Sunday, January 31, 2016

முற்பிறப்பு.

முற்பிறப்பு.


முந்தைய பிறவியில் நாரத முனிவர்
தந்தையில்லாமல், தாய் ஒருத்தியின்,
துறவியரை அண்டிப் பிழைப்பவளின்,
வறுமையில் வாடும் மகனாக இருந்தார்.

மாரிக் காலத்தில் நான்கு மாதங்களும்
வேறிடம் செல்லார் துறவியர் எவரும்;
தாயுடன் சேர்ந்து தானும் உதவினான்
மாயையை வென்ற அம்முனிவர்களுக்கு.

அவர்கள் புசித்து எஞ்சிய உணவை
அருள்மிகு பிரசாதமாகவே உண்டும்;
அவர்கள் பேசும் மொழிகளை எல்லாம்
அமர்ந்து கேட்டும் ஞானம் பெற்றான்.

சிறுவனின் தீவிர சிரத்தையைக் கண்டு,
மறை முனிவர்களும் மனம் மிக மகிழ்ந்து
போதனை செய்தனர் இறைபக்தியையும்,
சாதனை செய்யும் சில முறைகளையும்.

பால் கறக்கச் சென்ற அன்னையை
பாம்பு ஒன்று தீண்டிக் கொல்லவே;
பாலகன் பாரினில் தனியன் ஆனான்,
கால் போன போக்கில் திரியலானான்.

ஒரு நாள் தியானம் செய்யும்போது
ஒரு திருவுருவம் மனக்கண்ணில் தோன்ற,
மீண்டும் மீண்டும் அதைத் தான் காண
வேண்டும் வேண்டும் என ஆவல் மிகுந்தது.

“பற்றை முற்றும் விடாதவர்களும், மனப்
பக்குவம் சிறிதும் அடையாதவர்களும்,
காண இயலாது என்னை அறிவாய்! நீ
காண இயலும் உன் அடுத்த பிறவியில்”

அசரீரியாக அவன் மட்டும் கேட்டான்,
அதிசயமான இனிய வார்த்தைகளை!
விசனப்பட்டான் இன்னும் எத்தனை நாள்
விரும்பாத இது போன்ற வாழ்க்கை என?

மின்னல் வெட்டியது போலச் சரிந்தது
முன்னர் பெற்ற அவனது ஸ்தூலதேகம்,
விண்ணில் பறந்தது அவன் சூக்ஷ்மதேகம்,
விஷ்ணுவின் மூச்சுடன் உள்ளே புகுந்தது.

பிரமனின் செய்த அடுத்த படைப்பினில்
பிரமனின் அற்புத மானச புத்திரனாகத்
தோன்றினார் நம் தேவமுனி நாரதர்,
மூன்று உலகமும் பக்தியுடன் சஞ்சரிக்க.

பாமரப் பணிப்பெண் ஒருவளின் மகன்
பார்புகழும் தேவமுனிவர் ஆகிவிட்டதன்
ரகசியம் எது என அறிந்திடுவோம் நாம்,
விகசித்த அவர் பக்தியினால் அன்றோ?

பிறவியும், உயர்வும்

பிறவியில் உயர்வு அடைபவர் மூவர்;
பிறவியினாலேயே உயர்ந்தவர்கள்,
பிறவியில் முயன்று உயர்ந்தவர்கள்,
பிறவியில் உயர்வுக்கு உந்தப்பட்டவர்கள்!

உயர் குலத்தில் உதித்ததால் மட்டுமே
உயர்ந்துவிடுவர் சில பாக்கியசாலிகள்;
உயர்ந்த முயற்சிகள் இல்லாமலேயே,
உயர்வை அடைந்துவிடுவார் இவர்கள்.

முயன்றும் முட்டி மோதிக்கொண்டும்,
முனைப்பினாலும், கடின உழைப்பினாலும்,
அல்லல்கள் பல உற்று, மனிதர்கள் சிலர்
அடைவர் உயரிய நிலை ஒன்றினை.

மூன்றாம் வகையினர் மாறுபட்டவர்.
வேண்டாம் என்று ஓடினாலும், விதி
விடாமல் துரத்திப் பிடித்து, அவர்களை
வேந்தர்கள் ஆக்கிவிடும் அவனியில்.

பிறவியால் கிடைத்த உயர்வும் சரி,
விதியால் விளைந்த உயர்வும் சரி,
அழிந்து போகலாம்; ஆனால் அழியாது
உழைப்பால் விளைந்த உன்னத உயர்வு!

யுகம் தோறும்

யுகங்கள் தோறும் மாறும் உலகமும், அந்த
யுகத்தில் வாழும் பிறவிகள் அனைத்தும்;
யுகங்கள் தோறும் மாறும் நீதி நெறிகள்,
யுக்தியும், புத்தியும், பக்தியும் கூட!

சத்திய யுகமான முதல் யுகத்தில்,
சத்திய சந்தர்களும், தீயவர்களும்
மாறுபட்டு வாழ்ந்தனர் முற்றிலும்
வேறுபட்ட இரு நிலப் பரப்புகளில்!

