Tuesday, July 23, 2013

இறைவனின் படைப்பில் மனிதனின் ஆயுளும் படும் அவஸ்தையும்!

கடவுள் படைப்புத் தொழிலில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரம், கழுதையைப் படைத்து விட்டு, கடவுள் சொன்னார். நீதான் கழுதை! நீ சூரியன் உதித்தது முதல் அது அஸ்தமனம் ஆகும் வரை உழைக்க வேண்டும்... மூட்டை சுமப்பதுதான் உன் வேலை... உனக்குப் புல்தான் உணவு! உனக்கு அறிவு எல்லாம் கிடையாது. நீ ஐம்பது ஆண்டுகள் வரை வாழலாம், என்று கூறினார். கழுதை உடனே கடவுளிடம், இறைவா! ஐம்பது ஆண்டுகள் நான் வாழ்வதா? வேண்டவே வேண்டாம்! நீங்கள் கூறிய கடின உழைப்போடு இருபது வருடங்கள் உழைத்தாலே போதும்... ஆயுளை இருபது ஆண்டுகளாகக் குறைத்தருள வேண்டும், என்று கேட்டது. கடவுளும், சரி அப்படியே செய்கிறேன். என்று கூறினார்.

பின்னர் கடவுள் நாயைப் படைத்தார். நீதான் நாய். மனிதர்களுடைய வீட்டைக் காவல் காப்பதுதான் உன் வேலை... நீ அவனுக்கு நன்றி உள்ளவனாய் இருப்பாய்...! அவன் உனக்குப் போடுகிற சோற்றுப் பருக்கைகளை உண்டு கொள்ளலாம். நீ நாயாக முப்பது வருடங்கள் வாழ அருள் புரிகிறேன், என்று கூறினார். கடவுள் கூறியதைக் கேட்ட நாய் அதிர்ந்து போனது. இறைவா! உன் சொற்படி விசுவாசத்தோடு வேலை செய்ய நான் தயாராக இருக்கிறேன். ஆனால், என் ஆயுட்காலத்தைப் பதினைந்து வருடங்களாகக் குறைத்துவிடுங்கள், என்று கேட்டுக் கொண்டது நாய். ஏன்! என்று கேட்டார் கடவுள். மனிதர்கள் பதினைந்து ஆண்டுகளிலேயே முப்பது வருட வேலையை என்னிடம் வாங்கிவிடுவார்கள்... அதுவே எனக்குப் போதும், என்று கூறியது நாய்! கடவுள் அவ்வாறே அருளினார்.

பின்னர் கடவுள் ஒரு குரங்கைப் படைத்துவிட்டு அதனிடம் சொன்னார். உன் பெயர் குரங்கு! நீ மரத்துக்கு மரம் தாவித் திரிவாய்! நீ மக்களை மகிழ்விக்கப் பல குறும்புகள் செய்வாய்! நீ இருபது வருடங்கள் வரை வாழலாம், என்றார். குரங்கு பயம் கொண்டு, இறைவா நீ சொன்னபடி எல்லாம் வேலை செய்கிறேன். எனக்குப் பத்து ஆண்டுகள் வாழ்ந்தாலே போதும், என்று கூறியது. ஏன் அப்படிச் சொல்கிறாய்? என்று கடவுள் கேட்டார். இறைவா! மனிதர்கள் செய்யும் மிருக வதையைத் தாங்கிக் கொள்ள நீண்ட காலம் வேண்டாம். குறுகிய காலமே போதும். இருபது ஆண்டுகளில் சாக வேண்டியதை பத்து ஆண்டுகளிலேயே சாகடித்து முடித்துவிடுவர், என்று கூறியது குரங்கு. கடவுளும் அவ்வாறே அருளினார்.

கடைசியில் கடவுள் மனிதனைப் படைத்துவிட்டு, அவனிடம் இவ்வாறு கூறினார். நீதான் மனிதன்! ஆறறிவு படைத்தவன்! நீ உன் புத்தியைப் பயன்படுத்தி வாழ்வாய்! உனக்குச் சேவகம் செய்ய சில விலங்குகளை யும் படைத்துள்ளேன். இந்த உலகத்தையே ஆட்டிப் படைக்க உன்னால் முடியும். இப்படிப் பட்ட அதிசய, அற்புதப் பிறவியான நீ இருபது ஆண்டுகளே வாழ்வாய்! என்றார். கடவுள் கூறியதில் திருப்தி அடையாத மனிதன் கடவுளிடம் வேண்டினான். இறைவா! மனிதனாக இருக்கும் எனக்கு இருபது ஆண்டுகள்தானா ஆயுள்? நான் நல்ல முறையில் வாழ்ந்து காட்ட விரும்புகிறேன். எனவே, கழுதை வேண்டாமென்று ஒதுக்கி விட்ட முப்பது ஆண்டுகளையும், நாய் விரும்பாத பதினைந்து ஆண்டுகளையும், குரங்கு மறுத்துவிட்ட பத்து ஆண்டுகளையும் எனக்குத் தாருங்கள், என்று பேராசையோடு கூறினான் மனிதன். மனிதனின் வேண்டுகோளைக் கடவுள் ஏற்றுக் கொண்டார். கடவுளின் படைப்புத் தொழில் முடிந்துவிட்டது. மனிதனின் வாழ்க்கை தொடங்கியது.

மனிதன், மனிதனாக இருபது ஆண்டுகள் வாழ்ந்தான்! திருமணத்துக்குப் பின்னர் கழுதை மாதிரி எல்லாப் பொறுப்புக்களையும் சுமந்து முப்பது வருடங்கள் வாழ்ந்தான். நாய் மாதிரி வீட்டுக் காவலாளனாக இருந்து தனக்குக் கொடுத்த உணவை ஏற்றுக் கொண்டு பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். அவனுக்கு வயதானதும், கிளை விட்டுக் கிளை தாவும் குரங்கு மாதிரி, மகன் வீட்டுக்கும், மகள் வீட்டுக்கும் லோ லோ வென்று அலைந்து, பேரக் குழந்தைகளிடம் பல குறும்புகள் செய்து, அவர்களை மகிழ்விக்கிறவனுமாக பத்தாண்டுகள் வாழ்ந்து முடித்தான். இப்படியொரு வாழ்வை மனிதன் பெற்றுக்கொண்டான். பேராசையால், அவன்படும் அவஸ்தையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் கடவுள்.

No comments:

Post a Comment