Monday, June 27, 2022

வாராஹி அன்னையை வணங்கும் முறை

வாராஹி என்பவர், பெரும் ஆற்றல் வாய்ந்த பெண் தெய்வமாக விளங்குகிறார். சப்த மாத்ரிகைகள் எனப்படும் 7 அன்னை இறைவிகளுக்குள், இவரும் ஒருவராகத் திகழ்கிறார். பகவான் விஷ்ணுவின் வராக அவதாரத்தின் சக்தி வடிவமாக, அதாவது பெண்மையின் ஆற்றலாக இவர் விளங்குகிறார். எனவே இவர் வாராஹி என அழைக்கப்படுகிறார். விஷ்ணுவின் வராக வடிவத்தைப் போலவே, இவரும், காட்டுப் பன்றியின் முகத்துடனும், மானுடப் பெண்ணின் உடலுடனும் காட்சி தருகிறார். விஷ்ணுவுடன் தொடர்புடையவராக இருந்தாலும், வைணவத்தில் மட்டுமின்றி, சிவபெருமானை வழிபடும் சைவ சமயத்திலும், சக்தி எனப்படும் தேவியை வழிபடும் சாக்த சமயத்திலும் கூட, இவர், மக்களால் மிகவும் பக்தியுடன் போற்றி வணங்கப்படுகிறார். வாராஹி மாதா வழிபாடு வாராஹி வழிபாடு என்பது பண்டைய காலங்களிலிருந்தே மக்களிடையே பிரபலமாக இருந்து வருகிறது. மார்க்கண்டேய புராணம், வராக புராணம், தேவி புராணம் போன்ற பல புராணங்களும், இவரது அவதாரம், பெருமை, இவர் நிகழ்த்திய வீர தீரச் செயல்கள் போன்றவற்றைக் குறித்து, விரிவாகவும், புகழ்ந்தும் பேசுகின்றன. பல நூற்றாண்டுகள் பழமையான வாராஹி ஆலயங்களும், இந்தியாவிலும், அண்டை நாடான நேபாளத்திலும் உள்ளன. மா வாராஹியையும் நாம், மற்ற தெய்வங்களை வணங்குவது போலவே வணங்கலாம். பூஜை அறையிலோ, அதற்குரிய தூய்மையான இடத்திலோ வாராஹி மாதாவின் சிலையையோ, படத்தையோ வைத்து, அதை சந்தனம், குங்குமம், மலர்கள் போன்றவற்றால் அலங்கரித்து, பழங்கள், பிரசாதங்கள் போன்றவற்றைப் படைத்து, அவருக்கு உரிய மந்திரங்கள் ஓதி, அர்ச்சனை, பூஜை முதலியன செய்து, அவரை வழிபட்டு, அவரது அருளை நாம் பெறலாம். மா வாராஹி வழிபாடு என்பது இது போன்று செய்யப்படுகிறது என்றாலும், அவரை வணங்கும் முறை என்பது, இது போன்ற சடங்கு, சம்பிரதாயங்களுக்கு அப்பாற்பட்டது என்பது தான் உண்மை. வாராஹி வேண்டுவது என்ன? கடவுள் என்பவர், உண்மையான பக்தியையே எதிர்பார்ப்பவர்; அதையே ஏற்றுக் கொள்பவர் ஆவார். மக்கள் அவரை ஆணாகக் கருதி வழிபட்டாலும் சரி, இல்லை பெண்ணாகக் கருதி வழிபட்டாலும் சரி; அல்லது எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் சரி; அவர் உண்மையான அன்பு ஒன்றுக்கே வசப்படுபவர். இது அன்னை வாராஹிக்கும் பொருந்தும். ஆம், அவரை வணங்குபவர்களிடமிருந்து அவர் எதிர்பார்ப்பதெல்லாம், உண்மையான பக்தி ஒன்றையே. உண்மையான பக்தி என்பது, தூய்மையான உள்ளத்திலிருந்தே உருவாகக் கூடியதாகும். எனவே தான், தூய்மையான உள்ளத்தையே இறைவன் குடியிருக்கும் இடம் என, மகான்களும், புராணங்களும் உறுதியாகக் கூறுகின்றன. எனவே, மாசு, மலங்கள் எதுவும் அண்டாத, நிர்மலமான மனமே, வராஹி அன்னை வழிபாட்டிற்கு அடிப்படையாக விளங்குகிறது. சரி, இது போன்ற தூய்மையான மனதை அடைவது எப்படி? இது போன்ற விலைமதிக்க முடியாத ஒன்றுடன் இந்த தேவியை அணுகுவது எப்படி? இந்தக் கேள்விகளுக்குக் கிடைக்கும் விடையே, வாராஹி தேவியை வணங்கும் முறையாக அமைகிறது. வாராஹி அன்னையை வணங்கும் முறை பெரும் ஆற்றலும், உக்கிரமும் கொண்ட வராஹி தேவி, கருணையும் நிறைந்தவள் ஆவார். தூய