நிந்திக்க வேண்டும் என்றால் மட்டுமே
சந்திக்க வேண்டுமே அன்றி அவர்கள்
சராசரி வாழ்க்கையில் தேவை இல்லை
சந்திப்புகளோ அன்றிச் சல்லாபமோ!

இரண்டாம் யுகமான திரேதா யுகத்தில்
இருவரும் வாழ்ந்தனர் ஒரே பூமியில்,
இரு வேறு தேசங்களில், நாடுகளில்
இருப்பினும் ஒரே பூமிப் பரப்பின் மேல்!

இராமனும், இராவணனும் போலவே
இயங்கினர் இந்த யுகத்தில் மனிதர்;
நல்லோரும் தீயோரும் வாழ்ந்தனர்
நானிலத்தில் ஒன்றாய்க் கலந்தே!

மூன்றாம் யுகமான துவாபர யுகத்தில்
முன்னேற்றம் நன்கு காணப் பட்டது!
இருவகை மனிதரும் இங்கு பிறந்தனர்
ஒருவருக்கு ஒருவர் உறவினர்களாக!

ஒரே இல்லத்தில் வந்து பிறந்தாலும்,
ஒருவருக்கு ஒருவர் பரம வைரியாய்;
ஒருவரை ஒருவர் உளமார வெறுத்து,
ஒருவரை ஒருவர் நாசம் செய்பவராய்!

கலியுகம் என்ற நான்காம் யுகத்துக்கு,
“கிலியுகம்” என்றும் பெயர் இடலாமே!
தானே தனக்கு வைரியாக மனிதர்கள்,
காணப்படுவது இந்த யுகத்தில்தானே!

நன்மையையும், தீமையும் ஒரே உள்ளத்தில்
நன்கு கலந்து உறைகின்றன அன்றோ?
நாட்டையோ அன்றித் தான் இருக்கும்
வீட்டையோ விட்டுச் செல்ல வேண்டாம்!

இருக்கும் இடத்திலேயே பாரதப்போர்
இருக்கும் எப்போதும் நிகழ்ந்தபடியே;
நன்மை மேலோங்கி வெல்லுமா அன்றி
நன்மை தீமையிடம் அடி பணிந்திடுமா?

நன்மையையும் தீமையும் பிறர் தர வாரா!
நம்முள் இருக்கும் தீமையை வென்றால்,
நன்மை நம்மை நாடி வரும்; தீமை வென்றால்
துன்பம் நம்மைத் தேடித் தேடி ஓடி வரும்!

அங்காள பரமேஸ்வரி

மேல்மலையனூர் அங்காளம்மன் சக்தி எங்கும் பரவி புகழ் விளங்கிக் கொண்டிருந்த நேரம் அது. போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாத அந்த 14–ம் நூற்றாண்டிலேயே அன்னை அங்காளியின் அருளுக்கும் அன்புக்கும் ஆளான நான்கு பக்தர்கள், மைசூரில் இருந்தனர்.

அங்காள பரமேஸ்வரியை, அடிக்கடி வந்து தரிசனம் செய்ய முடியாத நிலையில் அங்காளிக்குத் தம் இருப்பிடத்தின் அருகிலேயே ஓர் ஆலயம் கட்ட தீர்மானித்தனர். ஆதி சக்தியாக விளங்கும் மேல் மலையனூர் அம்மனை, தாம் கட்டப் போகும் கோவிலுக்கு எழுந்தருளச் செய்து, அவளின் சக்தி அம்சமான புற்றிலிருந்து மண் எடுத்து வந்து சேர்க்க வேண்டும், மேல் மலையனூரிலேயே சிலை செய்து ஒரு மண்டலம் பூஜையில் அங்கேயே வைத்து அந்த மூல ஆற்றலோடு கொண்டு வந்து கோவில் அமைத்து வணங்க முடிவு செய்தனர்.

அம்மனின் புறப்பாடு

இதன்படி மேல்மலையனூர் சென்று வேண்டிக்கொண்டு ஆகமப்படி தேர்ந்த சிற்பி கொண்டு அங்காளி சிலையை வடித்து, ஒரு மண்டலம் பூஜை முதலியன செய்தனர். பின்னர் அம்மன் உத்தரவு பெற்று புற்று மண் எடுத்துக் கொண்டு, மைசூர் தேசம் பார்த்து புறப்படச் செய்தனர். அம்மன் சிரித்த புன்னகை தவழும் முகத்துடன் பயணம் புறப்பட்டாள்.

கொங்கு நாட்டிற்குள் நுழைந்து அதன் வழியாக கர்நாடகத்தில் உள்ள மைசூர் செல்ல திட்டமிட்டிருந்தனர். செல்லும் வழியில் இயற்கை வளம் நிறைந்திருந்த சத்தியமங்கலம் எனும் ஊரில் கொமாரபாளையம் என்ற பகுதியில் பவானி நதிக்கரையில், சந்தியா வந்தனம் செய்ய எண்ணி அம்பிகையின் சிலையைக் கீழே வைத்து விட்டு, நீராடி தங்கள் கடன் களை முடித்தார்கள்.

