Wednesday, May 30, 2012

ஆண்டவனுக்கு செய்யப்படும் அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமா?

அர்ச்சனை என்ற சொல் அர்ச்சா என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். அர்ச்சா என்றால் சிலை என பொருள். இந்த சொல்லில் இருந்தே அர்ச்சனை,  அர்ச்சித்தல், அர்ச்சித்தர் என்ற சொற்கள் வந்தன. அர்ச்சித்தர் என்றாலும் சிலை என்றே பொருள்படும். ஆண்டவனுக்கு செய்யப்படும் ஆறுவகைஉபசாரங்களுள் அர்ச்சனையே முக்கியத்துவம் பெறுகிறது.

ஆறுவகை உபசாரங்கள்

இறைவனுக்கு ஆறுவகையான உபசாரங்கள் செய்யப்படுகின்றன.

1. அபிஷேகம்: தண்ணீர், பால், தேன், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் பல பொருட்களால் செய்யப்படுவது.
2. அலங்காரம்: பட்டு பீதாம்பரத்தாலும், பொன்னாலும், மலர் மாலைகளாலும், தங்க நகைகளாலும், வைர வைடூரியங்களாலும் அழகுபடுத்துவதாகும்.
3. அர்ச்சனை: பூக்களாலும், பாக்களாலும் செய்யப்படுவது.
4. நைவேத்தியம்: பல்வேறு உணவு வகைகள், பால், பழம் முதலியவற்றை படைப்பது.
5. ஆராதனை: தூபம் காட்டுதல், தீபம் காட்டுதல்.
6. உற்சவம்: பெரு விழா நடத்தி மூர்த்தியை வலமாக வீதிகளில் கொண்டு செல்லுதல்.

Tuesday, May 29, 2012

வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் தெரியுமா?

ஒருவர் தான் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு குட்டிக்கதை மூலம் தெரிந்து கொள்வோம். பல வருடங்களாக தச்சர் பணி செய்து வந்த தொழிலாளி ஒருவன் தன் பணியிலிருந்து ஓய்வு பெற விரும்பினான். எஜமானனிடம், தான் தன் குடும்பத்துடன் அமைதியாகக் காலம் கழிக்க விரும்புவதைத் தெரிவித்தார். எஜமானனுக்குத் தன் தொழிலாளியை விட மனமில்லை. இருந்தாலும், கடைசியாக ஒரே ஒரு வீடு கட்டித் தந்துவிட்டு ஓய்வு பெறுமாறு கேட்டுக் கொண்டார். தச்சர், சரி என ஒப்புக் கொண்டாலும், அவர் மனம் வேலையில் ஆழ்ந்து ஈடுபடவில்லை. ஏனோ தானோவென்று மட்டமான பொருள்களைக் கொண்டு வீடு கட்ட ஆரம்பித்தார். தன் கடைசிப் பணியை அப்படி அசிரத்தையுடன் செய்தது துரதிர்ஷ்டம்தான். எப்படியோ ஒரு வழியாக வீடு கட்டி முடிந்ததும், வீட்டை வந்து பார்த்தார் எஜமானன். அமைதியாக வீட்டின் சாவியைத் தச்சரிடம் கொடுத்து, இதோ, இந்த வீடு உனக்காக நான் அளிக்கும் பரிசு என்றார். அதிர்ச்சி! வெட்கம்! அடடா, இது தனக்கான வீடு என்று முன்பே தெரிந்திருந்தால் நன்றாகக் கட்டியிருக்கலாமே? தான் மோசமாகக் கட்டிய வீட்டில், தானே வாழ வேண்டிய நிலைமை அந்தத் தச்சருக்கு. மனிதர்களும் இப்படித்தான். தங்கள் வாழ்க்கையை ஏனோ தானோ வென்று வாழ்ந்து கழிக்கிறார்கள். தங்களுடைய திறமையை முழுமையாகப் பயன்படுத்தாமல் சோம்பி வாழ்கிறார்கள். திறமை காட்ட வேண்டிய சந்தர்ப்பங்களைக் கோட்டைவிட்டு விடுகிறார்கள். நம் வாழ்க்கையும் அந்த வீடைப் போன்றதுதான். ஒவ்வொரு ஆணி அடிக்கும் போதும், மரத்துண்டுகளைச் சேர்க்கும் போதும் புத்திசாலித்தனத்தோடு செயல்படுங்கள். இந்த வாழ்க்கை உனக்காகத் தான், உனக்கு தான் அளிக்கப்பட்டுள்ளது. அதை நீயே உருவாக்குகிறாய். ஒரு நாள் நீ வாழ்ந்தாலும் அமைதியோடும் கவுரவத்தோடும் வாழ வேண்டும். வாழ்க்கை என்பது நமக்கு நாமே கட்டிக் கொள்ளும் வீடு.

Monday, May 28, 2012

என்றும் இளமையாக வாழ சான்றோர் கூறும் எளிய வழி!

அனைவருக்கும் என்றும் இளமையாகவே இருக்க வேண்டும் என்ற என்ற ஆசை இருக்கும்.  அதற்கு சான்றோர்கள் மிகவும் எளிய ஒரு வழியை கூறுகின்றனர். ஓரடி நடவேன், ஈரடி கடவேன், இருந்து உண்ணேன், படுத்து உறங்கேன் என்பதே அது, அதற்கான விளக்கம் ஓரடி நடவேன்.. நமது உடம்பின் நிழல் கால் அளவில் ஓர் அடியாக இருக்கும் உச்சிப்பொழுது நேரத்தில் நான் வெளியில் நடக்க மாட்டேன். உச்சி வெயில் ஆகாது. ஈரடி கடவேன் - அதாவது, ஈர அடி கடவேன், ஈரமான இடங்களில் நீண்ட நேரம் நிற்பதோ, நடப்பதோ கூடாது என்பதால் அப்படி நடக்க மாட்டேன். இருந்து உண்ணேன் - ஏற்கெனவே நான் சாப்பிட்ட  உணவு வயிற்றில் இருக்கும் போதே மேலும் உண்ண மாட்டேன். நன்கு ஜீரணமான பின்புதான் மறுபடியும் சாப்பிடுவேன்.  படுத்து உறங்கேன் - தூக்கம் வந்த பிறகுதான் படுக்கைக்கு செல்வேன். படுத்துக் கொண்டு தூக்கம் வரவில்லையே என நினைத்தபடி படுக்கையில் கிடக்கமாட்டேன். இதுவே நீண்டநாள் இளமையோடு வாழும் ரகசியம் என குறிபிடுகின்றனர் சான்றோர்.

Saturday, May 26, 2012

மாணவர்களே என்றும் உங்களுக்கு வெற்றி நிச்சயம்..!

சாதனைகள் நிகழ்த்த நம்பிக்கையே அடிப்படை. ஆன்மிக சாதனையாயினும், எதுவாயினும் இதுவே விதி. நம்பிக்கை இல்லாமல் இருந்தால் எதையுமே செய்ய முடியாது. அதனால் தான், உங்களுக்கு கடுகளவு நம்பிக்கை இருந்தால் கூட, மலையை நகர்த்தி விடலாம் என்கின்றன அறநூல்கள். தெளிவற்ற முடிவுகள் நம்பிக்கையின்  அடிப்படையைத் தகர்த்துவிடும். எனக்கு வேண்டியது இதுவே. என்ன நடந்தாலும் சரி, அதை அடையும் வரையில் ஓயமாட்டேன். இது எனக்கு மிக  முக்கியம், என்ற மனத்திண்மை இருந்தால் தான், உங்களது செயல்கள் வெற்றி பெறும். இதற்கு ஓர் எளிய உதாரணம் பிரபல நடிகர் சார்லி சாப்ளின். சார்லி சாப்ளின்  அமெரிக்காவின் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். ஓரிடத்தில் போட்டி நடந்தது. சார்லி சாப்ளினை போல வேடமிட்டு நடிக்கும் போட்டி அது. குறும்பு பிரியரான சாப்ளினும் வேறொரு பெயரில் அதில் கலந்து கொள்ள மனு கொடுத்தார். போட்டியின் முடிவு அதிர்ச்சியை அளித்தது. உண்மையான சார்லி சாப்ளின் அதில் மூன்றாம் பரிசுக்கு உரியவராக தேர்ந் தெடுக்கப்பட்டார். இதில் ஆச்சர்யப்பட்டால் மட்டும் போதாது.

மதுரைத் தமிழ்ச்சங்கம் சார்பாக ஒரு கவிதைப் போட்டி நடந்தது. அதில் பாரதியார் கலந்து கொண்டார். அப்போது அவர் மக்கள் மத்தியில் பிரபலமாகாத காலகட்டம். அதற்கு புகழ்பெற்ற, செந்தமிழ் நாடென்னும் போதினிலே என்ற கவிதையை போட்டிக்கு அனுப்பியிருந்தார். அதைப் படித்துப் பார்த்த நடுவர்கள், யார் இந்தக் கவிஞன். இப்படி எல்லாருக்கும் புரிவது போல எளிமையாக எழுதி இருக்கிறார். இதனால், கவிதையின் தரம் தாழ்ந்துவிட்டது, என்று அங்கலாய்த்துக் கொண்டார்கள். பதம் பிரித்து பிரித்தே பொருள் தெரிந்து கொள்ளும் விதத்தில் கவிதை கஷ்டமானதாக இருக்க வேண்டும் என்ற அபிப்ராயம் இருந்த காலகட்டம் அது. போனால் போகிறதென்று அந்தக் கவிதைக்கு மூன்றாம் பரிசைக் கொடுத்தார்கள். இதற்காக அவர் சோர்ந்து விட வில்லை. முதல் இருபரிசுகளைப் பெற்ற கவிதைகள் எதுவென்றே நமக்கு  தெரியாது. அந்த பரிசுகளை நிர்ணயம் செய்த நடுவர்களும் காலத்தோடு கலந்து காணாமல் போய்விட்டார்கள். ஆனால், செந்தமிழ் நாடென்னும் போதினிலே பாட்டும், அதை எழுதிய மீசைக்கவிஞன் பாரதியும் காலம் கடந்து இன்றும் வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் நம்பிக்கையில், உண்மையான உறுதி இருக்கிறதா என்று பார்ப்பதற்கு சோதனைகள் தேடி வரும். கொடிக்கம்பம் அல்லது தொலைபேசி கம்பத்தை தரையில் நாட்டுவது எப்படி தெரியுமா? குழியைத் தோண்டி அதில் நட்டு, அத்துடன் விட்டுவிட்டால் போதாது. அப்படி செய்தால், அது சாய்ந்து விடும். அதை வலுப்படுத்த சுற்றிலும் கற்களைப் போட்டு, சம்மட்டியால் தட்டி நன்கு கெட்டிக்க வேண்டும். அதன்பிறகு அது அசைந்தால், மேலும் இறுக்குவதற்குரிய வழியை செய்ய வேண்டும். ஒரு கம்பம் அசையாமல் நிற்பதற்கே சம்மட்டியால் இத்தனை அடிவாங்குகிறது! வாழ்க்கையும் அவ்வாறே! உங்கள் செயல்கள் நிறைவேறும் வகையில், நீங்கள் சிரமங்களைச் சந்தித்தே ஆக வேண்டும்!

உங்கள் நம்பிக்கையில், உண்மையான உறுதி இருக்கிறதா என்று பார்ப்பதற்கு சோதனைகள் தேடி வரும். கொடிக்கம்பம் அல்லது தொலைபேசி கம்பத்தை தரையில் நாட்டுவது எப்படி தெரியுமா? குழியைத் தோண்டி அதில் நட்டு, அத்துடன் விட்டுவிட்டால் போதாது. அப்படி செய்தால், அது சாய்ந்து விடும். அதை வலுப்படுத்த சுற்றிலும் கற்களைப் போட்டு, சம்மட்டியால் தட்டி நன்கு கெட்டிக்க வேண்டும். அதன்பிறகு அது அசைந்தால், மேலும் இறுக்குவதற்குரிய வழியை செய்ய வேண்டும். ஒரு கம்பம் அசையாமல் நிற்பதற்கே சம்மட்டியால் இத்தனை அடிவாங்குகிறது! வாழ்க்கையும் அவ்வாறே! உங்கள் செயல்கள் நிறைவேறும் வகையில், நீங்கள் சிரமங்களைச் சந்தித்தே ஆக வேண்டும்!

ஒரு செயலின் மூலம், ஆண்டவன் உங்களை நிமிர்த்த முயலுகின்றான். சம்மட்டி என்னும் சோதனைகளால் தட்டினால் ஒழிய, நீங்கள் உறுதியாகவும், நேராகவும் நிற்கமாட்டீர்கள். ஆகையால், அடியைத் தாங்க அஞ்ச வேண்டாம். உங்கள் மீது நீங்கள் முழுநம்பிக்கை வையுங்கள். அச்சத்துக்கு அருகில் கூட செல்ல வேண்டாம். எது நடக்க வேண்டுமோ, அது நடக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சரி, நடப்பது நடக்கட்டும். நான் தைரியமாக இருக்கிறேன். அதைக் கண்டு அஞ்சுவதால் என்ன பயன்? நடப்பது நடக்கட்டும், என நினையுங்கள். எனக்கு வேண்டியது இதுவே. என்ன நடந்தாலும் சரி, அதை அடையும் வரையில் ஓயமாட்டேன். இது எனக்கு மிக முக்கியம், என்ற மனத்திண்மை இருந்தால் தான், உங்களது செயல்கள் வெற்றி பெறும். செயல்பாடுகளில் கவனமாக இருங்கள். உலகம் உங்கள் கையில் என்பது உறுதி!

