Tuesday, July 12, 2011

பெண்ணுக்கு வளைகாப்பு(ஸீமந்தம்) நடத்துவது ஏன் தெரியுமா?




பெண்களுக்கு நடத்தப்படும் வளைகாப்புக்கு ஸீமந்தம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? தற்காலத்தில் பெரும்பாலானவர்கள் மாப்பிள்ளை வீட்டில் வளைகாப்பு நடத்தி தாய் வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். ஆனால், அக்காலத்தில் தாய் வீட்டுக்கு பெண்ணை வரவழைத்து அங்கு வைத்தே வளைகாப்பு நடக்கும். அப்போது பெண்ணின் தாய் மகளுக்கு, லட்சுமியை பற்றிய பாடல்களைப் பாடிக் கொண்டே நெற்றி வகிட்டில் முள்ளம்பன்றியின் முள்ளால் லேசாக கீறி குங்குமம் வைப்பார். முள்ளம்பன்றியின் முள்ளால் கீறுவது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நன்மையைத் தரும். வகிடு என்ற சொல்லின் சமஸ்கிருதப் பெயரே ஸீமந்தம். பெண்களின் வகிட்டில் லட்சுமி குடியிருக்கிறாள். நெற்றியில் பொட்டிட்டால் அவள் சந்தோஷமடைவாள். அப்பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை செல்வ வளத்துடன் வாழும் என்ற நம்பிக்கையினால் ஸீமந்தம் நடத்துகிறார்கள்.

அம்மனுக்கு என்ன அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?


இந்த உலகை படைத்து, காத்து வரும் ஜகன்மாதாவுக்கு  கீழ்கண்ட முறைப்படி  அபிஷேகங்களைச் செய்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம்
சந்தனாதித் தைலங்களால் அபிஷேகம் செய்பவர் சுகம் பெறுவர்.
அரிசி மாவு - மல நாசம் மலம் என்பது தீவினைகள்

மஞ்சள் பொடி - ராஜ வசியம், அரசாங்க அலுவல்களை விரைவில் சாதகமாக்கிக் கொள்ளலாம்.

பஞ்ச கவ்யம் - ஆத்ம சுத்தி, தெய்வீக சாதனைக்கு உதவுவது.
ரசபஞ்சாம்ருதம் - கார்யஸித்தி, எல்லாக் காரியங்களிலும் வெற்றி
பல(பழ)பஞ்சாமிர்தம் - தனவிருத்தி குறைவற்ற செல்வம் தரும்

பால் - தீர்க்காயுள், நீண்ட ஆயுள்தரும்
தயிர் - குழந்தைப்பேறு உண்டாகும்.
நெய் - மோக்ஷம் மோட்சத்தைத் தரும். ஞான விருத்தி, ஞானத்தை அளிப்பது.
தேன் - வாக்ஸித்தி, இனிமையான குரலையும், சங்கீதத்தில் திறமையையும் அளிக்கும்.

கருப்பஞ்சாறு - நித்ய சுகம், அளவற்ற இன்பங்களைக் கொடுக்கும்.
சர்க்கரை - சத்ரு நாசம், எதிரிகளை விரட்டி வெற்றி தரும்.
வாழைப்பழம் - தான்யவிருத்தி, பயிர் விருத்தி அமோக விளைச்சல் செழிப்பு.
பலாப்பழம் - எவரையும் வசப்படுத்தும் வசீகரத் தன்மை.
எலுமிச்சம்பழம் - ம்ருத்யு நிவாரணம், அகால மரணத்தை நிவிருத்தி செய்து வியாதிகளைத் தீர்த்து நலம் தரும்.
அன்னம் - ராஜகௌரவம், அரசுரிமை, அரசனுக்குச் சமமான போக போக்கியங்கள் தரும்.
இளநீர் - அபமிருத்யு நாசம். சத்புத்திரப்பேறு. கோரோசனை, தீர்க்காயுள், நீண்ட ஆயுள்.
பச்சைக்கற்பூரம் - பயத்திலிருந்து விடுவித்து மன நிம்மதியையும், சந்தோஷத்தையும் தரும்.
கஸ்தூரி - ஜயம் வெற்றி தரும்.
பன்னீர் - சாலோக்யம், தெய்வ உலகில் வாழும் பேறு கிட்டும்.
சந்தனக்குழம்பு - சாயுஜ்யம், சிறந்த ஞானம் பெற்று இறையுணர்வு பெற்று இறைவனோடு ஐக்கியமாகும் நிலை. சாயுஜ்ய நிலையளிக்கும்.
சுத்தமான குளிர்ந்த நீராலும், கங்கை முதலான புண்ணிய நதிகளின் தீர்த்தங்களால் அபிஷேகம் செய்பவர் அன்னையின் அருளுக்குப் பாத்திரமாகி அனைத்து வினைகளும் ஒழிந்து இவ்வுலக நலன்களும் மேலுகப் பேறும் ஒருங்கே பெறுவர்.

பெருமாளை தாங்கும் சிவன்


நின்ற கோலத்தில் அருளும் மகாவிஷ்ணு, பீடத்தின் மீது அல்லது தாமரை மலரின் மீதுதான் நின்றபடி காட்சி தருவார். ஆனால், அவரே சிவலிங்கத்திற்கு உரிய ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் காட்சிதரும் அதிசயதலம் வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அருகிலுள்ள திருப்பற்கடலில் உள்ளது. இங்குள்ள கருவறையில்  இருக்கும் வெங்கடேஸ்வரர், ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் இருக்கிறார். இத்தலம் அருகில் ரங்கநாதர் கோயில் ஒன்று உள்ளது. இங்கு சுவாமி நெல் அளக்கும் மரக்கால் மீது தலை வைத்து படுத்த கோலத்தில் இருக்க, பிரம்மா, அவரது நாபிக்கமலத்தின் மீது வீற்றிருக்கிறார்.

இறைவழிபாட்டில் பசுவுக்கும், பாம்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?




இந்து மதத்தில் பாம்புக்கும் பசுவுக்கும் தனி இடம். மற்ற விலங்குகள், பிராணிகளைவிட இந்த இரண்டுக்கும் அதிக முக்கியத்துவம், பசுவைத் தெய்வமாக மதிக்கும் மதம் நமது இந்து மதம். இத்தனை மிருகங்களுக்கும் இல்லாத மரியாதை பசுவுக்கு மட்டும் ஏன் ? பசு தன் கன்றுக்கு மட்டுமில்லாமல், அனைவருக்குமே தன் பாலைத் தருவதால் மட்டுமல்ல. பசு எதைச் சாப்பிடுகிறது ? மனிதன், நெல்லிலிருந்து பெறும் அரிசியைச் சமைத்துச் சாப்பிடுகிறான், நெல்லின் உமியைத் தவிடாகவும், நெற்கதிரின் வற்றிய நாற்றான வைக்கோலையும் பசு உணவாகக் கொள்கிறது. எண்ணெயை நாம் உட்கொள்ள, மிச்சமிருக்கும் புண்ணாக்கை உட்கொள்கிறது பசு. ஆக, மனிதன் சாப்பிட்ட உணவின் இயற்கை மிச்சங்களைச் சாப்பிட்டு விட்டு, மனிதர்களைத் தன் குழந்தைகளாகவே கருதி பாலைக் கொடுக்கிறது. இப்படித் தன்னலம் கருதாமல் மனித வர்க்கத்துக்கு பாலைக் கொடுப்பதுடன், பசுவின் சாணம் வரட்டியாகவும் இன்றைய காலகட்டத்தில் கோபர் கேஸாகவும் அதாவது - எரிபொருளாக உதவுகிறது. பசுவின் சாணத்துக்கு (ஆண்டி - இன்பெக்ஷன்) குணம் இருப்பதாலேயே, வீட்டுத் தரைகளில் பசுவின் சாணம் வைத்து மெழுகும் பழக்கம் வந்தது. பசுவின் மூத்திரத்தில் அது சாப்பிடும் புல் வகைகளிலிருந்து கிடைக்கும் மருந்துச் சத்து இருப்பதால், பல மருந்துகள் தயாரிப்பில்  கோமூத்திரம் இடம்பெறுகிறது.