அதன்பிறகு பயணம் தொடர எண்ணி, கீழே வைக்கப்பட்டிருந்த அங்காளியின் சிலையை எடுக்க முயன்றார்கள். அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது. அமர்ந்தவாறு இருந்த அந்தச் சிலையை அவர்          களால் அசைக்கக் கூட     முடியவில்லை. நால்வருடன் அந்த ஊரில் இருந்த சிலரும் சேர்ந்து முயற்சி செய்தும் அம்மன் சிலையை கொஞ்சம்கூட அசைக்க முடியவில்லை.

எவ்வளவோ முயற்சித்தும் பலனில்லாமல் போனது. திடீரென கூட்டத்தில் இருந்த முதியவள் மாற்றுக் குரலெடுத்து தெய்வம் அருள் வந்து பேசத் தொடங்கினாள்.

அம்மன் வாக்கு

‘எவரும் கவலைப்பட வேண்டாம். கலி காலத்தில் உலகம் எங்கும் வியாபித்து அருள் செய்து அறம் வளர்த்து நல்லதற்கு நலமும் தீயதற்குத் தேய்வும் அளிக்க ஆங்காங்கே குடி கொள்ளப் போகின்றேன். அதற்காக இந்த இடத்தை நானே தேர்ந்தெடுத்துக் குடி கொண்டேன். யாரும் இல்லாத அநாதரவான இந்த இடம், சுற்றிலும் வெட்டவெளியாகவும் வானமே கூரை, வையகமே மாளிகையாக வயல் வரப்புகள் நடுவில் உகந்த இந்த இடம் சிறக்கும்’ எனக்கூறி மயங்கி விழுந்தாள்.

தெய்வம் நினைத்தது

அம்மனை கர்நாடக மாநிலத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என நினைத்துச் செயல்பட்ட நால்வருக்கும் கண்ணீர் பெருகியது. உள்ளம் கசிந்து உருகியது. ‘அம்மா! இது என்ன வேடிக்கை. எங்கள் ஊருக்கு அழைத்துச் செல்ல விரும்பி அழைத்து வந்தோம். நீயோ நடு வழியில் கோரைப் புற்கள் முளைத்த இடத்திலே பவானி நதிக் கரையில் கோவில் கொள்ள நினைத்து நடு வழியில் குடிகொண்டு விட்டாயே’ எனப் பரவசம் அடைந்து புலம்பினார்கள். பின்னர் ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு அம்பிகையின் எண்ணப்படியே, அந்த நான்கு அன்பர்களும் மனமுருகி அசைக்க முடியாத சிலைக்கு முறைப்படி வழிபாடு நடத்தி, அந்த இடத்திலேயே ஓர் சிறிய ஆலயம் கட்டினார்கள்.

இப்படிப்பட்ட திருவிளையாடலோடு அங்கே ஆட்சி புரிய வந்தவள் தான் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி. சாத்வீக குணமும், பார்வையும் கொண்டவளாய் நான்கு கரங்களில் சூலம், டமருகம், கதி, கபாலம் கொண்டு இடக்கால் மடக்கி, வலக்கால் தொங்க விட்டு அதனடியில் பிரும்ம கபாலமுமாக காட்சி தருகிறாள்.

இவள் மூன்று சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குக் குலதெய்வமாக இருப்பதோடு சிம்ம வாகனத்திற்கு பதிலாக நந்தியை வாகனமாகக் கொண்டு வந்த சாந்த சொரூபினியாக, சைவப் படையல் கொள்பவளாக குடி கொண்டு இருக்கிறாள்.

கோவில் அமைப்பு

கோவிலின் முன்புறம் 94 வகை சக்திகளோடு சக்தியாய் எழுந்து நிற்கிறது கம்பீரமான ராஜகோபுரம். ராஜகோபுரம் அடுத்து வசந்த மண்டபத்தின் முன்னால் கருப்பராயரும் பேச்சியம்மனும் பல அடி உயரத்தில் தீமையை ஓட்டும் சம்கார ரூபர்களாக விஸ்வரூபமாய் அமர்ந்திருக்கின்றனர்.

வசந்த மண்டபத்தில் அலங்காரத் தூண்களின் அணிவகுப்பு முடிவில் கன்னி மூலை கணபதி தொடர்ந்து செந்திலாண்டவர் இருந்து அருளுகின்றனர். மகா மண்டபத்தில் தூண்களில் அஷ்டலட்சுமி ரூபங்கள் என ஆலய அழகும் இறையாற்றலும் பார்க்கும் கண்களையும் மனங்களையும் ஒருங்கே பரவசப்படுத்தும்.

கருவறையின் மேல் இரண்டு நிலை விமானமும், சாந்த சொரூபினியாகத் திருக்காட்சி நல்கும் அங்காள பரமேஸ்வரியின் அழகுத் திருக்கோலம் பார்த்தவுடன் அருட் பார்வை நம் நெஞ்சமெல்லாம் அருள் தந்து அல்லல் நீக்கி, நலம் தரும் வகையில் அமைந்துள்ளது.

தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் திருக்கோவிலில் தரிசனம் செய்யலாம்.