மாணவர்களே தேர்வில் உங்கள் மதிப்பெண் குறைந்தாலும் முதலிடம் போய்விட்டது என்றாலும் பதறவேண்டாம். வெறும் மதிப்பெண்கள் வாழ்க்கையை தீர்மானிக்காது. மனம் பதறும் போது, பெற்றோரின் முகத்தை நினைவில் கொண்டு வாருங்கள். அடுத்த முறை வெற்றி நிச்சயம் பெறலாம். என்றும் இறைவன் உங்களுக்கு துணை இருப்பார்.



Friday, May 25, 2012

மகாலட்சுமி வழிபாடு- தமிழ்

குபேர வாசல் (மகாலட்சுமி பூஜை)
அலைமீது வாசம் செய்யும் அலைமகள், ஓரிடத்தில் நிலையாக நில்லாமல் அலைபவள். அவள் நிலைத்து நின்றாலே செல்வம் நிலைக்கும். அப்படி நிலைத்திட்ட செல்வம் வேண்டுமானால், அகலகில்லேன் என்று அலர்மேல் மங்கையாக நேசம்மிக்க திருமாலின் திருமார்பில் வாசம் செய்யும் வடிவில் அவளை வணங்க வேண்டும் என்கிறது, திருமலைப் புராணம்.

திருமகளை, திருயாவும் தர வேண்டித் துதிக்கும் இப்பாடல்கள், குபேரனின் வாசற்கதவினைத் திறக்கச் செய்து, அங்குள்ள செல்வம், பக்தர்தம் இல்லம் வந்து சேரச் செய்திடும். குபேர வாசல் எனும் இந்தத் துதியினை. அலர்மேல் மங்கையை அகத்தினில் இருத்தி, அகல் விளக்கினை அவள் முன் ஏற்றிவைத்துச் சொல்லி வர, அவள் அருளால், செல்வம் செழிக்கும்,

சந்தோஷம் நிலைக்கும்.

1.பொன்மகள் கடைக்கண் பார்வை
புன்னகை புலர்ந்து கண்டால்
நன்மைகள் யாவும் தேடி
நயம்படக் கதவைத் தட்டும் !
மன்பதை போற்றும் செல்வம்
மழையெனப் பொழியும்; வாழ்த்தும்!
அன்னையே அலர்மேல் தேவி!
அடியேனைக் காண்பா ரம்மா!

2. தேவியே கமல வல்லி;
செந்திரு மாலின் கண்ணே!
நாவினால் நின்னை யன்றி
நயத்தகு நயத்தைக் காணேன்!
காவியம் காணாச் செய்யுள்
கற்பகத் திருவே! நின்றன்
ஓவியம் நெஞ்சில் வைத்தே
ஓதுவேன்; கடைக்கண் பாராய்!

3. நாரணன் தவத்தின் தேவி!
ஞாலத்துப் பெண்கள் போற்றும்
பூரணி! பூவில் வாழும்
புன்னகை அரசி! எல்லாக்
காரண காரி யங்கள்
கணக்கிடல் யாரே? இந்தத்
தாரணி தன்னில் வாழத்
தனயனைக் கடைக்கண் பாராய்!

4. தாமரை நினது பீடம்;
தரிசனம் திருமால் மார்பு;
ஏமமே இதழின் வாசம்
இளநகை புரிந்தால், அந்தச்
சேமமே எனக்குப் போதும்
தேவியே அருள்வா யம்மா!
சாமரம் வீசிப் போற்றிச்
சரிதத்தைப் பாடி வைப்பேன்

5. பூவினுள் சிறந்த பூவே
தாமரைப் புனிதப் பூவே!
காவினில் பூக்கும் பூக்கள்
கண்டிடில் நாணும் என்னே!
யாவினும் உயர்ந்த உன்னை
யாசிப்பேன் தூது செல்வாய்!
பாவினால் பாடும் என்னை
இலக்குமி பார்க்கச் சொல்வாய்!

6. மலர்களின் அரசி வண்ண
மாப்புகழ் கமலம்; அந்த
மலரினும் மென்மை கொண்ட
மங்கையர்க்கரசி ! நீயோ
மலர்புகழ் கமலம் மீது
மார்பினை நிமிர்த்தி நின்றாய்!
மலர்மணம் சற்றே வீசி
வருவயோ மனையைத் தேடி

7. சகலமும் உணர்ந்த நீயே
சஞ்சலம் போக்க வல்லாள்!
அகலமாய் விரிந்த பூமி
அளப்பவள் நீயே தாயே!
இகபரம் காணாத் தெய்வம்!
இமைத்திடில் செல்வத் தோட்டம்!
மகனைநீ கடைக்கண் பாராய்
மாதாவே அலர்மேல் போற்றி!

8. வண்ணமா மலரில் வீற்று
வையத்தை வாழ வைக்கும்
சொர்ணமாம் பொன்னின் தேவி,
சுகங்களின் மகிழ்ச்சி நீயே!
எண்ணமே நின்றன் தோற்றம்
ஏந்திநல் தவமே செய்தால்,
கண்ணினைத் திறப்பாய்; ஆங்கே
காட்சியோ குபேர வாசல்!

9. சீரடி பணிந்து கேட்பேன்;
தேவிநான் ஏழைப் பக்தன்;
ஓரடி எடுத்து வைத்தால்
ஈரடிச் சறுக்கல்; பூமி
நீரடிக் குறையின் வானம்
நிலைமையைச் சமனே செய்யும்!
யார் கொலோ என்னைக் காப்பார்?
அலர்மேலு மங்கைத் தாயே!

10. முகிலதன் நிறமே கொண்டு
மும்மூர்த்தி உருவாய்த் தோன்றி
அகிலமே தன்னுள் ளாக்கி
ஆண்டிடும் திருமால் தேவி!
மகிமைகள் அறிவேன்; நின்றன்
மாட்சிமை புரிவேன்; சற்றே
மகிழ்வுடன் என்னைப் பாராய்
மண்ணிலே செல்வன் ஆவேன்!

11. என்னதான் வழியோ சொல்வாய்
ஏழுமா மலையின் வல்லி !
முன்னம்நான் செய்த பாவம்
மூண்டதோ? அறிகி லேனே!
சின்னவன் குற்றம் ஏதும்
செய்திடில் பொறுப்பாய் தேவி!
அன்னையே அலர்மேல் தாயே
அடியேனை ஆசி செய்வாய்!

12. திருமலை கீழே நின்றன்
திருவாட்சி செல்வக் காவல்!
வருபவர் இனிய நெஞ்சம்
மாதாவே நின்றன் வாசம்!
அருமைகள் அறிந்தா ரைநீ
அணைத்திட மறந்ததில்லை!
மருவிலான் மலைவாழ் ஐயன்
மனைவியே ! அலர்மேல் தாயே!

13. கண்ணிலே நின்னை வைத்தேன்
கருத்திலே ஒளியைத் தந்தாய்!
பண்ணிலே நின்னைப் பாடப்
பாவினில் கவிதை செய்தேன்!
தண்ணிய நெஞ்ச மோடு
தாயேநீ தயவு செய்வாய் !
மண்ணிலே நீயே தெய்வம்
மறக்கிலேன் கடைக்கண் பாராய்!

14. வள்ளலாம் திருமால் நின்றன்
மாபெரும் அழகில் சொக்கிப்
பள்ளிவிட் டெழுந்து வந்து
பவித்திரம் கண்டான்; நின்னை
அள்ளியே அணைத்தான்; மார்பில்
ஆனந்தம் கொண்டான்; பின்னர்
தெள்ளிய மகிழ்வைக் காட்டத்
திருமலை சென்றான் என்னே!

15. சென்றவன் உச்சி ஏறிச்
செம்மைசேர் மலைகள் ஏழை
நின்றவன் சுற்றிப் பார்த்தான்;
நெஞ்சிலே அமைதி; அந்த
நன்றுரை ஏழு குன்றம்
ஞாலத்தில் யாங்கும் இல்லை !
நின்றவன் மேலும் நின்றான்
திருமலை நெடுமால் பீடம்!

16. பீடமோ அண்ணல் வாசம்!
பெருமைகள் குவிய வாழ்த்தி
ஆடகப் பொன்னே, தாயே!
அலர்மேலு அமர்ந்தாய் கீழே!
மாடமா ளிகைகள் எல்லாம்
மணாளனே சொந்தம் என்று
சாடையாய் மகிழ்ந்தாய்; இந்தச்
சகத்தினில் தலைவி நீயே!

17. நின்னிலும் கருணை மிக்கார்
நிலங்களில் யாரே உள்ளார்?
நன்னயத் தோடு வேண்டில்
நலம்பலத் தரவே செய்வாய்!
சென்னியைப் பாதம் வைத்துச்
செப்புவேன்; நானோர் ஏழை!
பொன்னையும் பொருளும் தந்து
பூரிக்கச் செய்வாய் தாயே!

18. ஐயனாம் வேங்கடத்தான்
அழகுறு பார்வை தன்னில்
மெய்தனை உருகச் செய்து
மேன்மையை மேலும் கொண்டாய்!
வையமே நீதான் என்று
வணங்கியே தவமாய் நின்றேன்;
உய்யவே வழியைக் காட்டி
ஓங்கிய செல்வம் தாராய்!

19. வண்டுகள் நாணும் கண்கள்!
வாயெல்லாம் பவளக் கூத்து!
பண்டுநின் அருமை கண்டு
தேவர்கள் பாதம் தொட்டார்!
எண்டிசை செலினும் மாதர்
ஏற்றியே போற்றி நிற்பார்!
கண்டுநான் கொண்டேன் தேவி
கவலைகள் இனிமேல் இல்லை!

20. கார்நிற வண்ண அண்ணல்
கருணையை முழுதாய்ப் பெற்ற
சீர்நிறை கமலச் செல்வி
சிறப்புடைக் கனக வல்லி!
ஏர்முனை முதலாய்க் கொண்ட
எல்லாமே நீதான்! இந்தப்
பார்தனில் நின்னை யன்றிப்
பார்த்திலேன் சரணம் தாயே!

21. கிளிகளோ வரிசை கட்டிக்
கீழ்வானத் தோரணம்போல்
வெளிகளில் பறந்து செல்லும்
வேடிக்கை என்ன சொல்வேன்!
ஒளிமய வேங்கடத்தின்
உன்னத அழகுக் கோலத்
தெளிவினைக் காட்டி நிற்கும்
தெய்வீகம் திருவின் சோதி !

22. தேவர்கள் நின்றன் பாதத்
திருமலர் தாங்கிப் பின்னர்
ஆவலாய்ப் பணிந்து காண்பர்;
அன்னையே மகியை என்னே!
நாவலர் பாடும் தாயே!
நாயகி திருமால் தேவி!
ஆவன செய்வாய்; இந்த
அடியேனின் துயரைத் தீர்ப்பாய்!

23. கருணைமா வள்ளல் அண்ணல்
காத்திடும் வேங்க டத்தில்
பெருமையாய் பக்தர் கூடிப்
பேரின்பம் அடைவார்! நீயோ
அருமையாய் பெருமாள் மார்பில்
ஆனந்தக் கோலம் பூண்டாய்!
மருவிலா அலர்மேல் மங்கை
மாதாவே கடைக்கண் பாராய் !

24. சுதர்சனன் தேவி நின்றன்
சுந்தரம் யாரே அறிவர்!
அதர்களாய் ஆடும் மக்கள்
அறியாமை என்ன சொல்வேன்!
புதர்தனில் புதையல் தேடிப்
புழங்குவோர் பல்லோர் உண்டு;
நிதர்சனம் நீயே என்று
நின்னைநான் சரணம் கண்டேன்!

25. மதுவெனும் அரக்கன் தன்னை
மாளவே செய்த மாலை
வதுவைநீ செய்து கொண்டாய்;
வையமே பெற்ற பேறாம்!
பதுமமேல் நின்றாய்; இந்தப்
பாரினைச் செழிக்கச் செய்தாய்!
இதுவரை ஏழை என்மேல்
ஏனம்மா இரக்கம் இல்லை?

26. கண்ணிலே நின்னை யன்றிக்
காண்பதோ ஏதும் இல்லை!
பண்ணிலே தோடி ராகம்
நீயன்றோ பக்தன் கண்டேன்;
எண்ணிலே அடங்காச் செல்வம்
எல்லாமே நினது வாசம்!
மண்ணிலே வாடும் என்னை
மாதாவே கடைக்கண் பாராய்!

27. அழகிய தோற்றம் முன்னே
அனைத்துமே சரணம் தாயே!
கிழமையில் வெள்ளி நின்றன்
கீர்த்தியைப்பேசும் நாளாம்!
பழமையும் புதுமை சேர்ந்து
பகுத்திடும் அறிவு யாவும்
சுழலுமிவ் வுலகை நோக்கிச்
சுந்தரக் கவிதை பாடும்!

28. அலைகடல் துயிலும் அண்ணல்!
ஆழ்மனத் தாம ரையில்
நிலையுடன் அமர்த்தி ருக்கும்
நிம்பையே! அலர்மேல் தாயே!
கலைபயில் கழகம் நீந்திக்
கவிதையைக் கற்றேன்; சொன்னேன்!
தலைமகள் நீயே என்று
தரிசித்தேன்; செல்வம் தாராய்!

29. பங்கயச் செல்வி பார்வை
பட்டிடில் நிறைகள் யாவும்!
அங்கயற் கண்ணி; மற்றும்
அருங்கலை வாணி அன்னாள்!
எங்குமே அவளின் ஆட்சி
இதனைநாம் அறிந்து கொண்டால்
தங்குமே செல்வம்; நன்மை
தரணியில் அடைவோம் காண்டி!

30. கார்முகில் வண்ணன் இல்லாள்
கமலத்தின் அரசி போற்றி!
சீர்மிகு ஈசன் தங்காய்
சிவந்தமா பாதம் போற்றி!
நீர்கடல் வாசம் தன்னில்
நிறைந்தநின் அமுதம் போற்றி!
பார்தனில் செல்வம் காக்கும்
பரந்தாமன் திருவே போற்றி!