அந்தக் காலத்தில் பஞ்சகவ்யம் என்ற ஆரோக்கிய மருந்துக் கலவை மிகப் பிரபலம். பசுவின் மூத்திரம் கலந்ததுதான் பஞ்சகவ்யம். அள்ளி அள்ளிக் கொடுக்கும் பசுவுக்கும், காமதேனு என்ற தெய்வ உருவமும் கொடுத்தார்கள் நம் முன்னோர். சாதுவான பிராணி, மென்மையான பிராணி பசு என்பதால் பரமசிவன் அமரும் வாகனம் பசுவாக இல்லாமல் காளையாக சித்தரிக்கப்பட்டது. இதில்கூட பசுவைக் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் நம் முன்னோர் குறிப்பாக இருந்தது புரியும். பசுவை மகாலட்சுமியின் அம்சமாகவே கருதியது, மனிதனின் பொருளாதார முன்னேற்றத்தில் பசுவின் பெரும்பங்கை மனதில் வைத்துதான். 

பாம்பை நாகம் என்ற தெய்வ வடிவாகவே வழிபட்டார்கள் நம் முன்னோர், மகாவிஷ்ணு ஆதிசேஷன் என்ற பாம்பின் மேல் படுத்திருக்கிறார். பரமசிவன் கழுத்தில் பாம்பு அழகாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது. விநாயகப் பெருமான் இடுப்பில் பாம்பை சுற்றிக் கொண்டிருக்கிறார். பகவான் கிருஷ்ணர் காளிங்கன் என்ற பாம்பின் மேல் நர்த்தனம் ஆடுகிறார். முருகனின் வாகனமான மயில்கூட வாயில் பாம்பைக் கொத்திக் கொண்டிருப்பது போல் அமைப்புண்டு. அது சரி, நாம் வைக்கும் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழும் பாம்புக்குப் புற்றமைத்து பாலையும் ஊற்றி; அதையும் தெய்வாம்சம் கொண்டதாக ஆக்கியதேன் ? ஒரு பக்கம் தன்னலம் கருதாது கொடையளிக்கும் பசுவும் தெய்வமாகிறது. மறுபக்கம், அந்தப் பசுவின் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழ்ந்து மனிதனுக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடிய பாம்பையும் தெய்வமாக்கியது ஏன் ? இந்த குழப்பத்திற்கு வாரியார் சுவாமிகள், அருமையான விடையைக் கூறியுள்ளார். மனித ஜென்மம் என்பது பாவங்களும், புண்ணியமும் கலந்த ஒன்று. மனிதனுக்கு மனிதன் பாவ-புண்ணிய விகிதாசாரம் வேறுபடலாம். ஆனால், வாழ்க்கை முழுவதும் 100 சதவிகிதம் பாவம் செய்தவனுமில்லை, புண்ணியம் செய்பவனும் இருப்பது சாத்தியமில்லை. இறைவன் எப்படிப்பட்ட மனிதனையும் தன் பிரஜையாகவே கருதி ரட்சிக்கிறான். அதன் அடையாளமாகத்தான் மனித உணவின் எச்சத்தை உண்டு, சத்தான பாலைக் கொடுக்கும் பசுவையும், தெய்வாம்சம் கொண்டதாகச் செய்தார் கடவுள். அந்தப் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழும் பாம்பையும், கழுத்திலோ இடுப்பிலோ தன் உருவத்திலோ அணிந்துகொண்டு நஞ்சையளிக்கும் நாகப் பாம்பையே ஏற்றுக் கொள்கிறேன். உன்னையா ஏற்றுக்கொள்ள மாட்டேன் ? என்று சொல்வது போல்தான் பாம்பையும் தெய்வாம்சம் கொண்டதாக்குகிறார் என்று விளக்கமளித்தார். எவ்வளவு உண்மையான வார்த்தைகள் ? நல்லவனுக்கும் சரி, கெட்டவனுக்கும் சரி, ஆத்திகனுக்கும் சரி, நாத்தினுக்கும் சரி... கடவுள் ஒன்றுதான் ! இந்து மதம் ஒரு சனாதன தர்மம், சமதர்ம சமுதாயத்தையே அது சிருஷ்டித்தது என்பதற்கு இதுவும் ஒரு நிரூபணம்.

நவகிரக தோஷத்தால் என்ன பாதிப்பு ஏற்படும்? இதோ அதற்கான பரிகாரம்!

சூரியன் தோஷம் விலக ...



உங்களுக்கு சூரியதோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். சூரியன் பிதுர்காரகன். அதாவது தந்தைவழி உறவுகளின் அமைப்பில் சாதக பாதகங்களை ஏற்படுத்தக் கூடியவன். அரசு, அரசியல் துறை அமைப்புகள், ஆரோக்யம் இதற்கெல்லாமும் சூரியனோட அமைப்பே காரணம். உங்க ஜாதகப்படியோ அல்லது தசாபுக்திப்படியோ சூரியனோட அமைப்பு கெட்டிருந்தால், தந்தை வழி உறவுகளோடான ஒற்றுமை பாதிக்கப்படும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் தலை, கண்கள், வயிறு, ரத்த மாறுபாடு, பித்தம் அதிகரிப்பு இப்படிப்பட்ட உபாதைகள் மாறி வரும். சட்டப்புறம்பான நபர்களால் மிரட்டல், அரசுவழி அனுமதிகள் கிடைப்பதில் தாமதம், சிலருக்குத் திருமண தாமதம் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் சூரியன் அமைப்பு சரியில்லையாதலால், அதாவது சூரியதோஷத்தால் வரும்.
சூரியதோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? உங்களுக்கு சூரியதோஷம் இருந்தால், அடிக்கடி அனுமன் கோயிலுக்குப் போய் வழிபடுங்கள். தாமிரத்தால் செய்த இஷ்டதெய்வ டாலர் அல்லது அனுமன் டாலரை அணிந்து கொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது உங்கள் வீட்டு பூஜையறையில் பசுநெய்தீபம்  5 அகலில் ஏற்றிவைத்து வழிபடுங்கள். பசுமாட்டுக்கு கோதுமை அல்லது கோதுமைத்தவிடு வாங்கிக் கொடுங்கள். சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதயம், அனுமன் சாலீசா துதிகளை தினமும் கேளுங்கள். முடியாதவர் மாணிக்கக் கல்லில் டாலர் செய்து கழுத்தில் அணியுங்கள். அல்லது மாணிக்கத்தால் செய்த விநாயகரை பூஜியுங்கள். அடிக்கடி பிரசித்தி பெற்ற அனுமன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்துவிட்டு சூரியனுக்குரிய தானியமான கோதுமையால் ஆன இனிப்பு வகைகளை இயன்ற அளவு தானம் செய்யுங்கள். சூரியனார் கோயிலுக்குப் போவதும் நல்லது. தினமும் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து உங்களது பணிகளை செய்ய ஆரம்பியுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சூரியனை வழிபடுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். சூரியதோஷம் சுலபமாக விலகும்.
சூரிய துதி
காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனைரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி
சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்
ஞாலம் காக்கும் ஞாயிறே போற்றி
நாளும் நன்றே நல்குவாய் போற்றி
சீலம் எல்லாம் சேர்ப்பாய் போற்றி
காலம் முழுவதும் அருள்வாய் போற்றி

