Wednesday, January 12, 2011

சரஸ்வதி வழிபாடு- தமிழ்

சரஸ்வதி வழிபாடு- தமிழ்  
ஸ்ரீ சரஸ்வதி  பாடல்கள் (கல்வியில் நினைவாற்றல் பெருக)

வெள்ளை தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளையின்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத் திருப்பாள்
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொரு ளாவாள்
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்
கோதகன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப்  பெற்றாள்.    - பாரதியார்



ஸ்ரீ சரஸ்வதி கவசம் (கற்ற கல்வியினால் பலன் பெற)


சரஸ்வதி என் தலையைக் காக்க வாக்கின்
தலைவியாம் வாக்தேவி நுதலைக் காக்க
விரசு பகவதி கண்ணைக் காக்க நாசி
விமலைவாக் வாதினியாள் காக்க வித்தைக்(கு)
உரியதனித் தேவதைகள் என் உதடு காக்க
உயர்புகழ் பிராம்மிபல் வரிசை காக்க
மருவும் ஐம் என்றிடுமனு கண்டம் காக்க
வாழ் ஹ்ரீமாம் எழுதது என்றன் பிடரைக்காக்க
எழுத்தான சிரீம் என்தோள் காக்க வித்யா
திருஷ்டாத்மா என்மார்பில் இருந்து காக்க
வழுத்துவித்யா ரூபிணிஎன் நாபி காக்க
வாணிகரம் காக்க எல்லா எழுத்தின் தேவி
விழுத்தகஎன் அடிகாக்க வாக்கிற் சென்று
மேய அதிட்டான தேவதை தான் என்றன்
மழுத்தஉறுப் பெவற்றினையும் காக்க காக்க
முள் கிழக்கில் சர்வகண்ட நாசிகாக்க
அங்கியெனும் திசைக்கண்ணே நின்று பீஜாட்
சரிகாக்க மந்திரராஜத்தின் தேவி
பொங்கு தெற்கிலேயிருந்து காக்க காக்க
புகல்மூன்றக்கர வருவாள் நிருதி திக்கில்
தங்கியெனைப் புரந்தருள்க மேற்குத் திக்கில்
சாற்றுநா நுனியுறையும் அன்னை காக்க
துங்கமிகு சர்வாம்பிகை தான் வாயு
துன்னுதிசையினின் என்னைக் காக்க காக்க
கத்திய வாகினி வடக்கில் காக்க எல்லாக்
கலையினிலும் உறைவாள் ஈசானம் காக்க
நத்துசர்வ பூசிதையாள் ஊர்த்துவத்தில்
நயந்திருத்து காத்தருள்க அகோமுகத்தில்
புத்தகவா இனியாகும் தேவி காக்க
புகழ்கிரந்த பீஜத்தின் உருவாய் நின்றாள்
எத்திசைகளிலும் இருந்து காக்க காக்க
எளியேனைக் கலைமகள் தான் என்றும்.
ஸ்ரீ குங்கும மஹிமை (மங்களம் உண்டாக)
குங்கும மாவது குறைகளைத் தீர்ப்பது
குங்கும மாவது குடியினைக் காப்பது
குங்கும மாவது குணமது அளிப்பது
குங்கும மாவது கொல்வினைத் தீர்ப்பது
விதிதனை வெல்வது விமலையின் குங்குமம்
நிதிதனை ஈவது நிமலையின் குங்குமம்
பதிதனைக் காப்பது பதிவிரதை குங்குமம்
கதிதனை யாள்வதும் குங்கும மாமே
தஞ்சமென்றோரைத் தடுத்தாண்டு கொள்வதும்
பஞ்ச மாபாதகம்பரிந்துமே தீர்ப்பதும்
அஞ்ஜின பேருக் கபய மளிப்பதும்
காஞ்சி காமாக்ஷியின் குங்கும மாமே
நற்பத மீவது நாரணி குங்குமம்
பொற்பினை ஈவது பூரணி குங்குமம்
சிற்பரமாவது சிவகாமி குங்குமம்
கற்பினைக் காப்பதும் குங்கும மாமே
செஞ்சுடர் போல்வது சீரான குங்குமம்
கொஞ்சம் அழகைக் கொடுப்பது குங்குமம்
அஞ்சு புலன்களடக்கி யருள்வதும்
காஞ்சி காமாக்ஷியின் குங்குமமாமே
நோயினைத் தீர்ப்பதும் நுண்ணறி வீவதும்
பேயினைத் தீர்ப்பதும் பெரும் புகழீவதும்
சேயினைக் காப்பதும் செல்வம் தருவதும்
தாயினை அர்ச்சித்த குங்குமமாமே
சக்தி கொடுப்பதும் சத்தியம் காப்பதும்
பக்தி யளிப்பதும் பரகதி யீவதும்
முக்தி கொடுப்பதும் மும்மலம் தீர்ப்பதும்
சித்தி தருவதும் குங்குமமாமே
நெஞ்சிர் கவலைகள் நீக்கியருள்வதும்
செஞ்சொற் கவிபாடுஞ் சீரினை யீவதும்
வஞ்சப் பகைவரை வாட்டி யருள்வதும்
காஞ்சி காமாக்ஷியின் குங்குமமாமே
சிவசிவ என்றுத் திருநீறணிந்த பின்
சிவகாமியேயெனச் சிந்தித்தணிவதும்
தவமான மேலோருந்தரித்துக் களிப்பதும்
பலவினை தீர்ப்பதும் குங்குமமாமே
எவையெவை கருதிடில் அவையவை யீவதும்
நவவகை சக்தியின் நலனைக் கொடுப்பதும்
குவிசெய் கரத்துடன் கும்பிட்ட பேருக்குக்
குவிநிதி யீவதும் குங்குமமாமே
அஷ்ட லட்சுமி அருளை அளிப்பதும்
இஷ்டங்களீவதும் ஈடற்ற குங்குமம்
கஷ்டந் தவிர்ப்பதும் காத்தெனை யாள்வதும்
சிஷ்டராய்ச் செய்வதும் குங்குமமாமே
குஷ்டம் முதலான மாரோகந்தீர்ப்பதும்
நஷ்டம் வராதொரு நலனைக் கொடுப்பதும்
எட்டும் இரண்டும் அறிவித்தோர் வீடினைக்
கிட்டவே செய்வதும் குங்குமமாமே
பட்டகாலிலே படுமெனக் கஷ்டங்கள்
விட்டிடாமலே வந்துமே வாட்டினும்
பட்டான பார்வதி பாதம் பணிந்தே
இட்டார் இடர் தவிர் குங்கும மாமே
சித்தந்தனைச் சுத்தி செய்வதற்கெளியதோர்
எத்துந் தெரியாத ஏமாந்த மாந்தரே
நித்தம் தொழுதன்னை குங்குமந்தன்னை
நித்தம் தரித்துமே மேன்மை அடைவீரே
மிஞ்சும் அழகுடன் குங்கம ஆடைகள்
செஞ்சுடராகுமோர் காஞ்சி காமாக்ஷியின்
கஞ்ச மலர் முகந்தன்னிற் றிகழ்வதும்
பஞ்ச நிதி தரும் குங்கும மாமே.