31. திருமலை வேங்க டேசன்
திருவடி நெஞ்சில் கொண்ட
பெருமிகு அலர்மேல் தாயே,
பேரின்பம் பெற்று மார்பில்
உருவினைப் பதித்தாய்! உண்மை
உலகிற்கே எடுத்துச் சொன்னாய்!
திருமிகு செல்வச் சோதி!
திருவருள் கிடைக்கண் பாராய்!

32. விழிமலர் மலர்ந்து வாசம்
வீசிடப் பாராய் தாயே!
பழியிலாப் பக்தன்; நின்றேன்
பதமலர் பணிந்து நின்றேன்!
வழிகளை அறியா வண்ணம்
வாழ்கிறேன்; எளியேன்; நானோ
சுழிமுனை நின்னைக் கொண்டேன்;
சுகங்களைத் தருவாய் என்றும்!

33. அகிலமே நின்றன் பார்வை!
அனைத்துமே நின்றன் செல்வம்!
முகிலதன் வண்ண மாலன்
மூலமே நின்றன் கோலம்!
மகிழ்வுடன் அறிந்து மக்கள்
மகிமைகள் கண்டு கொண்டேன்
மாதாவே கடைக்கண் பாராய்!

34. வான்மலர் மீன்கள் எல்லாம்
வையத்துள் சொல்லும் செய்தி:
தேன்மலர் பூக்கள் கொண்டு
தினம்தினம் தியானம் செய்து
கோன்மலர்க் கமலத் தாயைக்
கோடித்தே இசைப்போ மானால்
ஊன்மலர் புனித மாகி

உலகத்துச் செல்வம் காண்போம்!
35. பிருகுவின் வமிசத் தேவி
பீடுடை அலர்மேல் தாயே!
குருமகன் சங்க ரர்தம்
குரலுக்குக் காட்சி தந்தோய்!
உருகிடும் கவிஞன் நானோ
நின்னையே உபாசிக் கின்றேன்!
திருமகள் நாமம் பெற்றோய்
திருவடி தொழுதேன் வாராய்!

36. அன்னையே திருச்சா னூரின்
அலங்காரத் திருவே போற்றி!
மன்னனாம் வேங்க டத்தான்
மனைவியே மார்பில் வீற்றோய்!
பொன்னையும் மணியும் கொண்டோய்!
பூலோகச் செல்வ மாரி!
என்னையும் சற்றே நோக்கி
எழிலார்ந்த பார்வை பாராய்!

37. தூய்மையின் துளசிப் பூவே!
தூதுநீ சென்று வாராய்!
ஆய்கையில் அருகில் வாழும்
அழகான தோழி நீயே!
வாய்மணம் கமழப் பாடும்
வார்த்தைகள் எடுத்துச் செல்வாய்!
தாய்மனம் கனியச் செய்வாய்!
தனயனைப் பார்க்கச் சொல்வாய்!

38. நீலமா விழிகள் என்றன்
நெஞ்சிலே பதிய வைத்தாய்!
கோலமா காட்சி என்னே!
குவலயம் வியக்கும் தோற்றம்!
காலமே நின்றன் ஆட்சி;
கனிந்தது புவனம்; ஏனை
சாலமா இயற்கை நீயே!
சரணமே அலர்மேல் தாயே!

39. திருமலை எம்பி ரானின்
திருத்தேவி பாதம் போற்றி!
அருமலை ஏழின் வண்ணம்
ஆராய்ந்தால் இவளே மூலம்!
பெருமலை இமயம் ஒத்த
பேரின்பம் இங்கே உண்டு!
தருமலை, செல்வம் வேண்டின்
தரிசித்தால் பெறுவோம் நாமே!

40. மண்டலம் பாடி வைத்தேன்
மாதாவே கடைக்கண் பாராய்!
குண்டலம் அணிந்த கோலம்
குவலயம் ஒளிரும் காட்சி!
எண்டிசை வணங்கும் மக்கள்
எல்லார்க்கும் நீயே செல்வம்!
தொண்டினைச் செய்து வாழ்வேன்;
தொடரட்டும் குபேர வாசல்!

41. வணங்குவோம் அலர்மேல் பாதம்!
வாழ்த்துவோம் நல்லோர் நெஞ்சை!
வணங்குவோம் கதிர்நி லாவை!
வாழ்த்துவோம் பஞ்ச பூதம்!
வணங்குவோம் ஒன்பான் கோளை!
வாழ்த்துவோம் எட்டுத் திக்கை!
வணங்குவோம் உலகை; மேலும்
வாழ்த்துவோம் திருவை யாவும் !

(மங்களம் நிறைக)

ஸ்ரீ தேவி ஸ்தோத்திரம்

கமலநாபன் மார்பில் வாசம் செய்யும் கமலமகளை வேண்டினால், கவலை யாவும் தீரும்படி கனக (கருணை) மழை பெய்விப்பாள் என்பது ஆன்றோர் வாக்கு. செந்தாமரையாளின் அருளாள் செல்வம் யாவும் பெற வகை செய்யும் துதிகள் பல உண்டு. அவற்றுள் ஓர் உயர்வான துதி தேவி ஸ்தோத்திரம் எனும் இந்தத் தமிழ்த் துதி. செல்வமகள் கருணையினால் செல்வம் சேர்ந்து வாழ்வில் செழிப்பு ஓங்கிட, கஞ்சமலர்த் தாயவளை நெஞ்சில் வைத்து, இத்துதியைச் சொல்லுங்கள் நிச்சயம் அருள்வாள். நிமலையாம் ஸ்ரீதேவி

தாமரை திகழும் திருக்கரமும்
தளிர்நகை பொழியும் ஒளிமுகமும்
÷க்ஷமம் அளிக்கும் நல்லருளும்
சேவிப் பார்க்கு நிறைவரமும்
மூவர் போற்றும் பெருமையுடன்
முன்னே சங்க பதும நிதி
காவல் செய்ய, காட்சிதரும்
கமல மாதே! வணங்கு கிறேன்!
தாமரை வடிவாய்த் திருக்கண்கள்!
தாமரை மென்மை தளிர்க்கைகள்!
தூய மங்கல வெண்மை உடை!
துலங்கு சந்தனம்! மணிமாலை!
ஞானம், சத்தி, பலம் செல்வம்
நயத்தகு வீரம், பொலி வென்னும்
ஆறும் பெற்று மூவுலகும்
ஆட்சி புரிபவளே! அருள்க!
இயற்கை, செயற்கை இயற்றுவிப்பாய்!
எல்லா உயிர்க்கும் நலஞ் செய்வாய்!
அனைத்துக் கலைக்கும் அடிப்படையாய்!
அரிய செல்வத் திருப்பிடமாய்
நினைத்த தளிக்கும் சுரபியென
நிலவும் மேலாம் வடிவம் நீ!
விளங்கும் தெய்வ இலக்குமியே!
விஷ்ணுவின் இதய இலச்சினையே!
செந்தாமரைதான் உன் வீடு!
திகழும் தூய்மை உன் ஏடு!
அமுதம் தோற்க இனிப்பவள் நீ!
அனைத்திலும் அணுவாய் அமைந்தவள் நீ!
அக்கினி பத்தினி ஸ்வாஹா நீ!
அரிய ஸ்வதாவும் ஆனவள் நீ!
எங்கும் எதிலும் எந்நாளும்
இலங்கிச் சிறப்பவளே சரணம்!
அரிய வடிவும் நற் குணமும்
அற்புதப் புகழும் பெற்றவளே!
அசுர மாதா துதியைத்தன்
அதிகா ரத்தில் கொண்டவளே!
அமுதப் பாற்கடல் ஈன்றவளே!
அறிவே உருவம் ஆனவள் நீ!
அருளைப் பொழியும் வானவள் நீ!
சிறிதும் குற்றம் அற்றவள் நீ!
ஸ்ரீநா ராயணர் சிந்தை நீ!
உலகின் துயர இருள் நீக்கும்
ஒளியே! பகவான் உட்கொள்ளும்
அமுதே! உன்றன் கடைக்கண்ணால்
அடியேன் இடுக்கண் போக்கிடுக!
தருமம் அனைத்தும் ஒன்றான
தாயே! உன்னைப் போற்றுகிறேன்!
இருப்பிடம் உனக்குப் பங்கயம்தான்!
இருப்பதும் கையில் கமலம்தான்!
இருவிழி அதுவும் தாமரைதான்!
இலங்கும் அழகும் அம்மலர்தான்!
கருணை வடிவே! காசினியைக்
காக்கும் தாயே! வணங்குகிறேன்!
மலரில் தோன்றிய மலர்முகமே!
மகிழ்வாய் முகுந்தன் அரவணைக்கும்
அலைமகளே! இவ் வகிலத்தில்
ஆனந்தத்தின் அடிப்படை நீ!
பூவிற் சிறந்த கமலத்தில்
பொலியும் மாலை அணிந்தபடி
பூவையர் விரும்பக் காட்சிதரும்
தேவதையே! உனைத் துதிகின்றேன்!
வந்திப் பவர்க்கு வாழ்வளிக்கும்
வாசம் நிறைந்த வரலக்ஷ்மி!
சந்திப்பவர்க்கு மகிழ்வுதர
தருணம் பார்த்தே இருப்பவளே
சந்திர னோடு நீ பிறந்தாய்!
சந்திர வதனம் நீ பெற்றாய்!
செங்கதி ரோடு ஒளி போன்றே
திருமா லோடு திகழ்பவள் நீ!
புயங்கள் நான்கு கொண்டவளே!
புதிய நிலவின் வடிவினளே!
பயன்படு செல்வம் தருபவளே!
பக்தர்க் கருளைப் பொழிபவளே!
நயந்த அன்பர் வாழ்வினிலே!
நல் இன்பத்தைத் தருபவளே!
வியக்கும் மங்கள வடிவம் நீ!
வித்தகியே! உனைப் பணிகின்றேன்!
தூயவளே! நீ உலகன்னை!
துலங்க சக்தியின் முதற் பண்ணை!
மாயச் செய் என் வறுமையினை!
மலர்ப் பொய்கையிலே வாழ்பவளே!
ஆய்ந்த வெண்மணி ஆடையுடன்
அமைதி துலங்க விளங்குகிறாய்!
தோய்ந்த அன்பில் துதிப்போர்க்குச்
சுடரும் பொன்முடி சூட்டுகிறாய்!
விளங்கும் வெளிச்ச உருவோடு
வில்வக் காட்டில் விளையாடி
இலங்கும் திருமால் மார்பினிலே
இடமும் பெற்ற இலக்குமியே!
நலமார் செல்வக் களஞ்சியமே!
நல்ல வாழ்வின் இலக்கியமே!
நலமார் செல்வக் களஞ்சியமே!
நல்ல வாழ்வின் இலக்கியமே!
கலங்கும் பாவ வினை போக்கி
கனக மழையைப் பெய்விப்பாய்!
அன்னை வடிவே! உன்னாலே
அரிய தனமும் தானியமும்
நன்மை பலவும் வருவனவே!
நங்கையர்க்குள்ளே சிறந்தவளே!
பொன்னின் அரண்மனைப் பொலிவினிலே
புண்ணிய வடிவாய் நிறைந்தவளே!
தன்னை பூஜை செய்வோர்க்கு
சகல வரம்தரும் சந்நிதி நீ!
திருப்பாற் கடலில் உதித்தவளே!
திருமால் மார்பிடை பதித்தவளே!
விருப்போ டணுகும் பக்தர்க்கே
வெற்றியை வாழ்வில் தருபவளே!
செறித்த கனகச் சூழலுடன்
சுடரும் மகிழ்ச்சி மண்டபத்தில்
பொருத்த முடனே பொலிகின்ற
பூவே! உன்னைப் போற்றுகிறேன்!
தேசம் போற்றும் உத்தமியே
ஸ்ரீமகா விஷ்ணுவின் பத்தினியே!
பூசை மலராய்ப் பொலிகண்கள்!
பொன்னைப் பொழியும் திருக்கைகள்!
மோசம் செய்யும் வறுமையினை
முற்றும் அழிக்கும் அருட்பார்வை!
ஆசை யாவும் நிறைவேற்றும்
அன்னை உன்னைப் புவிபோற்றும்!
நவ துர்க்கைக்கும் மலரென நீ
நாயகியே நீ விளங்குகிறாய்!
சிவன் அயன் திருமால் மூவருமே
சேர்ந்த சங்கம வடிவம் நீ!
அவரவர் தொழிற்கும் நீ மூலம்!
அன்னை நீயே முக்காலம்!
அவனி சுழன்றிடக் காரணமே!
அனைத்தும் நிறைந்த பூரணமே!
தேவ மாதர் பணி செய்ய
திகழும் தலைவி! வையத்தின்
மேவும் சுடர் நீ! மேன்மை நீ!
மேலாம் பாற்கடல் உதித்தவள் நீ!
மூவர் போற்றும் முதல்வி நீ!
ஆவ தனைத்தும் உன்னாலே!
ஆசி அளிப்பாய் கண்ணாலே! நாரா
யணரின் நெஞ்சமெனும்
நற்றா மரப்பூ நடுவினிலே
சீராய் அமர்ந்த ஸ்ரீமகளே!
திசைகள் எட்டும் உன் புகழே!
ஆரா திப்பர் இல்லத்தை
அரண்மனை ஆக்கும் பெற்றியளே!
பூரணக் கருணை பொழிந்திடுவாய்!
பொன்மகளே! உன் அடி சரணம்!

பாவங்களில் எவற்றிற்கு மன்னிப்பு என்பதே கிடையாது தெரியுமா?