சந்திரன் தோஷம் விலக ...
உங்களுக்கு சந்திரதோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். சந்திரன் மாத்ரு காரகன். அதாவது தாய்வழி உறவுகளால் ஏற்படும் பிரச்சனைகள், உறவுகளுக்கிடையே ஏற்படும் ஒற்றுமைக் குறைவு, தாயின் ஆரோக்யம் அடிக்கடி பாதிக்கப்படுதல், தாய்வழி சொத்துக்களில் இழுபறி, பதவி, புகழ், கல்வி உயர்வுகளில் தடை போன்ற பாதிப்புகள் தோன்றலாம்.
சந்திர தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? ஜனனகால ஜாதக ரீதியாகவோ, தசாபுக்திப்படியோ உங்களுக்கு சந்திரதோஷம் இருந்தால் திங்கட்கிழமைகளில் சூரியோதயத்தின் போது உங்கள் வீட்டு பூஜையறையில்  5 அகல்தீபம் பசுநெய் விட்டு ஏற்றி வையுங்கள். அடிக்கடி பக்கத்தில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று அங்கு நடைபெறும் அன்னதானம் அல்லது நிவேதனத்திற்கு இயன்ற அளவு பச்சரிசி வாங்கிக் கொடுங்கள். ஈயத்தினால் செய்யப்பட்ட காப்பு அல்லது டாலரை அணிந்து கொள்ளுங்கள். பசுமாட்டிற்கு பச்சரிசியும் வெல்லமும் கலந்து கொடுப்பதும் சிறப்பான பரிகாரமே. திங்களூர் கைலாசநாதர் ஆலயத்திற்குச் சென்று கைலாசநாதரையும், நவகிரக சந்திரனையும் வழிபட்டு வாருங்கள். இயன்ற அளவு பால், இனிப்புகளை பிரசாதமாக விநியோகம் செய்யுங்கள்.
உங்களால் முடிந்தால் மூன்ஸ்டோன் கணபதியை வாங்கிவைத்து வழிபடுங்கள். எப்போதும் சந்திரனை தலையில் சூடியிருக்கும் சிவனது துதிகளையும், சந்திர காயத்ரியையும் சொல்லுங்கள். இதில் உங்களால் இயன்ற பரிகாரத்தைச் செய்தாலே, சந்திரதோஷம் உங்களை சங்கடப்படுத்தாமல் ஓடும். பவுர்ணமி நாளில் சந்திர ஒளி படும்படி கிரிவலம் செல்லுங்கள். அன்றை தினம் அருகிலுள்ள சிவாலயத்தில் உள்ள அம்பிகைக்கு அர்ச்சனை, அபிஷேகம் என இயன்றதைச் செய்து வழிபடுவது சிறப்பான பலன் தரும். குறைந்தது 3 நெய் தீபங்களையாவது ஏற்றி வழிபட்டால் வாழ்க்கை பிறையாகக் குறையாமல் முழுநிலவாக ஒளிரும்.
தஞ்சாவூர் நாதன்கோயில் நந்திபுர விண்ணகரப் பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளையும், தாயாரையும் தரிசித்துவிட்டு, வெண்பொங்கல் பிரசாதம் விநியோகம் செய்துவிட்டு வருவது நல்லது. முத்து பதித்த டாலர் அல்லது முத்து மாலை அணிவது சந்திரதோஷத்தின் கடுமையைக் குறைக்கும்.

சந்திர துதி

அலைகடல் அதனினின்று மதியும் வந்து உதித்தபோது
கலை வளர் திங்களாகக் கடவுளர் எவருமேத்தும்
சிலைநுதல் உமையாள்பங்கன் செஞ்சடைபிறையாம் மேரு
மலை வலமாகவந்த மதியமே போற்றி! போற்றி!
எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவரும் புரிவாய்
சந்திரா போற்றி சற்குணா போற்றி
சங்கடம் தீர்க்கும் சதுரா போற்றி
பிங்கலன் அணிந்த திங்களே போற்றி
எங்குலம் தழைத்திட எழுவாய் போற்றி
கங்குலில் ஒளியினைப் பொழிவாய் போற்றி
மங்களம் நிறைந்திட அருள்வாய் போற்றி

செவ்வாய் தோஷம் விலக .....

உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். சகோதர உறவுகளுடன் ஒற்றுமை குறையும். அவர்களின் ஆரோக்யம் அடிக்கடி சீர்கெடும். பூர்வீக சொத்துக்களான நிலம், வீடு சம்பந்தப்பட்ட வழக்குகள் இழுபறியாகும். சிற்றின்பநாட்டம் அதிகரிக்கும். கடன்கள் அடையாமல் அதிகரித்துக் கொண்டே போகும். ரத்த அழுத்த மாறுபாடு, ரத்தத்தொற்று நோய்கள், அடிக்கடி காயம் ஏற்படுதல், கழிவுப்பாதை உபாதைகள், தலைசுற்றல், பெண்களுக்கு மாதாந்திர உபாதைகளில் சிரமம் இப்படிப்பட்ட உடல்நலப் பிரச்சனைகளுள் ஏதாவது ஒன்று மாறி மாறி கஷ்டப்படுத்தக்கூடும்.
செவ்வாய் தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? செவ்வாய்க்கிழமைகளில் சூரியோதயத்தில் 6.15 முதல் 6.45க்குள் 5 அகல் தீபத்தினை பசுநெய்விட்டு உங்கள் விட்டு பூஜையறையில் ஏற்றி வையுங்கள். செம்பு உலோகத்தாலான டாலர் அல்லது காப்பை அணிந்து கொள்வது நல்லது. முருகன் (அ) துர்கை டாலரானால் கூடுதல் சிறப்பு. அடிக்கடி அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று முருகனை வழிபட்டும், அங்குள்ள நவகிரக சன்னதி செவ்வாயையும் வழிபட்டு வாருங்கள். முடிந்தால் பழநிக்குச் சென்று அங்குள்ள முறைப்படி முருகப்பெருமானை தரிசனம் செய்யுங்கள். வைத்தீஸ்வரன் கோயில் சென்று அங்குள்ள அங்காரகனுக்கு அர்ச்சனை செய்வதும் நல்ல பலன் தரும். ரெட்கார்னெட் டாலர் அணிவதும், ரெட்கார்னெட் கணபதியை பூஜிப்பதும் அவரவர் வசதிக்கு ஏற்ப செய்யலாம். வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கிக் கொடுங்கள்.
அடிக்கடி நவகிரக செவ்வாய்க்கு அர்ச்சனை செய்யுங்கள். உங்கள் பிறந்ததேதி அல்லது கிழமையில் செய்வது நல்லது. இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். செவ்வாய் தோஷம் விலகி வாழ்க்கை செழிப்பாகும்.

செவ்வாய் துதி

சிறுப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ
மங்கலச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு
வசனம்நல் தைரியத்தோடு மன்னதம் சபையில் வார்த்தை
புசபல பராக்கிரமங்கள் போர்தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவரவர்க்கு நீள் நிலம்தனில் அளிக்கும்
குசன்நில மகனாம் செவ்வாய் குறைகழல் போற்றி போற்றி.
செவ்விய நிறத்து செவ்வாய் போற்றி
திவ்விய சுகமதை தருவாய் போற்றி
கவ்விய வினைகளைக் களைவாய் போற்றி
அவ்வியம் அகன்றிட அருள்வாய் போற்றி.

