Tuesday, December 31, 2013

2014 - இந்தியாவில் என்ன நடக்கும்?

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!: ஆங்கில புத்தாண்டுக்கும், தமிழ் புத்தாண்டுக்கும் மாறுபாடு உண்டு.  சூரியனின் நிலை கொண்டு அதன் இடமாற்றத்தை கணக்கில் எடுத்து தமிழ் மாதம் கணிக்கப்படும். ஆங்கில ஆண்டு உலக நாடுகள் அனைத்திலும் பின்பற்றப்படுவது. அதையே நடைமுறையிலும் கையாண்டு வருகிறோம். மனிதர்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அது இறைவனின் அருளால்  புனிதத்துவம் பெற்றதாகி விடுகிறது.  

2014ம் ஆண்டின் தொடக்கத்தில் முக்கிய கிரகங்களில் குருபகவான் மிதுனத்தில் வக்கிரம் அடைந்து நிற்கிறார். சனிபகவானும் ராகுவும் துலாமில் இணைந்து உள்ளனர். கேது மேஷத்தில் உள்ளார். குரு, மார்ச் 12ல், வக்கிர நிவர்த்தி அடைகிறார். சனிபகவான் மார்ச் 4 முதல் ஜூலை 19 வரை வக்கிரம் அடைகிறார். அவர் வக்கிரம்  அடைந்தாலும் அதே ராசியில்தான் இருக்கிறார். குருபகவான், ஜூன் 12ல், மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு செல்கிறார். ராகுகேது கன்னிக்கும், மீனத்திற்கும் ஜூன் 20ல் பெயர்ச்சி அடைகிறார்கள். சனிப் பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி, டிசம்பர் 17ல் நிகழ்கிறது. அவர் துலாமில் இருந்து  விருச்சிகத்திற்கு செல்கிறார். இவைகளை கருத்தில் கொண்டு, பலன்கள்  கோச்சார அடிப்படையில்தான் கணிக்கப்பட்டு உள்ளது, இதில் சுமாரான பலன்கள் சிலருக்கு இருக்கலாம். ஆனால், ஜாதக  ரீதியாக நல்ல தசாபுத்தி நடந்தால் சிறப்பான பலன்கள் தான் கிடைக்கும். மேலும், எளிய பரிகாரங்களும் கொடுக்கப்பட்டு உள்ளது. காழியூர் நாராயணன்

2014ம் ஆண்டிற்கான உங்கள் பலன் அறிய கிளிக் செய்யவும்..

2014இந்தியாவில் என்ன நடக்கும்?

*ஆட்சி மாறுவதற்குரிய சாத்தியக்கூறு அதிகம்.
*பணமதிப்பு கடந்த ஆண்டு இருந்ததை விட அதிகரிக்கும்.
*ஆன்மிகப்பணிகளில் மக்கள் தீவிரமாக ஈடுபடுவர்.
*அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில் தொய்வு ஏற்படும்.
*மின்சார உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் தீட்டப்படும்.
*வெளிநாட்டு வர்த்தகர்களின் கை ஓங்குவதைத் தடுக்க கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
*வங்கிகளின் கையிருப்பு அதிகரிப்பால் கல்விக்கடன் உள்ளிட்டவை தாராளமாக வழங்க முயற்சிக்கப்படும்.
*வங்கி கடனுக்காக போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும்.

