Saturday, February 2, 2013

லட்சியத்தை அடைய என்ன செய்வது?

தொண்டு, தானம், இரக்கமான செயல்கள், ஆகியவற்றின் மூலம் பிறரைச் சந்தோஷப்படுத்தினால், நீங்கள் இன்பத்தை விதைப்பதோடு, இன்பத்தையும் அறுவடை செய்வீர்கள். விதியை உயரிய எண்ணங்களாலும்,

நற்செயல்களாலும், நற்சிந்தனையாலும் உங்களால் மாற்றியமைக்க முடியும்.
தன்னலமற்ற, பணிவுடைய தொண்டினால் இதயத்தைத் தூய்மைப்படுத்துங்கள். உடம்புக்கு வெளியே கிடைக்கும் இன்பத்தால் ஒரு போதும் நிறைவு கிடைக்காது என்பதை உணரக் கற்றுக் கொள்ளுங்கள்.
அனைத்து தீய பண்புகளும் கோபத்திலிருந்து புறப்படுகின்றன. கோபத்தை அடக்கிவிட்டால், தாமாகவே அனைத்து தீயகுணங்களும் தொலைந்து போகும்.  தீயவர்களைத் தண்டிப்பதையோ, நல்லவர்களை கவுரவிப் பதையோ இறைவன் செய்ய மாட்டான். நாம் செய்த செயல்களே நமக்கு பரிசு அல்லது தண்டனையைத் தருகின்றன.

பகைமை, பேராசை, தன்னலம், பொறாமை ஆகியவற்றை களைவதன் மூலம் இதயத் தோட்டத்தில் அமைதியை வளருங்கள், அப்போது தான் உங்களுடன் இருப்பவர்களுக்கும் அமைதியும், சமாதானமும் கிடைக்கும். உண்மையையும், நேர்மையையும் பின்பற்றினால், உங்கள் லட்சியத்தை அடைவது உறுதி. பெற்றோரை கடவுள் போல் நேசியுங்கள். அனைவரிடமும் அன்பை வளருங்கள். மனித சமுதாயத்தின் மீதுள்ள அன்பு, முதலில் நம் வீட்டிலேயே துவங்குகிறது என்பதை உணருங்கள்.

உங்களை தாக்கும் ஆசைகளும், கஷ்டங்களும் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் பிரார்த்தனையை முழுமையாக நம்புங்கள். பிரார்த்தனையால் ஊடுருவிச் செல்ல முடியாத உறுதியான கோட்டையை உங்களால் கட்ட முடியும். உங்கள் வருங்காலம், தலைவிதி, ஒழுக்கம் இவை அனைத்தும் உங்களின் எண்ணங்கள், செயல்கள் மூலமாகவே அமைகின்றன. வாழ்க்கையில் உயரிய எண்ணங்களை வளர்த்தால் உயரிய ஒழுக்கம் உருவாகும். தீய சிந்தனையால் தீமையே விளையும்.

ஆன்மிகத்துறையில் விரைவாக முன்னேற எண்ணினால் அகிம்சை, சத்தியம், பிரம்மச்சரியம் இவற்றை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மிருக குணத்தைப் போக்கி, மனிதத் தன்மையை கைக்கொள்வதே தெய்வீக வாழ்க்கை. இந்த தூய தன்மையை அனைவரும் அன்றாட வாழ்க்கையில் கடைபிடித்து வாழ்க்கையில் உயரலாம். -சிவானந்தர்.

No comments:

Post a Comment