புதன் தோஷம் விலக:

உங்களுக்கு புதன் தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். புதன் வித்யாகாரகன். அதாவது கல்வி, கலை போன்றவற்றுக்குக் காரணமானவன். புதன் அமைப்புப் பாதகமாக இருந்தால் படிப்பு தடைபடுதல், பாட்டு, இசை, ஓவியம் போன்ற கலை ஆர்வம் தடைப்படுதல், உயர்வுகள் தடைப்பட்டு தாழ்நிலை ஏற்படுதல் போன்ற பொதுவான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
அடிக்கடி விபத்து, உடல் சம்பந்தமான குறைபாடுகள் மாறி மாறி வரலாம். தோல் நிறமாற்றம், முக அழகு குறைதல் புத தோஷத்தால் ஏற்படும். புதன் தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? புதன் அமைதியான கிரகம், எனவே அமைதியாக, மென்மையாக இருக்கப் பழகுங்கள். பித்தளையால் செய்யப்பட்ட டாலர் அல்லது காப்பினை அணிந்து கொள்ளுங்கள். அடிக்கடி பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி வாங்கி சாற்றி வழிபடுங்கள். பக்தர்களுக்கு பச்சைப்பருப்பு பாயாசம் அல்லது பால்பாயாசம் பிரசாதமாக விநியோகம் செய்யுங்கள். புதன்கிழமைகளில் சூரியோதயத்தில் உங்கள் வீட்டு பூஜையறையில் 5 அகல்தீபம் பசுநெய் ஏற்றி இஷ்ட தெய்வத்தைக் கும்பிடுங்கள். புதன் காயத்ரி, பெருமாள் காயத்ரி மனதாரக் கூறுங்கள்.
பச்சை கார்னெட் கல் டாலர் அல்லது கணபதியை பூஜை செய்யலாம். அடிக்கடி நவகிரக புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். முடிந்தால் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபடுவது நல்லது. நாகப்பட்டினம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள முறைப்படி வழிபட்டு வாருங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். புதன் தோஷம் விலகி உங்கள் வாழ்வில் புதுமலர்ச்சி ஏற்படும்.

புதன் துதி

இதமுற வாழ இன்னல்கள் நீக்கும்
புதபகவானே பொன்னடி போற்றி
பதம் தந்தருள்வாய் பண்ணொளியானே
உதவியே அருள்வாய் உத்தமா போற்றி
மதனநூல் முதலாய நான்கு மறை புகல் கல்வி ஞானம்
விதமுடன் அவரவர்க்கு விஞ்ஞைகள் அருள்வோன் திங்கள் சுதன் பல சுபாசுபங்கள் சுகம்பல கொடுக்க வல்லான்
புதன்கவிப் புலவன் சீர்சால் பூங்கழல் போற்றி போற்றி.
புண்ணிய திருமக புதனே போற்றி
நுண்ணிய கலைகளை அளிப்பாய் போற்றி
எண்ணிய பணிகளை முடிப்பாய் போற்றி
திண்ணிய பயன்களை அருள்வாய் போற்றி.

குரு தோஷம் விலக:
நமக்கு கிரகங்களினால் தோஷம் ஏற்பட்டால் குருவிடம் (வியாழன்) போய் முறையிடுவோம். ஆனால் அந்த குருவே நமக்கு தோஷமாக அமைந்து விட்டால்.... அதனால் பாதிப்பு ஏதும் இருக்காது. அதே சமயம் குரு என்ற முறையில் நமக்கு நல்ல பாடங்களையும் கற்று தருவார். வியாழன், புத்திரகாரகன். அதாவது குழந்தைகளின் ஆரோக்யம் சீர்கெடுவது, வாரிசுகளுடன் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுவது, வாரிசுகள் உங்களைப் பிரிந்து போக நேரிடுவது இப்படிப்பட்ட பிரச்னைகள், வியாழ தோஷத்தால் ஏற்படலாம். ஞாபக மறதி, பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள், வயிறு உபாதை, தலைசுற்றல், ரத்த அழுத்த மாறுபாடு, பரம்பரை நோய் பாதிப்பு, படபடப்பு, மனஅழுத்தம் போன்ற உபாதைகள் மாறி மாறி வரலாம். செலவு இரட்டிப்பாகும். 

வியாழன் தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?  வியாழக்கிழமைகளில் சூரியோதயத்தில் வீட்டு பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி தட்சிணாமூர்த்தியை மனதார வழிபடுங்கள். ஆலங்குடி, திருச்செந்தூர், மந்திராலயம், தூத்துக்குடி ஆழ்வார் திருநகரி ஆகிய தலங்கள் ஏதாவது ஒன்றுக்குச் சென்று மனதார வழிபட்டு வாருங்கள். அந்தக் கோயிலுக்குப் போகும் முன் 40 லட்டுக்கும் குறையாமல் ஏழைகள் அல்லது பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள தட்சிணாமூர்த்தியை அடிக்கடி சென்று வழிபட்டு வாருங்கள்.
தங்கத்தாலான ஏதாவது ஒரு ஆபரணத்தை உடலில் அணிவது நல்லது. அவரவர் வசதியைப் பொறுத்து மஞ்சள் டோபாஸ் கல்லால் ஆன டாலர் அணிவது அல்லது கணபதியை பூஜிப்பது நன்மைதரும். யானையைப் பார்க்கும் போது அல்லது கோயில் யானைக்கு மஞ்சள் வாழைப்பழம் இயன்ற அளவு வாங்கிக் கொடுங்கள். குரு காயத்ரி, தட்சிணாமூர்த்தி துதிகளையும் எப்போதும் சொல்லுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். குருதோஷம் நிச்சயம் விலகி, குருவருள் பரிபூரணமாகக் கிட்டும்.

வியாழன் துதி

குணமிகு வியாழ குருபகவானே!
மணமுள வாழ்வை மகிழ்வுடன் அருள்வாய்!
பிரகஸ்பதி வியாழ பர குரு நேசா!
கிரக தோஷமின்றிக் கடாட்சித் தருள்வாய்!
மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி
நறைசொரி கற்ப கப்பொன் நாட்டினுக் கதிபனாக்கி
நிறைதனம் சிவிகை மன்றல நீடுபோ கத்தை நல்கும்
இறையவன் குருவி யாழன் இணையடி போற்றி போற்றி.
வளமெலாம் அளித்திடும் வியாழா போற்றி
குலமெலாம் தழைத்திட வருவாய் போற்றி
புலமெலாம் மலர்ந்திட முனைவாய் போற்றி
உலகெலாம் உவந்திட அருள்வாய் போற்றி!

சுக்ர தோஷம் விலக:

உங்களுக்கு புதன் தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். சுக்ரன், களத்திரகாரகன் அதாவது கணவன் மனைவி அமைப்புக்கு காரணமானவன். சுக்ரனின் அமைப்பு சரியில்லாமல் தோஷம் ஏற்பட்டால், குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை குறையும், கணவன் மனைவிக்கிடையே மனக்கசப்பு உண்டாகும். வாகன அமைப்பிற்கும் இவரே காரகன் என்பதால், புது வாகன யோகமோ அல்லது வாகன யோகத்தடையோ ஏற்படும்.
உடலில் முதுகுத்தண்டுவட உபாதை, கழிவுப்பாதை உறுப்புகள், கல்லீரல், சிறுநீரகக்கல், பிரசவகால பிரச்னைகள், இப்படி ஏதாவது ஒரு பிரச்னை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். கணவன் வழி அல்லது மனைவி வழி உறவுகளுடன் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும். சுக்ர தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? வெள்ளிக்கிழமைகளில் சூரியோதயத்தில் உங்கள் வீட்டு பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி வைத்து வழிபடுங்கள். உங்கள் குலதெய்வத்தையோ அல்லது ஸ்ரீரங்கநாதரையோ வழிபடுவது சிறப்பு. பக்கத்து பெருமாள் கோயிலில் உள்ள தாயாரை தாமரை மலர் அல்து மல்லிகைப்பூ கொடுத்து வழிபடுங்கள். முயன்ற அளவு தானம் செய்யுங்கள். நேரம் கிடைக்கும் போது சுக்ர காயத்ரி, மகாலட்சுமி துதிகளை மனதார கூறுங்கள். பசுமாட்டிற்கு தயிர்சாதம் அல்லது பச்சரிசி, வெல்லம் கலந்து கொடுங்கள்.
வசதி உள்ளவர்கள் வைரம் அல்லது க்ரீன் கார்னெட் கல்லையோ அல்லது அக்கல்லாலான விநாயகரை வாங்கி பூஜியுங்கள். அடிக்கடி ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசனம் செய்யுங்கள். உங்கள் வீட்டிற்கருகிலுள்ள நவகிரக சன்னதி சுக்ரனுக்கு இயன்ற அர்ச்சனை ஆராதனை செய்யுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். சுக்ரதோஷம் நீங்கி வாழ்க்கையில் சுபயோக பலன்கள் கூடும்.

