Tuesday, January 31, 2012

அபிஷேகம்

7.1 அபிஷேக தீர்த்தத்தில் போடுவதற்கு உகந்த திரவியங்கள் : பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ முதலியன.
7.2 அபிஷேகப் பொருட்களின் வரிசைக் கிரமம் : எண்ணெய், பஞ்சகவ்யம், மாவு, நெல்லிமுள்ளி, மஞ்சள்பொடி, பஞ்சாமிருதம், பால், தயிர், நெய், தேன், கரும்பின் சாறு, (பழங்கள்), பழ ரசங்கள், இளநீர், அன்னாபிஷேகம், சந்தனம், ஸ்நபனம்
7.3 அபிஷேக திரவியங்கள் தரும் பலன் : சுத்த நீர் - விருப்பங்கள் நிறைவேறும், மணம் உள்ள தைலம் - சுகம் தரும், பஞ்சகவ்யம் - பாவத்தைப் போக்கும், பஞ்சாமிர்தம் - செழிப்பினைத் தரும், நெய் - மோக்ஷம் அளிக்கும், பால் - வாழ்நாள் வளர்ச்சி, தயிர் - மக்கட் செல்வம் தரும், மாப்பொடி - கடன் ஆரோக்கியம் அளிக்கும், தேன் - சுகம் தரும், பழபஞ்சாமிர்தம் - செல்வங்கள் பெருகும், வாழைப்பழம் - பயிர் செழிக்கும், பல்லவம் - உலகை வயப்படுத்தும், மாம்பழம் - மகனுக்குச் சீர் சேர்க்கும், மாதுளை - கோபத்தை நீக்கும், கொளஞ்சி நாரத்தை - சோகத்தைப் போக்கும், நாரத்தை - ஒழுங்கு ஏற்படுத்தித் தரும், எலுமிச்சை - மரணபயம் நீக்கும், சர்க்கரை - பகை களையும், இளநீர் - இன்பங்கள் நல்கும், அன்னாபிஷேகம் - நாடாளும் வாய்ப்பு அளிக்கும், சந்தனக் குழம்பு - தொலையா நிதியம் (லலக்ஷ்மி கடாக்ஷம்) சேர்க்கும்.
7.4 பஞ்சகவ்யம் : கோமயம் (பசுஞ்சாணம்), கோஜலம், நெய், தயிர், பால், இவைகளைக் கலந்து, பஞ்சப் பிரம்மத்தினால் பூஜித்து, பிறகு அபிஷேகத்துக்கு உபயோகிக்க வேண்டும்.
7.5 பஞ்சாமிர்தம் இரு வகை : (1) ரஸ பஞ்சாமிர்தம் - ஏலக்காய் முதலிய வாசனைப் பொருட்கள் சேர்த்த நீருடன் பால், தயிர், நெய், சர்க்கரை, தேன் இவைகளைச் சேர்த்துச் செய்யப்படுவது. (2) பல (பழ) பஞ்சாமிருதம் - மேற்குறிப்பிட்ட பொருட்களுடன், முக்கனியும் (வாழை, பலா, மா) மற்றுமுள்ள பழங்களையும் கூட்டிச் செய்வது
7.6 நாகப்பழம் : மாதுளை, எலுமிச்சை, புளி, கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மா, பலா - ஆகிய பழங்கள் பூஜைக்குச் சிறந்தவை.

Monday, January 30, 2012

ரதசப்தமியன்று சூரியனை எவ்வாறு வழிபட வேண்டும்?




சூரியனுக்குரிய வடதிசைப்பயணம் துவங்கும் மாதம் தை. இம்மாதத்தில் வரும் வளர்பிறை சப்தமியன்று ரதசப்தமி கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சூரியனின் தேர் மேற்கு நோக்கி திரும்புவதாக ஐதீகம். சூரியன் வலம்வரும் பொன்மயமான தேரின் குதிரைகள் ஏழு என்பதால், சூரியனிடமிருந்து ஏழு பிராணங்களும், ஏழு ஜ்வாலைகளும், ஏழு சமித்துகளும், ஏழு ஹோமங்களும் தோன்றி இதயக்குகையில் ஒடுங்குகின்றன என்று வேதங்கள் சொல்கின்றன. பொதுவாக, தேருக்கு எட்டு குதிரைகள் பூட்டுவார்கள். ஆனால் சூரியனின் தேருக்கு ஏழு குதிரை மட்டுமே உள்ளது. ஒளியின் வண்ணங்கள் ஏழு. அதுவே ஏழு குதிரைகள் என்று கூறப்படுகிறது. அவை: காயத்ரி, பிரகுஹதி, உஷ்ணிக், ஜகதி, திரிஷ்டுப், அனுஷ்டுப் மற்றும் பங்கி என்பனவாகும். ரத சப்தமி அன்று சூரியனுக்கு விசேஷமான ஒளி பிறப்பதால், அன்று விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

ரதசப்தமி குளியல்: சூரிய உதயத்துக்குமுன் எழுந்து சூரியனுக்குப் பிடித்த எருக்க இலைகளில் ஏழு எடுத்து, அத்துடன் அட்சதையும்(பச்சை அரிசி சிறிதளவு), சிறிதளவு விபூதியும் தலையின்மீது வைத்துக்கொண்டு கிழக்குத் திசை நோக்கி நீராட வேண்டும். சுமங்கலிகள் குளிக்கும்போது, ஏழு எருக்க இலைகளை அடுக்கி, மேல் இலையில் சிறிது மஞ்சள் தூளும், அட்சதையும் வைத்து, உச்சந்தலையில் வைத்து நீராட வேண்டும். ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை அறையில் தேர்க்கோலமிட்டு, சுற்றிலும் செங்காவிப்பட்டை இட்டு சூரியபகவானுக்கு சர்க்கரைப் பொங்கலும் வடையும் படைத்து வழிபட வேண்டும். இந்த வழி பாட்டால் ஆரோக்கியமும், மாங்கல்ய பாக்கியமும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்.

உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?






அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது.  உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.  வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது. கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.  இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது, இடதுகையை கீழே ஊண்டக் கூடாது. டி.வி பார்க்கக்கூடாது.

வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது. காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது. சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.  உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிக் கூடாது. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது. சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும். ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.

எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது. வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும். வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும். நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது. அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர். உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்.

கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!

ஒருவர் வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத, சாஸ்திர, புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான். புனித நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள் போன்றோர், மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத் தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர். உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமரைச் சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிரா மணர்களுக்கு அளித்தல் வேண்டும். ஜீவன் செல்லும் போது குடைதானம் குளிர்ந்த நிழலில், அழைத்துச் செல்லப்படும். மரவடி தானம் குதிரைபோல் ஏறிச் செல்ல உதவும். நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்

1. பிறன் பொருள் கொள்ளை அடிப்போர்க்கு தாமிஸிர நரகம்.
2. கணவன் (அ) மனைவியை வஞ்சித்து வாழ்வோர்க்கு அநித்தாமிஸ்ர நரகம்.
3. சுயநலக்காரர்களும், பிறர் குடும்பங்களை அழிப்பவர்களும் அடைவது ரௌரவ நரகம்.
4. குரு என்னும் அகோரமான்கள் பாவிகளைத் துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவம்.
5. தன் சுவைக்காக உயிர்க்கொலை, சித்திரவதை செய்வோர்க்கு கும்பீபாகம்.
6. பெற்றோர், மற்ற பெரியோர்ளைத் துன்புறுத்துவோர்க்கு கால சூத்திரம்.
7. தெய்வ நிந்தனை, தன் தர்மத்தை விடுத்தோர்க்கு அசிபத்திரம்.
8. கொடியர், அநீதியாளர், அக்கிரமக் காரர்களுக்குப் பன்றி முகம்.
9. துரோகம், கொலை, சித்திரவதைச் செய்வோர்க்கான நரகம் அந்த கூபம்.
10. நல்லொழுக்கம் நீக்கி, கிருமிகள் போல் பிறரைத் துளைப்போர்க்கானது கிருமிபோஜனம்.
11. பிறர் பொருளை அபகரிப்போர், பலாத்காரம் செய்வோர்க்கு அக்கினி குண்டம்.
12. கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு வஜ்ர கண்டகம்.
13. தரங்கெட்டு எல்லோருடனும் பழகித் திரியும் மோகாந்தகாரப் பாவிகள் பெறும் நரகம் சான்மலி.
14. அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும் அதர்மிகளுக்கு வைதரணி.
15. ஒழுங்கின்றி இழிமகளைக் கூடி லட்சியமின்றி விலங்குகளைப் போல் திரிவோர்க்கான நரகம் பூபோதம்.
16. பிராணிகளைத் துன்புறுத்தல், கொல்லுதல் செய்வோர்க்கு பிராணி ரோதம்.
17. டம்பத்திற்காக யாகம் புரியும் பித்தலாட்டக்காரர்களுக்கு விசஸனம்.
18. இல்லாளை விபரீத இச்சைக்கு வற்புறுத்துவோர்க்கானது லாலா பக்ஷம்.
19. தீ வைத்தல், சூறையாடல், விஷமூட்டல், குடிகளைக் கொல்வோர்க்கு சாரமேயாதனம்.
20. பொய்ச் சாட்சி கூறுவோர், அகம்பாவம் கொண்டோர்க்கானது அவீசி.
21. மது, போதைப் பொருள், குடியுள்ள குடிகேடர்களுக்கு பரிபாதளம்.
22. தானே பெரியோன் எனப் பறை சாற்றிப் பிறரை மதியாதவர்க்கு க்ஷõரகர்த்தமம்.
23. நரமேதயாகம், நரமாமிசம் உண்ணல், பிராணிகள் வதை ஆகியவற்றுக்கு ர÷க்ஷõணம்.
24. தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம்.
25. தீமை புரிந்த தீயோர், துரோகிகளுக்கானது தந்த சூகம்.
26. உயிர்க்கொலை செய்வோர்க்கு வடாரோதம்.
27. விருந்தினரை வெறுத்தோர், சுயநல வாதிகளுக்கானது பர்வாவர்த்தகைம்.
28. செல்வம், செல்வாக்கால் கர்வம், அநியாயமாகப் பொருள் ஈட்டல், பதுக்கி வைத்தல் போன்றவை செய்வோர்க்கு சூசி முகம்.


தாமிஸிர நரகம்: பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும். இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைப்பார்கள்.

அநித்தாமிஸ்ர நரகம்: கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்த நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.

ரௌரவ நரகம்: பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.

மகா ரௌரவ நரகம்: மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.

கும்பிபாகம்: சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம் இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.

காலகுத்திரம்: பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் வதைத்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவது உறுதி.

அசிபத்திரம்: தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்மநெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத ஒரு பயம் உண்டாகும்.

பன்றி முகம்: குற்றமற்றவரைத் தண்டிப்பது கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதிப்படுவார்கள்.

அந்தகூபம்: உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது. கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.

அக்னிகுண்டம்: பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள். இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.

வஜ்ரகண்டகம்: சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

கிருமிபோஜனம்: தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்த பாவிகள் இங்குதான் வரவேண்டும். பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள். இந்த நரகத்தில், பாவிகளைப் பலவிதமான கிருமிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தும்.

சான்மலி: நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப் பாராமல், உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழும் காதகர்கள் அடையும் நரகம் இது. இங்கு இத்தகைய பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.

வைதரணி: நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தவர்கள் அடையும் நரகம் இது. வைதரணி என்பது நதியல்ல. இங்கு ரத்தம் சீழும் காணப்படும். சிறுநீரும் மலம் கலந்திருக்கும். கொடிய பிராணிகள் இருக்கும். பாவிகள் இந்த நதியில் விழுந்து துன்பப்படுவார்கள்.

பூபோதம்: சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடி, ஒழுக்கக்குறைவாக நடந்து, எந்த லட்சியம் இன்றி வாழ்ந்தவன் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனை விஷமுடைய பூச்சிகள், பிராணிகள் கடிக்கும்.

பிராணி ரோதம்: பிராணிகளைக் கொடுமைப்படுத்தினால் அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை ஜீவன்களின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.

விசஸனம்: பசுக்களைக் கொடுமை செய்பவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.

லாலா பக்ஷம்: மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுக்கும் கொடியவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனும் அதே முறையில் வதைபடும்.

சாரமேயாதனம்: வீடுகளை தீவைப்பது, சூறையாடுவது, உயிர்களை வதைப்பது, விஷத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்றுகுவித்தல் போன்ற கொடிய பாவங்களைச் செய்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கு விசித்திரமான கொடிய மிருகங்கள் ஜீவனை வதைக்கும்.

அவீசி: பொய்சாட்சி சொன்னால்  நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசி அழுத்துவார்கள்.

மார்க்கண்டேய புராணம் கூறும் பாவத்திற்கேற்ற தண்டனைகள்:

1. பிறர் மனைவியை காமக்கண் கொண்டு நோக்கியவர்களின் கண்கள் இரும்புமுகம், நீண்ட அலகுள்ள கொடிய பறவைகளால் கொத்திப் பிடுங்கப்படும்.
2. குருவை அவமதித்தல், சாஸ்திரத்தைச் சாதுக்களைக் கேலி செய்தல், கோள் சொல்பவர்கள் நாக்கு இடுக்கிகளால் பிடுங்கப்படும்.
3. விருந்தோம்பாமல் தான் மட்டுமே உண்டு மகிழ்பவன் மலம், சிறுநீர், குருதி போன்றவற்றை உணவாகக் கொள்ளச் செய்யப்படுவர்.
4. அக்கினி, குரு, பசு ஆகியவற்றை காலால் தீண்டியவன் கால்கள் வெட்டப்படும்.
5. தெய்வநிந்தனை, குருவை இகழ்தல் செய்வதைக் கேட்டவர் காதில் இரும்பு ஆணி அடிக்கப்படும்.
6. தீர்த்தத்தில் மலம், சிறுநீர் கழிப்பவன் கல்லுக்குள் தேரையாய்ப் பிறப்பான்.
7. நீசனிடம் தானம் கேட்டோர், யாசகர், குருவிடம் பொய் கூறியோர் நாயாகப் பிறப்பர்.
8. தானியத்தை திருடியவன் எலியாகவும், சகோதரர் மனைவியைக் கெடுத்தவன் குயிலாகவும், குரு பத்தினியைக் கூடியவன் பன்றியாகவும், உணவு பால் திருடியவன் கொக்காகவும், கொழுந்து விட்டு எரியாத தீயில் ஓமம் செய்தவன் செரிமானம் இன்றி அவதிப்படுபவனாகவும் பிறப்பர். இப்படி வேறு, வேறு பாவங்களுக்கு ஏற்ப ஏராளமான தண்டனைகள் நரகத்தில் அளிக்கப்படும். எனவே மனிதன் பாவத்திற்கு ஏற்ற தண்டனை நரகில் நிச்சயம் என்று அறிந்து புண்ணியத்தையே சம்பாதிக்க வேண்டும்.









உடலில் உள்ள மச்சங்களின் அடிப்படையில் சாஸ்திரங்கள் கூறும் பலன்கள்!






சாஸ்திர முறைகளில் நமது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம். பொதுவாக சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை ஏற்படும் போது அவர்களை மச்சக்காரன் என்பார்கள். பிறக்கும்போதே இருக்கும் மச்சம் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களையும், யோகங்களையும் கொடுக்கும். இவ்வாறு கொடுக்கும் பலன்களை ஆண் மற்றும் பெண்களுக்கு கீழ் கண்டவாறு குறிபிட்டுள்ளனர்.