சகல கலா வல்லி மாலை
1. வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்
தாங்க என் வெள்ளை உள்ளத்
தண்தாமரைக்குத் தகாது கொலோ?
சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக,
உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே!
2. நாடும் பொருள்சுவை சொற்சுவை
தோய்தர, நாற்கவியும்
பாடும் பணியில் பணித்து அருள்வாய்;
பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொன் கொடியே!
கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே!
சகல கலாவல்லியே!
3. அளிக்கும் செந்தமிழ்த் தெள்ளமுது
ஆர்ந்து, உன் அருள் கடலில்
குளிக்கும் படிக்கு என்று கூடும் கொலோ?
உளம் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர்
கவிமழை சிந்தக் கண்டு,
களிக்கும் கலாப மயிலே!
சகல கலாவல்லியே!
4. தூக்கும் பனுவல் துறைதோய்ந்த
கல்வியும், சொல்சுவை தோய்
வாக்கும், பெருகப் பணித்து அருள்வாய்;
வட நூற்கடலும்,
தேக்கும், செந்தமிழ்ச் செல்வமும்,
தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே!
சகல கலாவல்லியே!
5. பஞ்சு அப்பி இதம்தரு செய்யபொன்
பாத பங்கேருகம் என்
நெஞ்சத் தடத்து அலராதது என்னே?
நெடுந்தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்
நாவும், அகமும் வெள்ளைக்
கஞ்சத் தவிசு! ஒத்து இருந்தாய்;
சகல கலாவல்லியே!
6. பண்ணும், பரதமும், கல்வியும்
தீஞ்சொல் பனுவலும், யான்
எண்ணும் பொழுதுஎளிது எய்த நல்காய்;
எழுதா மறையும்,
விண்ணும், புவியும், புனலும்,
கனலும், கருத்தும் நிறைந்தாய்;
சகல கலாவல்லியே!
7. பாட்டும், பொருளும், பொருளால்
பொருந்தும் பயனும், என்பதால்
கூட்டும் படிநின் கடைக்கண் நல்காய்;
உளம் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால்
அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும்வெள் ஓதிமப் பேடே
சகல கலாவல்லியே!
8. சொல்விற்பனமும், அவதானமும்,
கவி சொல்லவல்ல
நல்வித்தையும், தந்து அடிமைகொள்வாய்,
நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும்
சிதையாமை நல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே!
சகல கலாவல்லியே!
9. சொற்கும் பொருட்கும் உயிராமெய்ஞ்
ஞானத்தின் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்?
நிலம் தோய் புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோடு
அரச அன்னம் நாண, நடை
கற்கும் பதாம்புயத் தாயே!
சகல கலாவல்லியே!
10. மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணிரச் செய்வாய்;
படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடி உண்டேனும்
விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ?
சகல கலாவல்லியே!