சுக்ர துதி

சுக்கிரமூர்த்தி சுபம்மிக ஈவாய்
வக்கிரம் இன்றி வரம் மிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே!
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கு அருளே!
மூர்க்காவன் சூரன் வாணன் முதலினோர் குருவாய் வையம்
காக்கவான் மழைபெய் விக்கும் கவிமான் கனகம் ஈவோன்
தீர்க்கவா னவர்கள் போற்றச் செத்தவர் தமை எழுப்பும்
பார்க்கவன் சுக்ராச் சாரி பாதபங் கயமே போற்றி.
துணைநலம் அருளும் சுக்ரா போற்றி
மனையறம் தழைத்திட வருவாய் போற்றி
இணையிலா பொருளை கொடுப்பாய் போற்றி
வினையெலாம் விலகிட அருள்வாய் போற்றி.

சனி தோஷம் விலக:

சனீஸ்வரன் வர்றான்...தொல்லை கொடுக்கப்போறான்... என சிவன் உட்பட அனைவரும் பயப்படக்கூடிய ஒரே கிரகம் சனீஸ்வரன் தான். ஆனால் இவரைக்கண்டு யாரும் பயப்பட தேவையில்லை.  இவருக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. அவரவர் செய்யக்கூடிய செயல்களுக்கேற்றாற் போல் பாதிப்புகளை கொடுக்க கூடியவர். எனவே இவரை நீதிபதி என்று அழைப்பது மிகப்பொருத்தமாக அமையும். . அதிலும் தலைமை நீதிபதி என்றால் கண கச்சிதாமாகப் பொருந்தக்கூடியவர் இவர் ஒருத்தர் தான். எம தர்மருக்கு கூட மன்னிக்கும் தன்மை உண்டு. ஆனால் இவர் நீதிபதி  என்பதால் இவரிடம் மன்னிப்பு கிடையாது. மன்னிப்பு இவருக்கு பிடிக்காத வார்த்தை.  இவருக்கு ஒருவரை பிடித்து விட்டால்,(ஏழரை, அஷ்டமத்து சனி, கண்டச்சனி, மங்கு சனி) அந்த காலகட்டத்தில் சனி தோஷம் பிடித்தவர்கள் நன்மைகள் பல செய்து, இறைவனை மனம் உருகி வழிபாடு செய்தால், பாதிப்பை குறைப்பார். அத்துடன் அவரை விட்டு விலகும் போது நன்மைகள் பல செய்வார்.
சனி தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? முயற்சிகளில் தடை, முன்னேற்றத்தில் தேக்கம், அதீத அலைச்சல், பணிச்சுமை, சோம்பல், விளைச்சல் பாதிப்பு, உடல் உறுப்புகளில் கோளாறு என பலவிதமான பிரச்னைகள் ஏற்படலாம். நரம்பு பிரச்னை, வாதநோய், வயிற்று உபாதை, எலும்பு தேய்மானம்  போன்ற உபாதைகள் ஏற்படலாம். சனிதோஷம் போக செய்யக் கூடிய பரிகாரங்கள்; தினமும் ஒருகைப்பிடி அன்னம் எள்சேர்த்து காகத்திற்கு வைப்பது நன்மை தரும். சனிக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது 5 அகல் தீபம் நல்லெண்ணெய் விட்டு ஏற்றுவதும், சிவதுதி, அனுமன் துதிகளைச் சொல்வதும் நல்லது. தினமும் சிவன், லட்சுமி நரசிம்மர், அனுமன், சனிபகவான் காயத்ரி மந்திரங்களை மனதாரக் கூறுங்கள். சனி பிரதோஷ தினங்களில் நந்தி தரிசனம் செய்வதும், சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்வதும் சிறப்பானது. 
திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள நளதீர்த்தத்தில் நீராடி அங்குள்ள சனிபகவானை வழிபட்டும், திருவாரூர் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் தலத்திற்கு சென்று அங்குள்ள பொங்கு சனிபகவானையும் வழிபடலாம். இரும்பு சட்டியில் 8 ஒரு ரூபாய் நாணயங்கள் போட்டு, நல்லெண்ணெய் நிரப்பி அதில் உங்கள் முகம் பார்த்த பின் தானம் அளிப்பது சனிதோஷம் நீங்கும். இரும்பு அல்லது ஸ்டீல் டாலர், காப்பு அணிவதும், அதை கருப்பு கயிறில் கட்டிக் கொள்வதும் நல்லது. வசதி உள்ளவர்கள் நீலக்கல் எனும் ப்ளூடோபாஸ் கல்லை டாலரில் பதித்து அணியலாம். அல்லது அந்தக் கல்லால் செய்த கணபதி சிலையை வாங்கி பூஜிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். அடிக்கடி சிவாலயம் சென்று அங்குள்ள பார்வதியை வழிபட்டபின், நிறைவாக நவகிரக சனிபகவானை வணங்கி விட்டு அனுமனை தரிசித்து விட்டு வருவது நல்லது. அனுமன் இல்லாவிடில் வழியில் ஏதாவது ஒரு பிள்ளையாரை தரிசிப்பது நல்லது. இதில் உங்களால் முடிந்ததை செய்தால் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் வராது.

சனி துதி

சங்கடம் தீர்க்கும் சனிபகவானே
மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சனீஸ்வரத் தேவா
இச்செகம் வாழ இன்னருள் தா! தா!
முனிவர்கள் தேவர்கள் ஏழு மூர்த்திகள் முதலானோர்கள்
மனிதர்கள் சகல வாழ்வும் உன் மகிமை அல்லால்வே றுண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேயே காகம் ஏறும்
சனிபக வானே போற்றி தமியனேற் கருள்செய் வாயே.
சகலரும் துதித்திடும் சனியே போற்றி
புகலரும் துயரம் துடைப்பாய் போற்றி
நிகரில்லாப் புகழினைத் தருவாய் போற்றி
செகமெலாம் நலம் பெற அருள்வாய் போற்றி!

ராகு தோஷம் விலக:

உங்களுக்கு ராகு தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். ராகுவின் அமைப்பு சரியாக இருந்தால் தந்தைவழி சொத்துக்கள் கைகூடி வரும். இல்லாவிட்டால் இழுபறியாகும். திருமணத் தடை, குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தடை, பெயர் புகழுக்கு களங்கம் ஏற்படுவது, எதிர்பாராத நஷ்டம், மனவிரக்தி, அடிக்கடி இடமாற்றம், வீண்பழி சுமத்தல், குடும்பப் பிரிவு என பொதுவான பிரச்னைகள் வரும். உடல் நலக் கோளாறுகள் மாறி மாறி ஏற்படும்.
ராகு தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? ராகுவுக்கு தனியாக ஓரைகாலம் இல்லை. அதனால், சனிக்கிழமை சூரியோதயத்தில் 5 அகல் தீபம் ஏற்றி வையுங்கள். தினமும் துர்கை காயத்ரி கூறுங்கள். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்கையை உதிரி 5 எலுமிச்சம்பழம் கொடுத்து, 5 அகலில் நெய்தீபம் ஏற்றி கும்பிடுங்கள். (எலுமிச்சை தீபம் கூடாது). 3 பழம் திரும்பி வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள், அடிக்கடி பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள துர்கையையும், திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயிலுக்குச் சென்று ராகுவையும், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று நாகரையும் தரிசித்துவிட்டு வாருங்கள். முடிந்தால் பக்தர்களுக்கு உளுந்துசாதம் தானமாக கொடுங்கள். பசுவுக்கு கடலைப்பொட்டு அல்லது அகத்திக்கீரை தீவனம் வாங்கிக் கொடுங்கள்.
அடிக்கடி உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கோயிலில் துர்கை, ராகு சன்னதியில் வழிபாடு செய்யுங்கள். வசதியானவர்கள் கோமேதகக் கல் பதித்த டாலர் அல்லது கோமேதக கணபதியை வணங்குங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்தால் ராகுதோஷ பாதிப்பு குறைந்து வாழ்க்கை ரம்மியமாகும்.
ராகு துதி
வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க் கமுதம் ஈய
ஏகிநீ நடுவி ருக்க எழில்சிரம் அற்றுப் பின்னர்
நாகத்தின் உடலோ டுன்றன் நற்சிரம் வாய்க்கப் பெற்ற
ராகுவே போற்றி போற்றி ரட்சிப்பாய் ரட்சிப் பாயே.
தண்மதி விழுங்கிய ராகுவே போற்றி
துன்மதி நினைப்பினை அறுப்பாய் போற்றி
என்மதி துலங்கிட முயல்வாய் போற்றி
நிம்மதி நிலவிட அருள்வாய் போற்றி