திருவிழாக்கள்

மாசி மாதம் மகா சிவராத்திரி உற்சவம், அர்த்த ஜாம பூஜை, அபிஷேகம், சித்ரா பவுர்ணமி மாலை 5 மணிக்கு 108 பால்குட அபிஷேகம், லலிதா சகஸ்ரநாமம் பாராயணம், வாணியர் குல வைகாசி திருவிழா, ஆடி மாதம் செங்குந்த முதலியார் வம்ச வழிபாடு, பட்டலியர் குல வம்ச வழிபாடு, பீமன்குல வம்ச வழிபாடு, ஊமத்தூரர் வம்ச வழிபாடு, பட்டி குலத்தார் வம்ச வழிபாடு ஆகியவை சிறப்பாக நடைபெறுகின்றன.

ஒவ்வொரு புரட்டாசி மாதமும் முதல் ஞாயிறு அன்று ஆர்ய வைசியா சமூகத்தினர் சிறப்பு யாகம், ஆறாட்டு நடைபெறுகின்றது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சக்தி வடிவின் ஒவ்வொரு ரூபத்திற்கும் வழிபாடு செய்யப்படுகிறது. சென்ற ஆண்டு சாகம்பரி வழிபாடு நடந்தது.

இவ்வாறு உலக நலன் வேண்டி வழிபாடு நடத்தும் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதால், உலக வளர்ச்சியில் நீங்களும் பங்கு பெறலாமே.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கொமாரபாளையம் என்ற இடத்தில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோவில்.

கிரகணத்தின் போது சாப்பிடக்கூடாது

சாகாவரம் தரக்கூடிய அமிர்தத்தை பெறவேண்டி திருப்பாற்             கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது அதில் இருந்து அமிர்தம் வந்தது. மகாவிஷ்ணு மோகினி வடிவம் தாங்கி அசுரர்களை மயக்கி அந்த அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டும் வழங்கினார். ஆனால் ராகு தேவரைப்போல் உருவம் தரித்தான். சூரிய, சந்திரர்கள் இதை மோகினிக்கு உணர்த்தினர். உடனே அவர் அந்த அரக்கனின் தலையை கொய்து விட்டார். ஆனால் அதற்குள் அமிர்தம் கழுத்துவரை சென்றுவிட்டது. இதனால் அவன் சாகவில்லை. தலை ராகு என்றும், உடல் கேது எனவும் அழைக்கப்பட்டனர். இதற்கு பழி வாங்குவதற்காக தான் ராகுவும், கேதுவும் அவ்வப்போது சூரியனையும் சந்திரனையும் மறைக்கின்றனர். 

சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர் கோட்டில் வரும் போது நடுவில் சந்திரனோ, பூமியோ வரும்போது சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன. கிரகணகாலத்தில் சாப்பிடக்கூடாது. கிரகணம் விட்டபின் சந்திரனையோ, சூரியனையோ பார்த்தபின் தான் உணவு உட்கொள்ள வேண்டும். கிரகணத்தின் போது சூரியனையோ, சந்திரனையோ கர்ப்பமான  பெண்கள் பார்க்கக்கூடாது. அவ்வாறு பார்த்தால் பிறக்க போகும் குழந்தைகள் உடல் ஊனமுள்ளவர்களாக பிறக்கக்கூடும்.

சந்திரதோஷம் போக்கும் புஷ்பகரணி

தஞ்சை மாவட்டம் திருவையாறுக்கு அருகில் திங்களூர் எனும் பாடல் பெற்ற தலம் உள்ளது.இதுசந்திரன் கோவில். இங்கு பெரியநாயகி சமேத கைலாசநாதர் உள்ளார்.பவுர்ணமி, அமாவாசை வரும் திங்கட்கிழமை அன்றுஅவரை வணங்கினால் கூடுதல் பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்கள் திங்கட்கிழமைகளில் வந்தால் அன்று வழிபாடு செய்வது மிகவும் நல்லது. கடக ராசிக்க£ரர்கள் கட்டாயம் வணங்கவேண்டும். சந்திர தலத்தில் புஷ்பகரணி தீர்த்தமுள்ளது.குஷ்டம், சித்தப்பிரமையால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து நீராடி சந்திரனை வணங்கினால் அவை நீங்கப்பெறும். இங்கு தினந்தோறும் காலை 7மணி முதல்1மணி வரையும், மாலை 4 மணி முதல் 9 மணிவரையும் பூஜைகள் நடைபெறும். 

கோவிலுக்கு சென்று விட்டு வரும் வழியில் நுழைவுவாயிலில் திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தல் உள்ளது. இங்கு தண்ணீர் பருகிச் சென்றால் உத்தமம். தஞ்சையில் இருந்து திருவையாறு–கும்பகோணம் சாலையில் திருவையாறில் இருந்து 4கிலோமீட்டர் தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. வெண்ணிற மலர் அர்ச்சனை, வெண்ணிற ஆடை, முத்து மாலை அணிந்து வழிபடுதல், பவுர்ணமி விரதம் இருத்தல், வெண்ணிற வஸ்திர தானம் செய்தல், அரிசி தானம் கொடுத்தல் இவற்றால் சந்திர கிரக தோஷம் நிவர்த்தி ஆகும்.

