Monday, September 18, 2023

ஆன்மிகப் பாதையிலிருந்து நம்மை விலகத் தூண்டும் எட்டு காரணிகள்



நம் எண்ணங்கள்தான் நம்மை இயக்குகின்றன. ஒரு நாளைக்கு பல ஆயிரக்கணக்கான எண்ணங்கள் நம் மனதில் தோன்றினாலும், அடிப்படையில் இந்த எண்ணங்கள் அனைத்தையும் இரண்டு ரகங்களுக்குள் அடக்கமுடியும்.

ஒன்று, நம்மை இயக்கும் சக்தியான பரம்பொருளைப் பற்றிய சிந்தனை (இது சில நேரங்களில், சிலருக்கு மட்டும்). இரண்டாவது, நம் வாழ்க்கையைப் பற்றியது (பெரும்பாலான மற்ற நேரங்களில்). இந்த இரண்டு சிந்தனைகளைத் தவிர வேறு எதைப் பற்றியும் நாம் யோசிப்பதில்லை.

பரம்பொருள் சிந்தனை என்பது பொதுவாக ஆன்மிக அல்லது தெய்வீகச் சிந்தனை. கடவுள் பக்தி, அல்லது பக்தி சம்பந்தப்பட்ட காரியங்கள், கோவில்கள், தானம், தியானம், போன்றவையாக இருக்கலாம். பக்தி சித்தாந்தத்தைக் கடந்து ஞானமார்கம் தேடுபவர்களுக்கு தங்கள் உண்மையான இயல்பைத் தேடும் ஆத்ம சிந்தனையாக இருக்கலாம். இந்த உயர்நிலை சிந்தனையில்லாதபோது, நம்மைச் சுற்றியுள்ள இந்த உலகோடு நம் புலன்கள் உறவாடுவதை மையமிட்டே நம் எண்ணங்கள் பிரதிபலிக்கின்றன. இதைச் சார்ந்தே நம் வாழ்க்கைப் பயணமும் அமைகிறது.

வாழ்க்கை பற்றிய சிந்தனையில் பெரும்பாலும் நாம், நம் குடும்பம், உறவுகள், நம்மைச் சுற்றியுள்ள உலகம், ஆசைகள், வேட்கைகள், நல்லவை, கெட்டவை, தேவை, தேவையில்லாதவை, பயன்படக்கூடியவை, பயனில்லாதவை போன்ற சிறிய, சம்சார வட்டத்துக்குள் சிக்கிக்கொள்கிறோம். இத்தகைய சிந்தனைகளால், சம்சார வட்டத்துக்குள் இருந்து வெளிவரமுடியாமல் நம்மைத் தடுத்து சீர்குலைக்க வைக்கும் எட்டு நாசக் காரணிகளைப் பற்றி பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அழகாக விளக்குகிறார்.

த்யாயதோ விஷயா புன்ச சங்க தேஷுபஜாயாதே சங்காத் சஞ்சாயதே காம காமாத் கிக்ரோதோ பிஜாயாதே க்ரோதாத் பவதி சம்மோஹ சம்மோஹாத் ஸ்முருதி விப்ரமஹ ஸ்முருதி பரன்ஷாத் புத்தி நாஷோ புத்தி, புத்தி நாஷாத் பிரணஷ்யதி (அத்யாயம் 2, ஸ்லோகம் 62,63)

புலன்களுக்கு சுகத்தை தரும் பொருள்களின் மேல் எண்ணங்கள் லயிக்கும்போது (த்யாயதே), மனம் அவைகளோடு ஒட்டிக்கொள்கிறது (சங்க-இணைப்பு). சதா அவைகளைப் பற்றியே நினைத்து வட்டமிட்டுகிறது. ‘அது எனக்குக் கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்?’ என்று அந்தப் பொருளின் மேல் ஆசையைத் (காமம்) தூண்டுகிறது. இந்த ஆசை சிந்தனை தொடரும்போது, ‘அதை அடையாமல் விடப் போவதில்லை’ என்ற ஒரு வேகமும் வெறியும் உண்டாகிறது. ஆசை பேராசையாக மாறுகிறது. அது தடை படும்போதோ, அல்லது கிடைக்காமல் போகும்போதோ அது ஏமாற்றமாக மாறுகிறது. ஏமாற்றம் கோபத்தைத் (க்ரோதம்) தூண்டுகிறது.