ஆண்களுக்கான பலன்கள்: புருவங்களுக்கு மத்தியில் – நீண்ட ஆயுள், நெற்றியின் வலது புறம் – தனயோகம், வலது புருவம் – மனைவியால் யோகம், வலது பொட்டு (நெற்றி) – திடீர் அதிர்ஷ்டம், வலது கண் – நண்பர்களால் உயர்வு, வலது கண் வெண்படலம் – புகழ், ஆன்மீக நாட்டம், இடது புருவம் – ஏற்ற, இறக்கம், செலவாளி, மூக்கின் மேல் – சுகபோக வாழ்க்கை, மூக்கின் வலதுபுறம் – நினைத்ததை அடையும் அம்சம், மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம், மூக்கின் நுனி – ஆவணம், கர்வம், பொறாமை, மேல், கீழ் உதடுகள் – அலட்சியம், காதல் வயப்படுதல், மேவாய் (உதடுகளுக்கு மேல்) – செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம், வலது கன்னம் – வசீகரம், தயாள குணம், இடது கன்னம் – ஏற்றத்தாழ்வு,வலது காது நுனி – சில கண்டங்கள் வரலாம், இடது காது நுனி – தகாத சேர்க்கை, அவமானம், காதுகளின் உள்ளே – பேச்சாற்றல், திடீர் யோகம், தொண்டை – திருமணத்துக்கு பிறகு யோகம், கழுத்தின் வலதுபுறம் – சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை, இடது மார்பு – ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார், வலது மார்பு – பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர், வயிறு – பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை,அடிவயிறு – திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை

பெண்களுக்கான  பலனகள்: நெற்றி நடுவே – புகழ், பதவி, அந்தஸ்து, நெற்றி வலதுபுறம் – தைரியம், பணிவு இல்லாத போக்கு, நெற்றி இடதுபுறம் – அற்ப குணம், டென்ஷன், முன்கோபி, மூக்கின் மேல் – செயல்திறன், பொறுமைசாலி, மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம், மூக்கின் நுனி – வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள், மேல், கீழ் உதடுகள் – ஒழுக்கம், உயர்ந்த குணம், மேல் வாய் பகுதி – அமைதி, அன்பான கணவர், இடது கன்னம் – வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு, வலது கன்னம் – படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை,வலது கழுத்து – பிள்ளைகளால் யோகம், நாக்கு – வாக்கு பலிதம், கலைஞானம், கண்கள் – கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்,இடது தோள் – சொத்து சேர்க்கை, தயாள குணம்,  தலை – பேராசை, பொறாமை குணம், தொப்புளுக்கு மேல் – யோகமான வாழ்க்கை, தொப்புளுக்கு கீழ் – மன அமைதியின்மை, பொருள் நஷ்டம், தொப்புள் – ஆடம்பரம், படாடோபம், வயிறு – நல்ல குணம், நிறைவான வாழ்க்கை, அடிவயிறு – ராஜயோக அம்சம், உயர்பதவிகள், இடது தொடை – தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள், வலது தொடை – ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை.

அமாவாசையன்று வாசலில் கோலம் போடகூடாது என்பது ஏன்?






பிதுர்களுக்குத் திதி கொடுப்பதை ஏதோ செய்யக்கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். திதியன்றும், அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடுவது கூடாது என்பதால் அசுபமான நாள் என சிலர் எண்ணுகின்றனர். முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபடவேண்டும் என்ற நோக்கத்தில் தான், கோலமிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்கச் சொல்லியுள்ளனர். முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்சம் உகந்தவை. கேளிக்கை, சுபநிகழ்ச்சிகளை இந்நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி. இந்நாளை ஆகாத நாளாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்யவேண்டும். அந்த ஆடை, உணவை ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பது நல்லது. திருமணத்தடை, வேலையின்மை, நோய்நொடி போன்ற கவலைகள் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்து இருக்கும்.

எங்கு நீராடலாம்: சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாள் அமாவாசை, இருவரும் உலகின் ஆன்மாக்கள், கண்ணுக்குத் தெரியும் கடவுளர்கள். தை அமாவாசையன்று பித்ருக்கள் பிரசன்னமாவார்கள் அன்று அவர்களுக்கு தர்ப்பணம் செய்வதால் அவர்களது பரிபூரண ஆசி கிட்டுவதோடு உயர்ந்த பலனும் பெறலாம். இதை கருடபுராணமும் தெரிவிக்கிறது. அமாவாசையன்று ஈர்ப்பு விசையால் கடல் நீர் மேலும் கீழும் புரளும். கடலடியில் உள்ள சங்கு, சிப்பி, வாயுக்கள் மேலே வரும் அப்போது நீரில் கரைந்துள்ள சக்திகள் உடலில் ஊடுருவி ஆரோக்யம் உட்பட அநேக பலன் ஏற்படும். ராமபிரான் தேவிபட்டின கடற்கரையில் மணலைப் பிடித்தபோது அது இறுகி நவகிரகங்கள் ஆயின என்பர். இங்கு தை அமாவாசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி புண்ணியம் பெறுவர். அதுதவிர ராமேஸ்வரம், வேதாரண்யம், கன்னியாகுமரி கடலிலும்; குற்றாலம், பாபநாசம், பாணதீர்த்தம் அருவிகளிலும்; காவேரி, வைகை, தாமிரபரணி நதிகளிலும் நீராடுவது அதிக பலன் தரும்.

பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்பதன் பொருள் தெரியுமா?


ஒரு செயலைத் துவங்கினால் அதை நல்லபடியாக முடிக்க வேண்டும். இதற்கு நல்ல திட்டமும் மனஉறுதியும் தெய்வ பலமும் வேண்டும். திட்டமிடாமல், மன உறுதியும் இல்லாமல் ஒரு செயலைத் துவங்கினால் அதை முடிக்க முடியாமல் திண்டாடுவோம். அப்போது, பலரும் பலவிதமாக ஆலோசனை சொல்லி குழப்புவர். அப்போது, செயலைத் தொடங்கியவருக்கு அங்கும் இங்கும் தாவும் குரங்கு போன்ற மனநிலை ஏற்பட்டு, எடுத்த செயலை முடிக்காமலேயே விட்டு விடுவார்கள். ஒரு காரியத்தைச் செய்யத் துவங்குவது என்பதை பிள்ளையார் பிடிப்பது என்றும், அது சரி வர நடக்காமல் போனால் அங்குமிங்கும் தாவும் குரங்காய் முடிந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம். இதன் மற்றொரு அர்த்தம் எந்த ஒரு வழிபாட்டையும் பிள்ளையாரின் துவங்கி ஆஞ்சநேயரில் முடிக்க வேண்டும் என்பதே. நவக்கிரகங்களால் பிடிக்கப்பட முடியாத இருவர் ஆஞ்சநேயரும், பிள்ளையாரும் மட்டுமே. எனவே இந்த இரு தெய்வங்களை வழிபட்டாலேயே நவக்கிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம்.

வாழ்வில் உயர்வு பெற தேவை எது தெரியுமா?






மனிதனுக்கு வியாதி என்பதே வரக்கூடாது. தலைவலி வந்தால் தாங்க முடியாது. அவதிப்படும் போது, பல்வலி வந்தால் தலைவலி பரவாயில்லை என்று தோன்றும். வயிற்று வலி வந்தால் இவை இரண்டும் பரவாயில்லையே என்று தோன்றும். இதேபோல் மனிதன் பொருளாதாரத்தினாலும், சாப்பாட்டுக்கும் கஷ்டப்படும் போது தன்னைவிட தன் தகுதிக்கும் அந்தஸ்துக்கும் குறைந்தவனை நினைத்தால் நமது கஷ்டம் பரவாயில்லை என்று தோன்றும். ஒருவனுக்கு பெரிய கஷ்டம் அல்லது ஆபத்து வரும்போது இதைவிட பெரிய ஆபத்திலும் கஷ்டத்திலும் உள்ளவனை நினைத்தால் இந்தக் கஷ்டம் பெரிதாகத் தெரியாது. இதற்கெல்லாம் பொறுமையும், தன்னடக்கமும், தெய்வ நம்பிக்கையும் வேண்டும். இன்று என்ன செய்வது என்று யோசிப்பதை விட முதலில் கஷ்டம் தீரும் என்ற நம்பிக்கையே ஒருவனது வாழ்க்கையை உயர்த்தும். வெற்றிக்கும் அதுவே சிறந்த வழி.

என்றும் நலமுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்?


நம் கருத்தைப் பிறர் மீது திணிக்கக் கூடாது. பிறர் கூறும் நல்ல கருத்துக்களை கேட்க வேண்டும்.பிறர் நம்மை நம்பும் படி நாம் நடந்து கொள்ள வேண்டும். மனதில் சாந்தி இருக்கும் பொழுது தான் ஆனந்தம் ஏற்படுகிறது. பணம் இருந்தும் அடக்கமாய் இருப்பவன் உயர்ந்தவன். பலம் இருந்தும் பொறுமையாய் இருப்பவன் வீரன். அடிக்கடி கோபம் கொள்ளாதீர்கள். ஏனெனில் கோப உணர்ச்சி கல்லீரலைப் பாதிக்கிறது. மாரடைப்பு ஏற்படாமல் இருக்க கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. எதற்கெடுத்தாலும் பயப்படாதீர்கள். ஏனெனில் பய உணர்ச்சி சிறுநீரகத்தைப் பாதிக்கிறது. நெய்யில் அடியில் தங்கியிருக்கும் கசடைப் பயன்படுத்தக் கூடாது. வெண்ணெயில் உள்ள அழுக்குகளின் திரட்சி இது. எளிதில் ஜீரணமாகாது. இதை உட்கொண்டால் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, கல்லீரல் மந்தம் உள்ளவர்களுக்குக் காமாலை நோய் ஆகியவை ஏற்படும். எனவே இதைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது. மனதை ஒருநிலைபடுத்தி இறைவனை நினைத்து தியானம் செய்வது நல்லது. தியானத்திற்கு எப்போதும் ஒரு அரிய சக்தி உண்டு. நம் நிதானம் தவறாது காப்பதே அதன் சக்தி. என்ன சூழ்நிலை வந்தாலும் நாம் நம்மை அமைதியாய், தெளிவாய், நிதானித்து பார்க்கும் ஒரு மனிதனாய் தியானம் நம்மை மாற்றியமைத்து விடுகிறது.

2012 ம் ஆண்டிற்கான உங்கள் நட்சத்திர பலனும் பரிகாரமும்!

அஸ்வினி
அசாத்திய திறமை கொண்ட அஸ்வினி நட்சத்திரக்காரர்களே!

சொல்லில் இனிமையும், செயலில் நிதானமும் இருந்தால் உங்கள் வாழ்க்கை பிரகாசமாகும். கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வேலை பார்க்கும் இடத்தில் சாதகமான சூழ்நிலை ஆரம்பமாகும். தேவையற்ற மனக்குழப்பங்களையும், பயத்தையும் தவிர்த்து விடுங்கள். அலுவலகப் பணி காரணமாக ஒரு சிலருக்கு வெளிநாடு சென்று வர வாய்ப்புள்ளது, தவிர்க்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் நிச்சயம் கிடைக்கும். உயரதிகாரிகள் பாராட்டு கிடைக்கும். உடன்பணிபுரிவோரின் ஒத்துழைப்பு கிடைக்க பேச்சில் நிதானம் அவசியம். இல்லத்தில் இனிய சூழல் நிலவும். பெற்றோரின் ஆதரவும், அரவணைப்பும் மனதிற்கு இதமளிக்கும். வாரிசுகளின் வாழ்க்கையில் வசந்தம் வீசும். வீடு, மனை வாங்க யோகம் கிடைக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் சுலபமாக கைகூடும். செய்யும் தொழிலில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கூட்டுதொழிலில் லாபம் கிடைக்கும். சிலர் புது ஒப்பந்தம் செய்யவும் வாய்ப்புண்டு. அசாத்திய திறமை கொண்ட நீங்கள் எதையும் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கைகூடும். பதவி, பொறுப்பு உயர்வுகள் வரும்போது, கர்வமும், தலைக்கனமும் ஆகவே ஆகாது. பெண்களுக்கு திடீர் யோகத்தால் புகழும், செல்வமும் பெறலாம். தேவை இல்லாமல் யாருக்கும் கடன் தரவோ, வாங்கவோ வேண்டாம். சமையல் அறையில் கூடுதல் கவனமாக இருங்கள். மாணவர்கள் அவரவர் திறமைக்கு உரிய வெற்றியைப் பெறக்கூடிய காலம் இது. அதிகாலையில் சூரிய உதயத்துக்கு முன் எழுந்து படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். வாகனத்தை ஓட்டும் போது கவனம் சிதறாமல் ஓட்டுங்கள். நரம்புப் பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, கண் உபாதைகள், கழிவுப்பாதை உறுப்புகளில் அலட்சியம் கூடாது. தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்யுங்கங்கள்.
இந்த புதுவருடத்தில் ஒருமுறை ஆந்திரா திருப்பதி பெருமாளையும், தாயாரையும் தரிசனம் செய்து விட்டால் வாழ்க்கை தித்திக்கும்.

பரணி
பளிச்சென்று தோற்றம் கொண்ட பரணி நட்சத்திரக்காரர்களே!

இந்த வருடத்தில் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். பணியிடத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் உங்கள் மனம்போல் கிட்டும். பணவரவு அதிகரிக்கும். சகஊழியர்கள் ஆதரவும் அதனால் ஆதாயமும் ஏற்படும். பிறரைக் கேலியாகவோ, தரக்குறைவாகவோ பேசும் உங்க குணத்தை மாத்திக்கிறது முக்கியம். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி உங்களுக்குத்தான். இந்த சமயத்தில் உங்க வாக்குல நிதானமும், செயல்களில் முழு ஈடுபாடும் அவசியம். இல்லத்தில் இனிமை இரட்டிப்பாகும். வாழ்க்கைத் துணையால்  வசந்தம் உருவாகும். எதிர்பார்த்த சுபகாரியங்கள் நிகழும். பளிச்சென்று தோற்றம் கொண்டிருந்தாலும், பேச்சில் இனிமை இருந்தால் நிம்மதி நிலைக்கும். வாரிசுகளின் வாழ்வில் நன்மைகள் ஏற்படும். வரவு அதிகரிக்கும் போது சேமிப்பையும் அதிகரித்துக் கொள்ளுங்கள். பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் சேரும். உறவும் நட்பும் ஆதரவுக்கரம் நீட்டும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும்.
மாணவர்களின் திறமைக்கும், முயற்சிக்கும் உரிய பலன் கிடைக்கும். சோம்பலை விட்டு சுறுசுறுப்புடன் படிக்க வேண்டும். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். மூன்றாவது நபரை நம்பி எதிலும் கையொழுத்தோ, ஒப்பந்தமோ செய்து கொள்ள வேண்டாம். முறையாக திட்டமிட்டு கவனத்துடன் செயல்பட்டால் உங்க முதலீடு பலமடங்கு லாபம் தரும். கூட்டுதொழிலில் புதிய ஒப்பந்தம் ஏற்படும்.
அரசுத்துறையினர் பதவி, புகழ் கிடைக்கப்பெறுவர். அரசியல் சார்ந்தவர்கள் புதிய நட்புகளால் ஆதாயமும், ஆதரவும் கிடைக்கும். குடும்பத்துடன் ஒரே வாகனத்தில் துக்க காரியங்களுக்குச் செல்வதை தவிர்த்திடுங்கள். உடல்நலத்தில் கழுத்து, முதுகு, எலும்பு பாதிப்புகள், ரத்தத் தொற்றுநோய், அலர்ஜி, தோல்நிறமாற்றம், தலைசுற்றல் பிரச்சனைகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். குலதெய்வ வழிபாடு குடும்பத்தை ஒற்றுமையாக வாழவைக்கும்.
இந்த வருடத்தில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தஞ்சாவூர் பட்டீஸ்வரம் சென்று துர்கை அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி வழிபட்டால் துயரங்கள் நீங்கி இன்பம் செழிக்கும்.

கார்த்திகை
காரியத்தில் கருத்தான கார்த்திகை நட்சத்திரக்காரர்களே!