கேது தோஷம் விலக:

உங்களுக்கு கேது தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். படிப்பு தடைபடுதல், சொத்துப் பிரச்னை, மன விரக்தி, லட்சியத்தில் சோர்வு, ஏமாற்றம், கூடா நட்பு, வீண் சண்டை சச்சரவுகள் இப்படிப் பொதுவான பிரச்னைகள் வரலாம். உடல்நலக் குறைபாடு, மறதி, விஷ ஜுரம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். கேது தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? செவ்வாய்க் கிழமைகளில் சூரியோதயத்தில் 5 அகல் தீபங்களை நெய்விட்டு ஏற்றி வைத்து இஷ்ட தெய்வததை வழிபடுங்கள். அடிக்கடி அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று அறுகு சாற்றி வழிபாடு செய்யுங்கள். முடிந்த அளவு கதம்ப சாதத்தை தானம் செய்யுங்கள்.
துருக்கல் எனப்படும் உலோகத்தாலான டாலரை அணிந்து கொள்வது சிறப்பு. அடிக்கடி பிள்ளையார்பட்டி சென்று அங்குள்ள விநாயகரை அர்ச்சனை செய்து வழிபடுங்கள். அபிஷேக விபூதியை வாங்கி வந்து தினமும் இட்டுக் கொள்ளுங்கள். விநாயகர் காரிய சித்திமாலை துதியை எப்போதும் கூறுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கோயில் நவகிரக கேது பகவானை வழிபடுங்கள். வசதியானவர்கள் கோமேதகக் கல் பதித்த டாலர் அல்லது கோமேதக கணபதியை வாங்கி பூஜை செய்யுங்கள்.
காளஹஸ்தி காளத்தியப்பர், கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள கேது பகவானை வணங்குங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்தால் கேதுதோஷ பாதிப்பு குறைந்து வாழ்க்கை கோலாகலமாகும்.

கேது துதி

பொன்னையின் உரத்தில் கொண்டோன் புலவர்தம் பொருட்டால் ஆழி
தன்னையே கடைந்து முன்னத் தண்ணமுது அளிக்கலுற்ற
பின்னநின் சுரவாலுண்ட பெட்பினிற் சிரம்பெற்றூ உய்ந்தாய்
என்னையாள் கேதுவே இவ்விரு நிலம் போற்றத்தானே
நிறைமதி குறைத்த கேதுவே போற்றி
தலைவிதி எழுத்தை கலைப்பாய் போற்றி
பிறைபோல் சூழ்நலம் வளர்ப்பாய் போற்றி
குறையெலாம் மறைந்திட அருள்வாய் போற்றி.

உயிர் காக்கும் ஒப்பற்ற கவசம் எது தெரியுமா?





உயிரைக் காக்க அக்காலத்தில் மன்னர்கள் இரும்புக்கவசம் அணிந்து கொண்டனர். அதுபோல, கவச நூல்களைப் பாராயணம் செய்தால் நம்மைச் சுற்றி தெய்வத்தின் மந்திரசக்தி கவசமாகத் துணைநிற்கும் என்பர். கவசப்பாடல்களில் கந்தசஷ்டி கவசம் மிகவும் புகழ்பெற்றது. தேவராய சுவாமிகளால் எழுதப்பட்ட இந்நூல், ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அரங்கேற்றப்பட்டது. காங்கேயத்தை மையமாகக் கொண்டு சென்னிமலை, ஊதிமலை, வட்டமலை, சிவன்மலை,திருமுருகன்பூண்டி ஆகிய மலைகள் உள்ளன. இவற்றில் தலைசிறந்தது சென்னிமலை. சென்னி என்ற சொல்லுக்கே தலை என்று தான் பொருள். சிரகிரி, சென்னியங்கிரி, புஷ்பகிரி, சிகரகிரி என்ற பெயர்களும் இதற்குண்டு. தேவராய சுவாமிகள் கவசத்தில் சிரகிரி வேலா சீக்கிரம் வருக! என்று இத்தல முருகனை வேண்டுகிறார். இங்கு மூலவராக கைலாசநாதரும், பெரியநாயகியும் வீற்றிருக்கின்றனர். புண்ணாக்குச் சித்தருக்கு சமாதியும் இங்குள்ளது. கந்தசஷ்டியும், தைப்பூசமும் சிறப்பான விழாக்கள். அக்னிஜாத சுப்பிரமணியர், சவுரபேய சுப்பிரமணியர், சரவணபவன், தேவசேனாதிபதி ஆகிய பெயர்களிலும் முருகப்பெருமான் கோஷ்டத்தில் வீற்றிருக்கிறார்.

சுக,போகங்களை வாரி வழங்கும் சுக்கிரதிசை யாருக்கு ...







பூமியில் இருந்து விண்வெளியில் முதலில் சந்திரனின் ஓடுபாதையும், பிறகு புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய் எனும் வரிசையில் ஓடுபாதைகளும் இருக்கும். ராசிச் சக்கரத்திலும், சுக்கிரனுக்கு முன்னும் பின்னுமான வீடுகளில், புதனும் செவ்வாயும் தென்படுவர். ரிஷபத்துக்குப் பொறுப்பான சுக்கிரனின் முன் வீட்டில் புதனும், பின் வீட்டில் செவ்வாயும் அதிபதியாக இருப்பர். துலாத்துக்கு அதிபதியான சுக்கிரனுக்கு முன் வீட்டில் செவ்வாயும், பின் வீட்டில் புதனும் இடம் மாறியிருப்பர். சுக்கிரன் உலக சுகங்கள் அனைத்தையும் நமக்கு வழங்குபவன். அவன் வலுவை இழந்தால், ஏழ்மையில் தள்ளுவான்; வலுப்பெற்றிருந்தாலோ செல்வத்தில் திளைக்கச் செய்து, சிந்தனையைத் திருப்பி, சிக்கலில் சிக்க வைத்து, நம்மைத் துயரத்தில் ஆழ்த்துவான். சுக்கிரன் அளவான வலுவுடன் இருந்தால், வளமான வாழ்வைத் தருவான் நமக்கு!
பக்கத்து வீட்டு புதன் - விவேகத்துடனும், மறுபக்கத்து வீட்டுச் செவ்வாய் - சுறுசுறுப்புடனும் நம்மை இயங்க வைப்பார்கள். புதனது சேர்க்கையால் விவேகமும் கலப்பதால், செல்வச் செருக்கின்றிச் செயல்படும் திறன் கிடைக்கும். செவ்வாயுடன் சேரும்போது, ரஜோ குணத்தின் சேர்க்கை நிகழ, தவறான சிந்தனை தலைதூக்கும்; மெத்தனம் வெளிப்படும்; துயரத்தைச் சந்திக்க நேரிடும். சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் பயண வேளையில் ஒற்றுமை உண்டு. இருவருக்கும் ஏறக்குறைய இரண்டு வீடுதான் இடைவெளி! அடிக்கடி சூரியனுடன் நெருங்கும் வேளை அதிகம் உண்டு என்பதால், சூரியனின் ஒளியில் மங்கி, செயல்படும் தகுதியை இழக்க நேரிடும். சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோருடன் சேரும்போது, தனது தனித்தன்மையை இழந்துவிடுவான், சுக்கிரன். சேர்ந்த கிரகத்தின் செயல்பாடும் அவனில் கலப்பதால், மாறுபட்ட பலனையே தருவான். இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை என்கிறான் காளிதாசன். இதற்கு, சுக்கிரனின் மாறுபட்ட அமைப்பே காரணம் ஏழை, செல்வந்தன் ஆகிய இந்த இரண்டு நிலையும் அவனால் ஏற்படுவதே!