கோபம் நம் மனதை இரண்டு வகையில் பாதிக்கிறது. முதலில் தெளிவாக யோசிக்கும் திறமையை மூடி மறைக்கிறது (சம்மோஹத்-மறைத்தல்). அது குழப்பத்தை ஏற்படுகிறது (விப்ரமஹ-குழப்பம்). இதனால் கற்றுக்கொண்ட நல்ல விஷயங்கள் (ஆன்மிக சிந்தனை உட்பட) மறந்துபோகின்றன (பரன்ஷாத்-மறப்பு). இதனால் புத்தி தடுமாறுகிறது (புத்தி நாசம்). சரியான முடிவு எடுக்கமுடியாமல் தவறான பாதையில் சிக்கிக் கொள்கிறோம். ஆன்மிக சிந்தனை தடைபடுகிறது. தவறான பாதையில் சிக்கிக் கொண்டபிறகு நாம் சந்திக்கும் பிரச்சனைகள் பெரிதாகும்போது அவைகளிலிருந்து விடுபடுவது முக்யமாகி, அவைகளுக்கும் விடைதேடுவதே நம் முதல் பணியாகிறது.

இந்த முயற்சியில் அவ்வப்போது ஆறுதல் கிடைக்க மீண்டும் எளிய வகையில் உடனடி நிவாரணம் தரும் ஆன்மிகம் தேடுகிறோம். எதிர்பார்த்த நிவாரணம் கிடைக்காத போது ஆன்மீகத்தின் மீதும் தெய்வீகத்தின் மீதும் நம்பிக்கை குறைந்து ஏமாற்றம், வெறுப்பு ஏற்படுகிறது. இதனால்தான் நம்மில் பெரும்பாலோர் ஆன்மிகத்தில் முழு ஈடுபாடு கொள்ளமுடிவதில்லை. நாம் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு என்று இருந்தால் அது ஆன்மிகம் மட்டுமே என்பதையும் நம்மால் ஏற்றுக்கொள்ளவோ உணரவோ முடிவதில்லை.

இதை எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மூன்று வகையான உயிரோட்டங்கள் உள்ளன. இவை அவனுக்குள் சதா உள்நோக்கி பாய்ந்துகொண்டுள்ளன. அவை ஞான உயிரோட்டம், கர்ம உயிரோட்டம், மற்றும் ஸ்வபாவ உயிரோட்டம். இவைகளின் ஓட்டத்தைப் பொறுத்தே அவன் உள், வெளி உலக நடவடிக்கைகள் உள்வாங்கப்பட்டு வெளிப்படுத்தப் படுகின்றன.

ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ளுதல், புரிந்துகொள்ளுதல், உணர்ந்துகொள்ளுதல் போன்ற இவை அனைத்தும் ஞான உயிரோட்டத்தால் ஏற்படுவது. எந்த ஒரு காரியத்தையும் செய்யும் விதம் பற்றிய வரையறைகளை தேர்வு செய்வது கர்ம உயிரோட்டம். நாம் பிறக்கும்போதே நமக்குள் பிரத்யேகமாக உருவான உள்நிலை பரிவர்தனைகளை (பாவனைகளை) வெளிக்காட்டுவது ஸ்வபாவ உயிரோட்டம்.

இங்கே ஸ்வபாவ உயிரோட்டம் பற்றி நிறைய தெரிந்து கொள்வது அவசியம். இதை ‘ஸம்ஸ்க்காரம்’ என்று குறிப்பிட்டு சொல்கின்றன வேதங்கள். இது ஒரு வகையான எண்ணச் சுமைகள் (நினைவுச் சுவடுகள்). நல்லவை, தொல்லை தருபவை சேர்ந்த ஒரு கலவை. பிறந்ததிலிருந்து நாம் பார்த்த அனுபவங்கள், சில நிகழ்வுகள், ஆறாத வடுக்கள், சோகம் அல்லது சுகம் தரும் நினைவுகள் (சென்ற பல பிறப்புகளிலிருந்தும் கூட இருக்கலாம்) ஆகியவை நம் மனதில் பதியவைக்கின்றன. இவை ஆழ்மனதில் பத்திரமாக பாதுகாக்கப் படுகிறது. இந்த எண்ணச் சுவடுகளின் தாக்கங்கள் செயல் வெளிப்பாடுகளாக வெளிபடுகின்றன. இது ஒரு வகையான ஸ்திர நிலை. சாதாரணமாக மாற்றிக்கொள்ளவோ அழிக்கவோ முடிவதில்லை. தேவைப்படும்போது இவை மனதைவிட்டு கொப்பளித்துக்கொண்டு வெளிவருகிறது.