அமைதியாக செயல்பட்டால் ஆனந்தம் இரட்டிப்பாக கிடைக்கும். அலுவலகத்தில் அலட்சியமும், அவசரமும் கூடாது. எதிர்பாராத இடமாற்றம் வந்தால் ஏற்றுக்கொள்வது நல்லது. பிறரது குறையை பெரிதுபடுத்தி அதில் ஆதாயம் தேடினால் வீண்பழி உங்களைச் சேரும். பணிகளை திட்டமிட்டு நேரம் தவறாமல் செய்து முடியுங்கள். இல்லறத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்களை நிகழ்த்தும் போது ஆடம்பரம் செய்வதை தவிர்த்தால் கடன் சுமையிலிருந்து தப்பிக்கலாம். தாய்வழி உறவுகள் உடல்நலத்தில் அக்கறை அவசியம். வாழ்க்கைத் துணையோடு இருந்த சுணக்க நிலை மாறி சுமூகமான சூழல் உருவாகும். செய்யும் தொழிலில் லாபம் சீராக இருக்க கவனமான செயல்பாடு முக்கியம். அடுத்தவர் பேச்சை கேட்டு தெரியாத தொழில் முதலீடு செய்ய வேண்டாம். உங்களது ரகசியங்களை பரம ரகசியமாக வைத்துக் காரியத்தில் கருத்தாக செயல்படுங்கள்.
பெண்களுக்கு அதிஷ்டமான காலகட்டம் இது. வீண்பழி வராம இருக்க கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருங்க. ஆடை, ஆபரணம் வந்து சேரும். வாரிசுகளால் பெருமை கிடைக்கும். மாணவர்கள் தங்கள் முயற்சிக்கேற்ற பலனைப் பெறலாம். தினமும் அதிகாலையில் எழுந்து பாடங்களை படித்தால் சாதனைகள் படைக்கலாம். அரசுத்துறையினர் மேலதிகாரிகள் கிட்டே வாக்குவாதம் செய்யாதீங்க. தேவையற்ற நட்பை தவிர்த்து விடுங்கள். பயணப்பாதையில் ஏற்படும் நட்புகளிடம் எச்சரிக்கையாக இருங்க. உடல் நலத்தில் மனஅழுத்தம், காது, மூக்கு, தொண்டை உபாதைகள், ஒற்றைத் தலைவலி பிரச்சனைகளில் உடன் சிகிச்சை அவசியம்.
இந்த வருடத்தில் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் சிவகங்கை பிள்ளையார்பட்டி சென்று கற்பக விநாயகரை மனதார வழிபட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் வெளிச்சம் உண்டாகும்.

ரோகிணி
ராஜயோகம் கொண்ட ரோகிணி நட்சத்திரக்காரர்களே!

நிதானமாக செயல்பட்டால் நிம்மதியாக வாழலாம். அலுவலகத்தில் அமைதியான செயல்பாட்டால் அதிகம் சாதிக்கலாம். எதிர்பாராத இடமாற்றம் வரும். உங்களைப் பற்றி அவதூறு சொல்பவர்கள் நட்பை விலக்கிக் கொள்ளுங்கள். வீண்பழி வந்து சேராமல் இருக்கும். உங்க பொறுப்பில் ஒப்படைக்கப்படும் பணிகளை நேரடி கவனத்தோட செய்யறது அவசியம். மனையில் மகிழ்ச்சி நிலவும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். வீண் சந்தேகத்தையும், சஞ்சலத்தையும் தவிர்த்து விடுங்கள். குடும்பத்தில் மூத்த உறுப்பினர்கள் உடல்நலத்தில் அக்கறை அவசியம். வாழ்க்கைத் துணையோடு மனம் விட்டு பேசுங்கள்.
செய்யும் தொழிலில் லாபம் சீராக இருக்கும். யாரோட பேச்சையும் கேட்டு தெரியாத தொழிலில் ஈடுபட வேண்டாம். யாருக்காகவும் சட்டப்புறம்பு பொருளை வர்த்தகத்தில் ஈடுபடுத்தவும் சம்மதிக்க வேண்டாம். பெண்களுக்கு அதிர்ஷ்டமான காலகட்டம். குடும்ப உறவுகளிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. மாணவர்கள் முயற்சிக்குறிய பலன் கிடைக்கும். இரவு நேரக் கேளிக்கை நிகழ்ச்சியில் ஆர்வம் காட்ட வேண்டாம். அரசுத்துறையினர் யாரையும் அலட்சியப்படுத்தக்கூடாது. மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதம் வேண்டாம். கூடா நட்பு கேடாய் முடியும். வாகனப்பாதையில் உடைமைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. உடல்நலத்தில் விஷ ஜந்துக்கள் கடி, இதய படபடப்பு, ஒற்றைத் தலைவலி, தொற்றுநோய் ஏற்பட்டால் சிகிச்சை அவசியம்.
திங்கட்கிழமை சிவதரிசனம் சிறப்பு. இந்த வருடத்தில் ஒருமுறையாவது ராமநாதபுரம் ராமேஸ்வரம் சென்று சிவனுக்கு கங்காஜல அபிஷேகம் செய்து வழிபட்டால் ராஜயோகம் கிடைக்கும்.

மிருகசீரிஷம்
மிடுக்கான தோற்றம் கொண்ட மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்களே!

வாழ்க்கையில் ஏற்றமும், மாற்றமும் ஏற்படக்கூடிய வருடம் இது. அலுவலகத்தில் உங்கள் திறமையால் உயர் அதிகாரிகளின் பாராட்டும், பெருமையும் கூடும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வுகள் கைகூடும். நன்மைகள் அதிகரிக்கும் இந்த காலகட்டத்தில் உங்க எதிர்காலத்துக்கான அஸ்திவாரத்தை சரியாக அமைத்துக்கொள்வது நல்லது. இல்லத்தில் இன்பம் உருவாகும். விட்டுப் பிரிந்திருந்த உறவும் நட்பும் மீண்டும் வந்துசேரும். ஆடை, ஆபரணப்பொருள் சேரும். சுபகாரியங்கள் மனம்போல் கைகூடும். பெற்றோர் பெரியோர் ஆதரவும், ஆசிர்வாதமும் மகிழ்ச்சி தரும். பரம்பரை சொத்து வழக்குகள் சாதகமாகத் தீர்வாகும்.
செய்யும் தொழிலில் நேரடி கவனம் இருந்தால் லாபம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் உங்களுக்கான பங்கு அதிகரிக்கும். எதிரிகள் பலம் குறையக்கூடிய காலகட்டம் இது. உங்களிடம் பணிபுரிவோரை உதாசீனப்படுத்தாதீர்கள். வெளிநாட்டு வர்த்தகத்தில் முறையான ஒப்பந்தங்கள் அவசியம். அரசியல் துறையினருக்கு ஆதரவு அதிகரிக்கும். சிலருக்கு திடீர் பதவி, பொறுப்புகள் ஏற்படும். யாரையும் குற்றம் குறை சொல்லாமல் இருப்பது அவசியம். அரசுத் துறையினருக்கு புதிய பதவி, பொறுப்பு வாய்ப்புகள் வரும். மிடுக்கான தோற்றம் கொண்ட நீங்கள் வீண் புகழ்ச்சிக்கு மயங்கி அதனை இழந்துவிட வேண்டாம்.
மாணவர்களுக்கு பாராட்டும், மதிப்பும் கூடும். தீய சகவாசத்தை விட்டுவிடுங்கள். பெண்களின் பெருமை உயரக்கூடிய காலகட்டம். குடும்பத்தில் மூத்தவர்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. வாகனப் பயணத்தில் வேகத்தை தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் வயிறு, முதுகுத் தண்டுவடம், நரம்புப் பிரச்சனைகள், தோல்நிற மாற்றம், அலர்ஜி உபாதைகளை உடனே கவனியுங்கள். கர்ப்பிணிகள் அதிக கவனமாக இருக்கவேண்டும்.
இந்த வருடத்தில் முயன்ற போதெல்லாம் தஞ்சாவூர் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரரையும், ஏழவார்குழலியையும் வழிபட்ட பின், தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியையும் தரிசனம் செய்தால் உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.

திருவாதிரை
திடகாத்திரமான மனம் கொண்ட திருவாதிரை நட்சத்திரக்காரர்களே!

கஷ்டங்கள் விலகி சந்தோஷம் உண்டாகப் போகிறது. பணியிடத்தில் கவனமும், நேரம் தவறாமையும் இருந்தால் மதிப்பும் மரியாதையும் கிட்டும். அடுத்தவர்களுக்காக நீங்கள் தலைகுனிந்த நிலைமாறும். எதிர்பாராத இடமாற்றம், பதவி உயர்வு வரக்கூடும். திடகாத்திரமான மனம் கொண்ட உங்கள் அந்தஸ்து உயரும் போது அகந்தையும் உயர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாழ்க்கைத்துணை, வாரிசுகளால் பெருமை சேரும். விடுபட்ட குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சுபகாரியங்கள் கைகூடும். கடன்சுமை குறையும். வேண்டாத கேளிக்கை, சூதாட்டத்தில் பணம் செலவழிப்பதை தவிர்ப்பது நல்லது. அரசியல் துறையினர் எதிர்பார்த்த உயர்வுகள் தேடிவரும். அதேசமயம் பிறரோட வார்த்தைகளை நம்பி ஏற்கனவே உள்ள நட்புகளை பகைச்சுக்க வேண்டாம்.
அரசுத்துறையினருக்கு மேலிடத்து ஆதரவும், பெரிய மனிதர்களால் ஆதாயமும் கிட்டும். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களை படித்துப் பார்த்து கையெழுத்திடுவது நல்லது. தெரியாத தொழிலை விட தெரிந்த தொழிலிலேயே முதலீடு செய்யுங்கள். பெண்களுக்கு பெருமை அந்தஸ்து அதிகரிக்க வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் ஏற்பட்ட அவமானம் நீங்கும். மனம்போல் மகப்பேறு, மணப்பேறு கிட்டும். கூர்மையான உபகரணங்களை கவனமாக பயன்படுத்துங்கள். மாணவர்கள் பாராட்டும் பெருமையும் அதிகரிக்கும். மூத்தோர் பேச்சைக் கேட்டு நடப்பதுதான் முன்னேற்றத்தை முழுமையாக்கும். இரவு நேரம் பயணம் செய்யும் போது குலதெய்வத்தை கும்பிட்டுவிட்டு பயணத்தை தொடங்குங்கள். உடல்நலத்தில் பற்கள், கழிவுப்பாதை, தொண்டை உபாதைகளை உடனே கவனிச்சு சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.
இந்த வருடத்தில் உங்களால் முடிந்தபோதெல்லாம் தூத்துக்குடி திருச்செந்தூர் செந்தில் வேலனை தரிசித்து விட்டு வாருங்கள். உங்கள் எண்ணம் ஈடேறும்.

புனர்பூசம்
புத்திசாலியான புனர்பூச நட்சத்திரக்காரர்களே!

கவனமாக செயல்பட்டால் கஷ்டங்கள் விலகிவிடும். தை மாதத்திற்கு பிறகு நன்மைகள் ஏற்படும் என்றாலும் உங்கள் புத்திசாலித்தனமான செயல்பாடுகளாலேயே அவை நிலைத்திருக்கும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும் புலம்பாமல் முகமலர்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுங்கள். பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத்துணை உடல்நலத்தில் அக்கறையுடனும், வாரிசுகளிடம் பாசத்துடன் நடந்துகொள்ள வேண்டும். உறவுகளுடன் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்கும் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். வீட்டில் பெரியவர்களின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். பணவரவு அதிகரிக்கும் போது செலவில் கனமாக இருங்கள்.
செய்யும் தொழில் செழிப்பாக உழைப்பு முக்கியம். புதிய முதலீடுகளில் அவசரம் காட்ட வேண்டாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. அரசியல் சார்ந்தவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் தேடிவரும். புதிய நபர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. அரசுத்துறையினருக்கு ஆதரவு அதிகரிக்கும். மாணவர்கள் அன்றைய பாடங்களை அன்றே முடித்தால் படிப்பில் உயரலாம். பெண்களுக்கு நன்மைகள் அணிவகுத்து வரும் காலகட்டம். வாரிசுகளை கண்டிக்கும்போதும், வாழ்க்கைத் துணையுடன் பேசும் போதும் வாக்கில் கடுமை வேண்டாம். உடல்நலத்தில் ஜீரணக் கோளாறு, சுவாச உபாதைகள் வரலாம். புது நட்புகளிடம் எச்சரிக்கையுடன் இருங்கள்.
இந்த வருடத்தில் ஒரு தடவையாவது ஆந்திரா காளஹஸ்தி திருத்தலம் சென்று, காளத்தியப்பரையும், ஞானபிரசுனாம்பிகையையும் தரிசனம் செய்தால் வாழ்க்கை இனிமையாக அமையும்.

பூசம்
பூரிப்பான செயலைச் செய்யும் பூச நட்சத்திரக்காரர்களே!

பொறுமையாக செயல்பட்டால் நன்மைகள் அதிகரிக்கும். எந்த சந்தர்ப்பத்திலும் எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கூடவே கூடாது. பூரிப்பான செயல்களால் படிப்படியாக உயர்வுகள் வரும் போது சந்தோஷப்பட வேண்டும். உடனே அனைத்தும் நடந்துவிடவேண்டுமென்று கவலைப்படக்கூடாது. எதிர்பார்த்த இடமாற்றம், உயர்வுகள் கைகூடும். பொறுமையுடன் இருந்தால் நிச்சயம் முன்னேற்றப் பாதையில் செல்லலாம். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் அஷ்டலட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். வாரிசுகளால் பெருமை சேரும். வாழ்க்கைத் துணையிடம் வீண் விவாதம் வேண்டாம்.
செய்யும் தொழில் எதுவானாலும் முன்னேற்றமும் லாபமும் நிச்சயம். தடைப்பட்ட வெளிநாட்டு வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த அரசு அனுமதி, வங்கிக் கடன்கள் சுலபமாக கிடைக்கும். மாணவர்களுக்கு திறமைக்குரிய பாராட்டும், உயர்வும் தேடி வரும். பெற்றோர் பெரியோர் பேச்சை கேட்டு மதிப்பு நடப்பது சிறந்தது. பெண்களுக்கு அதிர்ஷ்டமான சூழ்நிலை உள்ளது. விலை உயர்ந்த ஆபரணங்கள் இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். அரசுத்துறையினர் அமோக வளர்ச்சி காணலாம். அரசியல் சார்ந்தவர்களுக்கு திடீர் பெயர், புகழ் பெறலாம். இந்த சமயத்தில் வீண் ஆடம்பரமும், தற்புகழ்ச்சியும் வேண்டாம். வாகனப் பயணத்தில் கவனம் தேவை. கண்கள், நுரையீரல். ரத்தத் தொற்றுநோய்கள், நரம்பு உபாதைகளில் அலட்சியம் வேண்டாம்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் திருச்சி ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசனம் செய்து விட்டு வந்தால் சுகமான வாழ்க்கை வாழலாம்.

ஆயில்யம்
ஆரோக்கியமாக வாழும் ஆயில்ய நட்சத்திரக்காரர்களே!

சோதனைகள் விலகி சாதனைகள் நிகழும் நேரம் இது. அலுவலகத்தில் இதுவரை நீங்க பட்ட அல்லல்கள் அகன்று நன்மைகள் கைகூட ஆரம்பிக்கும். சிலரது புறம் சொல்லும் குணத்தால் முடங்கிக் கிடந்த உங்கள் திறமைகள் வெளிச்சத்துக்கு வந்து சகஊழியர்கள் ஆதரவும் ஆதாயமும் ஏற்படும். இந்த சமயத்தில் முழுமையான கவனமும் திட்டமிடலும் முக்கியம். இல்லத்தில் சந்தோஷம் நிலவும். எதிர்பார்த்த சுபகாரியங்கள் சுமுகமாக கைகூடும். பெற்றோர், பெரியோர் மனம் நோகாமல் நடந்து கொண்டால் பெரும் அளவு நன்மைகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையிடமும், வாரிசுகளிடமும் வாக்குவாதம் வேண்டாம். வரவு அதிகரிக்கும் போது தேவையற்ற செலவைக் குறைத்தால் சேமிப்பு உயரும்.
பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் ஆடை, ஆபரணங்கள் சேரும். சகோதர உறவுகளால் ஆதாயம் கிட்டும். பூர்விக சொத்து சம்பந்தமான வழக்குகள் சுமுகமாக தீர்வாகும். மாணவர்களின் திறமைக்கும், முயற்சிக்கும் உரிய பலன்கிட்டக்கூடிய காலகட்டம். பாடங்களை தினசரி படிப்பதில் சோம்பல் கூடாது. செய்யும் தொழிலில் லாபம் சீராகும். மூன்றாம் நபரை நம்பி முதலீடு செய்தால் சிக்கல் ஏற்படும். அரசுத் துறையினருக்கு அமோகமான நன்மைகள் ஏற்படும். கர்வம் இல்லாமல் செயல்பட வேண்டும். அரசியல் சார்ந்தவர்கள், புதிய பொறுப்புகளால் ஆதாயமும், பெரிய மனிதர்கள் ஆதரவும் பெறலாம். பழைய நட்புகளை உதறிடாமல் தக்கவைத்துக்கொள்வது நல்லது.
இரவு நேரப்பயணத்தின் போது போதுமான ஓய்வு அவசியம். வாகனத்தில் சிறு பழுது இருந்தாலும் உடனே சரிசெய்து விடுங்கள். எலும்பு முறிவு, தவறி விழுதல், நரம்பு பாதிப்பு, வயிறு பிரச்சனைகளுக்கு உடனடி சிகிச்சை செய்தால் ஆரோக்கியமாக வாழலாம்.
இந்த புத்தாண்டில் ஒருமுறையாவது கேரளா குருவாயூர் சென்று உங்களால் இயன்ற துலாபாரம் செலுத்தி வழிபட்டால் வாழ்க்கை வசந்தமாகும்.