இவ்வுலகில் மனிதராக பிறந்தோரில் பாவம் செய்யாதோர் மிகவும் குறைவு. அறியாமல் செய்த சில பாவங்களுக்கு இறைவனிடம் மன்னிப்பு கிடைத்தாலும் குறிப்பிட்ட சில பாவங்களுக்கு மட்டும் மன்னிப்பு என்பதே கிடையாது. அவற்றிற்கு கண்டிப்பாக தண்டனைகள் கிடைத்தே தீரும். பெண்ணின் கருவில் உள்ள ஏதுமறியாத சிசுவை அழித்தல், பெற்றோர்களுக்கு தவறு இழைத்தல், செய்நன்றி மறந்து தீமை செய்தல்,
பசுவைக்கொல்லுதல், கள் (மது) குடித்தல் ஆகிய பஞ்சமகா பாவங்களுக்கு மட்டும் மன்னிப்பு என்பதே இல்லை என புராணங்கள் குறிப்பிடுகின்றன.

Wednesday, May 23, 2012

திருமணத்தில் தடையா..! இந்த காதல் கடிதம் படியுங்க.. உங்கள் கல்யாண தேதி குறியுங்க!

காதலில் வெற்றி பெற, திருமணத்தில் தடையுள்ளவர்கள், இந்த கடிதத்தைப் படித்தால் சிறந்த வாழ்க்கைத்துணை அமையும் என்பது நம்பிக்கை. விதர்ப்பதேசத்தின் ராஜா பீஷ்மகரின் மகள் ருக்மிணி. இவள் கிருஷ்ணரைக் காதலித்தாள். ஆனால், ருக்மிணியின் அண்ணன் ருக்மியோ அவளை சேதி நாட்டு இளவரசன் சிசுபாலன் என்பவனுக்கு திருமணம் செய்ய நிச்சயித்தான். இதை விரும்பாத ருக்மணி, கிருஷ்ணரைத் திருமணம் செய்யும் விருப்பத்தை ஏழு ஸ்லோகங்களாக எழுதி அனுப்பினாள். அவை..
கண்ணபிரானே! தங்களுடைய தகுதியான குணங்களையும், உன்னதமான அழகையும் பற்றி கேள்விப்பட்டு என் மனம் உங்கள் வசம் முழுவதுமாக வந்துவிட்டது.

தங்கள் ஒழுக்கம், குணம், வடிவம், கல்வி, இளமை,தைரியம், தர்மசிந்தனை ஆகியவை யாவும் என்னிடமும் இருப்பதாக நினைக்கிறேன்.
என் ஆத்மாவை, சிங்கம் போன்ற வீரமிக்க உங்களுக்கு என்னை அர்ப்பணித்து விட்டேன்.

உங்களைக் கணவராக அடைவதற்கு, பல ஜென்மங்களாக விரதங்கள், ஹோமங்கள் உள்ளிட்ட சடங்குகளை சரியான முறையில் நிறைவேற்றியிருப்பதாகக் கருதுகிறேன். என்னைத் தாங்களே கைபிடிக்க வேண்டும்.

எனக்கு விருப்பமில்லாத திருமணம் நடப்பதற்கு முதல்நாளே இங்கு வந்து, எதிரிகளைத் தோற்கடித்து, துவாரகைக்கு தூக்கிச் சென்று, விதிகளின்படி திருமணம் செய்ய வேண்டுகிறேன்.

எங்கள் குலவழக்கப்படி, திருமணத்திற்கு முன்தினம் அம்பிகை கோயிலுக்குச் செல்வேன். பூஜை முடிந்து வெளியே வந்ததும் என்னைக் கடத்திச் செல்லலாம்.

யோகிகளாலும் மகான்களாலும் பூஜிக்கப்படும் தங்கள் திருவடிகளை, தினமும் பூஜிக்கும் பாக்கியம் வேண்டும்.

மந்திரங்களின் வலிமையை அறிந்து கொள்ளும் வழி முறை!

இது கடையில் வாங்கும் மருந்தல்ல! சாப்பிட்டுப் பார்த்து வலிமையை அறிந்து கொள்ள! அல்லது அறிந்து கொண்டு பிரார்த்தனையைத் துவங்க! குருநாதரிடத்தில் அவர் கூறும் மந்திரத்தை உபதேசமாகப் பெற்று, அவரவர் நலனுக்காக நம்பிக்கையுடன் ஜபம் செய்தால் பலன் கிடைக்கும். இது விஷயத்தில் ஆராய்ச்சி வேண்டாம்.

Tuesday, May 22, 2012

தர்ப்பணம் செய்து முடித்தபின் குளித்துவிட்டுத் தான் கடவுள் பூஜை செய்ய வேண்டுமா?

கிடையாது. தர்ப்பணம் முடிந்தபின் கைகால்களைக் கழுவி விட்டு திருநீறு அல்லது திருமண் திலகமிட்டு பூஜை செய்யலாம். குளிக்கக்கூடாது.

நெய், எண்ணெய் இரண்டில் எது விளக்கேற்ற சிறந்தது?

நெய் மிக உயர்ந்தது. ஆனால், எல்லோராலும் இயலாது. நெய் என்ற பெயரில் கடைகளில் கிடைப்பதைக் கொண்டு தீபம் ஏற்றுவது தவறு. எல்லோராலும் இயன்றதும், எல்லா நன்மைகளும் அளிக்கவல்ல நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது சாலச்சிறந்தது.

Saturday, May 19, 2012

வயிறு எரிந்து தரும் சாபம் பலிக்குமா?

அல்லல் பட்டு ஆற்றாது
அழுத கண்ணீரன்றே
செல்வத்தை தேய்க்கும் படை
என்கிறார் தெய்வப்புலவர்.
அதனால், சாபத்திற்கு வலிமை உண்டு என்பதை மறுக்க முடியாது. யாருடைய சாபத்தையும் பெறும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. நல்லது செய்ய முடியாவிட்டாலும், பிறருக்கு கெடுதல் செய்ய மனதால் நினைப்பதும் தவறு தான்.

வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் ஹோமம் நடத்துவது சரியா?

குடியிருக்கும் வரை அது  உங்கள் வீடு தான். வாடகை வீட்டில் குடியிருக்கிறோம் என்று மற்ற விஷயங்களை ஒதுக்கி விடுவதில்லையே. ஹோமம் நடத்துவது சிறப்பானதே.

தெய்வங்களுக்கு அதிக தலை, கைகளை கொடுத்து வழிபடுவதன் தாத்பர்யம் என்ன?

மனிதசக்திக்கும், தெய்வ சக்திக்கும் வேறுபாடு உண்டு. ஒரே நேரத்தில் தெய்வத்தால் பல செயல்களைச் செய்ய  முடியும். கோடிக்கணக்கானவர்களுடன் ஒரே சமயத்தில் பேச முடியும். எந்த தீய  சக்தியையும் அழிக்கும் ஆற்றலை உணர்த்தும் வகையில் கைகளில் ஆயுதங்களையும் கொண்டிருக்கும். இதை நாம் உணர்வதற்காக பல கைகளும், தலைகளும் தெய்வ வடிவங்களில் சித்தரிக்கப்படுகின்றன.

Thursday, May 17, 2012

அபிராமி அந்தாதி

ஞானமும் நல்வித்தையும் பெற,பிரிந்தவர் ஒன்று சேர,குடும்பக் கவலையிலிருந்து விடுபட,உயர் பதவிகளை அடைய,மனக்கவலை தீர,மந்திர சித்தி பெற,மலையென வரும் துன்பம் பனியென நீங்க,பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட,அனைத்தும் வசமாக,மோட்ச சாதனம் பெற
  

கணபதி காப்பு

தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.

பொருள்: கொன்றைப்பூ மாலை அணியும் தில்லை வாழ் கூத்தபிரானுக்கும் சண்பகப்பூ மாலையணிந்து அவரின் இடப்பாகத்தில் அமைந்த உமையவளுக்கும் தோன்றிய மைந்தனே! கருநிறம் பொருந்திய கணபதியே! ஏழு உலகங்களையும் பெற்ற சிறப்புமிக்க அன்னையின் பேரில் நான் தொடுக்கும் அபிராமி அந்தாதி என் நெஞ்சில் நிலைத்திருக்க அருளுவாயாக!

1. ஞானமும் நல்வித்தையும் பெற

உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே.

பொருள்: உதிக்கின்ற செங்கதிரோனும் நெற்றியின் மையத்திலிடுகின்ற சிந்தூரத் திலகமும், ஞானம் கைவரப் பெற்றவர்களே மதிக்கின்ற மாணிக்கமும், மாதுளை மலரும், தாமரை மலரில் தோன்றிய இலக்குமி துதி செய்கின்ற மின்னற் கொடியும், மென்மணம் வீசும் குங்குமக் குழம்பும் ஆகிய அனைத்தையும் போன்றதென்று நூல்கள் யாவும் பாராட்டிக் கூறும் திருமேனியைக் கொண்ட அபிராமி அன்னையே எனக்கு மேலான துணையாவாள்.

2. பிரிந்தவர் ஒன்று சேர

துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின்
பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங்
கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.

பொருள்: எங்களுக்கு உயிர்த்துணையும் நாங்கள் தொழுகின்ற தெய்வமும் எம்மையெல்லாம் ஈன்றெடுத்த அன்னையும், வேதமென்னும் விருட்சத்தின் கிளையும், அதன் முடிவிலுள்ள கொழுந்தும், கீழே பரவிப் பதிந்துள்ள அதன் வேரும் குளிர்ச்சி பொருந்தியவையான மலரம்புகள், கரும்பு வில், மென்மைமிகு பாசாங்குசம் ஆகியவற்றைத் திருக்கரத்தில் ஏந்தி நிற்கும் திரிபுரசுந்தரியே என்னும் உண்மையை நாங்கள் உணர்ந்து கொண்டோம்.

3. குடும்பக் கவலையிலிருந்து விடுபட

அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்
பிறந்தேன் நின்அன்பர் பெருமைஎண்ணாதகரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.

பொருள்: அருட்செல்வம் மிக்க திருவே! வேறெவரும் அறிய முடியாத ரகசியத்தை நான் அறிந்து, அதன் காரணமாக உன் திருவடிகளை அடைந்தேன். உன் அடியவர்களின் பெருமையை உணரத்தவறிய நெஞ்சத்தின் காரணமாக நரகலோகத்தின் தொடர்பு கொண்ட மனிதரைக் கண்டு அஞ்சி விலகிக் கொண்டேன். இனி நீயே எனக்குத் துணை.

4. உயர் பதவிகளை அடைய

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.

பொருள்: மனிதர்களும் தேவர்களும் பெருமைமிக்க முனிவர்களும் வந்து தலை தாழ்த்தி நின்று வணங்கிப் போற்றும் செம்மையாகிய திருவடிகளையும் மெல்லியல்பும் கொண்ட கோமளவல்லி அன்னையே! கொன்றைக் கண்ணியை அணிந்த சடா மகுடத்தின் மேல் பனியை உண்டாக்கும் சந்திரனையும், கங்கையையும் மற்றும் பாம்பையும் கொண்ட தூயோனாம் சிவபிரானும் நீயும் என் சிந்தையை விட்டு எந்நாளும் நீங்காமல் பொருந்தியிருப்பீர்களாக!

5. மனக்கவலை தீர

பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.

பொருள்: அடியவர்களாகிய எங்களுக்குத் திருவருள் புரியும் திரிபுரையும் தனங்களின் பாரம் தாங்காது வருந்தும் வஞ்சிக் கொடியைப் போன்ற மெல்லிடையைக் கொண்ட மனோன்மணியும், நீள்சடை கொண்ட சிவபிரான் உண்ட நஞ்சைக் கழுத்தளவில் நிறுத்தி அமுதமாக்கிய அம்பிகையும், அழகிய தாமரை மலரின்மேல் அமர்ந்தருளும் சுந்தரியும், அந்தரியும் ஆன அபிராமி அன்னையின் பொன்னடி என் தலையின் மீது பொருந்தியுள்ளது. அதை நான் வணங்குகிறேன்.

6. மந்திர சித்தி பெற

சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே.

பொருள்: சிந்தூரத்தின் செந்நிறத்தையொத்த திருமேனியைக் கொண்ட அபிராமி அன்னையே! பொலிவுமிக்க பொன்னான உன் திருவடிகள் என்னும் அழகிய தாமரை மலர்கள் என் சிரசின் மேல் இருக்க, என் நெஞ்சினுள்ளே உன் அழகிய திருமந்திரச் சொல் நிலை பெற்றுள்ளது. உன்னையே வணங்கி நிற்கும் உன் அடியவர்களுடன் சேர்ந்து மீண்டும் மீண்டும் நான் பாராயணம் செய்து வருவது, உன் பெருமைகளைக் கூறும் மேலான நூல்களையேயாகும்.

7. மலையென வரும் துன்பம் பனியென நீங்க

ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.

பொருள்: தாமரை மலரில் உறைகின்ற பிரமதேவனும், பிறைச்சந்திரனைச் சிரசில் தரித்த உன் பாதியாகிய சிவபிரானும், பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலும், வணங்கி எந்நாளும் துதித்து மகிழும் செம்மைமிக்க திருவடிகளையும் செந்தூரத் திலகமணிந்த திருமுகத்தையும் கொண்ட பேரழகுமிக்க அன்னையே! தயிர் கடையும் மத்தைப் போல, பிறவிக் கடலாம் சுழலில் சிக்கி அலையாமல், ஒப்பற்ற பேரின் நிலைலை நான் அடையும்படி திருவுள்ளம் கொண்டருள்வாயாக!

8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட
சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன்
சுந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.

பொருள்: என் தந்தையாம் ஈசனின் துணைவியான தேவியே! பேரழகு மிக்க அன்னையே! பாசமாம் தளைகளையெல்லாம் ஓடிவந்து அழிக்கும் சிந்தூர நிறம் கொண்டவள், மகிடன் என்னும் அசுரனின் சிரத்தின் மேல் நிற்கும் அந்தரி நீல நிறங்கொண்டவள், என்றும் அழிவில்லாத இளங்கன்னி, பிரமதேவனின் கபாலத்தைத் தாங்கும் திருக்கரத்தைக் கொண்டவள் ஆகிய அபிராமி அன்னையே! தாமரை மலரைப் போன்ற உன் அழகிய திருவடிகள் என் உள்ளத்தில் என்றென்றும் பொருந்தி நிற்கின்றன.