சிலர் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப் படுவது, சந்தேகப் படுவது, ஆதங்கப் படுவதைப் பார்க்கிறோம். சிலர் எதற்கும் அசராமல், மிகப் பெரிய இன்னல்களையெல்லாம் கூட சர்வ சாதாரணமாக கையாள்வதையும் பார்க்கிறோம். கூச்சம், குறும்பு, கிண்டல், அமைதி, உரக்கப் பேசுவது, மென்மையாகப் பேசுவது, கூர்ந்து கவனிப்பது, மரியாதையான நடத்தை, பக்தி, சிரித்துப் பேசுவது, இப்படி ஒவ்வொருவருக்கும் என்று ஒரு தனிப்பட்ட பாவனை (ஸ்வபாவம்) இருக்கிறது. இதை சாதாரணமாக அழிக்கவோ அல்லது அதன் பிரதிபலிப்பிலிருந்து விடுபடுவது என்பது சுலபமான காரியம் அல்ல.

பெரும்பாலான நேரங்களில் ஸம்ஸ்க்காரங்களின் உந்துதல்படியேதான் புத்தி முடிவு எடுக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே நாம் பல காரியங்களை தெரிந்தோ தெரியாமலோச் செய்கிறோம், பின்னர் அவைகளின் (நல்ல அல்லது தீய) விளைவுகளையும், பலன்களையும் ஏற்றுக்கொண்டு அனுபவிக்கிறோம். செம்மைபடாத நம் எண்ணங்களே நமக்கு எதிராக திரும்பி, எப்படி நம்மை அழிக்கின்றன பார்த்தீர்களா? இவைகளை பிராரர்த கர்மவினைகள் என்கிறது வேதங்கள். ஆக நமக்குள்ளே சேர்த்துவைத்திருக்கும் இந்த ஸ்வபாவங்களை எப்படி சீர்ப்படுத்துவது? செம்மைப்படுத்துவது?

செம்மை படாத ஸ்வபாவம் எப்படி ஆபத்தானது என்பதை துரியோதனின் மனப் போக்கை உதாரணமாக வைத்து விளக்குகிறது ஸ்ரீமத் மஹாபாரத புராணம். இதில் ஒரு ஸ்வாரஸ்யமான தகவலை இங்கே சொல்லித்தான் ஆகவேண்டும். மஹாபாரத புராணத்தை தன் வாழ்நாளில் முதன் முதலாகக் கேள்விப்பட்ட ஒரு நாத்திக நண்பர் என்னை ஒரு கேள்வி கேட்டார். மிகப் பெரிய ஞான தத்துவங்களை ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு போதித்திருப்பது சரியா என்றுத் தெரியவில்லை. சாதுவான, சாத்வீகமான அர்ஜுனனுக்கு இது பெரிதாகப் பயன்படப் போவதில்லை. இவ்வளவு தத்துவக் குவியல்களையும் நியாய தர்மங்களையும் இந்தக் கதையின் முக்கிய வில்லனான துரியோதனனுக்கு சொல்லியிருந்தால் ஒரு வேளை அவன் மனம் மாறி, யுத்தமும் அழிவும் இல்லாமல் தவிர்த்திருக்கலாமே?

நியாயமான கேள்வி. இது பரம்பொருளான ஸ்ரீ கிருஷ்ணனுக்குத் தெரியாதா? யுத்தத்துக்கு முன்னரே துரியோதனனைச் சந்தித்து அவனுக்கு நல்ல விஷயங்களை போதிக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர். ஆனால் துரியோதனின் ஸ்வபாவம் நல்ல விஷயங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாதது. ‘நீ சொல்லும் தர்மம், அதர்மம், நியாயம், அநியாயம், நல்லது, கேட்டது எல்லாம் எனக்கும் தெரியும் கண்ணா! நானும் குருகுலத்தில் கற்றவனே. ஆனால் தர்மத்தையும், நியாயத்தையும், நல்லவைகளையும் ஏற்றுக்கொள்ள என் மனம் மறுக்கிறதே! என் மனம் சொல்லும் அதர்ம, அநியாய, கெட்ட விஷயங்களை, அவைகளின் உந்துதல்களை என்னால் எதிர்க்க முடியவில்லையே! என் மனம் எடுக்கும் முடிவுதான் என்னுடையது’ என்று ஆணித்தரமாக அத்துணை போதனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான்.