மகம்
மகிழ்ச்சியுடன் வாழும் மக நட்சத்திரக்காரர்களே!

ஆனந்தம் அதிகரிக்கும் சமயத்தில் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். பணியிடத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வுகள் நிச்சயம் கைகூடும். அலுவலகப் பணி காரணமாக வெளியூர், வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும். உயரதிகாரிகள் பாராட்டு மனதுக்கு மகிழ்ச்சி தரும். உங்களிடம் குற்றம் கூறும் குணம் இல்லாது இருந்தால், உடன்பணிபுரிவோர் ஒத்துழைப்பு கிடைக்கும். இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணை உடல் நலம் சீராகும். வாரிசுகள் வாழ்க்கையில் தடைகள் விலகும். எதிர்பார்த்த சுபகாரியங்கள் கைகூடும். சுபசெலவுகள் அதிகரிக்கும் போது வீண் ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது. சகோதரவழி உறவுகள் இடையே வீண் வாக்குவாதம் வேண்டாம்.
செய்யும் தொழில் செழிப்புடன் நடக்கும். கூட்டுத்தொழிலில் லாபம் சீராகும். நஷ்டத்தில் இருந்த சிலர் புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும். அதேசமயம் சட்டபூர்வமாக மட்டுமே எதையும் செய்வது அவசியம். அரசியல் துறையினர் ஆதரவு அதிகரிக்கப் பெறலாம். அரசுத் துறையினர் எதிர்பார்த்த உயர்வுகள் வரும்போது, கர்வமும் உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் அவரவர் திறமைக்கு உரிய வெற்றியைப் பெறக்கூடிய காலகட்டம். தினமும் அதிகாலை எழுந்து படித்தால் அதிக நன்மை தரும்.
பெண்கள் திடீர் யோகத்தால் பெரும் புகழும் செல்வமும் பெறலாம். கொடுக்கல், வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. கூர்மையான உபகரணங்களை கவனமாக பயன்படுத்துங்கள். இயன்றவரை இரவு நேரப் பயணத்தைத் தவிர்த்துடுங்கள். வாகனம் ஓட்டும் போது வேகம் வேண்டாம். உடல்நலத்தில் அதிக அக்கறை தேவைப்படும். இடதுபாக உறுப்பு உபாதைகள், எலும்புத் தேய்மான பிரச்னைகள், பார்வைக் குறைபாடுகளில் அலட்சியம் கூடவே கூடாது. தினமும் தியானம், உடற்பயிற்சி அவசியம். இந்த வருடத்தில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் திருச்சி ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசனம் செய்து பெருமாள் துதிகளைப் பாட செழிப்பும், செல்வமும் கிட்டும்.

பூரம்
புதுமலர்ச்சி கொண்ட பூர நட்சத்திரக்காரர்களே!

முயற்சிகளால் முன்னேற்றம் காணலாம். அலுவலகத்தில் அலட்சியமும், அவசரமும் கூடாது. புதிய பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த இடமாற்றம், உயர்வுகள் கைகூடும். நன்மைகள் தொடர்ந்து வரும்போது தன்னடக்கம் அவசியம். குடும்பத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். விட்டுக்கொடுத்துப் போனால், விசேஷங்கள் வீடுதேடி வரும். நன்மைகள் நிலைக்கும். வாரிசுகளால் பெருமை சேரும். வாழ்க்கைத் துணையிடம் வாக்குவாதாம் வேண்டாம்.
புதுமலர்ச்சியுடன் செயல்பட்டால் தொழிலில் லாபம் கிட்டும். வெளிநாட்டு வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த அரசு அனுமதி, வங்கிக் கடன்கள் சுலபமா கைகூடும். மாணவர்களுக்கு திறமைக்குரிய பாராட்டும், உயர்வும் தேடி வரும். பெற்றோர், பெரியோர் அறிவுரை கேட்டு நடந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு அதிர்ஷ்டமான ஆண்டு இது. கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. ஆடை, ஆபரணப் பொருள் சேரும். வீட்டு வேலைகளில் கவனமுடன் செயல்படுங்கள். அரசுத்துறையினர் கூடாநட்பை நீக்கினால் அமோகமான வளர்ச்சி காணலாம். யாருக்காகவும் வாக்கு தர்றதும், கையெத்திடவும் வேண்டாம். அரசியல் சார்ந்தவர்கள் பெயர், புகழ் பெறலாம். யாரோட கட்டாயத்தாலும் மேலிடத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபட வேண்டாம்.
பயணத்தில் கவனம் சிதறாமல் வண்டி ஓட்டுங்கள். வயிறு உபாதைகளால் அலட்சியம் வேண்டாம். பெண்கள் மாதாந்திர பிரச்சனை நாட்களில் கவனமாக இருக்க வேண்டும். தொற்றுநோய் பாதிப்பு வராலம். குடிநீரைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும்.
இந்த வருடத்தில் விழுப்புரம் பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வந்தால் கவலைகள் நீங்கி சந்தோஷம் நிலவும்.

உத்திரம்
உறுதியான எண்ணம் கொண்ட உத்திர நட்சத்திரக்காரர்களே!

வாக்கில் இனிமை இருந்தால் வாழ்வில் வசந்தம் உண்டாகும். பணியிடத்தில் திட்டமிட்டு சோம்பல் இல்லாமல் உழைத்தால் குறைவில்லாத நன்மை தேடி வரும். யாரோட தனிப்பட்ட விஷயத்திலும் தலையிட வேண்டாம். பிறரை குறை கூறாமல் செயல்பட்டால், சகஊழியர்கள் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சி தரும். இல்லத்தில் இனிமை நிலவும். வெளியூர், உறுதியான எண்ணம் கொண்ட நீங்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு வரும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அரசியல் சார்ந்தவர்கள் திடீர் புகழால் உச்சத்திற்கு போகலாம். பிறரோட புகழ்ச்சிக்கு மயங்கினால் உங்களுக்கு இகழ்ச்சி தான் ஏற்படும். அரசுத் துறை சார்ந்தவர்கள் யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
செய்யும் தொழிலில் சீரான லாபம் கிடைக்க முயற்சிகள் அவசியம். ஒப்பந்தங்களில் நேரடி கவனம் முக்கியம். எதிர்பார்த்த வங்கிக்கடன்கள் முயற்சிகளால் மட்டுமே கிட்டும். வங்கி தொடர்பான செயல்களில் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும். பெண்களுக்குப் பணவரவு சீராக இருக்கும். சுபகாரியத்தடைகள் விலகும். வீடு, மனை யோகம் சிலருக்கு உண்டு. அக்கம் பக்கத்து உறவுகளுடன் எச்சரிக்கையாக பழகுங்கள். மாணவர்களுக்கு சோதனைகள் விலகும் காலகட்டம். பெற்றோர், பெரியோர் ஆலோசனைகளை கேட்டால் சாதனைகள் விலகிடும்.
வாகனப் பாதையில் சஞ்சலமும், சபலமும் உடன்வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். கண்கள், காது, மூக்கு, தொண்டை உபாதைகள் ரத்த அழுத்த மாறுபாடு, ஒற்றைத் தலைவலி பிரச்னைகள் வரலாம். உடன் சிகிச்சை உத்தமம்.
இந்த வருடத்தில் இயன்ற போதெல்லாம் மதுரை மீனாட்சி அம்மனையும் சுந்தரேஸ்வரரையும் கும்பிட்டு வந்தால் வாழ்வில் வசந்தம் வீசும்.

ஹஸ்தம்
அறிவில் சிறந்த ஹஸ்த நட்சத்திரக்காரர்களே!

நிதானமாக செயல்பட்டால் நிம்மதியாக வாழலாம். அலுவலகத்தில் பணிவுடன் செயல்படுங்கள். அறிவில் சிறந்த உங்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் வந்தால் மனநிறைவுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். தவறான வழிகாட்டுதலால் வீண்பழி சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். யாரையும் வீணாக பழிவாங்க நினைக்க வேண்டாம். திட்டமிட்டு நேரம் தவறாமல் செயல்பட்டால் முன்னேற்றத்தைக் காணலாம். வீட்டில் விசேஷங்கள் அடுத்தடுத்து நடக்கும். அதேசமயம் சுபகாரியக் கடனும் சுலபமாக அடைந்துவிடும். வீட்டில் மூத்த உறுப்பினர்கள் ஆலோசனையைக் கேட்பது அவசியம். வாரிசுகள் உடல்நலத்தில் அக்கறை அவசியம். செய்யும் தொழிலிலில் லாபம் சீராக கவனமாக செயல்பட வேண்டும். யாரோட பேச்சையும் நம்பி தெரியாத தொழிலில் ஈடுபடாதீர்கள். யாருக்காகவும் சட்டப்புறம்பு பொருளை வர்த்தகத்தில் ஈடுபடுத்த சம்மதிக்க வேண்டாம்.
பெண்களுக்கு யோகம் கூடி வரும். அதேசமயம் வீண்பழி வராமல் இருக்க, எதிர்பால் நட்புகளிடம் எச்சரிக்கையாக பழகுங்கள். ஆடை, ஆபரணப் பொருள் சேரும். வாரிசுகளால் பெருமை ஏற்படும். மாணவர்கள் முயற்சிக்குரிய பலனைப் பெறுவர். சோம்பலை விரட்டிட்டு பாடங்களைப் படித்தால் சாதனைகள் தொடரும். அரசுத் துறையினர் அகலக்கால் வைக்க வேண்டாம். மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் வேண்டாம். பயணப்பாதையில் புதிய நட்புகளிடம் எச்சரிக்கை தேவை.
பெண்கள் உடல்நலத்தில் ஹார்மோன் குறைபாடுகள் ஏற்பட்டால் கவனமாக இருங்கள். ரத்த அழுத்த மாறுபாடு, ஒவ்வாமை, தோல்நிறமாற்றம் போன்ற உபாதைகள் ஏற்பட்டால் உடனே சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த புத்தாண்டில் முயன்ற போதெல்லாம் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலையம்மனையும் தரிசனம் செய்யுங்கள். வாழ்வு சுபிட்சமாக இருக்கும்.

சித்திரை
சிந்தனையுடன் செயலாற்றும் சித்திரை நட்சத்திரக்காரர்களே!

சிந்தனையுடன் செயலாற்றும் உங்களுக்கு கஷ்டங்கள் விலகி சந்தோஷம் ஏற்படப் போகிறது. அலுவலகத்தில் மற்றவர்களால் அலைக்கழிக்கப்பட்ட நிலை மாறும். எதிரிகளால் தொந்தரவுகள் ஏற்படலாம் கவனமாக செயல்பட வேண்டும். பொறுப்புகள் அதிகரிக்கும் போது மறுக்காமல் ஏற்று திட்டமிட்டு செயல்பட்டால் பாராட்டுப் பெறலாம். இல்லத்தில் இனிமை உண்டாகும். பெற்றோர், பெரியோரிடம் வீண் வாக்குவாதம் வேண்டாம். சிறு சிறு பிரச்சனைகள் வரும் போது விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். விசேஷங்கள் வீடு தேடி வரும். பணவரவு அதிகரிக்கும் போது வீணாக செலவு செய்ய வேண்டாம்.
செய்யும் தொழில் வளர்ச்சி பெற சோம்பலுக்கு இடம்தராமல் உழைப்பது அவசியம். புதிய முதலீடுகளில் அவசரம் வேண்டாம். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட வேண்டாம். அரசுத்துறையினர் எதிர்பார்த்த உயர்வுகள் தேடிவரும். உங்கள் பொறுப்புகளை அடுத்தவரை நம்பி ஒப்படைக்க வேண்டாம். அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு மகத்தான நன்மைகள் கிட்டும். அன்றைய பாடங்களை அன்றே படிப்பது கூடுதல் நன்மை தரும். பெண்களுக்கு நன்மைகள் வீடுதேடி வரும். பலகாலம் தடைப்பட்ட சுபகாரியங்கள் சுலபமாகக் கைகூடும். எதிர்பால் நட்புகளிடம் எச்சரிக்கையுடன் பழகுங்கள். உடல்நலத்தில் அடிவயிறு முதல் பாதம் வரை உள்ள உறுப்புகளில் சிறு பிரச்சனை ஏற்பட்டால் உடனே சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். சுகாதாரமற்ற உணவை தவிர்த்திடுங்கள். பயணப்பாதையில் எச்சரிக்கையாக இருங்கள்.
இந்த வருடத்தில் உங்களால் இயன்ற பொழுதெல்லாம் திருவாரூர் திருக்கொள்ளிக்காடு சென்று பொங்கு சனிபகவானை வழிபடுங்கள். வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.

சுவாதி
சுலபமான மனநிலை கொண்ட சுவாதி நட்சத்திரக்காரர்களே!

எச்சரிக்கையாக செயல்பட்டால் வாழ்வில் ஏற்றம் பெறலாம். பணியிடத்தில் பரபரப்பும், பதட்டமும் வேண்டாம். நேரம் தவறாமையும் திட்டமிடலும் இருந்தால் நிச்சயம் நன்மை ஏற்படும். அடுத்தவர்கள் விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். அலுவலக ரகசியங்கள் உங்களுக்குள்ளே இருக்கட்டும். எதிர்பாராத இடமாற்றம் வந்தால் தவிர்க்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். குடும்பத்தில் நிலவிய குழப்பமான சூழ்நிலை விலகும். நிம்மதி நிலைக்க வீண் விவாதத்தை விடுங்கள். விட்டுப் போன உறவும், நட்பும் திரும்பி வரும்போது சுலபமான மனநிலையுடன் மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். சுபகாரியத் தடைகள் படிப்படியாக விலகும். வாரிசுகளால் பெருமையும், புகழும் சேரும். நீங்கள் அன்பு, பாசத்துடன் இருப்பது அவசியம்.
செய்யும் தொழில் லாபம் சீராக, நேர்மையுடன் செயல்படுங்கள். மூன்றாம் நபர் தலையிடுவதை தவிர்த்து விடுங்கள். கூட்டுத் தொழிலில் புதிய மாற்றம் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். பரம்பரைத் தொழில் செய்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருங்கள். அரசியல் துறையினர் அடக்கமான செயல்களால் ஆதரவும், ஆதாயமும் அதிகரிக்கும். அரசுத் துறையினர் எந்த ஆவணத்தையும் படித்துப் பார்க்காமல் கையெழுத்திட வேண்டாம். பெண்கள் அக்கம் பக்கத்து நட்புகளிடம் அளவோடு பழகுங்கள். வீண் வாக்குவாதம், சண்டை வேண்டாம். சுபகாரியங்கள் சுலபமாக இருக்கும். பெரியவர்கள் ஆலோசனைப்படி நடந்து கொள்ளுங்கள்.
மாணவர்கள் திறமைக்கு உரிய மதிப்பெண்கள் கிடைக்கும். தினமும் அதிகாலை எழுந்து இஷ்ட தெய்வத்தின் முன்னால் அகல் தீபம் ஏற்றி விட்டு படிக்க ஆரம்பியுங்கள். வாழ்வு வளமாகும். வாகனப்பாதையில் உடைமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். சளித்தொல்லை, மூட்டு உபாதை, நரம்புப் பிரச்சனைகளில் அலட்சியம் கூடவே கூடாது.
இந்த வருடத்தில் இயன்ற பொழுது கடலூர் சிங்கர்குடி நரசிம்மரை தரிசனம் செய்தால் வாழ்வில் நன்மையே நடக்கும்.