மகாகவி கம்பர் இயற்றிய சரஸ்வதி அந்தாதி


ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை-தூய
உருப்பளிங்கு போல்வாள், என் உள்ளத்தின் உள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர்.
படிக நிறமும், பவளச்செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரை போற் கையும்-துடியிடையும்
அல்லும் பகலும் அனவரத மும்துதித்தால்
கல்லும் சொல் லாதோ கவி?

நூல்

1. சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கம லாசனத் தேவி, செஞ்சொல்
தார் தந்த என்மனத் தாமரை யாட்டி, சரோருகமேல்
பார் தந்த நாதன் இசைதந்த ஆரணப் பங்கயத்தாள்
வார் தந்த சோதிஅம் போருகத் தாளைவணங்குதுமே.
2. வணங்கும், சிலைநுதலும் கழை தோளும்வன முலைமேற்
சுணங்கும், புதிய நிலவெழு மேனியும் தோட்டுடனே
பிணங்கும் கருந்தடங் கண்களும், நோக்கிப் பிரமன் அன்பால்
உணங்கும் திருமுன்றி லாய், மறை நான்கும் உரைப்பவளே.
3. உரைப்பார் உரைக்கும் கலைகள் எல்லாம் எண்ணில்
உன்னையன்றித் தரைப்பால் ஒருவர் தரவலரோ?தண்
தரளமுலை வரைப்பால் அது தந்து இங்கெனைவாழ்வித்த
மாமயிலே விரைப்பா சடை மலர்வெண் தாமரைப் பதி மெல்லியலே.
4. இயலானது கொண்டு நின் திருநாமங்கள் ஏத்துதற்கு
முயலாமையால் தடுமாறுகின்றேன்; இந்த மூவுலகும்
செயலால் அமைத்த கலைமகளே, நின் திருவருளுக்கு
அயலாய் விடாமல் அடியேனையும் உவந்து ஆண்டருளே.
5. அருணோ தயத்திலும் சந்திரோதயம் ஒத்து அழகு எரிக்கும்
திருக்கோல நாயகி, செந்தமிழ்ப் பாவை திசை முகத்தால்
இருக்கோது நாதனும், தானும் எப்போதும் இனிதிருக்கும்
மருக்கோல நாண் மலராள் என்னை ஆளும் மடமயிலே.
6. மயிலே, மடப்பிடியே, கொடியே இளமான் பிணையே
குயிலே, பசுங்கிளியே, அன்னமே மனக்கூர் இருட்கோர்
வெயிலே, நிலவெழும் மேனி மின்னே, இனி வேறுதவம்
பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனது பொற் பாதங்களே.
7. பாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும்
வேதாந்த முத்தியும் தந்தருள் பாரதி; வெள்ளிதழ் பூஞ்
சீதாம் புயத்தில் இருப்பாள்; இருப்ப என் சிந்தையுள்ளே
ஏதாம்? புவியில் பெறல் அரிதாவது எனக்கினியே !
8. இனிநான் உணர்வது எண்ணென் கலையாளே, இலகு தொண்டைக்
கனி நாணும் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமலஅயன்
தனி நாயகியை அகிலாண்டமும் பெற்ற தாயை மணப்
பனிநாள் மலர் உறை பூவையை ஆரணப் பாவையையே.
9. பாவும் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா
மேவும் கலைகள் விதிப்பாளிடம், விதியின் முதிய
நாவும், பகர்ந்த தொல் வேதங்கள் நான்கும், நறுங்கமலப்