புத்தாண்டில் தமிழக நிலைமை எப்படி?: *மத்தியில் ஆட்சி மாற்ற அறிகுறி தெரிவதால், தமிழகத் திட்டங்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
*மின்சார உற்பத்தியைப் பெருக்க, மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்.
*விலை உயர்வு ஒருபுறம் இருந்தாலும், வாங்கும் சக்தி அதிகரிப்பால் விற்பனை சரிவு இருக்காது.
*எலக்ட்ரானிக் கருவிகள் விற்பனை அதிகரிக்கும். மக்கள் இது தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டுவர்.
*கலாசார சீரழிவைத் தடுக்கும் வகையில், ஆன்மிக ஆர்வலர்கள் பிரசாரம் செய்வர். அது ஓரளவுக்கு பலனும் கொடுக்கும்.
*கல்வி, மருத்துவத் துறையில் தமிழகத்திற்கென தனியிடம் கிடைக்கும்.
*நிம்மதிக்குறைவால், மக்கள் ஞானமார்க்கத்தில் ஈடுபட ஆர்வம் கொள்வர்.

Friday, December 27, 2013

பயம் நீக்கும் நவதுர்க்கை மந்திரம்!

துர்க்காதேவி ஒருத்தி என்றாலும், அவள் ஒன்பது வகைகளில் தெய்வங்களுக்கும், பக்தர்களுக்கும் உதவியிருக்கிறாள். இன்றும், நமக்கு பாதுகாப்பாக நின்று அருளுகிறாள். எனவே, இவளை ஒன்பது வடிவங்களாகக் கருதி ஓம் வனதுர்க்கையே நம: ஓம் சூலினி துர்க்கையே நம: என்று ஒன்பது துர்க்கைகளுக்குரிய மந்திரத்தையும், நாளொன்றுக்கு ஒரு துர்க்கைக்குரிய மந்திரம் வீதம் 108 முறை சொல்ல வேண்டும். இவ்வாறு செய்தால் காரணமற்ற பயம் நீங்கும்.

1. வன துர்க்கை: பிறவிப் பெருங்காட்டை அழிப்பவள்
2. சூலினி துர்க்கை: திரிபுரம் எரிக்க சிவனுடன் சென்றவள்
3. ஜாதவேதோ துர்க்கை: முருகன் உதித்தபோது அக்னிக்கும் வாயுவுக்கும் அருளியவள்
4. ஜுவாலா துர்க்கை: பண்டாசுரனை வதம் புரிய அனல் பிழம்பாகி அரண் அமைத்தவள்
5. சாந்தி துர்க்கை: தட்ச யாகத்தின் போது கோபமடைந்த சிவனை சாந்தப்படுத்தியவள்
6. சபரி துர்க்கை: அர்ஜுனனுக்கு பாசுபதம் அளிக்க சென்ற சிவனுடன்  வேட்டுவச்சி வடிவில் சென்றவள்
7. தீப துர்க்கை: பக்தர்களுக்கு ஒளியாய் நின்று உதவுபவள்
8. ஆசுரி துர்க்கை: அமுதம் கிடைக்க திருமாலுக்கு உதவியவள்
9. லவண துர்க்கை: லவணன் என்ற அசுரனை சத்ருக்கனன் வென்று வர  உதவியவள்.

வீட்டில் பூஜை செய்யும் போது சிறு செம்பில் நீர் வைப்பது ஏன்?

வீட்டில் பூஜை செய்யும் போது, சிறு செம்பு  கிண்ணங்களில் நீர் வைக்கிறார்கள். இதில்  புண்ணிய நதிகளின் நீரை நிரப்ப வேண்டும். இதற்கு எல்லாருக்கும் வசதியிருக்காது. எனவே,  வீட்டிலுள்ள நிறை குடத்து நீரை, காவிரி, கங்கை, தாமிரபரணி, வைகை போன்ற புண்ணிய தீர்த்தங்களாகக் கருதி பக்தியுடன் நிரப்ப வேண்டும். உங்கள் இஷ்ட தெய்வம் அந்த புனிதநீரில் வந்து எழுந்தருள  வேண்டும் என உருக்கமாக வேண்டிக் கொள்ள வேண்டும். பூஜை முடிந்ததும் அதை பக்தியுடன் பருக வேண்டும். ஏதேனும் ஒரு சாதம், கல்கண்டு, பழம், வெற்றிலை, பாக்கு படைக்க வேண்டும். "ப்ர என்றால் "கடவுள். நாம் படைக்கும் வெறும் சாதம், "ப்ர என்ற கடவுளுடன் சம்பந்தப்படும் போது,  "ப்ரசாதம் (பிரசாதம்) ஆகி விடுகிறது. இதை உண்ணும் போதும், பருகும்போதும், நம்மை தீய  சக்திகள் அணுகாது. மனோபலம் பெருகும்.