விசாகம்
விசாலமான பார்வை கொண்ட விசாக நட்சத்திரக்காரர்களே!

அமைதியாக செயல்பட்டு ஆனந்தத்தை அடையும் காலம் இது. அலுவலகத்தில் சோம்பல் இன்றி நேரம் தவறாமல் செயல்பட்டால் நிச்சயம் நன்மையே ஏற்படும். யாரோட தனிப்பட்ட விஷயத்தையும் பெரிதுப்படுத்தி பேச வேண்டாம். எதிர்பாராத இடமாற்றம் வந்தால் தவிர்க்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லத்தில் இனிமை நிலவும். விசாலமான பார்வை கொண்ட நீங்கள் அனைவரிடமும் விட்டுக்கொடுத்து போக வேண்டும். பெரியவர்கள் ஆலோசனை கேட்டு செயல்பட்டால் சுபகாரியத் தடைகள் விலகும். நீங்க சோர்ந்து நிற்கும் போது சுற்றமும் நட்பும் உதவிக்கரம் நீட்டும்.
செய்யும் தொழிலில் சேதாரம் தவிர்க்க முயற்சிகள் முக்கியம். அயல்நாட்டு ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படும் போது அலட்சியம் வேண்டாம். கூட்டுத் தொழிலில் புதிய மாற்றங்கள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். கடல் கடந்த வாணிபத்தில் கவனம் தேவை. அரசுத்துறையினர் தன் பணியை மட்டும் சரியாக செய்வது நலம். அலுவலக ரகசியங்கள் உங்களுக்குள்ளே இருக்கட்டும். அரசியல் சார்ந்தவர்கள், தற்புகழ்ச்சியை தவிர்த்தால் நிம்மதியாக வாழலாம். மாணவர்கள் சோம்பலை விரட்டி படித்தால் திறமைக்கு பலன் கிடைக்கும். அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுங்கள்.
பெண்கள் குடும்பத்துப் பெரியவர்கள் ஆலோசனைப்படி நடந்தால் சுபகாரிய தடைகள் விலகும். வாழ்க்கைத் துணை ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இரவுப் பயணத்தில், உடன் பயணம் செய்பவரிடம் எச்சரிக்கை அவசியம். உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை. இயன்றால் ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
இந்த புத்தாண்டில் இஷ்டப்பட்ட மகான் தலத்துக்கு சென்று வணங்கி வந்தால் வாழ்வு மணக்கும்.

அனுஷம்
அன்புக்கு பாத்திரமான அனுஷ நட்சத்திரக்காரர்களே!

தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய வருடம் இது. பணியிடத்தில் பதவி, பெருமை கூடும். அதேசமயம் எதிலும் அவசரமும் அலட்சியமும் வேண்டாம். மேலதிகாரிகள் ஆதரவும், சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் சந்தோஷம் தரும். வீட்டில் விசேஷங்கள் படிப்படியாக வர ஆரம்பிக்கும். விட்டுப் பிரிந்த உறவும், நட்பும் வந்து சேரும் போது அவர்களது அன்புக்குப் பாத்திரமாவீர்கள். பெரியோரை மதிக்கக் கற்றுக்கொண்டால் மணப்பேறும், மகப்பேறும் மனம்போல் கைகூடும். ரத்த சம்பந்த உறவுகளின் ஆதரவும், ஆதாயமும் கிட்டும்.
செய்யும் தொழில் எதுவானாலும் நேர்மையும் நேரடி கவனமும் இருந்தால் லாபம் சீராகும். அயல்நாட்டு வாணிபத்தில் இருந்த தடைகள் விலகும். கூட்டுத் தொழிலில் ஆதாயம் உயரும். உங்களிடம் பணிபுரிவோர் யாரையும் உதாசீனப்படுத்த வேண்டாம். அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். சிலருக்கு திடீர் பதவி, பொறுப்புகள் அதிகரிக்கலாம். பழைய உறுப்பினர்கள் யாரையும் அலட்சியப்படுத்தாமல் இருப்பது அவசியம். அரசுத் துறையினருக்கு முன்னேற்றத்துக்கான வாய்ப்பு வரும். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் வீணாக தலையிட்டு உங்க பெருமைகளை நீங்களே குறைத்துக்கொள்ள வேண்டாம்.
மாணவர்களுக்கு பாராட்டும், பெருமையும் கிட்டக்கூடிய காலகட்டம் இது. தீய சகவாசங்களை தவிர்த்து விடுங்கள். பெண்கள் பொருளாதார உயர்வு பெறலாம். வீடு, வாகன வசதிகள் அதிகரிக்கும். மணப்பேறும், மகப்பேறும் மனம்போல கைகூடும். பயணத்தில் கவனச் சிதறல் வேண்டாம். ஒரே வாகனத்தில் குடும்பத்துடன் பயணிப்பதை இயன்றவரை தவிர்த்திடுங்கள். உடல்நலத்தில் கண்கள், எலும்புத் தேய்மானம், பற்கள், ரத்த அழுத்த மாறுபாடு உபாதைகளை உடனே கவனியுங்கள். அடி வயிறுமுதல் பாதம் வரை நல்லெண்ணெய் விட்டு தினமும் குளியுங்கள்.
இந்த வருடத்தில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் விழுப்புரம் பஞ்சவடி திருத்தலம் சென்று பஞ்சமுக அனுமனை வழிபடுங்கள். உங்கள் மனம் குளிரும் படி நன்மைகள் நடக்கும்.

கேட்டை
கேட்டதை கொடுக்கும் கேட்டை நட்சத்திரக்காரர்களே!

கவனமாக செயல்பட்டால் கஷ்டங்கள் விலகும். அலுவலகத்தில் எல்லாம் தெரியும் என்கிற நினைப்பும், ஆணவமும் கூடாது. யாரோட தனிப்பட்ட விஷயத்திலும் நீங்கள் தலையிட வேண்டாம். உங்கள் விஷயத்தில் யாரும் தலையிட அனுமதிக்காதீர்கள். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்பட்டால் உயர்வுகள் சீராக இருக்கும். இல்லத்தில் சந்தோஷம் நிலவும். சுபகாரியத்தடைகள் விலகும். கேட்டதை கொடுக்கும் உங்களுக்கு சுற்றமும், நட்பும் தேடிவந்து உதவும். மனம்போல வரும் புது உறவுகளால் மகிழ்ச்சி நிறையும்.
செய்யும் தொழிலில் லாபம் சீராகும். முதலீடுகள் முடங்காமல் இருக்க அடுத்தவர் தலையீட்டை தவிர்த்திடுங்கள். அயல்நாட்டு வர்த்தகத்தில் நேரடி கவனம் அவசியம். கூட்டுத் தொழிலில் புதிய மாற்றம் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். கனரகத் தொழில் செய்யும் போது கூடுதல் கவனம் தேவை. அரசுத்துறையினர் நேர்மையான செயல்களால் நிம்மதியாக இருக்கலாம். எந்த சமயத்திலும் எதையும் முழுமையாகப் படித்துப் பார்க்காமல் எதிலும் கையெழுத்திட வேண்டாம். அரசியல் சர்ந்தவர்கள் அடக்கமாக செயல்பட வேண்டும். அனுபவம் உள்ளவர்களை அவமதிக்கக் கூடாது. மாணவர்கள் திறமைக்கு உரிய மதிப்பெண்களைப் பெறலாம். தினமும் அதிகாலை எழுந்து இஷ்டதெய்வத்தின் முன்னால் ஒரு அகல் தீபம் ஏற்றி வழிபட்டுவிட்டு படிக்க ஆரம்பியுங்கள்.
பெண்கள் உறவுகள், நட்புகளிடம் அளவோடு பழகுவது நல்லது. சுபகாரியத் தடைகள் விலகும்போது சிலரது சூழ்ச்சியால் தடைபடலாம். எதையும் பெரியவங்க ஆசி, அனுமதியுடன் செய்வது நல்லது. வாகனப் பாதையில் வேகம் கூடினால், வாழ்க்கைப் பாதையோட தூரம் குறையும். ரத்த அழுத்த மாறுபாடு, சர்க்கரை, ஒற்றைத் தலைவலி, சளி, சுவாச உபாதைகளில் அலட்சியம் வேண்டாம்.
இந்த வருடத்தில் ஒரு முறையாவது கேரளா குருவாயூர் சென்று துலாபாரம் செலுத்தி வழிபட்டால் வாழ்க்கை சீரும், சிறப்புமாக அமையும்.

மூலம்
மூளையாக செயல்படும் மூல நட்சத்திரக்காரர்களே!

நிதானமாக செயல்பட்டால் நிம்மதியாக வாழலாம். அலுவலகத்தில் மூளையாக செயல்படுவதால் எதிர்பார்த்த உயர்வுகள் கைகூடும். எதிலும் முழுமையான திட்டமிடலும் சோம்பலில்லாத முயற்சியும் அவசியம். உங்கள் குறைகளை சரிசெய்து கொண்டு உழைத்தால் நிறைவான நன்மை தேடி வரும். அலுவலக ரகசியம் காக்கப்படவேண்டும். குடும்பத்தில் குதூகலம் குடிபுகும். குடும்பத்தில் அடுத்தவர் தலையீட்டை தவிர்த்திடுங்கள். சுபகாரியங்கள் கைகூடி வரும் போது சந்தேகமும், சஞ்சலமும் தவிர்க்க வேண்டும். அநாவசியக் கடன்கள் வாங்குவதைக் குறைத்திடுங்கள். அவசியமென்றால் மட்டும் வாங்கலாம். அரசியல் சார்ந்தவர்கள் பொறுப்பு, பதவி பெறலாம். அதேசமயம் வஞ்சப் புகழ்ச்சிக்கு மயங்கினால் இகழ்ச்சி தான் கிடைக்கும். அரசுத் துறையினர் யாரிடமும் பேசும் போதும் கவனமாக பேசுங்கள். உங்கள் எதிரியே உங்கள் நாக்குதான்.
செய்யும் தொழில் சீராக முழுமையான முயற்சிகள் அவசியம். எதிர்பார்த்த அரசுவழி கடன்கள், அனுமதிகள் நிச்சயம் கிட்டும். அதேசமயம் குறுகிய காலத்து லாபத்தை எதிர்பார்த்து, குறுக்கு வழி ஆலோசனை எதையும் செய்ய வேண்டாம். பெண்களுக்கு யோகமான வருடம். சுபகாரியத்தடைகள் விலகும். பொருளாதாரம் சீராக இருக்கும். அக்கம் பக்கத்து உறவுகள், நட்புகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். மாணவர்களுக்கு சோதனைகள் விலகும் காலகட்டம். சோம்பலுக்கு இடம் தராமல் படித்தால் சாதனைகள் செய்யலாம். பயணத்தில் வேகத்தை குறையுங்கள். உடல்நலத்தில் கண்கள், நரம்பு உபாதைகளை உடனே கவனியுங்கள். பரம்பரை நோய் அறிகுறிகள் தெரிந்தால் உடனடி சிகிச்சை அவசியம்.
இந்த வருடத்தில் முயன்ற போதெல்லாம் தஞ்சாவூர் கதிராமங்கலம் வனதுர்கையை வணங்கி எலுமிச்சை பழங்களால் அர்ச்சனை செய்து வழிபட சோகங்கள் விலகி சந்தோஷம் பிறக்கும்.

பூராடம்
பூக்களைப் போன்ற பொலிவான பூராட நட்சத்திரக்காரர்களே!

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் தடைகள் நீங்கும். அலுவலகத்தில் அலட்சியமும், அவசரமும் கூடாது. திட்டமிட்டு செயல்பட்டால் எதிர்பார்த்த உயர்வுகள் நிச்சயம் கிடைக்கும். உங்களது திறமைகள் வெளிப்பட்டு பாராட்டும், மதிப்பும் கூடும். இல்லத்தில் இனிமை நிலவும். வாழ்க்கைத் துணையால் வசந்தம் பிறக்கும். எதிர்பார்த்த சுபகாரியங்கள் சுமுகமாக கைகூடும். பெற்றோர் பெரியோர் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுத்தால் உங்க வாழ்க்கையில் பெரும் அளவு நன்மைகள் வர ஆரம்பிக்கும். பூக்களைப் போன்ற பொலிவான பெண்களுக்கு யோகமான காலகட்டம். ஆடை, ஆபரணப் பொருள்கள் சேரும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிட்டும். பழைய கடன்கள் தீரும்.
மாணவர்கள் திறமைக்கும், முயற்சிக்கும் உரிய பலன் கிட்டும். சோம்பலை விட்டு சுறுசுறுப்புடன் படியுங்கள். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். அடுத்தவரை நம்பி தெரியாத தொழிலில் ஈடுபட வேண்டாம். முறையான திட்டமிடல் இருந்தால் முதலீடு பலமடங்கு லாபம் தரும். அயல்நாட்டு வாணிபத்தில் நேரடி கவனம் அவசியம். அரசியல் சார்ந்தவர்கள், பெரிய மனிதர்களால் ஆதாயம் கிடைக்கும். அரசுத்துறையினருக்கு அமோக நன்மைகள் ஏற்படும். பொறுப்புகள் எதையும் உதறிடாமல் தக்கவைத்துக்கொள்வது அவசியம்.
இரவுநேரப் பயணத்துக்கு முன் போதுமான ஓய்வு அவசியம். வாகனத்தில் சிறு பழுதானாலும் உடனே சரிசெய்து விடுங்கள். உடல்நலத்தில் கழிவுப்பாதை உறுப்பு, தொண்டை, கல்லீரல் உபாதைகள் தெரிந்தால் உடன் சிகிச்சை அவசியம். இந்த வருடத்தில் ஒருமுறையாவது ஆந்திரா திருப்பதிக்குப் போய் கோவிந்தராஜப் பெருமாளையும், அலர்மேல் மங்கைத் தாயாரையும் வணங்கினால் சந்தோஷம், உற்சாகம் நிலைக்கும்.
உத்திராடம்
உயர்வான எண்ணம் கொண்ட உத்திராட நட்சத்திரக்காரர்களே!
அன்பான வார்த்தைகளால் நல்லனவற்றைப் பெறக்கூடிய வருடம் இது. என்பேச்சைத் தான் எல்லாரும் கேட்கணும், எல்லாம் எனக்குத் தெரியும் என்ற எண்ணம் கூடாது. பணியிடத்தில் திறமைகள் வெளிப்படும் நேரம். எதிர்பார்த்த இடமாற்றம், உயர்வுகள் கைகூடும். திட்டமிடலும் அடக்கமான செயல்பாடும் அவசியம். வீட்டில் விசேஷங்கள் அணிவகுத்து வரும். உயர்வான எண்ணம் கொண்ட நீங்கள் வீண்கோபத்தை தவிர்த்தால் அஷ்டலட்சுமி கடாட்சம் கிடைக்கும். வாரிசுகளால் பெருமை சேரும். வாழ்க்கைத் துணையிடம் வாக்குவாதம் வேண்டாம். குடும்பப் பிரச்சனையில் உறவு, நட்பு என யாரின் தலையீட்டையும் அனுமதிக்க வேண்டாம்.
செய்யும் தொழிலில் செழிப்பு உருவாகும். அயல்நாட்டு வர்த்தகத்தில் முழுமையான முயற்சிகளால் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த அரசு அனுமதி, வங்கிக் கடன்கள் சுலபமாக கைகூடும். கூட்டுத்தொழிலில் யாரிடமும் வீண்தகராறு வேண்டாம். மாணவர்கள் அவரவர் திறமைக்குரிய பாராட்டும், உயர்வுகளும் பெறலாம். பெற்றோர் பெரியோர் பேச்சுக்கு மதிப்புத் தர்றது பெருமைக்கு வழிவகுக்கும். பெண்களுக்கு அதிர்ஷ்டமான ஆண்டு இது. இரவல் நகை வாங்கவோ, தரவோ வேண்டாம். ஆடை, ஆபரணப் பொருள் சேரும். பூர்வீக சொத்து லாபம் தரும்.
அரசுத்துறையினர் அமோகமான வளர்ச்சி காணலாம். அரசியல் சார்ந்தவர்கள் பெயர், புகழ் பெறலாம். மேலிடத்துக்கு எதிரான விளையாட்டுப் பேச்சுகூட விபரீதமாகிவிடும். கவனமாக பேசுங்கள். வாகனப் பயணத்தின் போது போதைக்கு இடம்தர வேண்டாம். சாலைவிதிகளை மீறாதீர்கள். உடல்நலத்தில் வயிறு, கண், எலும்பு உபாதைகளில் அலட்சியம் வேண்டாம். பெண்கள் மாதாந்திர பிரச்சனை நாட்களில் கூடுதல் கவனமாக இருங்கள்.
இந்த வருடத்தில் உங்களால் முடியும் போதெல்லாம் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசியுங்கள். வாழ்க்கை பசுமையாகும்.