9. அனைத்தும் வசமாக

கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்
பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்
முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்துஎன்முன் நிற்கவே.

பொருள்: அன்னையே! என் தந்தையாம் சிவபிரானின் சிந்தையில் நீங்காது நிற்பனவும், திருவிழிகளில் காட்சி தருவனவும், அழகிய பொன் மலையாம் மேருவைப் போன்று பருத்தனவும், அழுத பிள்ளையான ஞானசம்பந்தப் பெருமானுக்குப் பாலூட்டியதுமான திருத்தனங்களும், அவற்றின்மேல் புரளும் முத்துமாலையும், சிவந்த திருக்கரத்திலுள்ள கரும்பு வில், மலர் அம்புகள் ஆகியனவும், மயிலிறகின் அடிப்பாகம் போன்ற அழகிய புன்னகையும் காட்டி, உன் முழுமையான திருக்கோலக் காட்சியை எனக்குக் காட்டியருள்க.

10. மோட்ச சாதனம் பெற

நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!

பொருள்: எழுதாமல் கேட்கப்படுவது மட்டுமான வேதத்தில் பொருந்தக் கூடிய அரும் பொருளாயும், சிவபிரானின் திருவருள் வடிவமாயும் விளங்கும் உமையன்னையே! நான் நின்றவாறும், இருந்தவாறும் படுத்தவாறும், நடந்தவாறும், தியானம் செய்வதும் உன்னைத்தான்; என்றென்றும் மறவாமல் வழிபடுவதும் உன்னுடைய திருவடித் தாமரையையேதான்.



Wednesday, May 16, 2012

வீட்டில் பூஜை செய்யும் போது தெரிந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள்!

நாம் வீட்டில் பூஜைகள் செய்யும் பொழுது பூஜா விதானம் அல்லது எந்த பூஜை செய்கிறோமோ அதற்குண்டான புத்தகத்தை வைத்துக் கொண்டு பூஜை சிறப்பாக செய்து விடுவோம். அன்றைய கிழமை, திதி, நட்சத்திரம் ஆகியவற்றை தினசரி காலண்டரை வைத்துக் கொண்டு சொல்லி விடுவோம். ஆனால், ருது என்ன வென்று சரியாகத் தெரிந்து இருக்காது. பூஜை முடிந்ததும் பழங்கள், பக்ஷணங்கள் எல்லாம் இருக்கும். அவற்றின் நிவேதனப் பெயர்கள் தெரிந்து இருக்காது. இந்த நிவேதனப் பெயர்களை தெரிந்து கொண்டு பூஜை செய்தால் இன்னும் சுலபமாக இருக்கும்.

1. கதலீபலம் - வாழைப்பழம்
2. பீஜாபூரபலம் - கொய்யாப்பழம்
3. வேத்ர பலம் - பெரப்பம் பழம்
4. பதரி பலம் - எலந்தைப் பழம்
5. கர்ஜுர பலம் - பேரிச்சம் பழம்
6. ஜம்பூ பலம் - நாவல் பழம்
7. கபித்த பலம் - விளாம் பழம்
8. த்ராஷா பலம் - திராøக்ஷ பழம்
9. சூ பழம் - மாம்பழம்
10. மாதுஸங்கபழம் - மாதுளம் பழம்
11. நாரங்கபலம் - நார்த்தம்பழம் அல்லது சாத்துக்குடி
12. பனஸ பலம் - பலாப் பழம்
13. உர்வாருகம் - வெள்ளரிக்காய்
14. ஜம்பீர பலம் - எலுமிச்சம் பழம்
15. இக்ஷúகண்டம் - கரும்பு
16. சணகம் - கடலை
17. ப்ருதுகம் - அவல்
18. ஸர்க்கரா - சர்க்கரை
19. ததி - தயிர்
20. குடோபஹாரம் - வெல்லம்
21. ஆப்பிள் - காஷ்மீர பலம்
22. அமிருதம் - தீர்த்தம்
23. நாரிகேளம் - தேங்காய்
24. ஸால்யன்னம் - சம்பா அன்னம்
25. குளா பூபம் - அதிரசம், அப்பம்
26. தத்யன்னம் - தயிர் சாதம்
27. திந்திரியன்னம் - புளியோதரை
28. ஸர்கரான்னம் - சர்க்கரை பொங்கல்
29. மாஷா பூபம் - வடை
30. ரஸகண்டம் - கற்கண்டு
31. மோதகம் - கொழுக்கட்டை
32. திலான்னம் - எள்ளு சாதம்
33. ஆஜ்யோபகாரம் - நெய்
34. லட்டூகம் - லட்டு
35. சித்ரான்னம் - பலவகை கலந்த சாதம்
36. நாரிகேளகண்டத்வயம் - இரண்டாக உடைத்த தேங்காய்
37. க்ருதகுள பாயஸம் - வெல்லம் போட்ட பாயஸம்
38. கோக்ஷீரம் - பசும் பால்

ருதுக்கள்

சித்திரை, வைகாசி - வஸந்த ருது
ஆனி, ஆடி - க்ரீஷ்ம ருது
ஆவணி, புரட்டாசி - வர்ஷ ருது
ஐப்பசி, கார்த்திகை - சரத் ருது
மார்கழி, தை - ஹேமந்த ருது
மாசி, பங்குனி - சிசிர ருது

கிழமைகளைச் சொல்லும் முறை

ஞாயிறு - பானு வாஸர
திங்கள் - இந்து வாஸர
செவ்வாய் - பவும வாஸர
புதன் - சவும்ய வாஸர
வியாழன் - குரு வாஸர
வெள்ளி - ப்ருகு வாஸர
சனி - ஸ்திர வாஸர

பூஜைகள் செய்யும் பொழுது, மாதங்களைச் சொல்ல வேண்டிய முறை

சித்திரை - மேஷ மாஸே
வைகாசி - ரிஷப மாஸே
ஆனி - மிதுன மாஸே
ஆடி - கடக மாஸே
ஆவணி - ஸிம்ம மாஸே
புரட்டாசி - கன்யா மாஸே
ஐப்பசி - துலா மாஸே
கார்த்திகை - வ்ருச்சிக மாஸே
மார்கழி - தனுர் மாஸே
தை - மகர மாஸே
மாசி - கும்ப மாஸே
பங்குனி - மீன மாஸே.


உலகம் எப்போது அழியும்: புராணங்கள் கூறுவது என்ன?

இன்று விஞ்ஞானத்தில் ஒரு எர்த் வருடம் என்று சொல்வதை, அன்று புராணங்களில் தேவர்களின் ஒரு நாள் என்று சொன்னார்கள். தேவர்களின் 12 நாட்கள் - ஒரு கல்பம்; நான்கு கல்பங்கள் ஒரு யுகம்; நாலு யுகங்கள் - ஒரு சதுர் யுகம்; பல சதுர் யுகங்கள் - பிரம்மனின் ஒரு நாள் - பிரம்மனின் ஒரு பகலும் ஒரு இரவும் 34,560 மில்லியன் எர்த் வருடத்துக்கு சமானமாகக் கணக்கு வருகிறது. ஆக, இன்றைக்கு எர்த் வருடம் என்று மில்லியனில் போடும் வானசாஸ்திரக் கணக்குகள் நம் புராணங்களில் சர்வ சாதாரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த 34,560 மில்லியன் எர்த் வருடங்களுக்கு ஒருமுறை பிரளயம் ஏற்பட்டு உலகமழிந்து மறுபடியும் உயிர்கள் தோன்றும் என்கின்றன புராணங்கள். அந்த ஒளியும் ஒலியும் தான் சிவன் என்று சொன்னார்கள். சிவனைச் சக்தியின் பிறப்பிடமாகவும் இருப்பிடமாகவும் காட்டியவர்கள், சிவனின் பிறையில் சந்திரனை வைத்தார்கள். சந்திரன் = அறிவு. சக்தியைக் சரியாகப் புரிந்துகொண்டு பயன்படுத்த அறிவு அவசியம் என்பதின் அடையாளமே சந்திரன். சிவனின் கழுத்தைச் சுற்றி நிற்கும் பாம்பு, காலத்தைக் குறிப்பது. சக்தியை அறிவால் உணர்ந்துகொண்டு செயல்பட்டாலும், மானுட வாழ்க்கை காலத்துக்குக் கட்டுப்பட்டது என்பதைக் குறிக்க வே இந்த அடையாளம். சிவனின் இருப்பிடம் இமாலயம் என்று சொல்கிறோம். இமனின் ஆலயம் இமாலயம். இமன் = சிவன், தேவைப்படும்போது அழிக்கவல்லவன் என்று பொருள். இந்த இடத்தில் அழிவு என்பது, மாற்றத்தைக் குறிக்கிறது. எந்த விஷயத்திலும் மாற்றம் வர வேண்டுமானால், இப்போது இருப்பதை அழித்தால் அல்லது அது அழிந்தால் தான் மாறுதல் (புதியன உருவாதல்) ஏற்படும். எனவே, சிவனை அழிவுக்கான கடவுள் என்பதைவிட மாற்றத்துக்கான கடவுள் என்பதே பொருந்தும்.

Tuesday, May 15, 2012

இயந்திர உலகில் இறைவனை வழிபட எளிய வழி என்ன?

இது இயந்திர உலகம். எங்கும் அவசரம். எதிலும் அவசரம். இந்த உலகில் கடவுளை வணங்க நேரம் இல்லை. ஆனால் அவரின் திருவருள் மட்டும் வேண்டும் என்று கேட்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். சாப்பிடுவதற்கு நேரம் ஒதுக்காமல் இருக்கிறோமா? உறங்குவதற்கு நேரம் ஒதுக்காமல் இருக்கிறோமா? குளிக்க நேரம் ஒதுக்காமல் இருக்கிறோமா? இதெற்கெல்லாம் நேரம் ஒதுக்கும் நாம்  நம்முள் இருக்கும், நம்மை வழிநடத்தி செல்லும் இறைவனை வணங்குவதற்கு நேரம் இல்லை என்கிறோம். சரி. இறைவன் மாபெரும் சக்தி. அவரை நேரம் ஒதுக்கித்தான் வழிபட வேண்டும் என அவர் நினைப்பதில்லை. அவர் நம்முள் இருக்கிறார். அவர்தான் நம்மை வழிநடத்தி செல்கிறார் என்ற நினைவுடன் ஒவ்வொரு செயலையும் செய்யவேண்டும். அப்படி செய்ய ஆரம்பித்தால் அனைத்தும் நாம் தான் செய்கிறோம். எல்லாம் என்னால் தான் நடக்கிறது என்ற அகங்காரம் விலகி, இறைவனின் கருணை கிடைத்து விடும். ஒன்பது வகை இறைவனின் வழிபாட்டில் நினைப்பு (ஸமரணம்) சிறந்த வழிபாடாகும்.

Sunday, May 13, 2012

12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்!

உத்தராயண காலத்தின் ஐந்தாவது மாதம் வைகாசி மாதம். இளவேனில் எனும் வசந்த காலம் இது. வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்பர். வைகாசி மாதத்துக்கு மட்டுமே இந்தச் சிறப்பு உண்டு. இந்த வைகாசி மாதத்திற்கான (14.5.2012-14.6.2012) ராசிபலன் கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1) புதிய வாய்ப்பு

நம்பிக்கையுடன் செயலாற்றும் மேஷராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் செவ்வாய் மாறுபட்ட பலன் தரும் வகையில் ஐந்தாம் இடத்தில் உள்ளார். அனுகூல பலன் தரும் கிரகங்களாக குரு, சுக்கிரன், சனி செயல்படுகின்றனர். ஜென்மகுரு என்ற நிலை மாறி இந்த மாதம் புதிய இனங்களில் வருமானம் காண்பீர்கள். வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறரின் செயல்களுக்கு போட்டியாக ஆடம்பர நடைமுறை பின்பற்றக்கூடாது. புத்திரர் உங்கள் பேச்சை மதித்து நற்செயல்களைப் பின்பற்றுவர். ஆரோக் கியத்தில் அக்கறை உண்டாகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுவர். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெற்று உற்பத்தியை உயர்த்துவர். அரசு தொடர்பான வகையில் நிதான அணுகுமுறையைப் பின்பற்றுவது நல்லது. வியாபாரிகள் சந்தைப்போட்டியை சமாளித்து சராசரி விற்பனையும் அதற்கேற்ப லாபவிகிதமும் காண்பர். பணியாளர்கள் குறித்த காலத்தில் இலக்கை நிறைவேற்ற அக்கறையுடன் செயல்படுவர். ஓரளவு சலுகைப்பயன் கிடைக்கும்.பணிபுரியும் பெண்கள் புதிய உத்திகளை பின்பற்றி நிலுவைப்பணியை நிறைவேற்றுவர். சலுகைப்பயன் ஓரளவு கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின்அன்பும், தாராள பணவசதியும் கிடைக்கப் பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றம் அடைவர். அரசியல்வாதிகள் பொறுமையுடன் செயல்படுவதால் மட்டுமே நற்பெயரை பாதுகாக்க இயலும். விவசாயிகளுக்கு சராசரி மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த லாபம் வரும். மாணவர்கள் எதிர்கால கல்வி வளர்ச்சி குறித்த ஆலோசனையில் ஈடுபடுவர்.
பரிகாரம்: சிவனை வழிபடுவதால் தொழிலில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.
உஷார் நாள்: 3.6.12 காலை 7.27 - 5.6.12 காலை 10.09
வெற்றி நாள்: மே 23, 24
நிறம்: பச்சை, வெள்ளை          எண்: 5, 6