அம்மன் கோயில்களில் மாவிளக்கு ஏற்றுவது ஏன்?

நம்மையே விளக்காகவும், மனதை நெய்யாகவும், அன்பை தீபமாகவும் அர்ப்பணிக்கும் ஒரு அபூர்வ வழிபாடு இது. அம்மன் கோயில்களில் மட்டுமல்ல, அவரவர் குல தெய்வத்துக்கு ஆண்டுக்கு ஒருமுறையாவது செய்ய வேண்டும்.

Tuesday, December 24, 2013

சென்னையில் நவக்கிரகங்கள் நேரில் வந்து தங்கி வழிபட்ட சிவாலயங்கள்



சென்னையில் நவக்கிரகங்கள் நேரில் வந்து தங்கி வழிபட்ட சிவாலயங்கள் இருக்கின்றன.இவைகளில் நமக்கு எந்தக் கிரகம் பலவீனமாக இருக்கின்றனவோ,அந்த சிவாலயம் சென்று வழிபட கிரகபலம் உண்டாகும்.


சூரியன் வழிபட்ட சென்னை சிவாலயம் சிவமிகு.அகத்தீசுவரர்+ஆனந்தவல்லி திருக்கோவில் கொளப்பாக்கத்தில் இருக்கிறது.எம்.54பி என்ற பேருந்தில் பயணித்து,கொளப்பாக்கம் அண்ணாசிலை(வாட்டர்டேங்க்) பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால்,கோவிலுக்குச் செல்ல முடியும்.குன்றத்தூர் ரோட்டில் பாய்க்கடையிலிருந்து 1.5 கி.மீ.கொளப்பாக்கம் அண்ணாசிலையிலிருந்து சிறிது தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.
கி.பி.878 இல் ஆதித்ய சோழன் மற்றும் இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கி.பி.1152 இல் திருப்பணி செய்யப்பட்ட இத்திருக்கோவில் நன்கு பராமரிக்கப்பட்டு தினசரி வழிபாடு நடைபெற்று வருகிறது.இங்கே ருணவிமோசன லிங்கம் ஒன்றும் இருக்கிறது.


சந்திரன் வழிபட்ட சென்னை சிவாலயம் சிவமிகு:சோமநாத ஈசுவரர்+காமாட்சி திருக்கோவில் சோமமங்களம்,சென்னை-69 இல் உள்ளது.88M,89M,157 என்ற எண்ணுள்ள பேருந்தில் பயணித்து சோமங்களம் என்ற நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.குன்றத்தூரில் இருந்து திருபெரும்மத்தூர் செல்லும் வழியில் சோமங்களம் பிரியும் அவ்வழி சென்று ஊருக்குள் இந்த ஆலயம் இருக்கிறது.விருச்சிகராசியினர் அவசியம் வழிபட வேண்டிய தலம் இது.ஏனெனில்,அவர்களுக்குத் தான் சந்திரன் நீசமாகி இருக்கிறது.
இத்திருக்கோவிலுக்குத் திருப்பணி செய்த மன்னனின் பகைவரை அழிக்க இறைவனின் ஆணைப்படி நந்தியெம்பெருமான்,திரும்பியபடி இருக்கிறார்.நடராஜப் பெருமான் சதுர நாட்டியம் ஆடியபடி இருக்கிறார்.எனவே,முற்காலத்தில்(முதலாம் குலோத்துங்கன் காலத்தில்) இந்தப் பகுதியானது சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது.