திருவோணம்
திறமையாக செயல்படும் திருவோண நட்சத்திரக்காரர்களே!

அமைதியாக செயல்பட்டால் ஆனந்தமாக வாழலாம். திறமையாக செயல்பட்டால் அலுவலகச் சுமைகள் படிப்படியாகக் குறையும். பிறருடைய குறைகளைப் பலர் முன் சுட்டிக்காட்டாதீர்கள். தனியே அழைத்துக் கூறினால் அவர்கள் ஆதரவும் உங்களுக்கே கிடைக்கும். யாருடைய வற்புறுத்தலாலும் அலுவலக ரகசியங்களை கூறிவிடாதீர்கள். மேலதிகாரிகள் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுங்கள். வாரிசுகளிடம் கண்டிப்புடன் இல்லாமல் கனிவாக நடந்து கொள்ளுங்கள். வீடு, மனை வாங்கும் போது வில்லங்கம் எதுவும் இல்லாமல் பார்த்து வாங்குங்கள். அரசியல் சார்ந்தவர்கள் திடீர் புகழால் உச்சத்திற்கு போகலாம். அரசுத்துறையினர் மனம்போல உயர்வுகள் பெறலாம். அதேசமயம் வாக்கில் நிதானம் தேவை.
செய்யும் தொழில் சீராக இருக்கும். முதலீடுகள் எதிலும் முழுமையான கவனம் முக்கியம். எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் நிச்சயம் கிட்டும். அரசு வழி அனுமதி இல்லாமல் தொழிலில் மாற்றம் எதையும் செய்ய வேண்டாம். கையெழுத்திட்ட காசோலையை யாருக்கும் தரவேண்டாம். பெண்களுக்கு சுபகாரியத்தடைகள் விலகும். பொருளாதாரம் சீராகும். ஆடை, ஆபரணப் பொருள் சேரும். எதிர்பால் நட்புகளுடன் கவனமாக பழக வேண்டும். மாணவர்கள் சோம்பலை விடுத்து படித்தால் சோதனைகள் விலகும். வீண் கேளிக்கைகளில் மனம் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பயணப்பாதையில் உடன்வரும் நட்பிடம் ரகசியம் எதையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அஜீரணம், கழிப்பாதை உறுப்பு உபாதை, முதுகுத்தண்டுவடப் பாதிப்புகள், நரம்புத் தளர்ச்சி, மனஅழுத்தப் பிரச்சனைகள் வரலாம். உடனடி சிகிச்சை அவசியம்.
இந்த வருடத்தில் இயன்ற பொழுது விழுப்புரம் பரிக்கல் திருத்தலத்துக்குச் சென்று லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்தால் வாழ்க்கை பிரகாசிக்கும்.

அவிட்டம்
அளவில்லாத ஆற்றல்பெற்ற அவிட்ட நட்சத்திரக்காரர்களே!

வாழ்வில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய காலம் இது. அளவில்லாத ஆற்றலால் பணியிடத்தில் நீங்க பட்ட கஷ்டங்கள் விலகி நன்மைகள் ஒளிரும். இடமாற்றம், பதவி உயர்வுகள் மனம்போல் கைகூடும். மேலதிகாரிகள் ஆதரவும், சகஊழியர்கள் ஒத்துழைப்பும் சந்தோஷம் தரும். உங்கள் திறமைகள் வெளிப்பட்டு முன்னேற்றம் உறுதியாகும். வீட்டில் விசேஷங்கள் படிப்படியாக அணிவகுத்து வர ஆரம்பிக்கும். விட்டுப் பிரிந்த உறவும், நட்பும் வந்து சேரும். வாரிசுகளுடன் வீண் வாக்குவாதம் வேண்டாம். ஆடை, ஆபரணம் சேரும். சுபகாரியங்கள் கைகூடும். பெற்றோர், பெரியோர் ஆதரவும், ஆசியும் மகிழ்ச்சி தரும். வாழ்க்கைத் துணைவழி உறவுகளால் சந்தோஷம் அதிகரிக்கும்.
தொழிலில் லாபம் கிடைக்கும். வெளிநாட்டு வர்த்தக தடைகள் முழுமையான முயற்சிகளால் விலகும். புதிய ஒப்பந்தங்கள் மூலம் ஆதாயம் உயரும். கூட்டுத்தொழிலில் உங்களுக்கான பங்கு அதிகரிக்கும். அரசுத் துறையினருக்கு ஆதரவு அதிகரிக்கும். சிலருக்கு திடீர் பதவி, பொறுப்புகள் வரலாம். வீண் புகழ்ச்சிக்கு மயங்க வேண்டாம். அரசியல் சார்ந்தவர்களுக்கு மேலிடத்து ஆதரவு வரும் போது அதை அலட்சியப்படுத்தாதீர்கள். மாணவர்களுக்கு திறமைக்குரிய பாராட்டும், பெருமையும் கிட்டும். தீயசகவாசம் வேண்டாம். பெண்கள் பெருமை, புகழ் பெறக்கூடிய காலகட்டம் இது. வாழ்க்கைத் துணை ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் வேண்டும். வாகனப்பயணத்தில் வேகத்தை தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் அலர்ஜி, ரத்தஅழுத்த மாறுபாடு, சர்க்கரை, பாதங்களில் வரும் உபாதைகளை உடனே கவனியுங்கள்.
இந்த வருடத்தில் உங்களால் முடியும் போதெல்லாம் சிவகங்கை பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வழிபட்டு வந்தால் நன்மையே நடக்கும்.

சதயம்
சகலமும் அறிந்த சதய நட்சத்திரக்காரர்களே!

தீமைகள் விலகி நன்மைகள் நடைபெறப் போகும் காலம் இது. அதேசமயம் எந்த செயலிலும் நேரம் தவறாமையும், முழு கவனமும் முக்கியம். உயரதிகாரிகள் ஆதரவும், உடன் பணிபுரிவோர் பாராட்டும் கிட்டும். மற்றவர் செய்த தவறுக்கு நீங்கள் தலைகுனிந்த நிலை மாறும். எதிர்பாராத பதவி உயர்வு, இடமாற்றம் வரும். தவிர்க்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லத்தில் இனிமையான சூழல் நிலவும். வாழ்க்கைத் துணை, வாரிசுகளால் பெருமை சேரும். விடுபட்ட குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்ற சந்தர்ப்பம் வரும். ஆடை, ஆபரணம் சேரும். சுபகாரியங்கள் கைகூடும். கடந்தகால கசப்புகள் மறையும். புதுவரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி மலரும். அரசியல் சார்ந்தவர்களுக்கு மேலிடத்து ஆதரவும், பெரிய மனிதர்களால் ஆதாயமும் கிட்டும். சகலமும் அறிந்த நீங்கள் பிறரோட வார்த்தைகளை நம்பி ஏற்கனவே உள்ள நட்புகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். யாருக்கும் ஜாமீன் தரவேண்டாம்.
அரசுத்துறையினர் எதிர்பார்த்த உயர்வுகள் தேடிவரும். இந்த சமயத்தில் யாரைப் பற்றியும் புறம் பேசவேண்டாம். செய்யும் தொழில் சீரான வளர்ச்சி ஏற்படும். சிலருக்கு கடல் கடந்து செல்லும் வாய்ப்பு வரும். அயல்நாட்டு வர்த்தகத்தில் ஒப்பந்தம் எதுவும் முழுமையாக படித்துப் பார்த்தபின் கையெழுத்திட வேண்டும். பெண்களுக்கு ஆனந்தமான ஆண்டு இது. திடீர் யோகத்தால் பணவரவு அதிகரிக்க வாய்ப்புண்டு. பணியிடத்தில் ஏற்பட்டிருந்த பழிகள் நீங்கும். மனம்போல் மகப்பேறும், மணப்பேறும் கைகூடும். நெருப்பு, மின்சார உபகரணங்களை கவனமாக பயன்படுத்துங்கள். மாணவர்கள் பாராட்டும் பெருமையும் பெறும் வருடம். பெற்றோர் பேச்சைக் கேட்டு நடப்பதுதான் முன்னேற்றத்தை முழுமையாக்கும்.
இரவுநேரப் பயணத்தை தவிர்த்திடுங்கள். உடைமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். உடல்நலத்தில் சுவாசப் பிரச்சனை, ரத்தசோகை, பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடு பிரச்சனைகள் வரலாம். உபாதைகளை உடனே கவனித்து உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.
இந்த வருடத்தில் தஞ்சாவூர் திருநாகேஸ்வரம் சென்று நாகநாதரை வழிபட்டு வந்தால் உங்கள் வாழ்க்கை ரம்மியமாகும்.

பூரட்டாதி
புன்னகையுடன் செயலாற்றும் பூரட்டாதி நட்சத்திரக்காரர்களே!

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் தடைகள் எல்லாம் நீங்கும். அலுவலகப் பணியில் பரபரப்பு, பதட்டமின்றி செயல்பட வேண்டும். உங்கள் வாக்கில் இனிமையும், புன்னகையுடன் செயலாற்றினால், உடன் பணிபுரிவோர் ஒத்துழைப்பு கிட்டும். எதையும் முழு கவனத்துடன் செய்ய வேண்டும். யாரோ செய்த தவறுக்கு நீங்கள் தலைகுனிந்து நின்ற நிலைமாறும். எதிர்பாராத இடமாற்றம், பதவி உயர்வுடன் வரக்கூடும். அந்த சமயத்தில் ஆணவத்தை அனுமதிக்க வேண்டாம். இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணை, வாரிசுகளால் பெருமை சேரும். விடுபட்ட குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்ற சந்தர்ப்பம் வரும். பெற்றோர், பெரியோர் வார்த்தைகளுக்கு மதிப்பளித்தால், சுபகாரியங்கள் கைகூடும். சுபக்கடன்கள் ஏற்பட்டாலும் சுலபமாக அடைபடும்.
அரசுத்துறையினர் சோம்பல் இல்லாமல் செயல்பட்டால் நன்மைகளைப் பெறலாம். யாரையும் நம்பி அலுவலக ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். அரசியல் சார்ந்தவர்கள் மேலிடத்து ஆதரவும், பெரிய மனிதர்களால் ஆதாயமும் பெறலாம். செய்யும் தொழிலில் முறையான திட்டமிடல் இருந்தால் லாபம் சீராகும். புதிய ஒப்பந்தங்கள் எதையும் படிக்காமல் கையெழுத்திட வேண்டாம். குடும்பத்தினர் ஆலோசனை இல்லாமல் எந்தவித முதலீடுகளையும் செய்ய வேண்டாம். பெண்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். மனம்போல் மகப்பேறும், மணப்பேறும் கிட்டும். கூர்மையான உபகரணங்களை கவனமாக பயன்படுத்துங்கள்.
மாணவர்கள் பாராட்டும், பெருமையும் பெறும் வருடம் இது. பெற்றோர், பெரியோர் வார்த்தைகளை மதித்து நடந்தால் மதிப்பும், மதிப்பெண்ணும் உயரும். அநாவசியப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் சிறுஉபாதையும் பெரும் பாதிப்பு தரலாம். இயன்றால் முழு உடல் பரிசோதனை செய்வது உத்தமம்.
இந்த வருடத்தில்  இஷ்டப்பட்ட மகான் திருத்தலத்துக்கு சென்று வணங்கி வந்தால் வாழ்வு சிறப்பாகும்.

உத்திரட்டாதி
உழைக்கவே பிறந்த உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களே!

தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கக்கூடிய ஆண்டு. பணியிடத்தில் பதவி உயர்வு, இடமாற்றம் எதிர்பார்த்தபடியே கைகூடும். அதே சமயம் உழைக்கவே பிறந்த நீங்கள் அலுவலகப் பணி காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்லவேண்டிய அவசியம் வரலாம். முடிந்தஅளவு ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களது தனித் திறமைகள் வெளிப்பட்டு உயரதிகாரிகளுடைய ஆதரவு கிட்டும். இல்லத்தில் இனிமை குடிபுகும். எதிர்பார்த்த சுபகாரியங்கள் தடைவிலகி கைகூடிவரும். வாழ்க்கைத்துணை உடல்நலம் சீராகும். வாரிசுகள் வாழ்க்கையில் வசந்தம் வீசும். சுபச் செலவுகள் அதிகரிக்கும் போது ஆடம்பரம் தவிர்த்தால் கடன் சுமை இருக்காது. தாய்வழி உறவுகள் இடையே ஒற்றுமை நிலைக்கும். வீண் கேளிக்கை, வேண்டாத பந்தயம் தவிர்ப்பது அவசியம். பலகாலம் தடைபட்டுக் கிடந்த வர்த்தக சக்கரம் இப்போது சீராக சுழல ஆரம்பிக்கும். சோம்பல் இல்லாமல் செயல்பட்டால் செழிப்பு மலரும். கூட்டுத் தொழிலில் லாபம் சீராகும். சிலர் புதுத்தொழில் தொடங்கவும் வாய்ப்பு உண்டு. எந்த சமயத்திலும் வீண் கோபமும், வேண்டாத சந்தேகமும் வராமல் பார்த்துக்கொள்வது அவசியம்.
அரசுத்துறையினர் எதிர்பார்த்த உயர்வுகள் வரும்போது, கர்வமும் கூடவே வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் தலையிட வேண்டாம். அரசியல் சார்ந்தவங்க, அடக்கமாக செயல்பட்டால் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ளலாம். மாணவர்கள் சோம்பலை உதறினால் அவரவர் திறமைக்கு உரிய வெற்றியைப் பெறலாம். தினமும் அதிகாலை எழுந்து படிப்பது அதிக நன்மை தரும். பெண்கள் பொறுமையாக இருந்தால் புகழும் செல்வமும் பெறலாம். வாரிசுகளால் புகழ் சேரும். இயன்றவரை இரவுநேரப் பயணத்தைத் தவிர்த்துடுங்கள். உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை. சுவாச உறுப்புகள், கழிவுப்பாதை உறுப்பு பிரச்சனைகளில் அலட்சியம் கூடவே கூடாது.
இந்த வருடத்தில் உங்களால் இயன்ற பொழுது திருவாரூர் திருக்கொள்ளிக்காடு திருத்தலம் சென்று அக்னீஸ்வரர், மிருதுபாதநாயகியையும், பொங்கு சனிபகவானையும் வழிபட்டு வந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும்.

ரேவதி
ரெத்தினமாக ஜொலிக்கும் ரேவதி நட்சத்திரக்காரர்களே!