ரிஷபம் (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2)  உடல்நலக் குறைவு

பிறரை வசீகரிக்கும் விதத்தில் செயல்படும் ரிஷபராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மட்டுமே இந்தமாதம் நல்ல பலன் தரும் கிரகமாக செயல்படுகிறார். ஜென்ம குருவின் தாக்கமும் மற்ற கிரகங்களின் அமர்வும் பலவித சோதனை களங்களை உங்கள் வாழ்வில் எதிர்கொள்ள வைக்கும்.  முக்கிய செலவுகளை சரிக்கட்ட சேமிப்பு பணம் கைகொடுக்கும். சிறு அளவில் கடனும் பெறுவீர்கள். புத்திரர் பிடிவாத குணத்துடன் செயல்படுகிற கிரகநிலை உள்ளது. கேளிக்கை விருந்துகளில் அதிகம் கலந்துகொள்வதால் ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். தம்பதியர் குடும்ப சூழ்நிலையின் கஷ்டநிலை உணர்ந்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒற்றுமையுடன் நடப்பர். நண்பர்களால் ஓரளவு உதவி உண்டு. தொழிலதிபர்கள் அளவான உற்பத்தியால் மிதமான லாபம் பெறுவர். நடைமுறைச்செலவு கூடும். வியாபாரிகள் சுமாரான விற்பனையும் அதற்கேற்ற ஆதாயமும் பெறுவர். . பணியாளர்கள் சகபணியாளர்களால் பணிச்சுமைக்கு ஆளாவர். முக்கிய செலவுக்கு கடன் பெற வேண்டியதிருக்கும். பணிபுரியும் பெண்கள் குளறுபடியான செயல்களால் தாமதநிலையைச் சந்திப்பர். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் வியாபார நடைமுறையைச் சீர்படுத்துவர். அரசியல்வாதிகள் புகழை தக்கவைக்க அதிகப் பணம் செலவு செய்ய வேண்டியதிருக்கும். விவசாயிகளுக்கு அளவான மகசூல் கிடைக்கும். மாணவர்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுவர்.
பரிகாரம்: லட்சுமியை வழிபடுவதால் தொழில் சிறந்து பணவரவு கூடும்.
உஷார் நாள்: 5.6.12 காலை 10.10 - 7.6.12
பிற்பகல் 2.04 மணி
வெற்றி நாள்: மே 25, 26, 27
நிறம்:  நீலம், ரோஸ்         எண்: 1, 8

மிதுனம் (மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) தாராள பணவரவு

பரந்த மனப்பான்மையுடன் செயல்படும் மிதுனராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் புதன் இந்த மாதம் முழுவதும் ரிஷப, மிதுன வீடுகளில் அனுகூலக் குறைவாக சஞ்சாரம் செய்கிறார். நவக்கிரகங்களில் சுக்கிரன், செவ்வாய், ராகு அளப்பரிய நற்பலன்களை வழங்குவர். எதிர்கால வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் இறங்குவீர்கள்.  புதிய முயற்சியுகளில் தாராள பணவரவு பெறுவீர்கள். சமூகத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். புதிய வாகனம் வாங்க யோகம் உண்டு. தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பாசபந்தத்துடன் நடந்து கொள்வர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழிலதிபர்கள் மூலதனத்தை அதிகப்படுத்தி அபிவிருத்தி பணிகளை நிறைவேற்றுவர். வியாபாரிகள் சந்தையில் போட்டி குறைவதால் விற்பனையை அதிகப்படுத்துவர். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பால் ஆதாயம் கூடும். பணியாளர்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு பணி இலக்கை நிறைவேற்றுவர். தாமதமான சலுகைப்பயன் எளிதில் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் உத்வேகமுடன் செயல்பட்டு நற்பெயர் காண்பர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். குடும்ப பெண்கள் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் அக்கறையுடன் ஈடுபடுவர். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து அமோக வருமானம் காண்பர். அரசியல்வாதிகள் புதிய பதவி, பொறுப்பு கிடைக்கப்பெறுவர். ஆதரவாளர்களின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். விவசாயிகள் மகசூல் சிறந்து பயிர்களுக்கு நல்ல விலை கிடைக்கப்பெறுவர். நிலம் தொடர்பான விவகாரத்தில் அனுகூல வெற்றி கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த நிறுவனத்தில் படிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவர்.

பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் தொழிலில் அமோகவளர்ச்சி ஏற்படும்.
உஷார் நாள்: 7.6.12 பிற்பகல் 2.05 -9.6.12
இரவு 7.10
வெற்றி நாள்: மே 28, ஜூன் 6
நிறம்: சிவப்பு, வெள்ளை   எண்: 1, 2

கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) சந்தோஷம் கூடும்

தடைக்கல்லை படிக்கல்லாக முயலும் கடகராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சந்திரன் மாத துவக்கத்தில் சதயம் நட்சத்திரமான ராகுவின் சாரத்தில் தனது பயணத்தை துவங்குகிறார். அதிர்ஷ்டவசமாக இந்தமாதம் சூரியன், புதன், கேது, குரு, சுக்கிரன், சனி என ஆறு கிரகங்கள் அனுகூலமாக செயல்படுகின்றனர். மனச்சோர்வு நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றியைச் சொந்தமாக்கிக் கொள்வீர்கள். பேச்சில் இனிமை பின்பற்றுவதால் பலரிடத்திலும் நல்ல பேர் எடுப்பீர்கள். புத்திரர் தம் தேவைகளை நிறைவேற்ற அதிக எதிர்பார்ப்புடன் உங்களை அணுகுவர். அதை நிறைவேற்றினால் மட்டுமே அதிருப்தி வராமல் தவிர்க்கலாம். உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து உறவினர்களை உபசரித்து மகிழ்வர். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலதிபர்கள் அரசிடம் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கப்பெறுவர்.  வியாபாரிகள் சந்தையில் வரவேற்பு அதிகரித்து விற்பனையில் சாதனை படைப்பர். மூலதனத்தை அதிகப்படுத்துவர். பணியாளர்கள் திறமையுடன் செயல்பட்டு பணிக்கு சிறப்பு சேர்த்திடுவர். சம்பள உயர்வு, பதவி உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் திறமைமிகு செயல்களால் நிர்வாகத்திடம் நன்மதிப்பு பெறுவர். குடும்ப பெண்கள் சுமூக வாழ்வுமுறை அமையப்பெறுவர். குடும்பச் செலவுக்கான பணம் சீராக கிடைக்கும். ஆடை, ஆபரணச்சேர்க்கைக்கும் வாய்ப்புண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் அதிக ஆர்டர் கிடைக்கப் பெற்று விற்பனையில் முன்னேற்றம் காண்பர். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவதோடு ஆதரவாளர்களின் ஒத்துழைப்பையும் பெறுவர். விவசாயிகளுக்கு மகசூல் உயரும். கால்நடை வளர்ப்பிலும் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி மகிழ்வர்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் வீட்டில் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.
உஷார் நாள்: 14.5.12 காலை 6.01- 15.5.12
இரவு 7.20 மற்றும் 9.6.12 இரவு 7.11 - 12.6.12 அதிகாலை 2.57
வெற்றி நாள்: மே 30, 31
நிறம்: மஞ்சள், சிமென்ட்          எண்: 3, 4

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1) அந்தஸ்து உயரும்

நற்பண்புகளை நாளும் வளர்த்திடும் சிம்மராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சூரியன் பத்தாம் இடத்தில் புதனுடன் சேர்க்கை பெற்று புத ஆதித்யயோக பலத்துடன் இருக்கிறார். நற்பலன் தரும் கிரகமாக சுக்கிரன் செயல்பட்டு வருகிறார். ஏழரைச்சனியின் தாக்கம் இருந்தாலும் ஆர்வமுடன் புதிய முயற்சிகளை துவங்குவீர்கள். உறவினர், நண்பர்களின் ஆதரவும் அரசு தொடர்பான உதவியும் எளிதில் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். வீடு, வாகனத்தில் கிடைக்கிற பயன்களை சரிவர பயன்படுத்துவது போதுமானதாகும். தாயின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புத்திரர் உங்கள் சொல்படி கேட்டு நடப்பர். உடல்நலனில் அக்கறை தேவை. நீதிமன்ற விவகாரங்களில் மென்மையான அணுகுமுறையைப் பின்பற்றுவீர்கள். தம்பதியர் பாசபந்தத்துடன் நடந்து கொள்வர். நண்பர்களின் ஆலோசனையும் உதவியும் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் விலகிப்போன வியாபார தொடர்புகளை புதுப்பித்துக் கொள்வர். தாராள பணவரவு கிடைக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவர். புதிய உத்திகளால் விற்பனையில் வளர்ச்சி காண்பர். பணியாளர்கள் நவீன தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவர். அதிகாரிகளிடம் நற்பெயர் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் ஒருமுகத் தன்மையுடன் செயல்பட்டு பணி இலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்றுவர். சலுகைப்பயன் எளிதில் வந்துசேரும். குடும்ப பெண்கள் கணவர் குறிப்பறிந்து செயல்படுவர். உறவினர்களிடம் நன்மதிப்பு பெறுவர். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். சுயதொழில் புரியும் பெண்கள் அபிவிருத்தி பணியில் ஈடுபடுவர். உற்பத்தி, விற்பனை சீராகும். அரசியல்வாதிகள் புதிய பொறுப்புக்களை அடைய அனுகூலம் உள்ளது. விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பதால் வருமானம் கூடும். கால்நடை வளர்ப்பில் லாபம் கிடைக்கும். மாணவர்கள் எதிர்கால கல்வி குறித்த ஆலோசனையில் ஈடுபடுவர்.

பரிகாரம்: மாரியம்மனை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
உஷார் நாள்: 15.5.12 இரவு 7.21 - 18.5.12
அதிகாலை 5.39 மற்றும் 12.6.12 அதிகாலை 2.57 - 14.6.12 பிற்பகல் 1.06
வெற்றி நாள்: ஜூன் 1, 2
நிறம்: ஆரஞ்ச், மஞ்சள்          எண்: 3, 9

கன்னி (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை1,2) செலவு அதிகரிக்கும்

இனிய அணுகுமுறை கொண்ட கன்னிராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் புதன் மாத முற்பகுதியில் சிரம பலன்களும் மாத பிற்பகுதியில் அனுகூல பலன்களும் தருகிற வகையில் உள்ளார். குரு பெயர்ச்சியாகி ராசியை பார்ப்பதால் சிந்தனையில் தெளிவு ஏற்படும். பணத்தேவை அதிகரிக்கும். இருப்பினும் சமாளிக்க முயற்சிப்பீர்கள். வீடு, வாகனத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்வீர்கள். புத்திரர் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். உடல்நலனுக்காக மருத்துவரின் ஆலோசனையை பெற நேரிடும். குடும்பச் செலவு அதிகரிக்கும். இதனால் சிலர் கடன் வாங்க வேண்டிவரும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செயல்படுவது குடும்பநலனுக்கு உகந்தது. தொழிலதிபர்கள் நிர்வாக சீர்திருத்தங்களில் ஆர்வம் காட்டுவர்.  மாத பிற்பகுதியில் பணவரவு கூடும். வியாபாரிகள் புதிய உத்திகளை பின்பற்றி ஆதாயம் காண்பர்.பணியாளர்கள் மாத முற்பகுதியில் பணிச்சுமைக்கு உள்ளாவர். உடல்நலம் பேணுவதில் அக்கறை தேவை. பணிபுரியும் பெண்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக பணியில் கவனச்சிதறல் எதிர்கொள்வர். குடும்ப பெண்கள் கணவருடன் தேவையற்ற விவாதம் செய்வது கூடாது. குடும்ப செலவுக்கான பணவசதி ஓரளவே கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கூடுதல் உழைப்பால் மிதமான வளர்ச்சி பெறுவர். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெற அதிகப்பணம் செலவழிப்பர். விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் ஓரளவு லாபம் பெறுவர். மாணவர்களின் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவர்.

பரிகாரம்: நரசிம்மரை வழிபடுவதால் தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.
உஷார் நாள்: 18.5.12 அதிகாலை 5.40 - 20.5.12 மாலை 5.20 மற்றும் 14.6.12 பிற்பகல்
1.07- 14.6.12 பின்இரவு முழுவதும்
வெற்றி நாள்: ஜூன் 3, 4
நிறம்: கருநீலம், மஞ்சள்   எண்: 3, 8

துலாம் (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) வீட்டில் சுபநிகழ்ச்சி
தர்ம சிந்தனையுடன் செயலாற்றும் துலாம் ராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்து இந்த மாதம் முழுவதும் நல்ல பலன்களை வழங்குகிறார். செவ்வாயின் ஆதாய ஸ்தான அமர்வு வாழ்வில் முக்கியமான நன்மைகளைப் பெற்றுத்தரும். மாத முற்பகுதியில் குடும்பத்தில் மங்கல நிகழ்வு உருவாக புதன் சாதகமாக செயல்படுகிறார். இடம், பொருள் அறிந்து பேசுவதால் சிரமத்தை தவிர்க்கலாம். வீடு, வாகனத்தில் அறிமுகம் இல்லாதவர்களுக்கு இடம்தரக்கூடாது.  புத்திரர் உங்களின் பேச்சைக் கேட்டு நடப்பர். ஆரோக்கியம் பேணுவதில் கவனம் தேவை. தம்பதியர் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஒற்றுமையுடன் செயல்படுவர். தொழிலதிபர்கள் மூலதனத்தை அதிகப்படுத்தி அபிவிருத்தி பணி மேற்கொள்வர். வியாபாரிகள் லாபவிகிதம் குறைத்து புதிய வாடிக்கையாளர் கிடைக்கப் பெறுவர். பணியாளர்கள் சகபணியாளர்களின் ஒத்துழைப்பு பெறுவர். எதிர்பார்த்த பணி, இடமாற்றம் கிடைக்கும். பணியிடத்தில் சுதந்திர உணர்வுடன் செயல்படுவர். பணிபுரியும் பெண்கள் பணியை இலகுவாக்கும் விதத்தில் அனுபவசாலிகளின் ஆலோசனையை பின்பற்றுவர்.  குடும்ப பெண்கள் கணவருக்காக விட்டுக் கொடுத்து நடந்து கொள்வர்.  சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றம் காண்பர். சராசரி பணவரவு கிடைக்கும். நிலுவைப்பணம் வசூலாகும். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு மக்கள் நலத்திட்டங்களைச்  செயல்படுத்துவர். விவசாயிகளுக்கு தாராள மகசூலும், அதற்கேற்ப வருமானமும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சாதனை படைக்கத் திட்டமிடுவர்.

