Wednesday, June 11, 2014

ஆவதும் பெண்ணாலே.. அழிவதும் பெண்ணாலே... என்பதன் பொருள் தெரியுமா?

பெண்களை தெய்வமாக வழிபட்டு வந்த நாடு நம் நாடு. ஒவ்வொரு பெண்மணியையும் அம்பாள், பரமேஸ்வரியாகவே பாவித்து மரியாதை செய்தனர். அந்தக் கால பெண்களின் தியாகமும், மகத்தானதாக இருந்தது. இப்படிப்பட்ட பெண்மணிகளை பரமேஸ்வரியாக பாவித்து, சுவாசினி பூஜை செய்வதைப் பார்த்திருக்கலாம். இவர்களுக்கு புது வஸ்திரம் அளித்து, புஷ்பம், மங்கல திரவியங்கள் கொடுத்து, பலகையில் உட்கார வைத்து, பூஜை செய்து நமஸ்காரம் செய்வர். இதில், வயது கணக்கில்லை. சுவாசினி என்றால் நமஸ்காரம் செய்யலாம், அவர்களும் அட்சதை போட்டு ஆசீர்வதிக்கலாம். பல இடங்களில் இந்த சுவாசினி பூஜையை ஏராளமான பொருட்செலவில் வசதி படைத்தவர்கள் நடத்துகின்றனர். இதில், சுவாசினியாக உட்காருவதும் அல்லது தரிசனம் செய்வதும் கூட மகத்தான புண்ணியம்.

ஸ்ரீவித்யா பாசனையில் இந்த சுவாசினி பூஜைக்கு, விஸ்தாரமாக விளக்கம் சொல்லப்பட்டுள்ளது. ஏதோ பொம்பளைதானே என்று அலட்சியமாகப் பேசக் கூடாது. "ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே... என்று ஒரு வாக்கியம் உண்டு. இதற்கு, பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்றும், அழிக்கவும் முடியும் என்றும் (ஒரு குடும்பத்துக்கு நல்லது ஏற்படுத்துறதும் பெண்கள் தான், அதேசமயம் குடும்பத்துக்கு ஏதாவது தீங்கு வரப்போகுதுன்னா முன்கூட்டியே தெரிஞ்சுகிட்டு அதை அழிச்சு, குடும்பத்தைக் காப்பாத்தறதும் பெண்கள்தான்.) என்றும் விளக்கம் கூறுவர். சீதையால் ராவணனும், திரவுபதியால் கவுரவர்களும் அழிந்தனர் என்று உதாரணம் சொல்வர். அது, அவ்வளவு பொருத்தமானதல்ல. அம்பிகை, பராசக்தி பெண். அவள் தான் உலக மக்களை ஆக்கவும், காக்கவும், அழிக்கவும் வல்லமை படைத்தவள். அவள் இந்த மூன்று தொழில்களையும் திறம்பட நடத்தி வருகிறாள். அதனால், ஆவதும், அழிவதும் பெண்ணாலே என்பது இங்கு பொருந்தும். இதற்கான பல கதைகள் புராணங்களில் உள்ளன.

அம்பிகையையே சுவாசினியாகச் சொல்லப்பட்டுள்ளது. அதுவுமின்றி அம்பாளின் நெற்றியிலே குங்கும திலகம் பிரகாசிக்கிறதாம்; வாக்கிலே தாம்பூலம் கமழுகிறதாம். சிவானந்த லஹரி ஸ்தோத்திரத்தில் ஆதிசங்கரர் இதைப் பற்றி ஸ்லோகம் இயற்றியுள்ளார். பெண்கள் நெற்றியில், மஞ்சள் பூசி குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகிறது. கைகளில் கண்ணாடி வளையலும், கால்களில் சலங்கையுடன் கூடிய கொலுசும் அணிய வேண்டுமாம். கையில் உள்ள கண்ணாடி வளையல் சப்தமும், கால்களில் உள்ள கொலுசின் சலங்கை சப்தமும் கேட்டு, அம்பாள் மகிழ்ந்து, கூடவே இருப்பாளாம். அம்பாளுக்கு எது பிரியமோ அதைச் செய்வது நல்லது. இப்படியெல்லாம் அலங்காரம் செய்து, அம்பாளாகவே விளங்கலாமே! பெண்கள் தலையில் நேர் வகிடு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூட சொல்லப்படுகிறது. அதற்கான காரணங்களையும் சாஸ்திரம் சொல்கிறது. பெண்கள் தினமும் தாம்பூலம் தரித்துக் கொள்ள வேண்டும். வாய் நிறைய வெற்றிலை போட்டு, வாய் கோவைப் பழம் போல் சிவப்பாக இருக்க வேண்டும் என்று கூட சொல்லப்பட்டுள்ளது. அப்போ, அம்பாளின் ஆசையை நிறைவேற்றி, பூலோக அம்பாளாகவே மாறி விட்டால், நம்மைப் பார்த்து மகிழ்ந்து, நமக்கு வேண்டிய அனுக்கிரகம் செய்வாள்.

No comments:

Post a Comment