Friday, January 10, 2014

சனியின் பாதிப்பிலிருந்து விடுபட என்ன பரிகாரம்?

சனி என்ற சொல்லுக்கு குளிர்ச்சி என்று தான் பொருள். இன்றைய விஞ்ஞானிகள் கூட, சனி கிரகத்தை ஆராய்ந்து அது பனிமயமாக இருப்பதாக ஒப்புக் கொள்கிறார்கள்.  நல்லதைச் செய்ய  வேண்டிய காலங்களில் வாரி வழங்குவதில் வள்ளல். கெடுதலைச் செய்ய வேண்டிய  சூழலில், சற்று பாதிப்பையும் தரும் குணம் படைத்தவர். எல்லாரும் பயப்படும் அளவிற்கு கெட்டவர் கிடையாது. இவரது பாதிப்பிலிருந்து விடுபட,  பிரதோஷ விரதம் இருப்பது மிகவும் உயர்ந்தது. மேலும், அன்றைய தினம் காளை மாட்டிற்கு அரிசி, வெல்லம், எள் கலந்து கொடுப்பது சிறந்த பரிகாரம்.

பெற்றோர் செய்த பாவம் சந்ததியைத் தொடருமா?

பிள்ளைக்கு தெய்வபலம் அதிகமிருந்தால் பெற்றோர் செய்த பாவம் அவர்களைத் தாக்காது. இருந்தாலும், பாவம் சந்ததியைத் தொடரும் என்பது உண்மையே. தெய்வ வழிபாடு, தானதர்மம் மூலம், இதை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

ஏகாதசி விரதம் யார் இருக்க வேண்டும்?

ஏகாதசிக்கு விரதத்திற்கு வயது வரம்பு ஏகாதசி விரதத்திற்கு எல்லாரும் இருக்கவேண்டிய விரதம் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது. எட்டு முதல் எண்பது வயதுக்குள் உள்ளவர்களே மேற்கொள்ள வேண்டும். இதனை, அஷ்ட வர்ஷாதிக: மர்த்ய: அபூர்ணாசீதி வத்ஸர:! ஏகாதச்யாம் உபவஸேத் பக்ஷயோ: உபயோ: அபி!! என்னும் ஸ்லோகம் குறிப்பிடுகிறது.

ஏகாதசி வளர்ந்த கதை: மார்கழி வளர்பிறை ஏகாதசியிலிருந்து பத்து நாட்கள் வேதங்களை ஜெபித்து, ஸ்ரீரங்கத்திலுள்ள நம்பெருமாளை வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில், வேதத்தோடு நம்மாழ்வாரின் பாசுரங்களையும் பாடும் நடைமுறையை திருமங்கையாழ்வார் ஏற்படுத்தினார். நாதமுனிகள், மற்ற ஆழ்வார்களின் பாடல்களையும் சேர்த்துப் பாடும் வழக்கத்தை உண்டாக்கினார். அதற்காக, ஏகாதசிக்கு 10நாட்களுக்கு முன்பே இவ்விழா தொடங்கப்பட்டது. பாட்டு பாடுவதோடு, அபிநயமாக நடித்துக் காட்டி வியாக்யானம் (பாடலுக்கான விளக்கம்) சொல்லும் முறையை பிற்காலத்தில் மணவாள மாமுனிகள் ஏற்படுத்தினார். ஆடியபடியே பாடுவதற்கு அரையர் சேவை என்று பெயர். இந்த நடைமுறையே ஸ்ரீரங்கத்தில் பின்பற்றப்படுகிறது. 

வைகுண்ட ஏகாதசி தோன்றியது எப்படி?

நார, அயந என்னும் இரு சொற்கள் கூடி நாராயண என்னும் ஒரு சொல்லாயிற்று நாரம் என்பது உயிர்த்தொகுதி, அயனம்-இடம் உயிரிங்களுக்கு இடமானவன் நாராயணன். உயிரினங்களைக் காப்பதற்கு இறைவன் சில தலங்களைத் தேர்ந்தெடுப்பது போல சில காலங்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறான். அவை புண்ணிய காலங்கள் எனப்படும். தலங்களில் திருவரங்கம் போல புண்ணிய காலங்களில் ஏகாதசி உயர்ந்தது; ஏகாதசிக்கு ஹரிதனம் (நாராயணனுடைய நாள்) என்னும் பெயர் உண்டு. ஏகாதசி நோன்பினைக் கைக்கொண்டு ஒழுகுவதே வைணவம். எட்டு வயதுக்கு மேல் எண்பது வயது வரை மானிடர் யாவராயினும் இரு பட்சங்களிலும் ஏகாதசியன்று உபவாசம் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

முரன் என்ற அசுரனால் துன்புறுத்தப்பட்ட இந்திராதியர், சிவனை அணுகி அபயம் கேட்டனர். நாரணனைச் சரணடையுமாறு வழிகாட்டினார் சிவன். சரணடைந்த தேவர்களுக்காக முன்னின்று யுத்தம் புரிந்தான் நாரணன். முரன் கிளர்ந்தெழுந்தான், அமரர் சிதறினர், இறைவனும்  ஆற்றலிற் குறையுடையவன் போல் பயந்தோடி வதரி மலையிலுள்ள சிம்ஹவதி என்னும் குகையில் போய் களைப்புதீர கண்ணுறங்கினான். முரன் பின் தொடர்ந்து வாள் கொண்டு வதம் செய்ய முற்பட்டான். அவ்வமயம் இறைவன் திருமேனியினின்று கன்னி ஒருத்தி வெளிப்பட்டுப் போரிட முரனுக்கு முன்னின்றாள். முரன் முடிந்தான். கன்னி வடிவத்தில் தன்னிடமிருந்து வெளிப்பட்ட சக்தி அவ் இறைவனுக்கே வியப்பளிக்கிறது.