பரிகாரம்: முருகனை வழிபடுவதால் உடல் நலம் பெறுவதோடு நிம்மதி நிலைத்திருக்கும்.
உஷார் நாள்: 23.5.12 அதிகாலை 4.38 - 25.5.12 பிற்பகல் 2.07
வெற்றி நாள்: ஜூன் 7, 8, 9
நிறம்: காவி, ஊதா         எண்: 1, 4

விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை) மனதில் உற்சாகம்

சூழல் அறிந்து செயலாற்றும் விருச்சிகராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் செவ்வாய் பத்தாம் இடத்தில் மாறுபட்ட குணத்துடன் உள்ளார். குரு, சுக்கிரன், சனி இந்த மாதம் அனுகூல பலன்களை அள்ளித்தருவர். மனதில் இருந்த எதிர்மறை சிந்தனைகள் மறையும். குருவின் நல்லருள் பார்வையால் மனதில் உற்சாகம் கூடும். வாழ்வில் நன்மைகள் மலரத் தொடங்கும். ஏழரைச்சனியின் தாக்கம் குறையும். வீடு, வாகன வகையில் அனுகூலம் உண்டு. தாய்வழி உறவினர் அன்பு பாராட்டுவர். புத்திரர்களின் செயல்பாடு கண்டு பெருமிதம் கொள்வீர்கள். உடல்நலனில் அக்கறை தேவைப்படும். தம்பதியர் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை கொள்வர். உறவினர்களிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலதிபர்கள் நிர்வாக நடைமுறை சீர்திருத்தங்களில் வெற்றி காண்பர். உற்பத்தி சிறந்து வருமானம் கூடும்.தொழிலாளர் நலனில் அக்கறை கொள்வர். வியாபாரிகள் சந்தைப்போட்டியை சமாளிக்கும் விதத்தில் புதிய உத்திகளைக் கையாள்வர்.  பணியாளர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரின் பாராட்டு பெறுவர். பதவி உயர்வு, சலுகை பயன் படிப்படியாகக் கிடைக்கும்.பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை ஆர்வத்துடன் பின்பற்றுவர். குறித்தகாலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர்.  குடும்ப பெண்கள் தாராள பணவசதியும் கணவரின் அன்பும் கிடைக்கப் பெறுவர். சந்தோஷ வாழ்வு உண்டாகும். திட்டமிட்டபடி மங்கல நிகழ்ச்சி இனிதாக நிறைவேறும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை அதிகரித்து லாபத்தை அதிகரிப்பர். அரசியல்வாதிகள் புதிய பதவி கிடைக்கப் பெறுவர். மக்கள் மத்தியில் செல்வாக்குடன் வலம் வருவர். விவசாயிகளுக்கு பயிர் வளர்க்க எல்லா வசதிகளும் கிடைக்கும். மகசூல் சிறந்து நல்ல விலை பெறுவர். மாணவர்கள் மனதில் இருந்த தயக்கம் விலகும். உற்சாகத்துடன் படித்து முன்னேறுவர்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் வாழ்வில் தடைகள் நீங்கி வளர்ச்சி அதிகரிக்கும்.
உஷார் நாள்: 20.5.12 மாலை 5.21 -23.5.12
அதிகாலை 4.37
வெற்றிநாள்:  ஜூன் 5, 6
நிறம்: பச்சை, நீலம்        எண்: 2, 5

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1)  சம்பள உயர்வு

பிறருக்கு உதவும் மனம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் குரு மாத துவக்கத்திலேயே ராசிக்கு ஆறாம் இடத்தில் அமர்வு பெறுகிறார். இந்த மாதம் ராசிக்கு தர்ம கர்ம ஸ்தான அதிபதிகளான சூரியன், புதன் நற்பலன் தரும் இடத்தில் உள்ளனர். கேதுவும் தன் பங்கிற்கு சிறப்பான பலன் தருகிறார். தொடங்கிய செயல் வெற்றிகரமாக நிறைவேற கண்ணும் கருத்துமாக செயல்படுவீர்கள். தம்பி, தங்கை அதிருப்தி மனப்பாங்குடன் இருப்பர். வீடு, வாகனத்தில் விரும்பிய மாற்றம் செய்து மகிழ்வீர்கள்.  புத்திரர் சிறு விஷயங்களில் கூட பிடிவாத குணத்துடன் நடந்து கொள்வர்.   தம்பதியர் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் செயல்படுவதால் மட்டுமே குடும்ப நடைமுறை சீராக இருக்கும். தொழிலதிபர்கள் உற்பத்தி திறனை அதிகரிப்பதோடு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவர். சிலருக்கு தொழில் கூட்டமைப்பில் அந்தஸ்து மிக்க பதவி கிடைக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்தபடி விரிவாக்கப்பணிகளைச் செய்து முடிப்பர். அதற்குத் தேவையான நிதியுதவியும் கிடைக்கும். விற்பனை சிறந்து லாபவிகிதம் கூடும். பணியாளர்கள் ஆரோக்கிய உடல்நலம் பெற்று பணியை திறம்பட மேற்கொள்வர். சம்பள உயர்வு, கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் குறித்தகாலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பதவி உயர்வு, சலுகைப்பயன் சீராக கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரிடம் வாக்குவாதம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. ஆடை, ஆபரணச் சேர்க்கை அவரவர் வசதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் ஆர்டர் கிடைத்து உற்பத்தியை உயர்த்துவர். சராசரி பணவரவுடன் நிலுவைப்பணமும் வசூலாகும். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் நற்பெயர் பெறுவதோடு பதவி உயர்வு பெறுவர். விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். வருமானம் எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். மாணவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து திட்டமிடுவர்.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் வாழ்வில் சகல நன்மையும் உண்டாகும்.
உஷார் நாள்: 25.5.12 பிற்பகல் 2.08 - 27.5.12 இரவு 9.14
வெற்றி நாள்: மே 14, 15, ஜூன் 10, 11
நிறம்: பச்சை, வெள்ளை    எண்: 5, 6

மகரம் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2)  பொறுமை தேவை

உறவினர்களை மதிப்புடன் நடத்தும் மகர ராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சனி பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்து நட்புக்கிரகமான ராகுவின் பர்வையை பெறுகிறார். இநத மாதம் நவக்கிரகங்களில ராகுவும், குருவும் நல்ல பலன்களை வழங்குவர். வாக்கு ஸ்தானத்தை செவ்வாய் பார்ப்பதால் பேச்சில் கடுமை உண்டாகும். பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது. வீடு, வாகனத்தில் தகுந்த பாதுகாப்பு பராமரிப்பு பின்பற்ற வேண்டும். புத்திரரின் செயல்களில் தடுமாற்றமும் குளறுபடியும் ஏற்பட வாய்ப்புண்டு. உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. தம்பதியர் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் சண்டை சச்சரவில் ஈடுபடுவர். குடும்ப எதிர்கால நலன் கருதி பொறுமையுடன் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. நண்பர்களிடம் பணம் கொடுக்கல், வாங்கல், கருத்து பரிமாற்றத்தில் நிதானத்தைப் பின்பற்றுங்கள். தொழிலதிபர்கள் உற்பத்தி தரத்தை அதிகரிப்பதில் ஆர்வம் காட்டுவது அவசியம்.வியாபாரிகள் ஒரு சில ஆர்டர்களுக்கு பொருள் விநியோகிக்க தாமதமாகும். இதனால் ஆர்டர் இடம்மாறிப் போகலாம். பணியாளர்கள் தாமத செயல்பாடுகளால் நிர்வாகத்தின் கண்டிப்பை எதிர்கொள்வர். பணிபுரியும் பெண்கள் பணிச்சுமையால் செயல்பாட்டில் குளறுபடி சந்திப்பர்.  குடும்ப பெண்கள் கணவரின் மனநிலையைப் புரிந்து செயல்படுவது அவசியம். சுயதொழில் புரியும் பெண்கள் மிதமான வளர்ச்சி காண்பர். அதற்கேற்ப வருமானம் கிடைக்கும். அரசியல்வாதிகள் புதிய இனங்களில் வருமானம் பெற முயற்சிப்பர். விவசாயிகள் விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைக்கப் பெறுவர். மாணவர்களுக்கு கல்விச்செலவுக்கான பணம் பெறுவதில் தாமதம் உண்டாகும்.

பரிகாரம்: ரங்கநாதரை வழிபடுவதால் குடும்பச் சச்சரவு நீங்கி மனதில் நிம்மதி நிலைத்திருக்கும்.
உஷார் நாள்: 27.5.12 இரவு 9.15 - 30.5.12
அதிகாலை 1.59
வெற்றி நாள்: மே 16, 17, ஜூன் 12, 13
நிறம்: மஞ்சள், காவி        எண்: 3, 7

கும்பம் (அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3)  பணிச்சுமை கூடும்

லட்சியம் நிறைவேறப் பாடுபடும் கும்பராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சனி வக்ரநிலை பெற்று அஷ்டமச்சனியாக உள்ளார். குருவின் பார்வை சனி மீது பதிவதால் வாழ்வில் சிரமம் ஓரளவு குறையும். மாதம் முழுவதும் சுக்கிரன் நல்ல பலன்களைத் தருவார். கலகலப்பாக பேசுவதில் இருந்த ஆர்வம் குறையும். அலைச்சல் பயணங்களும், கடன் தொந்தரவும் கவலை தரும். வீடு, வாகனத்தில் பெறுகிற வசதி தொடர்ந்து கிடைக்கும்.  புத்திரர் நற்குணத்துடன் செயல்பட்டு உங்களுக்கு பெருமை சேர்ப்பர். உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. தம்பதியர் கவுரவ சிந்தனையால் தங்களுக்குள் கருத்துவேறுபாடு கொள்வர். தொழிலதிபர்களுக்கு பணத்தேவை அதிகரிக்கும். திறமைமிகு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதிலும் சிரமம் உருவாகலாம்.வியாபாரிகள் மிதமான விற்பனையும் அதற்கேற்ப ஆதாயமும் காண்பர். பணியாளர்கள் சக பணியாளர்களின் குறைகளை விமர்சனம் செய்வது கூடாது. பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப வருமானம் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை  பின்பற்றுவது நல்லது.  குடும்ப பெண்கள் கணவர், அவர் வழி சார்ந்த உறவினர்களைக் குறைசொல்வதை தவிர்ப்பது அவசியம். குடும்ப செலவுக்கான பணம் கிடைப்பதில் தாமதம் இருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய இடங்களில் ஆர்டர் கிடைக்கப்பெறுவர். உற்பத்தி, விற்பனை மிதமாக இருக்கும். அரசியல் வாதிகள் தலைமையின் கட்டளைக்கு கீழ்படிய நேரிடும். விவசாயிகளுக்குமிதமான விளைச்சலும், அள வான வருமானமும் கிடைக்கும். மாணவர்கள் வெளிவட்டாரப் பழக்கம் குறைப்பது எதிர்காலத்திற்கு நல்லது.

பரிகாரம்: அபிராமி அன்னையை வழிபடுவதால் வாழ்வில் நன்மைகள் உண்டாகும்.
உஷார் நாள்: 30.5.12 அதிகாலை 2 - 1.6.12
அதிகாலை 5.11
வெற்றிநாள்: மே 18, 19
நிறம்: சிவப்பு, வாடாமல்லி      எண்: 1, 9

மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) சொத்து யோகம்

புதுமையை வரவேற்கும் மனம் கொண்ட மீனராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் செவ்வாயின் எட்டாம் பார்வை அனுகூலமாகவும் சனியின் ஏழாம் பார்வை சிரமம் தரும் வகையிலும் உள்ளது. சூரியன், கேது, சுக்கிரன் அமர்வு மிகுந்த அனுகூலம் தரும். சாமர்த்தியமாக பேசி, செயல்புரிந்து சமூகத்தில் நல்ல பெயர் பெறுவீர்கள். தம்பி, தங்கை வாழ்வில் முன்னேற்றம் கண்டு உங்களுக்கும்  உதவுவர். வீடு, வாகன வகையில் விரும்பிய புதிய மாற்றம் செய்து மகிழ்வீர்கள்.  புத்திரர் படிப்பு விஷயங்களில் குழப்பமான மனநிலை பெறுவர்.  கூடுதல் சொத்து நல்யோகம் உண்டு. குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். உடல்நிலை ஆரோக்கியத்துடன் திகழும்.  வழக்கு, விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். வாகன பயணத்தின் போது கவனம் @தவை.தம்பதியர் ஒருவருக்கொருவர் பாசத்துடன் நடந்து குடும்பநலன் காத்திடுவர். தொழிலதிபர்கள் நிர்வாக சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவர். அரசு தொடர்பான உதவி கிடைக்கும். உற்பத்தி சிறந்து பணவரவு கூடும். வியாபாரிகள் அதிக ஆர்டர் கிடைத்தால் கூடுதல் சரக்கு கொள்முதல் செய்வர். லாபவிகிதம் அதிகரிக்கும். பணியாளர்கள் ஆர்வமுடன் செயல்பட்டு பணி இலக்கை நிறைவேற்றுவர். நிர்வாகத்தின் ஆதரவால் சம்பள உயர்வு கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் உத்வேகமுடன் செயல்பட்டு பணிக்கு சிறப்பு சேர்த்திடுவர். பதவி உயர்வு, பிற சலுகை பயன் கிடைக்கும். குடும்ப பெண்கள் வீட்டில் சுமூகமான நல்ல சூழ்நிலை அமையப்பெறுவர். கணவரின் அன்பு மழையில் நனைவீர்கள். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, தரம் சிறக்க மிகுந்த கவனம் செலுத்துவர். விற்பனை உயர்ந்து இருப்பதால் வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் ஆதரவால் கோரிக்கைகளை நிறைவேற்றுவர். விவசாயிகளுக்கு நல்ல மகசூலும், அதற்கேற்ப வருமானமும் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் லாபம் உண்டு. மாணவர்கள் பெற்றோரின் பேச்சை மதித்து நடப்பர். வாகனப் பயணங்களில் மிதவேகம் நல்லது.

