Sunday, January 31, 2016

குடும்பத்தை ஒன்றிணைக்கும் சோமவாரம்

குடும்பத்தை ஒன்றிணைக்கும் சோமவாரம் 
சோமவாரம் என்பது திங்கட்கிழமையை குறிக்கும். அன்றைய தினம் சிவபெருமானுக்கு உகந்தநாள். ‘சோம’ என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்படும். 

சந்திரன் கொடிய நோயால் துன்பப்பட்டான். நோய் குணமாக வேண்டி சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான். அவர் அருளால் நவக்கிரகங்களில் ஒருவன் ஆனான். அவன் பெயரால் சோமவாரம் (திங்கட்கிழமை) தோன்றியது. 

‘தன்பெயரால் தனது வாரத்தில் மக்கள் விரதம் இருக்க வேண்டும்’ என்று சந்திரன் சிவபெருமானை வேண்டிக்கொண்டான். அதனால் சோமவார விரதம் என பெயர் ஏற்பட்டது. 

இந்த சோமவார விரதத்தை திங்கட்கிழமையன்று பயபக்தியுடன் கடைப்பிடித்து, சாம்ப பரமேசுவர பூஜையை செய்தால் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். வெகுதூரத்தில் உள்ளவர்கள் தங்கள் இருப்பிடத்தை நாடி வந்து சேருவர். 

கணவன்– மனைவிக்கு இடையே பிரிவு இருக்காது. மனைவி, குழந்தைகளை விட்டு பிரிந்து சென்ற கணவன், ஓடோடி வந்து சேருவான். அந்த அளவுக்கு இந்த விரதம் மகத்துவம் வாய்ந்தது. திங்கட்கிழமை அன்று விரதத்தை மேற்கொண்டு சாம்ப பரமேஸ்வர பூஜை செய்தால் சகல செல்வங்களும் கிடைக்கும். 14 ஆண்டுகள் வரை இடையூறு இருக்காது. மாங்கல்ய தோஷம் ஏற்படாது. களத்திரதோஷம், மாங்கல்ய தோஷம் இருப்பவர்கள் அவசியம் இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். 

சோமவாரத்திற்கும் ஒரு கதை இருக்கிறது. அதை இப்போது பார்க்கலாம்.

ஒருகாலத்தில் ஆர்யா வர்த்தா நாட்டை சித்ரவர்மன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய ஒரே மகள் சீமந்தினி. மகள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த மன்னன் சித்ரவர்மன், சிறந்த ஜோதிடர்களை வரவழைத்து தனது மகளுக்கு ஜாதகம் எழுதும்படி உத்தரவிட்டான்.

அந்த ஜோதிடர்களில் ஒருவர் ‘மன்னா! உன்மகள் அழகில் லட்சுமி, கலைகளில் கலைமகள், வீரத்திலும் தீரத்திலும் சிறந்து விளங்குவாள். உலகமே போற்றி புகழும் படி கணவனுடன் பலகாலம் சேர்ந்து வாழ்வாள்’ என்றார்.

ஆனால் இன்னொரு ஜோதிடர் முகம் வாட்டமாக இருந்ததை கவனித்த மன்னன், அவருடைய கருத்தையும் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் மன்னரை அதிர்ச்சி அடைய செய்தது. ‘மன்னா! நான் சொல்வதற்காக வருத்தப்படக்கூடாது. உங்கள் மகள் திருமணம் ஆன சிலநாட்களில் மாங்கல்ய பாக்கியத்தை இழப்பாள். இது ஜாதக வாக்கு’ என்றார். 

இதைக்கேட்ட மன்னர் எல்லையில்லா வேதனை அடைந்தார். மகளை பார்க்கும் போதெல்லாம் அவரை துயரச்சுமை வாட்டியது. காலம் கடந்தது. மன்னரின் மகள் சீமந்தினி மணப்பருவம் அடைந்தாள். அவளது தோழிகள் அவளுடைய ஜாதகத்தில் வர       விருக்கும் ஆபத்தைக் கூறினார்கள். 

இளம்வயதில் கற்பனைச் சிறகுகளுடன் வானில் இறக்கைக்கட்டி பறந்த சீமந்தினிக்கு, கற்பனைக் கோட்டைகள் கலைந்தன. இருப்பினும் மன்னன் மகள் அல்லவா? மன தைரியத்தை விடவில்லை. மாமுனிவராகிய யாக்ஞவல்கிய முனிவரின் மனைவி, யானமைத்ரேயியை அடைந்து அவளை வணங்கி மனக்கவலையை தெரிவித்தாள். 

சிறந்த பதிவிரதையான மைத்ரேயி சீமந்தினியிடம், ‘அம்மா! கவலைப்படாதே! சோமவார விரதத்தை கடைப்பிடி. மலைபோல் துன்பம் வந்தாலும், பனிபோல விலகும்’ எனக்கூறி உபதேசம் செய்தாள். 

சீமந்தினியும் முறையாகச் சோமவார விரதத்தை கடைப்பிடித்தாள். சீமந்தினிக்கு நளன் பேரனும், இந்திரசேனன் மகனுமான சந்திராங்கதனுடன் திருமணம் நடந்தது. தம்பதிகள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். 

ஒருநாள் நண்பர்களுடன் நதியில் நீராடச்சென்ற சந்திராங்கதன் தண்ணீரில் மூழ்கினான். எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. ஆனால் மனநிலை சற்றும் குலையாத சீமந்தினி சோமவார விரதத்தை கடைப்பிடித்தாள். பரமேஸ்வரனையும், பார்வதியையும் மனதார பிரார்த்தனை செய்தாள். அவள் விரதத்திற்கு பலன் விரைவிலேயே கிடைத்தது. 

திடீரென்று ஒருநாள் நீரில் மூழ்கிய அவளது கணவன் சந்திராங்கதன் திரும்பி வந்தான். தண்ணீரில் மூழ்கிய அவனை சில நாகர்கள் அழைத்துப்போனதாகவும், சிலநாட்கள் அவர்களிடம் இருப்பிடத்தில் தங்க வைத்து உபசரணை செய்து சீமாந்தினி செய்யும் சோமவார விரதம் பற்றி கேட்டு தெரிந்து கொண்டு, மறுபடியும் தன்னை கொண்டு வந்து விட்டதாக கூறினான். பிரிந்தவர்கள் கூடினாலும் கேட்கவும் வேண்டுமோ! சீமந்தினி ஆனந்த கண்ணீர் வடித்து, கணவனோடு சந்தோஷமாக வாழ்ந்தாள். 

No comments:

Post a Comment