பொறுமையாக செயல்பட்டால் பெருமைகளைப் பெறலாம். உங்கள் செயல்களால்தான் ஆனந்தம் நிலைக்கும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். அதைப் புலம்பாமல் ஏற்றுக்கொண்டால் நன்மைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் குடிபுகும். அதேசமயம் வீண் சஞ்சலமும், வேண்டாத சந்தேகமும் வாழ்க்கைத் துணையை விட்டுப் பிரிய செய்துவிடும். வாரிசுகள் உடல்நலத்தில் அக்கறை அவசியம். சின்ன சின்ன பிரச்சனைகள் வரும்போது விட்டுக்கொடுத்து போய்விட்டால் விசேஷங்கள் வீடு தேடி வரும். வாக்கில் இனிமை இருந்தால் வாழ்க்கை இனிமையாகும். பணவரவு உயரும் போது சேமிப்பில் கவனம் தேவை.
முயற்சிகள் முழுமையாக இருந்தால் செய்யும் தொழில் செழிப்பு பெறும். பரம்பரை தொழிலில் சோம்பலுக்கு இடம் தராமல் உழைப்பது முக்கியம். புதிய முதலீடுகளில் அவசரம் வேண்டாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனமாக இருங்கள். அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். யாருக்காகவும் ஜாமீன் தர வேண்டாம்.  அரசுத்துறையினர் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். செயல்களில் நேரடி கவனமும் நேர்மையும் இருந்தால் நன்மைகள் நிலைக்கும். மாணவர்களுக்கு மகத்தான நன்மைகள் கிட்டும். அன்றைய பாடங்களை அன்றன்றே படிக்கிறது அவசியம். பெண்களுக்கு நன்மைகள் வரும் காலம் இது. வாரிசுகளுடன் மிக கண்டிப்பாக நடந்து கொள்ளாதீர்கள். விலைஉயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். வளர்ப்புப் பிராணிகளிடம் எச்சரிக்கையுடன் இருங்கள். உடல்நலத்தில் அதிக கவனம் அவசியம். சளி, அலர்ஜி, வயிறு, கழிவுப்பாதை, உறுப்புகளில் உபாதைகள் ஏற்படலாம். ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. பயணப்பாதையில் புதுநட்புகள் கிட்ட எச்சரிக்கையாக இருங்கள். இந்த வருடத்தில் நேரம் கிடைக்கும்போது நாகப்பட்டினம் வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதரை வழிபட்டால் வாழ்க்கையில் ரத்தினமாக ஜொலிக்கலாம்.

Monday, January 23, 2012

ஸ்ரீ ஆஞ்சநேய மூல மந்த்ரம்

ஸ்ரீ ஆஞ்சநேய மூல மந்த்ரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹனுமதே ராம தூதாய
லங்கா வித்வம்ஸனாய
அஞ்சனா கர்ப்ப ஸம்பூதாய
சாஹினி டாஹினி வித்வம்ஸனாய
கில கில பூ காரினே விபீஷணாய
ஹனுமத் தேவாய
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹூம் பட் ஸ்வாஹா!!


ஆஞ்சநேய பல ச்ருதி மந்த்ரம்

ஓம் நமோ பகவதே ஆஞ்சனேயாய மஹா பலாய ஸ்ரீ ஹனுமதே ஸ்வாஹா

————
ஆஞ்சநேயர் காயத்ரி
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ : ஹநுமத் ப்ரசோதயாத்!!
————-
ஓம் தத் புருஷாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ மாருதி ப்ரசோதயாத்
-—————




Wednesday, January 18, 2012

குருவே சரணம்!

7.1 கோவிலுக்குள் சிவாச்சாரியாரிடம் இருந்துதான் விபூதி வாங்கிக் கொள்ள வேண்டும்; அது சிவனிடமிருந்தே பெற்றுக் கொள்வதற்குச் சமம். மற்றவரிடமிருந்து பெற்றுக் கொள்வதும், தானே எடுத்துக் கொள்வதும் பாபச் செயல்கள்


17.2 சிவாலயத்துள் சிவாச்சார்யாரே குரு; அவருக்கும் அவரது குருவே துணை; அனைவருக்கும் குருவாம் ஐயனே அவன் இருப்பிடத்தில் நிகழும் அனைத்திற்கும் சாக்ஷி.

17.3 எங்கே எப்படி யார் பூஜை செய்தாலும், அந்த பூஜை முறைகளை நமக்கு உபதேசித்த கருவை அவர் நினைவு கூர்தல் அவசியம். பூஜைக்கு முக்கியம் குரு பாதம், மந்திரத்திற்கு முக்கியம் குரு வார்த்தை, த்யானத்திற்கு முக்கியம் குரு வடிவம், மோக்ஷத்துக்கு முக்கியம் குரு தயை.

17.4 எனவே, கீழ் வரும் ச்லோகங்களைச் சொல்லித்தான் எந்த பூஜையையும் தொடங்க வேண்டும்.

ஓம் குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு: குருர்தேவோ மஹேஸ்வர:
குருஸ்ஸாக்ஷõத் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:
குரவே ஸர்வ லோகானாம் பிஷஜே பர ரோகிணாம்
நிதயே ஸர்வ வித்யானாம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே நம:
ஸதாஸிவ-ஸமாரம்பாம் ஸங்கராச்சார்ய-மத்யமாம்
ஆஸ்மத்-ஆசார்ய-பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

குரு சரணாரவிந்தாப்யாம் நமோ நம:

குங்குமத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வது சரியா?

நாகரீக மோகத்தில் நிகழும் தவறுகளில் இதுவும் ஒன்று. சுமங்கலிப் பெண்கள் நெற்றியிலும் உச்சியிலும் வைத்துக் கொள்ளும் குங்குமத்தில் தாம் மகிழ்ந்து இருப்பதாக மகாலட்சுமி கூறுகிறாள். எனவே, குங்குமம் தான் உயர்ந்தது. பொட்டு வைத்துக் கொள்வதையே, நாகரீகக் குறைவாக சில சகோதரிகள் கருதும் சூழலில் ஸ்டிக்கராவது வைத்துக் கொள்கிறார்களே என்று அல்ப சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.


நெற்றியில் குங்குமம் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செய்யப்படுகிறது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது. மேலும் குங்குமத்தின் மேல் சூரிய ஒளிப்படும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெளிப்படும் வைட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்தி தருகிறது.அதேபோல் மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருவதால் பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவது சிறந்தது.

Tuesday, January 17, 2012

கணபதி ஹோமம் (தடைகள் நீங்க)

கணபதி ஹோமம் புதிய தொழில்கள் துவங்கும் போது நடத்தப்படும். உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கும். மற்ற ஹோமங்களை துவக்குவதற்கு முன்பு கணபதி ஹோமம் செய்ய வேண்டும்.

கணபதி ஹோமத்தின் பெருமை: மகாகணபதியின் அருளைப் பெறக் கணபதி ஹோமம் மிகவும் முக்கியமானது. வெள்ளிக்கிழமை, சதுர்த்தி ஆகிய நாட்களில் விடியற்காலையில் ஹோமம் செய்வது விசேஷம். அஷ்டத்திரவியம், தேங்காய்த்துண்டு ஆகியவை அதற்குச் சிறந்த ஹோமத்திரவியங்கள். 1000 தேங்காய்க் கீற்றினால் ஹோமம் செய்ய செல்வம் வளரும். ஸத்துமா, நெல் பொரி, திரிமதுரம் ஆகியவை ஸர்வ வச்யம் நல்கும். திரிமதுரம் கலந்த நெல்பொரி கல்யாண ப்ராப்தியைத் தரும். நெல் கலந்த அன்னம், நெய் ஆகியவை விருப்பத்தை ஈடேற்றும். தேன் தங்கம் தரும். நெய்யில் நனைத்த அப்பம் மந்திர சித்தி, ராஜ வச்யம் தரும். மோதகம் போரில் வெற்றி தரும். மட்டை உரிக்காத தேங்காய் (1 மண்டலம்) மந்திர சித்தி நல்கும். தாமரை செல்வ வளர்ச்சி தரும். வெண்தாமரையால் வாக் சித்தி ஏற்படும். அருகம்புல் குபேர சம்பத்து தரும். மோதகம் நினைத்ததைத் தரும். வில்வ இலை, நெய்யில் நனைத்த சமித் ஆகியவையும் அப்படியே. தேங்காய், அவல் மிளகு ஆகியவை ஸர்வ வசியம் தரும். இவ்வாறு ஹோமத்திற்குரிய ஆகுதிகள் பெருமை சேர்க்க வல்லபை. பலன் தருபவை.

ஹோமம் செய்யும் முறை:

அனுக்ஞை சுக்லாம்பரதரம்....சாந்தயே
ஓம் பூ .... பூர்புஸ்ஸுவரோம்
சங்கல்பம்:
சுபே சோபனே .... பரமேச்வர ப்ரீத்யர்த்தம்
நக்ஷ்த்ரே - ராசௌ ஜாதஸ்ய ஸ குடும்பஸ்ய
÷க்ஷமஸ்தைர்ய வீர்ய விஜய ஆயு: ஆரோக்ய
ஐச்வர்ய அபிவ்ருத்த்யர்த்தம் ஸர்வாரிஷ்ட சாந்த்யர்த்தம்
ஸர்வாபீஷ்ட ஸித்த்யர்த்தம் மஹா கணபதி ஹோமம் கரிஷ்யே.
(தேங்காய் ஒன்றினை உடைத்து, மூங்கில் இலை போல் மெல்லியதாகக் கீறி, வெல்லச் சர்க்கரை, தேன், நெய் ஆகியவை சேர்த்து 8 கீற்றுக்களை ஹோமத்திற்கு வைத்துக் கொள்க. மீதி உள்ளது மஹாகணபதிக்கும் துர்க்கைக்கும் நிவேதனம். கொட்டாங்கச்சிகளை, மூல மந்திரம் ஜபித்துக் கொண்டு அக்னிக்குத் தெற்கிலும், வடக்கிலும் கண்கள் போல வைக்கவும். மட்டைகளை யானையின் துதிக்கை போல் அக்னியின் சுற்றுப்புறத்தில் வைக்கவும்.

எட்டுத்திரவியங்கள் : கொழுக்கட்டை, அவல், பொரி, ஸத்துமா, கரும்புத்துண்டு, தேங்காய்க் கீற்று, எள், வாழைப்பழம் ஆகியவை.

(அருகம்புல்லாலும் ஹோமம் செய்ய வேண்டும்)

1. பூர்ப்புவஸ் ஸுவரோம் என்று அக்னியைப் பிரதிஷ்டை செய்க. (அதற்கு முன், அக்னியைத் தாபிக்க வேண்டிய இடத்தில் அரிசிமாவால் ஒரு சாண் அளவு தரையில் சதுரமாக மண்டலம் செய்து இரு தர்ப்பைகளால் கிழக்கு நோக்கியும், வடக்கு நோக்கியும் முறையே 3 கோடுகள் வரைந்து நீரைத் தொட்டு, தர்ப்பையைத் தென்மேற்கில் போட்டு மறுபடியும் ஜலத்தைத் தொடுக).

2. அருகில் கும்பத்தில் வருணனை ஆவாகித்துப் பூசை செய்க. அக்னிக்கு வடகிழக்கில் தீபம் வைத்து அதில் துர்க்கை ஆவாஹனம் 16 உபசார பூஜை செய்க.

3. பரிஷேசனம்

அதிதே அநுமன்யஸ்வ அநுமதே அநுமன்யஸ்வ
ஸரஸ்வதே அநுமன்யஸ்வ தேவ ஸவித: ப்ரஸுவ

4. அக்னியில் தியானம் செய்து, ஹோம குண்டத்தின் 8 திசைகளிலும் பூஜை செய்க. (கிழக்கிலிருந்து வரிசையாக ஒவ்வொரு திசையிலும்)
இந்த்ராய நம: அக்னயே நம: யமாய நம:
நிர்ருதயே நம: வருணாய நம: வாயவே நம:
சோமாய நம: ஈசானாய நம: அக்னயே நம: (அக்னியில்)
ஆத்மனே நம: ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம:
நெய்யில் 15 சமித்தைத் தோய்த்து, அஸ்மின் ஹோம கர்மணி ப்ரஹ்மன் இத்மம் ஆதாஸ்யே என்று கூற, பிரம்மாவானவர், ஓம் ஆதத்ஸ்வ என்று சொல்லியதும், அக்னியில் சேர்க்க. பிரஜாதிபதியை மனதில் நினைத்துக் கொண்டு வடக்கு மூலையிலிருந்து தென் கிழக்காக நெய்யைத் தாரையாக விடுக. எல்லா சமித்துக்களையும் தொடுக. பின்னர் ஸ்வாஹா, ப்ரஜாபதய இதம் ந மம என்று கூறுக. ஸ்வாஹா இந்த்ராய இதம் ந மம (தெற்கிலிருந்து வடகிழக்காக நெய்யை ஊற்றுக). அத ஆஜ்ய பாகோ ஜுஹோதி (வடகிழக்குப் பாதியில்) அக்னயே ஸ்வாஹா, அக்யை இதம் ந மம, என்றும், தென்கிழக்குப் பாதியில் ஸோமாய ஸ்வாஹா, ஸோமாய இதம் ந மம என்றும் நெய்யால் ஹோமம் செய்க. எல்லாத் தோஷங்களுக்கும் பிராயச்சித்தமாக, ஓம் பூர்ப்புவஸ்ஸுவ : ஸ்வாஹா, ப்ரஜாபதய இதம் ந மம என்று நெய் விடுக.

5. அக்னியின் மத்தியில் மகா கணபதியைத் தியானம் செய்க. அஸ்ய ஸ்ரீ மஹா கணபதி மகாமந்த்ரஸ்ய கணக ரிஷி: காயத்ரீச் சந்த : மஹாகணபதிர் தேவதா க்லாம் பீஜம் க்லீம் சக்தி: க்லூம் கீலகம் ஸ்ரீ மஹாகணபதி ப்ரஸாத ஸித்த்யர்த்தே ஹோம விநியோக: (கரநியாஸம், அங்க நியாஸம் செய்க). பூர்ப்புவஸ்ஸுவரோம் என்று திக்பந்தனம் செய்க.
6. தியானம்: பீஜாபூர கதே க்ஷú கார்முகருஜா சக்ராப்ஜ பாசோத்பல வ்ரீஹ்யக்ர ஸ்வவிஷாண ரத்னகலச ப்ரோத்யத் காராம் போருஹ: த் யேயோ வல்லப யா ஸபத்மகரயா ஸ்லிஷ்டோஜ்வலத் பூஷயா விஸ்வோத்பத்தி விபத்தி ஸம்ஸ்தித கரோ விக்நேச இஷ்டார்த்த:

7. பஞ்ச பூஜை: 

லம் ப்ருதிவ்யாத்மநே கந்தம் ஸமர்ப்பயாமி
ஹம் ஆகாசாத்மநே புஷ்பம் ஸமர்ப்பயாமி
யம் வாய்வாத்மநே தூபம் ஆக்ராபயாமி
ரம் அக்னியாத்மநே தீபம் தர்சயாமி
வம் அம்ருதாத்மநே அம்ருதம் மகாநைவேத்யம் நிவேதயாமி
ஸம் ஸர்வாத்மநே ஸர்வ உபசார பூஜாம் ஸமர்ப்பயாமி
(பின் கணபதி மூல மந்திரம் ஜபம் செய்க.)

8. நெய்யால் ஹோமம்
ஓம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் .... க்லௌம் ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ... .... கம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் .... கணபதயே ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் .... வரவரத ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் .... ஸர்வ ஜனம் மே வசம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் .... வசமானய ஸ்வாஹா ஸ்ரீ மகா கணபதயே இதம் ந மம

9. தேங்காய்க் கீற்றால் ஹோமம்
- நக்ஷத்ரே - ராசௌ ஜாதஸ்ய - சர்மண: ஸகுடும் பஸ்ய அனுகூலம் ப்ரயச்ச ப்ரயச்ச, ப்ரதிகூலம் நாசய நாசய, ஸம்பதோ வர்தய, வர்தய, வர்தய, ஸர்வத்ர விஜயம் ப்ரயச்ச ப்ரயச்ச,
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் .... வசமானய ஸ்வாஹா (8 முறை ஹோமம் செய்க).

10. நெய் ஹோமம்

கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே ... ஸீத
ஸாதனம் ஸ்வாஹா (8 முறை சொல்லி ஹோமம்)

11. நெல் பொரியால் ஹோமம்

உத்திஷ்ட புருஷ ஹரித பிங்கல லோஹி தாக்ஷ ஸர்வாபீஷ்டம் தேஹி தேஹி தா பய தா பய ஸ்வாஹா (8 முறை ஹோமம்) அக்னிரூபாய ஸ்ரீ மஹாகணபதயே இதம் ந மம.

12. தேங்காய் மூடியால் ஹோமம்

ஜாத வேத ஸே....துரிதாய க்னி: ஸ்வாஹா (இரு முறை)

13. நெய்யில் தோய்த்த அருகம்புல்லால் ஹோமம்

மூல மந்திரத்தால் 8 முறை செய்க.

