்கால் தொங்க விட்டு அதனடியில் பிரும்ம கபாலமுமாக காட்சி தருகிறாள்.

இவள் மூன்று சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குக் குலதெய்வமாக இருப்பதோடு சிம்ம வாகனத்திற்கு பதிலாக நந்தியை வாகனமாகக் கொண்டு வந்த சாந்த சொரூபினியாக, சைவப் படையல் கொள்பவளாக குடி கொண்டு இருக்கிறாள்.

கோவில் அமைப்பு

கோவிலின் முன்புறம் 94 வகை சக்திகளோடு சக்தியாய் எழுந்து நிற்கிறது கம்பீரமான ராஜகோபுரம். ராஜகோபுரம் அடுத்து வசந்த மண்டபத்தின் முன்னால் கருப்பராயரும் பேச்சியம்மனும் பல அடி உயரத்தில் தீமையை ஓட்டும் சம்கார ரூபர்களாக விஸ்வரூபமாய் அமர்ந்திருக்கின்றனர்.

வசந்த மண்டபத்தில் அலங்காரத் தூண்களின் அணிவகுப்பு முடிவில் கன்னி மூலை கணபதி தொடர்ந்து செந்திலாண்டவர் இருந்து அருளுகின்றனர். மகா மண்டபத்தில் தூண்களில் அஷ்டலட்சுமி ரூபங்கள் என ஆலய அழகும் இறையாற்றலும் பார்க்கும் கண்களையும் மனங்களையும் ஒருங்கே பரவசப்படுத்தும்.

கருவறையின் மேல் இரண்டு நிலை விமானமும், சாந்த சொரூபினியாகத் திருக்காட்சி நல்கும் அங்காள பரமேஸ்வரியின் அழகுத் திருக்கோலம் பார்த்தவுடன் அருட் பார்வை நம் நெஞ்சமெல்லாம் அருள் தந்து அல்லல் நீக்கி, நலம் தரும் வகையில் அமைந்துள்ளது.

தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் திருக்கோவிலில் தரிசனம் செய்யலாம்.

திருவிழாக்கள்

மாசி மாதம் மகா சிவராத்திரி உற்சவம், அர்த்த ஜாம பூஜை, அபிஷேகம், சித்ரா பவுர்ணமி மாலை 5 மணிக்கு 108 பால்குட அபிஷேகம், லலிதா சகஸ்ரநாமம் பாராயணம், வாணியர் குல வைகாசி திருவிழா, ஆடி மாதம் செங்குந்த முதலியார் வம்ச வழிபாடு, பட்டலியர் குல வம்ச வழிபாடு, பீமன்குல வம்ச வழிபாடு, ஊமத்தூரர் வம்ச வழிபாடு, பட்டி குலத்தார் வம்ச வழிபாடு ஆகியவை சிறப்பாக நடைபெறுகின்றன.

ஒவ்வொரு புரட்டாசி மாதமும் முதல் ஞாயிறு அன்று ஆர்ய வைசியா சமூகத்தினர் சிறப்பு யாகம், ஆறாட்டு நடைபெறுகின்றது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சக்தி வடிவின் ஒவ்வொரு ரூபத்திற்கும் வழிபாடு செய்யப்படுகிறது. சென்ற ஆண்டு சாகம்பரி வழிபாடு நடந்தது.

இவ்வாறு உலக நலன் வேண்டி வழிபாடு நடத்தும் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதால், உலக வளர்ச்சியில் நீங்களும் பங்கு பெறலாமே.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கொமாரபாளையம் என்ற இடத்தில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோவில்.

No comments:

Post a Comment