மாறுபட்ட காலத்தில், விகிதாசாரப்படி செல்வத்தைத் தருவதால், ஏழ்மையும் செல்வச் செழிப்பும் என மாறி மாறி வருகிற நிலையைச் சந்திப்பவர்கள் இருக்கின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு ! சுக்கிரன் செல்வத்தில் மூழ்கடித்தால் விவேகம் குன்றும்; சிந்தனை திசை திரும்பும். சுக்கிரன் வலுவிழந்தால், விவேகம் முளைக்கும்; செல்வந்தனாவது கடினம். இந்தச் செல்வம், விவேகம் இரண்டும் ஒரு சேரக் கிடைப்பது அரிது ! அதாவது, கிடைத்ததைக் கொண்டு திருப்திப்பட வேண்டும் எனும் கருத்தை உணர்த்துகிறான், சுக்கிரன். அறிவும் செல்வமும் மாமியார் - மருமகளைப்போல.. ஒன்று சேராது ! லட்சுமியும் சரஸ்வதியும் மாமியார் - மருமகள்தான். இரண்டுபேரும் ஒத்துப் போகமாட்டார்கள். அறிவு இருப்பவரிடத்தில், செல்வத்தின் சேமிப்பு இருக்காது; செல்வம் மிகுந்தவனிடம் அறிவு மங்கும். இந்த இரண்டின் தாக்கம், இன்றைய விஞ்ஞான உலகிலும் உண்டு ! பொருளாதாரமும் விவேகமும் சம அளவில் இணையாது. வயதில் முதிர்ந்தவன், அறிவில் முதிர்ந்தவன், ஒழுக்கத்தில் முதிர்ந்தவன் ஆகிய அனைவரும் செல்வந்தனின் வீட்டு வாசலில், கைகட்டிச் சேவகம் செய்யக் காத்திருக்கின்றனர் என்கிறார், கவிஞர் ஒருவர் (ஞான விருத்தா; வயோவிருத்தா...) இன்றைக்கு, இந்தச் சூழலே அதிகம் காணப்படுகிறது.
அதாவது, செல்வமும் விவேகமும் சம வலிமையுடன் திகழ்கிற நிலையை ஜோதிடம் உருவாக்கவில்லை. புதன், கன்னியில் உச்சனாக இருப்பின், சுக்கிரன் உச்சம் பெறமாட்டான். சுக்கிரன் மீனத்தில் இருப்பின், உச்சம் பெற்றிருப்பான். புதன், அங்கே நீசனாகிவிடுவான். அதாவது, புதனுடன் மீனத்தில் சுக்கிரன் இருந்தால், புதனும்; புதனுடன் கன்னியில் இணைந்தால், சுக்கிரனும் நீசம் பெறுகின்றனர். அதாவது, இருவரும் முழு பலத்துடன் இணைவது, இயலாத ஒன்று. அறிவு வலுப்பெற்றால் செல்வம் முடங்கும். செல்வம் வலுப்பெற்றால் அறிவு முடங்கும் என்பதை காலத்தின் நியதியாக சுக்கிரன் வெளிப்படுத்துகிறான். இருவரது சேர்க்கை அவர்களின் இயல்புகளை இடமாறச் செய்யும். துஷ்டனின் சேர்க்கையில் நல்லவன் துஷ்டனாகலாம். நல்ல சேர்க்கையால் துஷ்டனும் நல்லவனாகலாம்! மீனத்தில் நீசனான புதனுக்கு உச்ச சுக்கிரனின் சேர்க்கையைப் பார்த்து, புதனுக்கு நீசபங்கம் வந்து, ராஜ யோகமாக மாறிவிட்டதாக... நற்பலனாக சித்தரித்து விளக்கமளிக்கும் ஜோதிடம். கன்னியில் நீச சுக்கிரனுக்கு உச்ச புதனது சேர்க்கையில் நீசபங்கம் வந்து, ராஜ யோகமாக மாறியதாகச் சித்திரிக்கும். உச்ச கிரக சேர்க்கையில், நீசம் வலுப்பெறும்; நீசக் கிரக சேர்க்கையில், உச்சம் தரம் தாழ்ந்து விடும் என்கிறது அது ! இந்த இரண்டு சேர்க்கையும் ஒன்றை இழந்து, மற்றொன்றை வழங்குமே தவிர, இரண்டையும், சமமாகச் சேர்த்து வழங்காது. இதை உயர்ந்த யோகமாகச் சொல்லும் ஜோதிடத்தின் கூற்றுக்கு ஆதாரம் தேட வேண்டியுள்ளது. ஆக, இருவரின் உச்ச நீசசேர்க்கையில், இருவரும் சம பலனை அளிக்கும் வாய்ப்பு இல்லை என்பதே உண்மை. எனவே, அறிவும் செல்வமும் ஒரே இடத்தில் முழுமையாக இருப்பது, அரிதாகி விடுகிறது. இருட்டும் வெளிச்சமும் ஒரே இடத்தில் இருப்பதில்லை.
களத்திரகாரகனாகவும் விவாககாரனாகவும் செயல்படுபவன். சிற்றின்பம், உலக சுகம், பாட்டு இசை, நாட்டியம் முதலான கலைகள், ஆடம்பரப் பொருட்களில் ஈர்ப்பு, புதிய பொருட்களின் மீதான ஆர்வம் ஆகிய அனைத்தையும் தரவல்லவன் சுக்கிரன்;. அழகிலும் அழகிய பொருட்களிலும் ஆர்வத்தைத் தூண்டிவிடுவான் அவன். கடகம் போன்ற ஜல ராசியில் இருந்து, அது லக்கினத்திலிருந்து களத்திர ஸ்தானமாக அமைந்தால், பலரிடம் சிற்றின்பத்தைத் தேடி அலையவைப்பான். அஷ்டமத்தில் வீற்றிருந்தால், தாம்பத்திய சுகத்துக்காக ஏங்க வைப்பான்; காலம் கடந்து தருவதுடன், முழுத் திருப்தியைத் தராமல் அலைக்கழிப்பான். இரண்டு பாப கிரகங்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட சுக்கிரன், வலிமையை இழந்த நிலையில் இருந்தால், அரைகுறையான தாம்பத்ய சுகத்தைத் தந்து, விரக்தியில் தள்ளுவான். சுக்கிரனுக்கு, 4லும் 8லும் பாப கிரகம் இருக்க.. சதுரச்ர தோஷத்தைச் சந்தித்த சுக்கிரன், களத்திர தோஷமாக மாறி, மனைவியை இழக்கச் செய்வான்.