பூவும் திருப்பதம் பூவால் அணிபவர் புந்தியுமே.
10. புந்தியில் கூரிருள் நீக்கும் புதிய மதியமென் கோ?
அந்தியில் தோன்றிய தீபம் என்கோ? நல் அருமறை யோர்
சந்தியில் தோன்றும் தபனன் என்கோ? மணித் தாமம் என்கோ?
உந்தியில் தோன்றும் பிரான் புயந் தோயும் ஒருத்தியையே.
11. ஒருத்தியை, ஒன்றும் இலா என் மனத்தின் உவந்து தன்னை
இருத்தியை, வெண்கமலத்து இருப்பாளை எண்ணெண் கலை தோய்
கருத்தியை, ஐம்புலனும் கலங்காமல் கருத்தை யெல்லாம்
திருத்தியை, யான்மற வேன்; திசை நான் முகன் தேவியையே.
12. தேவரும், தெய்வப் பெருமானும், நான்மறை செப்புகின்ற
மூவரும், தானவர் ஆகி உள்ளோரும், முனிவரும்
யாவரும், ஏனைய எல்லா உயிரும் இதழ் வெளுத்த
பூவரும் மாதின் அருள்கொண்டு, ஞானம் புரிகின்றதே.
13. புரிகின்ற சிந்தையின் ஊடே புகுந்து புகுந்து  இருளை
அரிகின்றது, ஆய்கின்ற எல்லா அறிவின் அரும் பொருளைத்
தெரிகின்ற இன்பம் கனிந்தூறி நெஞ்சம் தெளிந்து முற்ற
விரிகின்றது, எண்ணென் கலைமாது உணர்த்திய வேதமே.
14. வேதமும், வேதத்தின் அந்தமும் அந்தத்தின் மெய்ப் பொருளாம்
பேதமும், பேதத்தின் மார்க்கமும், மார்க்கப் பிணக்கு அறுக்கும்
போதமும், போத உருவாகி எங்கும் பொதிந்த விந்து
நாதமும், நாதவண்டு ஆர்க்கும் வெண்டாமரை நாயகியே.
15. நாயகம் ஆனமலர் அகமாவதும் ஞான இன்பச்
சேய் அகம் ஆன மலர் அகமாவதும் தீவினையால்
ஏய் அகம் மாறிவிடும் அகமாவதும் எவ்வுயிர்க்கும்
தாயகம் ஆவதும், தாதார் சுவேத சரோருகமே.
16. சரோருகமே; திருக்கோயிலும் கைகளும் தாள் இணையும்
உரோருகமும், திரு அல்குலும், நாபியும் ஓங்கிருள் போற்
சிரோருகம் சூழ்ந்த வதனமும் நாட்டம், சேயிதழும்
ஓரோர் உகம் ஈர் அரை மாத்திரை ஆன உரை மகட்கே.
17. கருந்தாமரை மலர், கண் தாமரைமலர், காமருதாள்
அருந்தாமரை மலர், செந்தாமரை மலர், ஆலயமாத்
தருந்தாமரை மலர், வெண்தாமரை மலர் தாவில் எழில்
பெருந்தாமரை மணக்கும் கலைக்கூட்டப் பிணைதனக்கே.
18. தனக்கே துணிபொருள் என்னும் தொல்வேதம்; சதுர் கத்தோன்
எனக்கே சமைந்த அபிடேகம் என்னும்; இமையவர் தாம்
மனக்கேதம் மாற்றும் மருந்து என்ப; சூடும் மலர் என்பன் யான்
கனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே.
19. கமலந்தனில் இருப்பாள் விருப்போடு அம்கரம் குவித்துக்
கமலம் கடவுளர் போற்றும் மென்பூவை; கண்ணில் கருணைக்
கமலந்தனைக் கொண்டுகண்டு, ஒருகால் தம் கருத்துள் வைப்பார்
கமலம் கழிக்கும் கலைமங்கை ஆரணி காரணியே.
20. காரணன் பாகமும் சென்னியும் சேர்தரு கன்னியரும்
நாரணன் ஆகம் அகலாத் திருவும், ஓர் நான் மருப்பு
வாரணன் தேவியும், மற்றுள்ள தெய்வ மடந்தையரும்