செவ்வாய் வழிபட்ட சென்னை சிவாலயம்:சிவநிறை:வைத்தியநாதசுவாமி+தையல்நாயகி அம்மன் திருக்கோவில்,பூந்தமல்லியில் இருக்கிறது.சுந்தர் மருத்துவமனை செல்லும் வழியில்,சுந்தர் மருத்துவமனை எதிர்ச்சாலையில் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.
14000 ஆண்டுகள் பழமையான ஆலயம் இது;செவ்வாய் பகவானும்,இந்திரனும் இங்கே வந்து தங்கி தொடர்ந்து வழிபட்டதால் அவர்களுடைய நோய்கள் நீங்கின.கி.பி.1178 ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தப்பகுதி உலகுய்யக்கொண்ட சோழபுரம் என்று வழங்கப்பட்டிருக்கிறது.சுவமியின் பழைய திருநாமம் தீராதவினை தீர்த்த நாயனார் என்பது ஆகும்.தீராத நோய்கள்,தீராத பகைகள்,தோல் நோயை நீங்கிடவும்,செவ்வாய் தோஷம் நீக்கவும் இவரை முறைப்படி வழிபட வேண்டும்.


புதன் வழிபட்ட சென்னை சிவாலயம்:சிவநிறை(திருமேனீசுவரர்)சுந்தரேசுவரர்+சவுந்தராம்பிகை அம்மன் திருக்கோவில்,கோவூர்,சென்னை=122 இல் அமைந்திருக்கிறது.போரூரில் இருந்து குன்றத்தூர் செல்லும் பாதையில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.88K,88L,88K,88C பேருந்துகளில் பயணித்து கோவூர் என்ற நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.மீனராசியில் ரேவதி நட்சத்திரத்தில் புதன் நிற்கப்பிறந்தவர்கள் இந்த கோவிலுக்குச் சென்று வழிபட புதனின் பலவீனம் நீங்கும்;கி.பி.965 ஆம் ஆண்டில் சுந்தரச் சோழன் கட்டியதாக கல்வெட்டுக்கள் கூறுகின்றன.மகாவில்வம் 9,16,27 இவைகளைக்கொண்டு தினமும் மூலவருக்கு வழிபாடு நடைபெற்றுக்  கொண்டிருக்கிறது.இந்த ஆலயத்தில் காமதேனு இறைவனை வழிபட்டதால் இப்பகுதி கோவூர் என்று அழைக்கப்படுகிறது.மகாவில்வம் இந்த ஆலயத்தின் தலமரமாக அமைந்திருக்கிறது.


சுக்கிரன் வழிபட்ட சென்னை சிவாலயம்:சிவநிறை:வெள்ளீசுவரர் என்ற திருவல்லீசுவரர் ஆலயம் மாங்காடு பகுதியில் அமைந்திருக்கிறது.
மிகப்பெரிய பாணலிங்கம் அனைவரையும் கவரும் அற்புதவடிவில் வில்வமரத்தின் அடியில் அமைந்திருக்கிறது.ஆதி காமாட்சி இங்கு நின்று வழிபட்டதாக கூறப்படுகிறது.கண் சார்ந்த நோய்களை இவர் நிவர்த்தி செய்து வருகிறார்.இந்த ஆலயத்தின் தலவிருட்சம் மஹாவில்வம் ஆகும்.66M,566,17B,53,266என்ற பேருந்தில் பயணித்து மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.மாங்காடு காமாட்சி அம்மன் தெற்கு வாசல் தெரு வழியே சென்று வலப்புறம் திரும்ப கடைசியில் வெள்ளீசுவரர் கோவில் தெரு சென்று இத்திருக்கோவிலை அடையலாம்.