என் பகைவனை முடித்தது யார்? என்று பரமன் கேட்கிறான். அக்கன்னி உலகை அச்சுறுத்தும் அசுரனைத் தானே கொன்றதாக கூறினாள். பேருதவி புரிந்த அக்கன்னியிடம் நன்றி கூற வரம் வேண்டுமாறு கேட்டான் மாயன். ஏகாதசி என்று பெயர் கொண்ட அவ்வனிதை நின் அன்புக்கு உரியவளாக நான் ஆகவேண்டும் , திதிகளுள் முக்கியமானவளாக நான் விளங்க வேண்டும். நான் பிறந்த இந்நாளில் உபவாசம் இருப்போர் சித்திகள் அனைத்தும் பெற வேண்டும் என்னும் வரங்களை வேண்டிக்கொண்டாள். இப்படிதான் ஏகாதசி தோன்றியது, மார்கழி மாதம் கிருஷ்ணபட்சத்தில் ! ஆகையால், மார்கழி மாதத்து கிருஷ்ணபட்ச ஏகாதசி உத்பத்தி ஏகாதசி என்று வழங்கப்பட்டது. மார்கழி மாதத்து சுக்லபட்ச ஏகாதசி மோட்ச ஏகாதசி என்று வழங்கப் பெறும். இதுவே விமோசனம் தரவல்லது இந்த ஏகாதசி விரதத்தைக் கைக்கொண்ட அளவிலே ஒருவன் இன்னல்களிலிருந்து விடுதலை பெறுவதோடு தன் தொடர்புடையவர்களையும் இன்னல்களிலிருந்து விடுவிக்கும் ஆற்றல் பெறுகிறான் என்கிறது சாஸ்திரம்

வைகுண்ட ஏகாதசியில் எவ்வாறு விரதம் இருக்க வேண்டும்?

ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று  பரமேஸ்வரனே சொல்லியிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.  ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒரு பொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும் விரதம் இருக்கவேண்டும். அன்று துளசிஇலை பறிக்கக்கூடாது. பூஜைக்குரிய துளசியை முதல்நாளே பறித்துவிட வேண்டும். மறுநாள் துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடி துளசிதீர்த்தம் அருந்த வேண்டும். பாரணை என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ணவேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் உணவில் இடம்பெறுதல் அவசியம். அகத்திக் கீரையில் பாற்கடல் அமுதமும், நெல்லி, சுண்டைக்காயில் லட்சுமியின் அருளும் இருப்பதாக ஐதீகம். சுவாமிக்கு நைவேத்யம் செய்து, ஒரு ஏழைக்கு தானம் செய்த பிறகு. சாப்பாட்டை முடித்து விட வேண்டும். சூரிய உதயத்திற்குள் சாப்பிடுவது மிகவும் உசிதம். அன்று பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க  வேண்டும். வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் செல்லும் பாக்கியம் பெறுவர்.

ஏகாதசிக்குரிய தலம்: நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில் ஏகாதசி விரதத்திற்கு பெயர் பெற்றது.  இத்தலம் ஏகாதசி விரதத்திற்கு உரிய தலம் என்பதால் ஏகாதசி விரதம் இருக்க நினைப்பவர்கள் இத்தலம் வந்து வழிபட்டு சென்று விரதத்தை ஆரம்பிப்பது நல்லது. பெருமாளின் 108 திவ்ய தேசத்தில் இதுவும் ஒன்று.

Monday, January 6, 2014

மூன்று வேளை வணங்க வேண்டிய தேவியர் !

காயத்ரி காலை வணக்கத்துக்குரியவள். இவள் ரிக் வேதத்தின் தலைவியாவாள். வீட்டில் வளர்க்கும் ஹோமத் தீக்கு இவளே அதிபதி. நான்கு முகங்கள், எட்டுக் கரங்களுடன் அன்ன வாகனத்தில் காட்சி தருபவள்.

நண்பகல் பிரார்த்தனைக்குரியவள் சாவித்ரி. யஜுர் வேதம் இவளுக்குரியது, இவள் நான்கு முகங்களையும் அதில் பன்னிரு விழிகளையும், நான்கு கரங்களையும் கொண்டவள். இவளது வாகனம் எருது.

அந்தி வேளை வணக்கத்துக்குரியவள் சரஸ்வதி. சாமவேதம் இவளுக்குரியது. ஆஹ்வனீய தீயின் ஒளி இவள். ஒற்றை முகமும் நான்கு கரங்களும் கொண்டு அருள்பாலிப்பவள். இவளது வாகனம் கருடன்.

Sunday, January 5, 2014

ராகு வேளையில் துர்க்கை, காளியை வழிபடுவது ஏன்?

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு அதிதேவதை உண்டு. அதன்படி ராகுவிற்கு துர்க்கை அதிதேவதை. ராகுதோஷம், திருமணத்தடை, புத்திரப்பேறின்மை நீங்க காளி, துர்க்கை வழிபாட்டை ராகுகாலத்தில் மேற்கொள்வது நல்லது.