ஈசனிடம் சரணடைந்த சந்திரன்

தட்சனின் இருபத்தி ஏழு பெண்களையும் சந்திரன் திருமணம் செய்து கொண்டான். திருமணத்தின் போது அனைத்து பெண்களிடமும் அன்புடன் இருக்க வேண்டும் என்று தட்சன் சந்திரனிடம் உறுதி வாங்கினான். ஆனால் சந்திரன் ரோகிணியிடம் மட்டும் அதிகமான அன்பு காட்டினான். அதைக்கண்ட மற்ற பெண்கள் தட்சனிடம் சென்று முறையிட்டனர். இதனால் கோபம் கொண்ட தட்சன், சந்திரனை ‘தேய்ந்து போவாய்’ என்று சாபம் கொடுத்தான். 

தேய்ந்து கொண்டு வந்த சந்திரன் கடைசியில் சிவபெருமானிடம் தஞ்சமடைந்தான். அவனுக்கு அடைக்கலம் கொடுத்த சிவபெருமான், சந்திரனை தலையில் எடுத்து வைத்து கொண்டார். அதனால் சாபம் பாதியாக குறைந்தது. அதாவது பாதி நாட்கள் வளர்வதும், பாதி நாட்கள் தேய்வதுமாக மாறினான் சந்திரன். இப்படி தான் வளர்பிறை, தேய்பிறை உருவானது. 

இவ்வாறு சந்திரனை சிவபெருமான் திருமுடியில் அமர்த்தியது சோமவாரத்தில் தான். 14 ஆண்டுகள் சோமவாரம் பூஜை செய்யும் கணவன்– மனைவிக்கு, முக்தி பேற்றினை கொடுக்க வேண்டும் என்று ஈசனிடம் வேண்டினான் சந்திரன். அவனது விருப்பத்தை சிவபெருமான் நிறைவேற்றினார்.

விரதம் இருப்பது எப்படி?

சோமவார விரதத்தை சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் முதல் திங்கட்கிழமை தொடங்கி தொடர்ந்து கடைப்பிடிக்கலாம். ஆண், பெண்கள் இருவரும் கடைப்பிடிக்கலாம். 

இந்த பூஜைகளுக்கு, மஞ்சள்பொடி, குங்குமம், சந்தனம், பூமாலை, உதிரிப்பூக்கள், வெற்றிலைப்பாக்கு, ஊதுபத்தி, சாம்பிராணி, பஞ்சு, நல்லெண்ணெய், கற்பூரம், வெல்லம், மாவிலை, வாழைப்பழம், அரிசி, தேங்காய், தயிர், தேன், தீப்பெட்டி, பூணூல், வஸ்தரம், அட்சதை (பச்சரிசியுடன் மஞ்சள்பொடி கலந்து) பஞ்சாமிர்தம், திராட்சை, கற்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின்பால் ஆகியவற்றை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். 

முதலில் ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும். விடியற்காலையிலேயே விநாயகர் பூஜை செய்து சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். மஞ்சள்பிள்ளையார் பிடித்து வைத்து தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டவேண்டும். கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி கலந்து கலசத்துக்கு மேலே மாவிலைக்கொத்தை செருகி, மையத்தில் மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து சந்தனகுங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும். பின்னர் பூஜையை தொடங்க வேண்டும். 

சாதம், நெய், பருப்பு, பாயாசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும். தொடர்ந்து சிவநாமங்களை சொல்ல வேண்டும். பின்னர் தீபாராதனை கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். 

பூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை பார்வதி பரமேஸ்வரனாக மனதில் நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம்  செய்ய வேண்டும். அவர்களுக்கு புதுவேட்டி, ரவிக்கைதுணி, வெற்றிலைப்பாக்கு மற்றும் பழம் இவற்றுடன் தட்சனை  ஆகியவை அடங்கிய தட்டை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அன்னமிட்டு அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து வணங்கி ஆசி பெறவேண்டும்.

குடும்பத்தை ஒன்றிணைக்கும் சோமவாரம்

குடும்பத்தை ஒன்றிணைக்கும் சோமவாரம் 
சோமவாரம் என்பது திங்கட்கிழமையை குறிக்கும். அன்றைய தினம் சிவபெருமானுக்கு உகந்தநாள். ‘சோம’ என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்படும். 

சந்திரன் கொடிய நோயால் துன்பப்பட்டான். நோய் குணமாக வேண்டி சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான். அவர் அருளால் நவக்கிரகங்களில் ஒருவன் ஆனான். அவன் பெயரால் சோமவாரம் (திங்கட்கிழமை) தோன்றியது. 

‘தன்பெயரால் தனது வாரத்தில் மக்கள் விரதம் இருக்க வேண்டும்’ என்று சந்திரன் சிவபெருமானை வேண்டிக்கொண்டான். அதனால் சோமவார விரதம் என பெயர் ஏற்பட்டது. 