குரு வழிபட்ட சென்னை சிவாலயம்:சிவநிறை:இராமநாதேசுவரர்+சிவகாமசுந்தரி திருக்கோவில் போரூரில் அமைந்திருக்கிறது.முகவரி:ஆர்..நகர்,சிவன் கோவில் தெரு,போரூர்,சென்னை=122.88,54,17M,37G,17B பேருந்துகளில் பயணித்து போரூர் பவர் ஹவுஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.போரூர் நான்கு சந்திப்பிலிருந்து குன்றத்தூர் ரோடு வழியாக சிறிது தொலைவில் இடதுபுறம் திரும்ப இந்த ஆலயத்தை அடையலாம்.
குருபகவான் வழிபட்ட இத் திருக்கோவிலுக்கு,இராமாயண காலத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும் வந்து வழிபட்டிருக்கிறார்.இராமாயணம் நிகழ்ந்து 17,50,000 ஆண்டுகள் ஆகின்றன என்று அறியும் போது இந்த ஆலயத்தின் வயதும் அதே அளவு இருக்கும் என்று யூகிக்கலாம்;இதனாலேயே இதை ஆதி இராமேஸ்வரம் என்றும்,இங்கே இருக்கும் தீர்த்தம் ராம தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.2400 ஆண்டுகளுக்கு முற்பட்ட தண்ட சண்டேசர் அருள்புரிந்து வருகிறார்.


சனி வழிபட்ட சென்னை சிவாலயம்: சிவநிறை:அகத்தீசுவரர்+ஆனந்தவல்லி திருக்கோவில்,பொழிச்சலூரில் அமைந்திருக்கிறது.52,60G,M52,M52H  என்ற எண்ணுடைய பேருந்தில் பயணித்து பொழிச்சலூர் அகத்தீசுவரர் கோவில் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
தொண்டை மண்டல ஆதீன நிர்வாக பரம்பரையினர் இத்திருக்கோவிலை பராமரித்துவருகின்றனர்.சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த ஆலயம் வடநள்ளாறு என்று அழைக்கப்படுகிறது.


இராகு வழிபட்ட சென்னை சிவாலயம்:சிவநிறை:நாகேசுவரர்+காமாட்சி அம்மன் திருக்கோவில்,குன்றத்தூரில் அமைந்திருக்கிறது.குன்றத்தூர் பேருந்து நிலையத்துக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த ஊரில் சேக்கிழார் பெருமான் பிறந்தார்.மூலவரின் பழைய பெயர்  சடையாண்டீஸ்வரர்.இத்திருக்கோவிலுக்கு வடநாகேஸ்வரம் என்றொரு பெயர் உண்டு.
சேக்கிழார் தனது முன்னோர்கள் வாழ்ந்த கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் கோவிலை நினைவு கூரும் வகையில் சேக்கிழார்பிரான் கர்ப்பக்கிரகத்தை மட்டும் கட்டியுள்ளார்.பனிரெண்டாம் திருமுறையான அறுபத்துமூவர் வரலாறான பெரிய புராணத்தை எழுதியவர் சேக்கிழார் பெருமான்!!!


கேது வழிபட்ட சென்னை சிவாலயம்:சிவநிறை:நீலகண்டேசுவரர்+ஆதிகாமாட்சி அம்பாள் திருக்கோவில் கெரும்பாக்கத்தில் அமைந்திருக்கிறது.M54B என்ற எண்ணுடைய பேருந்தில் பயணித்து கெரும்பாக்கம் கற்பக விநாயகர் கோவில் என்ற நிறுத்ததில் இறங்க வேண்டும்.குன்றத்தூர் டூ போரூர் பாதையில் கெரும்பாக்கம் அமைந்திருக்கிறது.
இந்த கோவிலின் பழைய பெயர் அழகிய சோழ நல்லூர் ஆகும்,கேது வழிபட்டதால் கேது மஹாதிசை நடைபெறுபவர்கள் இந்த ஆலயத்துக்குச் சென்று வழிபட கேதுவினால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் தீமைகள் விலகும்;