பரிகாரம்: திருப்பதி வெங்கடேசரை வழிபடுவதால் உடல்நலத்தோடு வருமானமும் கூடும்.
உஷார் நாள்: 1.6.12 அதிகாலை 5.12 - 3.6.12 காலை 7.26
வெற்றி நாள்: மே 21, 22
நிறம்: சிமென்ட், மஞ்சள்       எண்: 3, 4.

Saturday, May 12, 2012

பூஜை நேரத்தில் மட்டும் விளக்கேற்றினால் போதுமா? அல்லது நாள் முழுவதும் ஏற்ற வேண்டுமா?

குத்துவிளக்குகளை பூஜை நேரத்தில் ஏற்றினால் போதும். காமாட்சி  விளக்கு எனப்படும் குலதெய்வ விளக்கு எப்பொழுதும் எரிந்து கொண்டிருந்தால் நல்லது.

Thursday, May 10, 2012

நவக்கிரகத்தை ஒன்பது முறை வலம் வருகிறேன். இதை என் ஆயுள் முழுவதும் கடைபிடிப்பது சரிதானா?

நவக்கிரகத்தை ஒன்பது முறை வலம் வருகிறேன். இதை என் ஆயுள் முழுவதும் கடைபிடிப்பது சரிதானா?
ஏன் இந்த சந்தேகம் உங்களுக்கு? தினமும் கோயிலுக்குச் சென்று மனநிறைவோடு வலம் வாருங்கள். ஓய்வுக் காலத்தை மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் நடத்துங்கள்

Wednesday, May 9, 2012

அசைவம் சாப்பிடுவது பாவமா?

அஹிம்சா பரமோ தர்ம என்கிறது சாஸ்திரம். பிற உயிர்களைத் துன்புறுத்தாமையே மேலான தர்மம். எந்த உயிரையும் கொல்லாமல் வாழ்வதைத் தம் வாழ்நாள் தவமாக ஞானிகள் ஏற்று வாழ்ந்தனர். இந்து தர்மத்தின் அடிப்படையான கொள்கையே அகிம்சை என்னும் தர்மம் தான். அசைவம் சாப்பிட்டால் அஞ்ஞானம் உண்டாகும். மருத்துவ உலகம் உடல்நலனுக்கு சைவ உண்வையே சிபாரிசு செய்கிறது. மாமிசம் உண்பதைப் பாவமா? என்று கேட்டிருக்கிறீர்கள். மகா மகா பாவம் என்ற உண்மையை உணருங்கள். மரக்கறி உணவே ஆன்மிக வாழ்விற்கு உகந்தது.

உண்மை பேசினால் என்ன நன்மை?

உண்மையை மட்டுமே பேச வேண்டும், சத்தியநெறியை மட்டும் கடைபிடிக்க வேண்டும். என்ன வந்தாலும், எது நடந்தாலும் இதயத்து மாளிகையில் சத்தியத்தை மட்டுமே குடியமர்த்த வேண்டும். இதனால், என்ன லாபம் என்பதற்கு உதாரணகர்த்தா திருக்கடையூர் அபிராமி பட்டர். இவர் மீது பொறாமை கொண்ட சிலர், சரபோஜி ராஜாவிடம் சென்று, நமது ஊர் அபிராமி கோயிலில் ஒரு பைத்தியம் வேலை செய்கிறது. அம்பாள் முன்னால் கண்ணை மூடிக்கொண்டு ஏதேதோ பிதற்றுகிறது. இவரது பிதற்றலைக் கேட்டு அம்பாளுக்கும் கஷ்டம், பக்தர்களுக்கும் கஷ்டம், என்றனர். ஆனால், அம்பாள் எல்லாம் அறிந்தவள் அல்லவா! அபிராமிபட்டர் சத்தியநெறி தவறாதவர், தன் முன்னால் அமர்ந்து சத்தியத்தை மட்டுமே பேசுபவர் என்பதை ஊருக்கு உணர்த்த முடிவெடுத்தாள். ஒருநாள் சரபோஜி கோயிலுக்கு வந்தார். இன்று என்ன திதி? என பட்டரிடம் கேட்டார். அவர்  அம்பாளின் முகத்தை பூரணசந்திரனாகக் கற்பனை செய்து லயித்திருந்த வேளை அது. பவுர்ணமி என்றார். இன்று அமாவாசையல்லவா! பவுர்ணமி என்கிறானே, நிச்சயம் இவன் பைத்தியம் தான், என்று நினைத்த சரபோஜி, இதுதான் பவுர்ணமி வானமா? என்று கேலியாக சிரித்தபடியே தலையைத் தூக்கினார். நிஜமாகவே வானில் சந்திரன் இருந்தான். அதாவது, சத்தியம் பேசுபவர்கள், தவறாகவே ஏதும் சொன்னாலும் கூட அது சத்தியமாகி விடுகிறது. அதனால் தான் சத்தியத்தைக் கடைபிடிக்கும் மகான்கள் சொல்வதெல்லாம் பலித்து விடுகிறது. சத்தியத்தின் மதிப்பை அறிந்து சத்தியத்தின் பக்கம் திரும்புங்கள். கலியுகத்தில் இது சாத்தியமா என்றெல்லாம் சாக்குப்போக்கு சொல்லாமல் சத்தியத்தின் பக்கம் போனால் நன்மை நமக்குத்தான்!

தலையெழுத்தை மாற்றும் பரிகாரம்

ஒருமனிதனுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அவனவன் தலையெழுத்துப்படி நடக்கும் என்று குறிப்பிடுவர். பிறந்த நட்சத்திரம், திதி, வாரம், கரணம், யோகம் ஆகிய ஐந்தும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ஐந்தும் சேர்ந்ததை பஞ்சாங்கம் என்று குறிப்பிடுவர். தலையெழுத்தை படைப்புக்கடவுளான பிரம்மாவே தன் கையால் நம் தலையில் எழுதுவதாக ஐதீகம். அதனால் இதற்கு பிரம்ம லிபி என்றும் பெயருண்டு. இதன்படி நவக்கிரகங்களும் மனித வாழ்வில் நன்மையோ, தீமையோ ஏற்படுத்துகின்றன. இறைபக்தியால் மட்டுமே பிரம்மலிபியை மாற்ற முடியும். அருணகிரிநாதர் முருகப்பெருமானைப் போற்றும்போது, நின் கால்பட்டு அழிந்தது அயன்(பிரம்மா) கையெழுத்தே என்று குறிப்பிடுகிறார். இதனால் தான், பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை என்று சொல்லுவர்.

Monday, May 7, 2012

நிவேதனத்தை சுவாமி சாப்பிடுவாரா?

தீபாவளி வந்தால் பலகாரங்களை சுவாமியின் முன் படைக்கிறோம். பொங்கல் வந்தால் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்கிறோம். கிருஷ்ணஜெயந்தி வந்தால் சீடை, முறுக்கு என வைக்கிறோம். இதையெல்லாம் பார்க்கும் சிலர் கேலியாக, சுவாமியா சாப்பிடுகிறார், அவர் பெயரைச் சொல்லி நீங்கள் சாப்பிடுகிறீர்கள், என கேலி செய்வர். இவ்வாறு கேலி செய்பவர்களிடம் சற்றும் கோபப்பட நமக்கு உரிமையில்லை. ஏனெனில், அவர்கள் உண்மையைத் தான் சொல்கிறார்கள். நிவேதனம் என்பதன் பொருளை அறியாமல் அவர்கள் பேசினாலும் நிஜம் அது தான். நிவேதனம் என்றால் சுவாமியை சாப்பிட வைத்தல் என்பது பொருள் அல்ல. அறிவித்தல் என்று அர்த்தம். இறைவா! இந்த சமயத்தில் எனக்கு இந்த உணவை உண்ணத்தந்து உயிர் காத்த உனக்கு நன்றி தெரிவிக்கிறேன், என்று அறிவிப்பதே நிவேதனமாகும். சுவாமியின் முன்னால் இலைபோட்டு விழாநாட்களில் மட்டுமே நிவேதனம் செய்கிறோம். இதை தினமும் செய்யலாம். நம் வீட்டில் அன்றாடம் சமைக்கும் வெள்ளை அன்னத்தை சுவாமிக்கு  நிவேதனம் செய்துவிட்டு, அவரது நினைவோடு சாப்பிட்டால் உடலும் சுத்தமாகும், உள்ளமும் சுத்தமாகும். நோயில்லா வாழ்வு அமையும்.

Friday, May 4, 2012

அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம் இன்று ஆரம்பம்: புராணம் கூறும் அக்னி நட்சத்திரத்தின் பிறப்பு!

மதுரை: இன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிறது. சூரியன் மேஷராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் உச்சபலத்தைப் பெறுகிறார். அதனால், சூரியனின் கிரணங்கள் மிகுந்த ஆற்றலோடு பூமியை வந்தடைகின்றன. இதை அக்னி நட்சத்திர காலம் என்று பஞ்சாங்கங்கள் குறிப்பிடுகின்றன. கிராமப்புறங்களில் "முன்னேழு பின்னேழு நாட்களான சித்திரையின் கடைசி ஏழு நாட்களும், வைகாசியின் முதல் ஏழுநாட்களுமாக, 14 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகமாகும் என்று சொல்வர். மே 4 காலை 6.59 மணிக்கு துவங்கும் அக்னி நட்சத்திரம், 28 இரவு1.50க்கு முடிகிறது. இக்காலகட்டத்தில் அம்மை, வேனல்கட்டி போன்ற உஷ்ண வியாதிகள், தோல்நோய்கள் தலைகாட்டும் அபாயம் உண்டு. நீர்மோர், இளநீர், பானகம், நுங்கு, வெள்ளரி ஆகிய குளிர்ச்சி தரும் உணவு வகைகளையும், பழங்களையும் சாப்பிடுவது நன்மை தரும்.


புராணக்கதை: முன்னொரு காலத்தில் சுவேதகி யாகத்தில் பன்னிரண்டு வருடங்கள் இடைவிடாமல் நெய் ஊற்றி யாகம் செய்தனர். தொடர்ந்து அக்னி தேவன் அந்த யாக நெய்யை உண்டதால் உடலில் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு மருந்து காண்டவ காட்டை அழித்து உண்பதுதான் என்று ஆலோசனை கூறப்பட, காண்டவ வனத்தை நோக்கிச் சென்றான் அக்னிதேவன். அதனை அறிந்து அக்காட்டில் வசித்த உயிரினங்கள், தாவரங்கள் அனைத்தும் வருணனிடம் உதவி வேண்டின. எனவே வருணன் இடைவிடாது மழை பெய்தான். அதனால் அக்னியால் காட்டை அழிக்க முடியவில்லை. எனவே அக்னி தேவன் திருமாலிடம் உதவி வேண்டினான். திருமால், அர்ச்சுனனிடம்  அக்னிக்கு உதவச் சொன்னார். அர்ச்சுனன் தன் கணைகளால் அந்தக் காட்டை மறைத்து சரக்கூடுகட்டி தீ அணையாது எரிய உதவினான். அப்போது திருமால் அக்னிக்கு ஒரு நிபந்தனை விதித்தார். உனக்கு இருபத்தோரு நாட்கள் அவகாசம் தருகிறேன். அதன்பின் நீ காட்டை அழிக்கக் கூடாது என்றார். எனவே அக்னி 7 நாட்கள் மெதுவாக எரிந்து பின் 7 நாட்கள் வேகமாக எரிந்து கடைசி 7 நாட்கள் வேகம் குறைந்து உண்டபின் திரும்பினான். அதுவே அக்னி நட்சத்திர காலம் என புராணக்கதை கூறுகிறது.  

Tuesday, May 1, 2012

ஜோதிடர் சொல்லும் பரிகாரப்படி குறிப்பிட்ட கோயிலில் தான் வழிபட வேண்டுமா?

ஒவ்வொரு கோயிலுக்கு ஒவ்வொரு தனிச்சிறப்பு இருக்கிறது. இன்ன தோஷத்திற்கு இன்ன தலத்தில் பரிகாரம் கிடைக்கும் என்று ஜோதிடர் கூறினால் நம்பிக்கையோடு அதனைச் செய்யுங்கள். கண்டிப்பாக பயன் கிடைக்கும். நளதமயந்தி சரித்திரத்தில், திருநள்ளாறு சென்று வழிபட்ட பிறகு தான் அவர்கள் வாழ்க்கை மீண்டும் இன்பமயமானதாக தகவல் இருக்கிறது. எல்லா கோயில்களிலும் சனீஸ்வரன் இருந்தாலும், சனிக்கே தோஷம் ஏற்பட்டு அது விலகிய தலமாக திருநள்ளாறு விளங்குவதால் தனிச்சிறப்பைப் பெற்றிருக்கிறது. இதேபோன்று தான் ஒவ்வொருபரிகாரத் தலமும்.