Sunday, January 31, 2016

யுகம் தோறும்

யுகங்கள் தோறும் மாறும் உலகமும், அந்த
யுகத்தில் வாழும் பிறவிகள் அனைத்தும்;
யுகங்கள் தோறும் மாறும் நீதி நெறிகள்,
யுக்தியும், புத்தியும், பக்தியும் கூட!

சத்திய யுகமான முதல் யுகத்தில்,
சத்திய சந்தர்களும், தீயவர்களும்
மாறுபட்டு வாழ்ந்தனர் முற்றிலும்
வேறுபட்ட இரு நிலப் பரப்புகளில்!

நிந்திக்க வேண்டும் என்றால் மட்டுமே
சந்திக்க வேண்டுமே அன்றி அவர்கள்
சராசரி வாழ்க்கையில் தேவை இல்லை
சந்திப்புகளோ அன்றிச் சல்லாபமோ!

இரண்டாம் யுகமான திரேதா யுகத்தில்
இருவரும் வாழ்ந்தனர் ஒரே பூமியில்,
இரு வேறு தேசங்களில், நாடுகளில்
இருப்பினும் ஒரே பூமிப் பரப்பின் மேல்!

இராமனும், இராவணனும் போலவே
இயங்கினர் இந்த யுகத்தில் மனிதர்;
நல்லோரும் தீயோரும் வாழ்ந்தனர்
நானிலத்தில் ஒன்றாய்க் கலந்தே!

மூன்றாம் யுகமான துவாபர யுகத்தில்
முன்னேற்றம் நன்கு காணப் பட்டது!
இருவகை மனிதரும் இங்கு பிறந்தனர்
ஒருவருக்கு ஒருவர் உறவினர்களாக!

ஒரே இல்லத்தில் வந்து பிறந்தாலும்,
ஒருவருக்கு ஒருவர் பரம வைரியாய்;
ஒருவரை ஒருவர் உளமார வெறுத்து,
ஒருவரை ஒருவர் நாசம் செய்பவராய்!

கலியுகம் என்ற நான்காம் யுகத்துக்கு,
“கிலியுகம்” என்றும் பெயர் இடலாமே!
தானே தனக்கு வைரியாக மனிதர்கள்,
காணப்படுவது இந்த யுகத்தில்தானே!

நன்மையையும், தீமையும் ஒரே உள்ளத்தில்
நன்கு கலந்து உறைகின்றன அன்றோ?
நாட்டையோ அன்றித் தான் இருக்கும்
வீட்டையோ விட்டுச் செல்ல வேண்டாம்!

இருக்கும் இடத்திலேயே பாரதப்போர்
இருக்கும் எப்போதும் நிகழ்ந்தபடியே;
நன்மை மேலோங்கி வெல்லுமா அன்றி
நன்மை தீமையிடம் அடி பணிந்திடுமா?

நன்மையையும் தீமையும் பிறர் தர வாரா!
நம்முள் இருக்கும் தீமையை வென்றால்,
நன்மை நம்மை நாடி வரும்; தீமை வென்றால்
துன்பம் நம்மைத் தேடித் தேடி ஓடி வரும்!

No comments:

Post a Comment