பக்தியுடன் அவரைச் சரணடைந்தவர்களின் பயத்தைப் போக்கி, துன்பங்களை நீக்கி, வேண்டியதைத் தரக் கூடியவர் ஆவார். இவரது அருளைப் பெறுவதற்கு, நாம், நம் உள்ளத்தையே பண்படுத்திக் கொள்வது அவசியம். பொய், புரட்டு, கோபம், பொறாமை, பேராசை, அகம்பாவம் போன்றவற்றை, நம் மனதிலிருந்து முழுமையாக அகற்றி விட வேண்டும். இது போன்ற எதிர்மறை உணர்வுகளுக்கு இடம் அளித்து விடாமல் விழிப்புடன் இருப்பது, அன்னையை நம் உள்ளத்தில் வரவேற்று, அமர வைத்து, வணங்குவதற்கு மிகவும் தேவையான ஒன்றாகும். பிறர் மீது பகைமை பாராட்டுவது, வெறுப்பை உமிழ்வது, தூற்றுவது, சபிப்பது, மனதை வருந்தச் செய்வது, அவர்களைப் பற்றி மற்றவர்களீடம் தவறாகப் பேசுவது, பிறருக்குத் துன்பம் விளைவிப்பது, பிறர் படும் துயரத்தைக் கண்டு மகிழ்வது, போன்றவற்றை எந்த நிலையிலும் செய்யாமல் இருப்பதும், வாராஹியின் அருள் பெற அவசியமாகும். வாழ்க்கையில் நமக்கு எது தேவை, அதை எப்பொழுது நமக்குக் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம், நம்மை விட, இந்த அன்னைக்கு நன்றாகவே தெரியும். எனவே, ‘இது வேண்டும், அது வேண்டும்’ என்றெல்லாம் அவரிடம் நாம் கேட்க வேண்டிய தேவையே இல்லை. ஆனால், நாம் படும் துன்பம், நமக்குள் எழும் ஆசை போன்றவை, பல நேரங்களில் நம்மை, இறைவியிடம் பலவற்றை வேண்டிக் கேட்கத் தூண்டுகின்றன. இதில் தவறொன்றும் இல்லை. ஆனால், எந்தக் காரணத்தைக் கொண்டும், நமக்குப் பிடிக்காதவர்களுக்கோ, நாம் எதிரி எனக் கருதுபவர்களுக்கோ துன்பம் தரும் படி தேவியை வேண்டுவது, மிகவும் தவறான செயலாகும். அனைத்தும் அறிந்த இந்த தெய்வத்திற்கு, யாருக்கு எதைத் தர வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். எனவே, இது போன்று பிறருக்குத் தீமை தர இறையருளை வேண்டுவது, நமக்கே தீங்கு விளைவிக்கும் ஒன்றாகவே அமைந்து விடும். இதற்கு பதிலாக, மற்றவர் எப்படி இருந்தாலும் சரி, அவருக்காகவும், அவர் நலனுக்காகவும் அன்னையிடம் நாம் பிரார்த்தனை செய்தால், அன்னையின் கருணை, நமக்குப் பலமடங்கு கிடைக்கும். இவற்றுடன் நாம், எப்பொழுதும், நியாய தர்மத்தை ஆனுசரித்து நடந்து கொள்வதும் அவசியம். நம் ஒவ்வொரு அசைவையும் அன்னை அறிவாள் என்பதால், எண்ணம், பேச்சு, செயல் என அனைத்திலும் நேர்மையைக் கடைபிடிப்பது, இந்த இறைவியை மகிழ்விக்கும் வழியாக விளங்குகிறது. ‘அன்னையை நான் சிறப்பாக வழிபடுகிறேன்; அவரது அருள் எனக்கு முழுமையாக இருக்கிறது; எனவே, பிறரை விட நான் உயர்ந்தவன்; எனக்கு ஈடு, இணை இல்லை’ என்றெல்லாம், பெருமை பேசுவது, கர்வம் கொள்வது போன்றவை, இந்த இறைவியின் கோபத்தைத் தான் பெற்றுத் தரும். இதன் விளைவுகள் கடுமையாக இருக்கக் கூடும். எனவே, இவற்றைத் தவிர்ப்பது அவசியம். இது போன்ற நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றி, அவரைத் தூய உள்ளத்துடன் உண்மையாக வணங்குபவர்களின் இதயத்தில், அன்னை வாராஹி, மகிழ்ச்சியுடன் குடியேறுவார். தடுக்க வேண்டியதைத் தடுத்து, அளிக்க வேண்டியதை உரிய நேரத்தில் அளித்து, வருங்கால நிகழ்ச்சிகள் குறித்து முறையாக எச்சரித்து, அவரது அருளாசியுடன் நம் வாழ்க்கையை, நன்கு வழி நடத்திச் செல்வார்.

No comments:

Post a Comment