ஆரணப் பாவை பணித்த குற்றேவல் அடியவரே.
21. அடிவேதம் நாறும்சிறப்பு ஆர்ந்த வேதம் அனைத்தினுக்கும்
முடிவே, தவள முளரி மின்னே, முடியா இரத்ன
வடிவே, மகிழ்ந்து பணிவார் தமது மயல் இரவின்
விடிவே, அறிந்து என்னை ஆள்வார் தலந்தனில் வேறு இலையே.
22. வேறு இலையென்று, உன் அடியாரிற், சுடி விளங்கும் நன்பேர்
கூறிலை, யானும் குறித்து நின்றேன்; ஐம்புலக் குறும்பர்,
மாறிலை கள்வர் மயக்காமல், நன் மலர்த்தாள் நெறியில்
சேறிலை ஈந்தருள்; வெண்தாமரை மலர்ச் சேயிழையே.
23. சேதிக்கலாம் தர்க்க மார்க்கங்கள் எவ்வௌர் சிந்தனையும்
சோதிக்கலாம்; உறப் போதிக்கலாம்; சொன்னதே துணிந்து
சாதிக்கலாம்; மிகப் பேதிக்கலாம் முத்தி தான் எய்தலாம்;
ஆதித் கலாமயில் வல்லி பொற்றாளை அடைந்தவர்க்கே.
24. அடையாள நாள்மலர் அங்கையில் ஏடும் அணிவடமும்
உடையாளை நுண்ணிடை ஒன்றும் இலாளை, உபநிடதப்
படையாளை, எவ்வுயிரும் படைப்பாளைப் பதும நநுந்
தொடையாளை, அல்லது மற்று, இனியாரைத் தொழுவதுவே.
25. தொழுவார் வலம் வருவார், துதிப்பார் தம்தொழில் மறந்து
விழுவார், அருமறை மெய் தெரிவார், இன்ப மெய் புளகித்து
அழுவார், இன்னும் கண்ணில்நீர்மல்குவார் என்கண் ஆவது என்னை?
வழுவாத செஞ்சொற் கலைமங்கை பால் அன்பு வைத்தவரே.
26. வைக்கும் பொருளும், இல்வாழ்க்கைப் பொருளும், மற்றுளப் பொருளும்
பொய்க்கும் பொருள் அன்றி, நீடும் பொருள் அல்ல; பூதலத்தின்
மொய்க்கும் பொருளும், அழியாப் பொருளும் விழுப்பொருளும்
உய்க்கும் பொருளும், கலைமாது உணர்த்து உரைப்பொருளே.
27. பொருளால் இரண்டும் பெறலாகும் என்ற பொருள் பொருளோ?
மருளாத சொற்கலை வான்பொருளோ? பொருள் வந்து வந்தித்து
அருளாய் விளங்கு மவர்க்கு ஒளியாய் அறியாத வர்க்கு
இருளாய் விளங்கும் நலங்கிளர் மேனி இலங்கிழையே.
28. இலங்கும் திருமுகம்; மெய்யிற் புளகம் எழும்; கண்கள் நீர்
மலங்கும்; பழுதற்ற வாக்கும் வலிக்கும்; மனம் மிகவே
துலங்கும்; முறுவல் செயக் களி கூரும் சுழல் புனல் போல்
கலங்கும் பொழுது தெளியும், சொல்மானைக் கருதினர்க்கே.
29. கரியார் அளகமும், கண்ணும், கதிர் முலைக் கண்ணும், செய்ய
சரியார் கரமும், பதமும், இதழும், தவள நறும்
புரியார்ந்த தாமரையும், திருமேனியும், பூண் பனவும்
பிரியாது என்நெஞ்சினும் நாவினும் நிற்கும்; பெருந்திருவே.
30. பெருந்திருவும் சமயமங்கையும் ஆகி, என் பேதை நெஞ்சில்
இருந்தருளும் செஞ்சொல் வஞ்சியைப் போற்றில், எல்லா உயிர்க்கும்
பொருந்திய ஞானந்தரும்; இன்ப வேதப் பொருளும் தரும்;
திருந்திய செல்வம் தரும்; அழியாப் பெருஞ் சீர்தருமே.
  


No comments:

Post a Comment