இந்த சோமவார விரதத்தை திங்கட்கிழமையன்று பயபக்தியுடன் கடைப்பிடித்து, சாம்ப பரமேசுவர பூஜையை செய்தால் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். வெகுதூரத்தில் உள்ளவர்கள் தங்கள் இருப்பிடத்தை நாடி வந்து சேருவர். 

கணவன்– மனைவிக்கு இடையே பிரிவு இருக்காது. மனைவி, குழந்தைகளை விட்டு பிரிந்து சென்ற கணவன், ஓடோடி வந்து சேருவான். அந்த அளவுக்கு இந்த விரதம் மகத்துவம் வாய்ந்தது. திங்கட்கிழமை அன்று விரதத்தை மேற்கொண்டு சாம்ப பரமேஸ்வர பூஜை செய்தால் சகல செல்வங்களும் கிடைக்கும். 14 ஆண்டுகள் வரை இடையூறு இருக்காது. மாங்கல்ய தோஷம் ஏற்படாது. களத்திரதோஷம், மாங்கல்ய தோஷம் இருப்பவர்கள் அவசியம் இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். 

சோமவாரத்திற்கும் ஒரு கதை இருக்கிறது. அதை இப்போது பார்க்கலாம்.

ஒருகாலத்தில் ஆர்யா வர்த்தா நாட்டை சித்ரவர்மன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய ஒரே மகள் சீமந்தினி. மகள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த மன்னன் சித்ரவர்மன், சிறந்த ஜோதிடர்களை வரவழைத்து தனது மகளுக்கு ஜாதகம் எழுதும்படி உத்தரவிட்டான்.

அந்த ஜோதிடர்களில் ஒருவர் ‘மன்னா! உன்மகள் அழகில் லட்சுமி, கலைகளில் கலைமகள், வீரத்திலும் தீரத்திலும் சிறந்து விளங்குவாள். உலகமே போற்றி புகழும் படி கணவனுடன் பலகாலம் சேர்ந்து வாழ்வாள்’ என்றார்.

ஆனால் இன்னொரு ஜோதிடர் முகம் வாட்டமாக இருந்ததை கவனித்த மன்னன், அவருடைய கருத்தையும் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் மன்னரை அதிர்ச்சி அடைய செய்தது. ‘மன்னா! நான் சொல்வதற்காக வருத்தப்படக்கூடாது. உங்கள் மகள் திருமணம் ஆன சிலநாட்களில் மாங்கல்ய பாக்கியத்தை இழப்பாள். இது ஜாதக வாக்கு’ என்றார். 

இதைக்கேட்ட மன்னர் எல்லையில்லா வேதனை அடைந்தார். மகளை பார்க்கும் போதெல்லாம் அவரை துயரச்சுமை வாட்டியது. காலம் கடந்தது. மன்னரின் மகள் சீமந்தினி மணப்பருவம் அடைந்தாள். அவளது தோழிகள் அவளுடைய ஜாதகத்தில் வர       விருக்கும் ஆபத்தைக் கூறினார்கள். 

இளம்வயதில் கற்பனைச் சிறகுகளுடன் வானில் இறக்கைக்கட்டி பறந்த சீமந்தினிக்கு, கற்பனைக் கோட்டைகள் கலைந்தன. இருப்பினும் மன்னன் மகள் அல்லவா? மன தைரியத்தை விடவில்லை. மாமுனிவராகிய யாக்ஞவல்கிய முனிவரின் மனைவி, யானமைத்ரேயியை அடைந்து அவளை வணங்கி மனக்கவலையை தெரிவித்தாள். 

சிறந்த பதிவிரதையான மைத்ரேயி சீமந்தினியிடம், ‘அம்மா! கவலைப்படாதே! சோமவார விரதத்தை கடைப்பிடி. மலைபோல் துன்பம் வந்தாலும், பனிபோல விலகும்’ எனக்கூறி உபதேசம் செய்தாள். 

சீமந்தினியும் முறையாகச் சோமவார விரதத்தை கடைப்பிடித்தாள். சீமந்தினிக்கு நளன் பேரனும், இந்திரசேனன் மகனுமான சந்திராங்கதனுடன் திருமணம் நடந்தது. தம்பதிகள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். 

ஒருநாள் நண்பர்களுடன் நதியில் நீராடச்சென்ற சந்திராங்கதன் தண்ணீரில் மூழ்கினான். எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. ஆனால் மனநிலை சற்றும் குலையாத சீமந்தினி சோமவார விரதத்தை கடைப்பிடித்தாள். பரமேஸ்வரனையும், பார்வதியையும் மனதார பிரார்த்தனை செய்தாள். அவள் விரதத்திற்கு பலன் விரைவிலேயே கிடைத்தது. 

திடீரென்று ஒருநாள் நீரில் மூழ்கிய அவளது கணவன் சந்திராங்கதன் திரும்பி வந்தான். தண்ணீரில் மூழ்கிய அவனை சில நாகர்கள் அழைத்துப்போனதாகவும், சிலநாட்கள் அவர்களிடம் இருப்பிடத்தில் தங்க வைத்து உபசரணை செய்து சீமாந்தினி செய்யும் சோமவார விரதம் பற்றி கேட்டு தெரிந்து கொண்டு, மறுபடியும் தன்னை கொண்டு வந்து விட்டதாக கூறினான். பிரிந்தவர்கள் கூடினாலும் கேட்கவும் வேண்டுமோ! சீமந்தினி ஆனந்த கண்ணீர் வடித்து, கணவனோடு சந்தோஷமாக வாழ்ந்தாள். 