14. 8 திரவியத்தால் ஹோமம்

ஓம் நமோ வ்ராதபதயே நமோ கணபதயே நம: ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய ஏக தந்தாய விக்னவிநாசினே சிவஸுதாய ஸ்ரீ வரத மூர்த்தயே நமோ நம: ஸ்வாஹா (8முறை) ஸ்ரீ மஹாகணபதய இதம் ந மம

15. கணேச காயத்ரீ ஜபம் - 10 முறை.

16. கணேச மாலாமந்திரம் சொல்லி ஹோமம்.

17. கணபதி அதர்வசீர்ஷம் சொல்லி ஹோமம்.

18. உத்தராங்கம்

பூ : ஸ்வாஹா அக்யை இதம்
புவ : ஸ்வாஹா வாயவ இதம்
ஸுவ : ஸ்வாஹா ஸுர்யாய இதம்
அஸ்மிந் ஹோம கர்மணி மத்யே ஸம்பாவித ஸமஸ்த தோஷ ப்ராயச்சித்தார்த்தம் ஸர்வ ப்ராயச் சித்தார்த்தம் ஹோஷ்யாமி ஓம் பூர்புவஸ்ஸுவ : ஸ்வாஹா ப்ரஜாபதய இதம் ஸ்ரீ விஷ்ணவே  ஸ்வாஹா விஷ்ணவே பரமாத்மன இதம் நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா ருத்ராய பசுபதயே இதம் (நீரால் கைகளை நனைக்க)

19. பூர்ணாஹுதி

அஸ்மின் ஹோமகர்மணி பூர்ணாஹுதிம் கரிஷ்யே
பூர்ணாஹுதி தேவதாப் யோ நம: ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி
மூலமந்திரம் + வெளஷட்
பூர்ணாஹுதிம் உத்தமாம் ஜுஹோதி ஸர்வம் வை பூர்ணாஹுதி : ஸர்வம் ஏவாப்நோதி அதோ இயம் வை பூர்ணாஹுதி : அஸ்யாமேவ ப்ரதி திஷ்டதி
பூர்ணமத : பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணம் உதச்யதே.... அவசிஷ்யதே
ப்ரஹ்மார்ப்பணம் ..... ஸமாதி நா
பிராணாயாமம் செய்க.

20. பரிஷேசனம்

அதிதே அன்வமங்ஸ்தா : அநுமதே அன்வமங்கஸ் தா : ஸரஸ்வதே அன்வ மங்ஸ்தா :
தே ஸவித : ப்ராஸாவீ :
வருணாய நம : ஸகலாராதனை : ஸ்வர்ச்சிதம்

21. பிரம்ம உத்வாஸனம்
ப்ரஹ்மன் வரம் தே த தா மி ப்ரஹ்மணே நம:
ஸகல ஆராதனை ஸ்வர்ச்சிதம்
(நான்கு பக்கங்களிலும் உள்ள தர்ப்பைகளை அக்னியில் சேர்க்க).

22. உபஸ்தானம்

ஸ்வாஹா அக்னேர் உபஸ்தானம் கரிஷ்யே அக்னயே நம:
மந்த்ரஹீநம் க்ரியாஹீநம் பக்திஹீநம் ஹுதாசன
யத் து தம் து மயா தேவ பரிபூர்ணம் தத ஸ்து தே
ப்ராயஸ்சித்தானி அசேஷானி தப : கர்ம ஆத்மகானி வை
யாநி தேஷாம் அசேஷாணாம் க்ருஷ்ணாணுஸ்மரணம் பரம் (நமஸ்காரம் செய்க)
அக்னிம் ஆத்மனி உத் வாஸயாமி (இதயத்தில் அஞ்சலி செய்க)

23. ரøக்ஷ

ப்ருஹத் ஸாம க்ஷத்ரப் ருத் வ்ருத் த வ்ருஷ்ணியம்: த்ரிஷ்டு பௌஜ: ஸுபி தம் உக்ர வீரம் இந்த்ர ஸ்தோமேன பஞ்சதஸேன மத்யம் இதம் வாதேன ஸகரேண ரக்ஷ

24. ஸமர்ப்பணம்

குஹ்யாதி குஹ்ய கோப்தா த்வம் க்ருஹாணா ஸ்மத் க்ருதம் ஹவம்
ஸித்தி : பவது மே தே வ த்வத்ப்ரஸதான் மயி ஸ்திரா
ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணம் அஸ்து.


தை மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிபாடு மற்றும் விரதங்கள்!


சாவித்ரி கவுரி விரதம் : தை மாதம் 2-ஆம் நாள் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. சிவனார் தனக்கருளிய இந்த விரதத்தை, தருமருக்கு போதித்தார் மார்க்கண்டேயர். விரத நாளன்று அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும். அதன்பின், குயவர் வீட்டுக்குப் போய் அவரது சக்கரத்தில் இருந்து மண்ணை எடுத்துக் கொண்டு வர வேண்டும். அந்த மண்ணால் சாவித்ரி தேவி வடிவம் செய்ய வேண்டும். பிறகு மவுன விரதம் பூண்டு முறைப்படி பூஜை செய்து, ஒன்பது முடிகள் போட்ட நோன்புக் கயிற்றைக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 9 நாட்கள் பூஜித்து, 9-வது நாளன்று மலையில் பூஜையை முடிக்க வேண்டும். பூஜையை நிறைவு செய்யும்போது ஒன்பது ஜோதி முறங்களில்.. ஒவ்வொன்றிலும் ஒன்பது வெற்றிலை பாக்கு - ஒன்பது மஞ்சள் கிழங்குகள் - ஒன்பது பழங்கள் என வைக்க வேண்டும். அதன் பிறகு சுமங்கலிகளை வரவழைத்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றைத் தந்து ஒருவருக்கு ஒரு ஜோடி முறம் தந்து அவர்களை வலம் வந்து வணங்கி, வழியனுப்ப வேண்டும். அதன் பிறகே உண்ண வேண்டும். நீண்ட ஆயுள், செல்வம், சந்தான பாக்கியத்தையும் அருளக் கூடியது இந்த விரதம்.

 பைரவ வழிபாடு : தை மாதத்தில் முதலில் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பைரவரை வடை மாலை சாற்றி வழிபடுவதால், சகல நலன்களும் உண்டாகும்.

வீரபத்திர வழிபாடு : மங்கலவாரம் எனப்படும் செவ்வாய்க் கிழமை தோறும் ஒரு வருட காலம் வீரபத்திரரை வழிபட, வல்வினைகள் நீங்கும். வருடம் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், தை மாதத்தில் வரும் செவ்வாய்க் கிழமைகளிலாவது இந்த விரதம் இருப்பது சிறப்பு. இதனால், நீங்காத தடைகள் நீங்கும். பயமும் தீவினைகளும் நம்மைவிட்டு விலகும். கிரக பாதிப்புகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும் அற்புத வழிபாடு இது.



விரதம் மற்றும் பண்டிகை தினங்களில் ஆலயங்களில் செய்யக்கூடிய 18 பணிகள்!

நமக்கு அன்றாடம் எவ்வளவோ பணிகள் இருந்தாலும் விரத மற்றும் பண்டிகை நாட்களிலாவது ஆலயப்பணிகளை செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.

1. சன்னதிதோறும் கோலமிடுதல்
2. ஆலய வளாகத்தை அலங்கரித்தல்
3. தரைப் பகுதியைப் பெருக்குதல்
4. மேல்பகுதிகளில் ஒட்டடை நீக்குதல்
5. கட்டிடங்களில் உள்ள செடிகளை அகற்றுதல்
6. விளக்கு, திருவாசிகளைத் தேய்த்தல்
7. மின் அமைப்பைப் பராமரித்தல்
8. நந்தவனத்தைப் பேணுதல்
9. அபிஷேக நீர்த்தொட்டியை சுத்திகரித்தல்
10. மண்டபங்களைக் கழுவி விடுதல்
11.சிறப்பு வழிபாடுகளை நடத்துவித்தல்
12. பூஜைப் பணிகளில் உதவுதல்
13.தரிசிப்போரை வரிசைப்படுத்துதல்
14. பிரசாதம் வழங்களில் உதவுதல்
15. புதியவர்க்கு வழிகாட்டல்
16. இறைத் துதிகளை கற்றுவித்தல்
17. இறை நூல்களை விநியோகித்தல்
18. வழிபாட்டில் முழுமையாக பங்கேற்றல்.

Friday, January 13, 2012

திசைகளும் தீபங்களும்

திசைகளும் தீபங்களும் :-நாம் அன்றாடம் காலையும் - மாலையும் பூசை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகிறோம். தினம் தீபம் ஏற்றும் நம்மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் பற்றியும், அவை தரும் பலன்கள் பற்றியும் தெரியும் ? தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன்மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும். மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட்டும் ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல்லைகள் விலகும். சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும். தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும் ஏற்றக்கூடாது. எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும். திரியில்லாமல் தீபம் ஏது? திரிகளின் வகைகளும் அவை தரும் பலன்கள் பற்றியும் பார்க்கலாமா? சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டதுதான் பஞ்சுத்திரி. முற்பிறவியின் பாவங்களை அகற்றி- செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். 

மழலைப் பேறில்லையே என ஏங்குவோர் வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். 
செய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள்ளெருக்குப் பட்டைத் திரியில் விளக்கேற்ற வேண்டும். முழுமுதற் கடவுளான கணேசப் பெருமானுக்கும் உகந்தது இது. தம்பதிகள் மனமொத்து வாழவும் - மகப்பேறு பெறவும் மஞ்சள் நிறங்கொண்ட புதிய திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.

திரியுடன் எண்ணையிட்டால்தானே தீபம் எரியும்? எந்த எண்ணையிட்டாலும் விளக்கு எரியும்தான். ஆனால் பலன்...?நலம் வேண்டி நாம் விளக்கேற்றும்போது அதில் விடும் எண்ணையினால் பலன்கள் நேரெதிராகவும் வாய்ப்புகள் உண்டே? ஏதோ இருக்கும் எண்ணையை ஊற்றி விளக்கு ஏற்றுதல் என்பது மிகவும் தவறான ஒன்று. கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும். கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும் வேப்பெண்ணை தீபம் உகந்தது.

அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது மணக்கு எண்ணை தீபம். எள் எண்ணை (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது; நவக்கிரகங்களைத் திருப்தி செய்யவும் ஏற்றது.

மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் சுத்தமான தேங்காய் எண்ணை கொண்டு தீபமேற்ற வேண்டும். செல்வங்கள் அனைத்தையும் பெற விரும்புவோர் வேப்பெண்ணை, இலுப்பை எண்ணை, நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும். மந்திர சித்தி பெற வேண்டுவோர் விளக்கெண்ணை, இலுப்பை எண்ணை, நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணை ஆகிய ஐந்து எண்ணைகளையும் கலந்து விளக்கேற்ற வேண்டும். கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்.எண்ணெய்க் குளிப்பு!எண்ணெய்யை சாதாரணமாக பலர் நினைத்துள்ளனர் தண்ணீரைப் போல்.அரபு நாடுகள் இன்று தலை நிமிர்ந்து நிற்க காரணம் எண்ணெய்.தண்ணீரும் ஒரு அரிய பொருளாகப் போகிறது.சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் ஒரு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


 இந்தியாவில் உள்ள கங்கை நதி, சீனாவின் வடக்குப்பகுதியிலுள்ள நதி மற்றும் மெக்சிகோ,ஜோர்டான், அரேபியா, அமெரிக்காவின் தென் பகுதியிலுள்ள நதிகள் எல்லாம் ' என்றும்வற்றாத ஜீவ நதிகள்' என்று கூறப்பட்டது. கங்கை போன்ற நதிகளின் நீர் நிலைவற்றிக்கொண்டிருக்கிறது. இன்னும் 30 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் கடுமையான தண்ணீர்பஞ்சம் வரப்போகிறது. குடி நீர் கிடைக்காது. உலகத்தில் மிகப்பெரிய நதியான நைல்நதியைப் போல் 20 நைல் நதிகள் அளவு தண்ணீர் வந்தால்தான் மக்களை காப்பாற்ற முடியும்.இனி எண்ணெய்:ஞாயிறு குளித்தால் வடிவமும் அழகும் போய்விடும்.திங்கள் குளித்தால் அதிகப் பொருள் சேரும்.செவ்வாய் குளித்தால் துன்பம் வரும்புதன் குளித்தால் மிக புத்தி வந்திடும்.வியாழன் குளித்தால் உயரறிவு போய்விடும்.வெள்ளி குளித்தால் செல்வம் மிகும்.சனி குளித்தால் ஆயுள் அதிகமாகும்.* மேற்கண்டவை யாவும் பெண்களுக்கு. ஆண்கள் சனி , புதன் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது* ஆண்களுக்கு, திங்கட் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முடக்கு வாதம் வரும்செவ்வாய் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முதுகு பாலை நோய் வரும்.விழாயக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் கால் குடைச்சல் வரும்.வெள்ளிகிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முட வாதம் வரும். [ இதனை.'' அறப்பளீகர சதகம் '' கூறுகிறது.]

* இனி எண்ணெய் தேய்த்து குளிக்க முயலும் - அல்லது நினைக்கும் இணையஅன்பர்கள் தனக்கு தேவையான - தனக்கு வேண்டிய நாட்களை தேர்தெடுத்துக் கொள்ளவும்.எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் பலன் இணைய அன்பர்கள் பலரும் அறிந்திருப்பதால் அதனை தவிர்த்துவிட்டேன்.நம் முன்னோர்கள் சனியையும், புதனையும் ஏன் தேர்தெடுத்தார்கள். மற்ற செல்வங்களை விடஅறிவினையும், உடல் நலத்தினைத்தான் உயர்வாக நினைத்தார்கள் - மதித்தார்கள்.எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது.வெதுவெதுப்பான சுடுநீரில்தான் குளிக்கவேண்டும்.


எண்ணெய் என்று வரும் போது அதன் தொடர்பான வேறு சில விழயங்களையும் இத்துடன்இணைத்துவிடுகிறேன்.திசைகளும் - தீபங்களும்:நெய்:தீபத்திற்கு [விளக்கிற்கு] நெய்விட்டு தீபம் ஏற்றுவது மிகச் சிறப்பு. சகலவித செல்வ சுகத்தையும் இல்லத்திற்கும் - இல்லறத்திற்கும் நலனை தருகிறது.நல்லெண்ணெய்:நல்லெண்ணெயில் தீபமிடுவதால் சகல பீடைகளும் விலகிவிடும்.விளக்கெண்ணெய்:தேவதா, வசியம், புகழ், ஜீவன சுகம், சுற்றத்தார் சுகம், தாம்பத்திய சுகம் விருத்தி செய்கிறது.

திரியின் வகையில் பஞ்சுஇலவம் பஞ்சு திரித்துப் போடுவது மிகவும் நல்லது.தாமரைத் தண்டு:தாமரை தண்டு திரிந்து ஏற்றுவது முன் வினைப் பாவத்தைப் போக்கும்.செல்வம் நிலைத்து நிற்கும்.[ வாழை தண்டில் திரியிலிடுவது சிறப்பு]துணி:புது வெள்ளை துணியில் [அல்லது வெள்ளை வேட்டி] பன்னீரில் நனைந்து காயவைத்து திரியாக பயன் படுத்த உத்தம பலனை காணலாம்.திசைகளும் பலனும்கிழக்குகிழக்கு திசை தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும் , பீடைகள் அகலும்.மேற்கு:மேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிபடக் கடன் தொல்லை , சனி பீடை, கிரக தோஷம்நீங்கும்.வடக்கு:வட திசையில் தீபம் ஏற்ற திரண்ட செல்வமும், திருமணத் தடையும், சுபகாரியத் தடை,கல்வி தடை நீங்கும். சர்வ மங்களமும் உண்டாகும்.வேப்பெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய் இவை மூன்றும் கலந்து தீபமிடுவதனால்செல்வம் உண்டாகும். இது குல தெய்வத்திற்கு உகந்தது.நெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேய்காய் எண்ணெய்இந்த ஐந்து எண்ணெய் சேர்கையில் 45 நாட்கள் பூசை செய்கிறோரோ அவருக்கு தேவியின் அருள் சக்தி உண்டாகும்.இறைவனுக்கு உகந்த எண்ணெய்:மஹாலட்சுமி : நெய்.நாராயணன் : நல்லெண்ணெய்