விவாகத்துக்குக் காரகன், சுக்கிரன். காரகன் என்றால்,
நடைமுறைப்படுத்தவேண்டியவன் என்று அர்த்தம். அவன் நல்ல நிலையில் இருந்தால், உரிய தருணத்தில், தடங்கலின்றித் திருமணத்தை நடத்திவைப்பான். லக்னத்தில் இருந்து, 7-வது வீடு களத்திர ஸ்தானம். அங்கே, விவாக காரகனான சுக்கிரன் இருந்தால், களத்திர சுகத்தை பலவீனமாக்குவான். 7-ஆம் பாவமாக அமைந்த விருச்சிகத்தில் வீற்றிருக்கும் சுக்கிரன், வரம்பு மீறிய சிற்றின்பத்தைத் தேடச் செய்து, துயரத்தில் ஆழ்த்துவான். சூரியனுடன் இணைந்து, 9-வது இடத்தில் அமர்ந்தால், வெப்பத்தின் தாக்கத்தால் தாம்பத்திய ஈடுபாட்டை வெட்டிவிடுவான். பாப கிரகங்களுடன் இணைகிற சுக்கிரன், தனது இயல்பை வெளிப்படுத்த முடியாமல் தவிப்பான். மகர லக்னம், துலாத்தில் சுக்கிரன். துலாம் 10 ஆம் வீடு... அங்கே சுக்கிரன் அமர்ந்தாலும், அவனுக்கு கேந்திராதிபத்ய தோஷம் உண்டு. இந்தத் தோஷத்தை எட்டிய சுக்கிரன், வேலையில் இடையூறு விளைவித்து, பொருளாதாரப் பற்றாக் குறையை உண்டுபண்ணுவான். சுபக் கிரகங்களோடும். அவற்றின் பார்வை பட்டும், சுக்கிரன் வலுப் பெற்றிருந்தால், வாழ்நாள் முழுவதும் இன்பமயமாக வாழலாம். கும்பம், மகர லக்னங்களுக்கு சுக்கிரன் யோக காரகன், ஒரு கிரகம், கேந்திரத்துக்கும் த்ரிகோணத்துக்கும் அதிபதியாக இருந்தால், யோக காரகன். ஒரு கிரகம், கேந்திரத்துக்கும் த்ரிகோணத்துக்கும் அதிபதியாக இருந்தால், யோக காரகன் எனும் அந்தஸ்து உண்டு. சுக்கிரன் யோக காரகனாக மாறியதால், அவனுடன் சேர்ந்த கிரகங்கள் நற்பலனை அளிக்கும்விதமாக மாறிவிடுவர். பாபத்துடன் இணைந்த சுக்கிரன், பாப கிரகத்தின் தாக்கத்தால் தனது இயல்பை மாற்றி, சேர்ந்த கிரகத்தின் இயல்புக்குத் தக்கபடி பலன்களைத் தருவான். அப்போது, சுக்கிரனின் தன்னிச்சையாகப் பலனளிக்கும் சுதந்திரம் பறிக்கப்படுகிறது.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழில் செவ்வாயும் சுக்கிரனும் இருப்பதாகக் கொள்வோம். செவ்வாய், தாம்பத்திய சுகத்தை அழிப்பவன். ஆனால் சுக்கிரனின் சேர்க்கையில் தன் இயல்பை மாற்றிக்கொண்டு பலனை அளிப்பான்.  இதேபோல், சுக்கிரனும் தனது இயல்பை மாற்றி செவ்வாயின் இயல்புடன் பலன் தருவான். அப்போது, இருவரிலும் இருவரின் இயல்பும் கலந்திருப்பதால், இழப்பையும் தராமல், சுகத்திலும் முழுமை கிடைக்காமல் அரைகுறை பலத்தையே தருகின்றனர். செவ்வாய் 7-ல் இருந்தால் வைதவ்யம்; செவ்வாயுடன் சுபக் கிரகம் சேர்ந்திருந்தால், வைதவ்யம் இல்லை. ஆனால் புனர்பூவாக மாறிவிடுவாள். அதாவது, ஆசைப்பட்டவனைத் துறந்து வேறொருவனை ஏற்பாள் எனப் பலனை மாற்றிச் செல்வதைக் கவனிக்க வேண்டும் (ஆக்னேயை; விதவாஸ்தகை: மிச்ரே புனர்பூ பவேத்). செவ்வாயால் ஏற்பட்ட தாம்பத்யத்தை இழக்கும் சூழலைச் சந்தித்தவளை வேறொருவருக்கு மனைவியாக மாற்றி, கறுப்புப் புள்ளியுடன் வாழ்க்கையைத் தொடரச் செய்வான், செவ்வாயுடன் இணைந்த சுக்கிரன். புனர் பூ எனும் திருப்புமுனை அவனால் உருவானது.

தசா வருஷத்தின் எண்ணிக்கை மற்ற கிரகங்களைவிட சுக்கிரனுக்கு அதிகம். 20 வருடங்கள் அவனது தசை நீடிக்கும். மூன்றாக வகுத்த தசா வருஷத்தில், 2-வது பகுதியில் தசா பலன்களை அள்ளித் தருவான். 2,7-க்கு உடையவனாக அங்கே வீற்றிருந்தால், அதாவது மாரகாதிபதி மாரகத்தில் இருந்தால், அழிவைச் சந்திக்க வைப்பான். இன்பத்தைக் கொடுத்துவிட்டு, திடீரென துன்பத்தில் தள்ளும்போதுதான், அது பொறுக்கமுடியாத துயரமாகிவிடுகிறது. அதை தனது இயல்பாகக் கொண்டிருக்கிறான் சுக்கிரன். ஆணில் உருப்பெறும் கடைசித் தாதுவுக்கு சுக்கிரம் எனப் பெயர் வைத்திருக்கிறது ஆயுர்வேதம். அதுதான் தாம்பத்திய சுகத்தின் அடிப்படை சிற்றின்பத்தை அளிப்பவனான சுக்கிரனுக்கு, இந்தப் பெயர் பொருத்தமே ! நல்லவன் சேர்க்கையில் இன்பம், கெட்டவன் சேர்க்கையில் துன்பம் என்பதற்கு சுக்கிரன் எடுத்துக்காட்டு. இளமையை இனிமையாக்குவதில் இவனுக்கு நிகர் எவரும் இல்லை. வம்ச விருத்திக்கு, வாழ்வில், நம்பிக்கையூட்ட சுக்கிரன் அவசியம். விண்வெளி ஓடு பாதையில் ஆத்மகாரகனான சூரியனுடன் நெருங்கிச் செல்வதால், தன்மானத்துடன் வாழச் செய்பவன் அவன். அறத்தை வளர்ப்பதிலும், இனத்தைப் பெருக்குவதிலும் திறமை பெற்றவன் என்று அவன் அமர்ந்த ரிஷப ராசி சுட்டிக்காட்டும் (தர்ம ஸ்த்வம் விருஷரூபேண).... சீர்தூக்கி ஆராய்ந்து முடிவு எடுப்பதில் முதன்மையானவன் என்பதை அவன் அமர்ந்துள்ள துலா ராசி சுட்டிக் காட்டும். அதாவது, கிராமச் சூழலிலும் (ரிஷப ராசி) நகரச் சூழலிலும் (துலாம்) மனம் ஒத்துப்போக வைப்பதில் திறமைகொண்டவன். மகிழ்ச்சிக்கு மனமே காரணம்; இடம் காரணமல்ல என விளக்குபவன் சுக்கிரன்.
சுக்கிர வழிபாட்டு முறையை வேதம் வகுத்துத் தந்திருக்கிறது. சுக்கிர சாந்தி என விரிவான வழிபாட்டை சாந்தி ரத்னாதரம் எனும் நூல் விளக்குகிறது. வெள்ளிக்கிழமை, அவனை வழிபட உகந்த நாள். சுக் சுக்ராயநம: என்று சொன்னால் அது மந்திரமாக மாறிவிடும் என மந்திர மஹோததி சொல்கிறது. இந்த மந்திரத்தை 108 முறை மனதுக்குள் சொல்லி வழிபடலாம். சுக்கிரனின் உருவத்தை சும் சுக்ராய நம : எனும் மந்திரத்தால், 16 உபசாரங்களை நடைமுறைப்படுத்தி வணங்குவது வளம் தரும். தினமும் அவசரத்துடன் வழிபடுவதை விட, வெள்ளிக்கிழமை தோறும் முழு ஈடுபாட்டுடன் சுக்கிரனை வணங்கி பலன் பெறலாம்.

பகவந்தம் கவிம் சுக்ரம் பிரணதார்த்தி வினாசகம்
ஸர்வகாம பிரதம் வந்தெ பரமானந்த தாயகம்


எனும் ஸ்லோகத்தைச் சொல்லியும் வணங்குங்கள்; வாழ்வு வளம் பெறும்.