லஷ்மியை வசியம்

நம்வீட்டில் லக்ஷ்மி குடியிருந்து நமக்கு அருள ஒவ்வெருவரும் நம்வீட்டில் லட்ஷிமி குடியிருந்து நமக்கு அருள வேண்டும் என்று ஆசை படுவோம் ஆனால் அதற்க்குன்டானமுறைகளை செய்வதில்லை அப்படியே செய்தாலும் முறையாக செய்வதில்லை

ஒரு சிறிய மண்கலசம்(மூடியுடன்) எடுத்து அதில் சிறிது உப்பு, சர்க்கரை, பச்சரிசி, புளி,பருப்பு,நவ தானியம், புனுகு, குங்கும பூ, கஸ்துரி, ஜவ்வாது, ஐம்பொன், சிறிய வலம்புரிசங்கு, வெற்றிலை பாக்கு,இவை அனைத்தயும் வியாழக்கிழமையே வாங்கி வைத்துக்கொள்ளவும்

வெள்ளிகிழமை காலை 6 டூ 7 மணிக்குள் மேற்கூறிய அனைத்து பொருளையும்கலசத்தில் இட்டு மண்கலசத்திற்க்க விபூதிபட்டையிட்டு சத்தனம் குங்குமம்வைத்து உங்கள் பூஜை அறையில்வைத்து மகாலட்சுமியை மனதாற வேண்டி தாயே நீஎன்றும் என்குடும்பத்தில் இருந்து அருள வேண்டும் என பிராத்தனை செய்து விட்டு தூப தீபம் காட்டி பின்வரும் மந்திரத்தை 108முறை கூறி பின் கலசத்தை மூடி பூஜையறையில்
வைக்கவும்,

வெள்ளிக்கிழமை தோறும் 108 முறை மந்திரம் கூறி வணங்க வேண்டும், மண்கலசம் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை, முதல் முறை வணங்க தொடங்கியதும் அடுத்த வெள்ளிகிழமைக்குள் பணவரவு உயர்வதை  கண்கூடாக உணரலாம்

இந்த எளிய பரிகார முறையை செய்து வாழ்வில்
வளம் பெற வேண்டுகிறேன்,
108முறை கூற வேண்டிய மந்திரம்

ஒம் தன தான்ய லஷ்மியை வசி வசி 


வசியை நமஹ


இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை கூறி பயன் பெற
வாழ்த்துக்கள.

பிறவிப்பயன்

பிறவிப்பயன்


இறைவன் அளித்த இச்சிறந்த உடலின்
பிறவிப்பயன் என்ன என்று அறிவீரா?
மறைகள் புகழும் இறைவன் அவனை, இப்
பிறவியிலேயே அறிந்து கொள்வதே!

கயிலாயத்துறை காஞ்சன வண்ணனை
கணப்பொழுதேனும் காணாத கண்கள்,
மயில் தோகையில் மாண்புடன் விளங்கும்
பயனில்லாத கண்களைப் போன்றவே!

திருவுடன் கூடி உலகினைக் காக்கும்
திருமால் பெருமை கேளாத செவிகள்,
கம்மல், கடுக்கன், தோடு, ஜிமிக்கி என
கல் நகையணியும் வெறும் காதுகளே!

வனமாலை அணியும் மனம் கவர் கள்வன்
புனைந்த மாலையைப் பெற்று நுகராத,
இரு துவாரம் உடைய நாசியோ, காற்றை
இழுத்து விடுகின்ற இருமான் துருத்தியே.

கமல மலர் அமர்ந்து கருணை பொழியும்
கமலக் கண்ணியைப் பாடிப் பரவாத நாவு,
குவளை மலரிடை அமர்ந்து இரைச்சலிடும்
தவளையின் நீள் நாவுக்கு ஒப்பானதே!

எண் குணத்தானை மனத்தில் நினைத்து
எட்டு அங்கமும் நிலம்பட வணங்காத,
மண்டிய கர்வம் கொண்டவன் தலை
முண்டாசையே தாங்கும் மூளையை அல்ல!

கண் முன் அழகனாய் காட்சி அளிக்கும்
ஷண்முகன் திருவடி வணங்காத கைகள்,
இயக்கமும் இரத்தமும் இழந்து போன
குயவன் செய்த மண் கைகளை போன்றவே!

திருவருள் தேடி அவன் திருவடி நாடி
தீர்த்த யாத்திரை செல்லாத கால்கள்,
விண் முட்ட ஓங்கி வளர்ந்து நிற்கும்
மண்ணில் இருக்கும் மரத்தின் வேர்களே!

தாளாத காதலுடன் அவன் துதி கேட்டு
இளகாத நெஞ்சம் இரும்பு நெஞ்சமே!
கண்ணீர் மல்கி கனியாத மனங்கள்
மண்ணில் வாழ் விலங்குகள் மனமே!

