Tuesday, February 26, 2013

ஓம் எனும் மந்திரத்தை சொல்வது ஏன்?

பாரத மக்களால் பக்தியுடன் உச்சரிக்கப்படும் மந்திரம்-ஓம் இது, உச்சரிப்பவர்களின் மனதிற்கும், உடலுக்கும் அவர்களின் சுற்றுச்சூழலிலும் அமைதியை ஏற்படுத்துவதோடு, நன்மை தரும் மின்னலையும் உண்டாக்குகிறது. பெரும்பாலான மந்திரங்களும், வேதப் பிரார்த்தனைகளும் ஓம் என்ற ஒளியுடன் தான் தொடங்குகின்றன. மங்கள நிகழ்ச்சிகளும் ஓம் என்ற ஒலியுடனே தொடங்கப்படுகின்றன. ஒருவரை வரவேற்கும்போது ஓம் என்றோ ஹரிஓம் என்றோ கூறி வரவேற்பது ஒரு காலத்தில் நம் நாட்டில் வழக்கிலிருந்தது. தியானம் செய்யும்பொழுது ஓம் எனும் மந்திரமே மனதுக்குள் உச்சரிக்கப்படுகிறது. ஓம் எனும் எழுத்து வடிவமும் பக்தியுடன் வணங்கப்படுகிறது. ஓம்- ஒரு மங்களச் சின்னமாகப் போற்றப்படுகிறது. ஓம் என்பது இறைவனின் பொதுப் பெயர். இச்சொல் அ+உ+ம என்ற மூன்றெழுத்துகளால் ஆனது ஆ எனும் ஒலி நம் தொண்டையின் அடிப்பாகத்தில் உள்ள குரல் நாண்களிலிருந்து தோன்றுகிறது. உதடுகளைக் குவித்து உ சொல்லப்படுகிறது. உதடுகள் சேரும்போது ம எனும் ஒலியில் அது முடிவடைகிறது. இந்த மூன்று எழுத்துகளும் விழிப்பு நிலை, கனவு நிலை மற்றும் ஆழ்ந்த உறக்க நிலை ஆகிய மூன்று நிலைகளையும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களையும் ரிக், யஜுர் மற்றும் சாம என்ற மூன்று வேதங்களையும் பூ, புவஹ, சுவஹ என்ற மூன்று உலகங்களையும் குறிக்கின்றன.
 
இறைவன் இவை அனைத்துமாக, இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டவனாக விளங்குகிறான். இறைவன் (பிரம்மம்) உருவமற்றவன்; குணங்களற்றவன். ஓம் எனும் மந்திரத்தை உச்சரிக்கையில் இரண்டு ஓம் ஒலிகளுக்கிடையில் நிலவும் நிசப்தம் இறைவனைக் குறிக்கிறது. ஓம் பிரணவம் என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது, இறைவனின் மகிமையைக் குறிக்கும் ஒலி அல்லது ஒலி வடிவம்! வேதங்களின் சாரம் அனைத்தும் ஓம் என்ற மந்திரத்தில் அடங்கியுள்ளன. இறைவன் ஓம் அத: என்ற ஒலிகளை எழுப்பிய பிறகே சிருஷ்டியைத் தொடங்கினான் என்று கூறப்படுகிறது. எனவேதான் எந்த ஒரு வேலையைத் தொடங்கவதற்கு முன்பும் ஓம் என்று கூறுவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. ஓம் என்று கூறும்பொழுது எழும் ஓசை ஒரு மணியின் ஓசை போல் எதிரொலிக்க வேண்டும். அந்த ஒலி மனதை அமைதியில் ஆழ்த்தி ஒருமுகப்படுத்துகிறது. மனம் இந்த நுட்பமான ஒலியால் மூழ்கடிக்கப்படுகிறது. ஞானத்தை நாடுபவர்கள் ஓம் எனும் மந்திரத்தின் ஆழ்ந்த கருத்தில் மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்து முக்தியடைகின்றனர். ஓம் பலவிதமாக எழுதப்படுகிறது. பொதுவாக எங்கும் பயன்படுத்தும் வடிவம் விநாயகரைக் குறிக்கிறது. ஓம் என்ற எழுத்தின் மேல் உள்ள வளைவு தலையையும், அடிப்பாகம் வயிறையும், பக்கத்தில் உள்ள வளைவு துதிக்கைகளையும் குறிக்கின்றன. புள்ளிடன் கூடி அரைவட்டம் விநாயகரின் கையையும் அதில் உள்ள மோதகத்தையும் குறிக்கிறது. இவ்வாறு ஓம் வாழ்க்கையின் லட்சியம். அதனை அடையும் வழி, படைக்கப்பட்ட உலகம், படைப்பின் பின்னே உள்ள பேருண்மை, புனிதமான மற்றும் உலகாயதமான பொருட்கள், உருவமுள்ளவை, உருவமற்றவை ஆகிய அனைத்தையும் குறிப்பதாக உள்ளது.

No comments:

Post a Comment