சாட்சாத் பரம்பொருளே வந்து நல்லவைகளை போதித்தாலும், அவன் ஸ்வபாவம் அவனை எப்படி தடுக்கிறது பாருங்கள். இந்த பாவனைதான் அவன் அழிவுக்குக் காரணமானது. அதனால்தான் மனதையும், எண்ணங்களையும், பாவனைகளையும் கட்டுப்படுத்தும் திறமைகொண்ட அர்ஜுனனுக்கு ஞானபோதனை செய்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர். இந்த போதனைகள் அர்ஜுனனுக்கு மாத்திரம் அல்ல, நம் எல்லோருக்கும் சேர்த்துதான்.

அன்று துரியோதனன் பேசியது நிதர்சனமாக உண்மை. இது அவன் பிரச்சனை மட்டுமல்ல. இன்று இதுவே நம் பெரும்பாலோரின் மிகப் பெரிய பிரச்சனை. நம் வளர்ப்பு, படிப்பு, புத்தி, அந்தஸ்து, நாகரீகம் அனைத்தும் இருந்தாலும் சில நேரங்களில் நாம் மற்றவர்களிடம் கேவலமாக நடந்துகொள்ளும் விதம், ஸம்ஸ்காரங்கள் பிராரர்த கர்ம வினைப்படி எப்படி நம்மைக் கட்டுப்படுத்துகிறது என்பதற்கான உதாரணம். அதனால் பலவிதமான சிக்கல்களில் தொடர்ந்து சிக்கி அல்லல் பாடுகிறோம் என்பதைக் கண்கூடாக அனுபவித்து வருகிறோம்.

அப்படியென்றால் சதா இந்த ஸம்ஸ்க்கார மாயத்தில் சிக்கி உழன்றுக்கொண்டிருக்க வேண்டியதுதானா? தேவை இல்லை. இங்கேதான் ஆன்மிக நிவாரணம் உதவுகிறது.

ஒரு விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஸ்வபாவம் என்பது நம் உண்மையான இயல்பு அல்ல. நம் மனம் காட்டும், எண்ணங்களால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிலை. ஆனால் இதுதான் நம் உண்மையான இயல்பு என்று ஏற்றுக்கொண்டு இந்த நிலையிலிருந்து விடுபட நாம் முயல்வதே இல்லை. இது நம் உண்மையான இயல்பை நாம் உணரவே முடியாமல் தடுக்கும் மிகப் பெரிய தடை.

இதற்கு என்ன நிவாரணம்? நம் உண்மை இயல்பை உணர்வது என்பது நம் உண்மையான ஸ்வரூபமே தெய்வீகம் என்பதை உணருவது!

இது எப்படி சாத்தியம்? நம் அறியாமையால் இந்த உடல், உள்ளம், எண்ணங்கள், புத்தி கொண்ட கலவையே ‘நாம்’ என்று தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறோம் , இதுவே நம் இயல்பு என்றும் நம்புகிறோம். இந்தப் புலன் கல்வைகளால் ஏற்படும் அனைத்து சிக்கல்களையும் நம்முடையது என்று ஏற்றுக்கொண்டு மேலும் அல்லல்படுகிறோம். அதனால் தொடர்ந்து தவறு செய்து பிரச்சனைகளில் சிக்கிக்கொள்கிறோம் என்று சுட்டிக்காட்டுகின்றன வேதங்கள்.

நம் அனைவருக்கும் ஒரே ஸ்வரூபம்- தெய்வீகம். சத்சித்ஆனந்த நிலை. ஆத்ம நிலை. ப்ரம்ம நிலை. ஆனால் ஸ்வபாவத்தால் மாறுபடுகிறோம். ஸ்ரீ கிருஷ்ணர் கூறியுள்ள எட்டு (நினைப்பு, இணைப்பு, காமம், க்ரோதம், மறைப்பு, குழப்பம், மறப்பு, புத்திநாசம்) காரணிகளுக்கும் அடிமையானவர்கள் இவைகளின் வெளிப்பாடான ஸ்வபாவங்களுக்கு அடிமையாகிறார்கள்.