பிறவிப்பயனை அறிந்தோம் இன்று,
பிறவிப் பயனுக்கு முயல்வோம் இன்றே!
“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல்,”
அரிதிலும் அரிது விடுதலை அடைதல்!

யோக சக்தி

யோக சக்தி


அஷ்டாங்க யோகம் என்பதை முறையாக
இஷ்டத்துடன் செய்து வரும் யோகிகள்,
அடைவர் பலவித சக்திகள்; அவர்களை
அடைவிக்கும் அவைகள் உயர் நிலைக்கு.

மூன்று காலமும் உணரும் சக்திகளை
முழுமையாக அவர் அடைந்திடுவர்;
முகத்தைப் பார்த்தவுடனே மனதில்
முழுவதும் திரைப்படம் போல ஓடும்!

எதிர்மறைப் பொருட்களையும் அவர்
எதிர்மறையாக என்றும் உணரார்;
வெய்யிலும், மழையும் அவர்க்கு ஒன்றே!
வெப்பமும், குளிரும் அவர்க்கு ஒன்றே!

மற்றவர் மனத்துள் புகுந்து அங்கே
மறைந்து கிடக்கும் அனைத்தையும்,
மிச்சமின்றிக் கண்டு அறிந்து கொள்ளும்
அச்சம் தரும் சக்தியும் அவர்க்கு ஏற்படும்!

இயற்கையில் விளங்கும் பலவிதமான
இயக்க முடியாத பொருட்களையும்,
ஆதவன், நெருப்பு, நீர், விஷங்களையும்
ஆற்றலுடன் தம் வசப்படுதுவர் இவர்.

தனக்கு தானே எஜமானன் என்பது போல
நினைத்ததைச் செய்ய வல்லவர் இவர்;
பிறர் மனத்தை அறிய வல்லவரான
இவர் மனத்தை யாரும் வெல்ல முடியாது!

இறைவழிபாடு அவசியம்

சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த பூ என்றால், அது கொன்றை மலர்தான். ஏன் தெரியுமா? அது பார்ப்பதற்கு ‘ஓம்’ என்ற வடிவத்திலேயே இருக்கும். அதை ‘ஓம் கார புஷ்பம்’ என்றுகூடச் சொல்வார்கள்.

சிவபெருமானை ‘கொன்றையஞ் சடையன்’ என்று அப்பர் ஸ்வாமிகள் குறிப்பிடுவதன் அர்த்தம் இதுதான். ‘கொன்றை மாலையை அணிந்திருப்பவனே!’ என்று பொருள்.

அப்படிப்பட்ட கொன்றைப் பூ சூடியவனை நாம் நாட வேண்டும். இறைவனைத் தவிர, வேறு ஒருவராலும் ஒரு செயலையும் செய்ய முடியாது. அவனைத் தவிர, நம்மை ஒருவராலும் ஒரு செயலும் செய்ய வைக்க இயலாது. 

அவனை அறிந்தவன் எல்லாம், அறிந்தவனாகிறான். அவனை அறியாதவன் எல்லாம், அறிந்தும் எதையுமே அறியாதவன் போலாகிறான்.

பாம்பன் சுவாமிகள் முருகனை முழுதுமாக உணர்ந்தவர். எதையுமே அவர் தனியாக படித்து அறியவில்லை. இறைவனை, அவன் திருவருளை உணர்ந்தார். அதனால் எல்லாம் உணர்ந்தவர் ஆனார். 

ஸ்வாமி விவேகானந்தரிடம் சென்று ஒரு புத்தகத்தை நீட்டினால், அதை அப்படியே ஒரு நொடியில் படித்துவிடுவாராம். அந்த சக்தியை, அந்த ஆற்றலை அருளுபவன் இறைவன் தான்.

பல பேர் மரங்களாக நின்று உன்னை நோக்கி கடும் தவம் புரிந்தார்களே. ஆனால், என்னை நீ எப்படி ஆட்கொண்டா’ என்று கேட்பார் மாணிக்கவாசகர். அசுரர்களும் கடும் தவம் புரிந்தார்கள். ஆனால், அவர்கள் ஒரு வரத்தை நோக்கி தவம் புரிந்தார்கள். இறைவன் திருவருளே வேண்டும் என்று நிற்பதுதான் உயரிய தவம்.

ஆங்கிலத்தில் duty என்ற ஒரு வார்த்தை வரும். அந்த , duty எனும் வார்த்தையே, , due என்ற வார்த்தையிலிருந்து வந்ததுதான். நாம் அனைவருமே இறைவனுக்கு கடன்பட்டவர்கள் (due). 

அந்தக்கடனை செலுத்த, இறை வழிபாட்டை கட்டாயம் நாம் செய்யத்தான் வேண்டும். இறைவனின் மீது, அவனின் திருவருளின் மீது இன்றியமையாத, இயற்கையாக பக்தி கொள்ளவேண்டும் என்பதைத் தான் அப்பர் ஸ்வாமிகளும் வலியுறுத்துகிறார்."