Thursday, May 31, 2018

வாழ்வையே வரமாக்கும் வராஹி... பஞ்சமி வழிபாடு மறக்காதீங்க!

பஞ்சமி திதியில் வராஹிதேவியை வழிபடுங்கள். வாழ்வில் வரம் தருவதிருக்கட்டும். நம் வாழ்வையே வரமாக்கித் தந்தருள்வாள் அன்னை!
சப்த மாதர்களில் வாராஹியும் ஒருவர். ஆனால், அத்தனை பேரிலும் காரியத்திலும் வீரியத்திலும் வேகம் கூட்டி, அருளும் பொருளும் தருகிற மகாசக்தி கொண்டவள் வாராஹி என்று போற்றுகின்றனர் பக்தர்கள்!
பஞ்சமி திதியில் வாராஹிதேவியை மனதார வழிபட்டால், எதிர்ப்புகளையெல்லாம் துவம்சம் செய்வாள். தீயசக்திகளை அடித்து விரட்டுவாள். காரியம் யாவிலும் துணையிருப்பாள். செயலில் பலமும் பலனும் தந்தருள்வாள் என்பது ஐதீகம்!
வாராஹிதேவிக்கு, பூண்டு கலந்து, தோல் நீக்காத உளுந்த வடை ரொம்பவே விசேஷம். நவதானிய வடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம் நைவேத்தியம் செய்தால், குளிர்ந்து மகிழ்ந்து அருள்வாளாம் அன்னை!
மொச்சை, சுண்டல் நைவேத்தியம் செய்வதும் சிறப்பு. சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்தால், அந்த வெல்லக் கரைசல் போல், நம் வாழ்வில் இன்பத்தையும் நிம்மதியையும் சேர்த்துக் கலந்திடுவாள் வாராஹிதேவி!
மிளகும் ஜீரகமும் கலந்த தோசை, குங்குமப்பூவும் சர்க்கரையும் ஏலக்காயும் லவங்கமும் பச்சைக்கற்பூரமும் கலந்த பால், கறுப்பு எள்ளுருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் நைவேத்தியமாகச் செய்து தேவியை வணங்கலாம்.
வரமெல்லாம் தருவாள் வாராஹி. வாழ்வெல்லாம் துணை நிற்பாள் நம் அன்னை!

No comments:

Post a Comment