நல்ல வாழ்க்கையை கடைபிடிக்க புத்தன் எட்டு வழிகளை (அஷ்டாங்க மார்க்கம்) சொல்லிச் சென்றுள்ளார். மனதை கட்டுப்படுத்த எட்டு யோக (அஷ்டாங்க யோக) முறைகளை பதஞ்சலி முனிவர்சொல்லிச் சென்றுள்ளார். அதுபோல நம்மை ஆன்மீகப் பாதையில் முனைப்போடு செல்லத் தடையாக இருக்கும் இந்த எட்டு நாச காரணிகளிலிருந்து விடுபட வேண்டிய முக்கியத்தை நமக்கு அர்ஜுனன் வாயிலாகப் போதித்துள்ளார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

செம்மைபடாத ஸ்வபாவங்களிலிருந்து விடுபட வேதங்கள் பல வழிகளைக் காட்டியுள்ளது. அந்தக் காலத்தில் குருகுலங்கள் இதற்கான முறையான பயிற்சிகளை கற்றுத் தந்துவந்தன. இன்றைக்கு இவைகளைப் பற்றி படித்து தெரிந்துகொண்டாலும், விளக்கம் சொல்லவோ, ஆழமான பயிற்சி தரவோ தகுந்த குருகுலங்களோ, குருமார்களோ இல்லை. கற்றுக்கொள்ள நமக்கு நேரமோ, முனைப்போ, வழிமுறைகளோ இல்லை.

பிறகு என்னதான் வழி? ஒன்று, நாமே போராடி முயன்று கற்றுக்கொள்வது. இரண்டாவது, நம்மைப் படைத்தவன் மட்டுமே செய்யக்கூடியது!

‘அவித்ய-காம-கர்ம’ என்பது ஒரு ஆபத்தான வாழ்வியல் வட்டம். தவறானக் கல்வி (அவித்ய அல்லது அறியாமை) தேவை இல்லாத இச்சைகளை (காம) உருவாக்கும். இச்சைகளின் எதிர்மறை விளைவே கர்ம வினைப்பலன்கள். நாம் பார்ப்பது, உணர்வது அனைத்தும் நம் உண்மை இயல்பு நிலை பற்றிய அறியாமையால் ஏற்படும் தோற்றங்கள். இதிலிருந்து ‘உண்மையை’ அறிந்து பிரித்து எடுக்க கடும் பயிற்சியும் உழைப்பும் தேவை. மனதை ஒருநிலைப் படுத்தும் தியானம், மந்த்ர ஸ்மரணை, பக்தி வழிபாடு, தர்மகாரியங்கள் செய்வது போன்றவை ஓரளவுக்கு பலன் தரும். இது மிகவும் கஷ்டமான காரியம்.

அவித்ய-காம-கர்ம வட்டத்திலிருந்து விடுதலை பெற அனைத்தும் உணர்ந்த ஒரு பிரம்மகுருவின் உதவியும், ஆசீர்வாதமும், வழிகாட்டுதலும் இல்லாமல் இது சாத்தியமில்லை. ஆனால் அத்தகைய குருவை எங்கே எப்படி அடையாளம் காண்பது?

அப்படிபட்ட காணற்கரிய ஒரு அதிசய குருவைத்தான் வேலூர் மாவட்டம் (தற்போது திருப்பத்த்தூர் மாவட்டம்) ஆம்பூர் அருகே அமைத்திருக்கும் உலகின் 13வது ஜோதிர்லிங்கத் திருத்தலமான சென்னப்பமலையில் காண்கிறோம். பிரம்மகுரு ஸ்ரீ கோடிதாத்தாஸ்வாமிகள் முக்காலம் உணர்ந்தவர். சதா அருவ ரூபத்தில் சஞ்சரிப்பவர். தேவைப்படும்போது தன் சீடன் ஸ்ரீ ராமநாத ஸ்வாமிகள் உடலில் ஐக்யமாகி, உருவம் கொண்டு தன்னை நாடி வரும் அன்பர்களின் மனதையும், எண்ணங்களையும் சுத்தப்படுத்தி, ஸ்வபாவ எதிர்மறை எண்ணங்களை நேர்மறையாக்கி, சீர் செய்து, செம்மைபடுத்தி, நம்பிக்கை தந்து, தைரியத்துடன் வாழ்க்கைப்பயணம் தொடர இந்த குரு வழிவகை செய்கிறார்.

No comments:

Post a Comment