Tuesday, November 13, 2012

கந்தசஷ்டியில் எவ்வாறு விரதம் இருக்க வேண்டும்?

அதிகாலை4.30-6 மணிக்குள் நீராடவேண்டும். நாள்முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள், பால்,பழம் மட்டும் சாப்பிடலாம். ஓரளவு தாக்கு பிடிப்பவர்கள் ஒருவேளை உணவும், மற்ற நேரங்களில் பால், பழமும் சாப்பிடலாம். உடல்நிலை காரணமாக சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் எளிய உணவு எடுத்துக் கொள்ளலாம். ஒரு காலத்தில் வெறும் தண்ணீருடன் விரதம் இருந்தவர்கள் உண்டு.
* முருகனுக்குரிய மந்திரங்களான "ஓம் சரவணபவ "ஓம் சரவணபவாயநம "ஓம் முருகா ஆகிய மந்திரங்களில் ஏதாவது ஒன்றை நாள் முழுதும் ஜெபித்து வர வேண்டும்.
* திருப்புகழ், கந்தசஷ்டிகவசம், ஸ்கந்தகுருகவசம், சண்முககவசம் பாடல்களில் ஏதேனும் ஒன்றை காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்ய வேண்டும்.
* முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும்.
* கோயிலுக்கு குழுவாகச் சென்று, ஒருவர் முருகன் நாமத்தைச் சொல்ல மற்றவர்கள் "அரோகரா கோஷமிடலாம். உ.ம்: கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா.
* மலைக்கோயில்களில் மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும். கோயில்களில் தங்கி விரதமிருப்பது நல்லது. பணி காரணம் உள்ளவர்கள் அவரவர் இருப்பிடத்திலேயே விரதமிருக்கலாம்.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்: இந்தப் பழமொழியின் உண்மையான விளக்கத்தை வாரியார் அவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று கூறுகிறார். இந்த விரதம் இருப்பவர்களுக்கு புத்திரதோஷம் விலகும். மழலை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.

மளிகைக்கடை முருகன்: 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த சொக்கநாதப்புலவர், சுவாமிமலை முருகனை மளிகைக்கடை வியாபாரியாக சித்தரித்துப் பாடியுள்ளார். அந்தப்பாடலில், ""ஏரகத்துச் செட்டியாரே! (சுவாமிமலையின் புராணப்பெயர் திருஏரகம்) என்னிடம் குழம்புக்காக வாங்கிய வெங்காயம், பெருங்காயம், வெந்தயம் ஆகியவை உள்ளன. இப்போது அஜீரணத்தால் அவதிப்படுகிறேன். இந்தப் பொருட்களை சாப்பிட்டால் அது நீங்கி விடும். ஆனால், வெங்காயம் வாடி வதங்கி விட்டது. அதனால் மற்ற பொருள்கள் இருந்தும் பயனில்லை. அதனால், இனி சீரகத்தை மட்டும் கொடு. பெருங்காயம் இனி தேவைப்படாது, என்கிறார்.  இதன் உண்மையான பொருள் என்ன தெரியுமா? "வெங்காயம் என்பது முன்வினைப்பயனால் ஏற்பட்ட உடம்பு. " "பெருங்காயம் என்பது பெரிய உடம்பு. சீரகம் என்பது "மோட்சம். சுவாமிநாதனே! எனக்கு மோட்சத்தைக் கொடுத்து விட்டால், இனி பிறவியில் சிக்கி பெரிய உடம்பை எடுக்கும் வேலை இருக்காது.

மொட்டைத்தலையில் குடுமி: முருகப்பெருமான் தாயின் சம்பந்தம் இல்லாமல், தந்தை சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர். இதை விளக்கும் விதத்தில் பழநியில் தண்டாயுதபாணி என்னும் பெயரில் சிவாம்சத்துடன் அபிஷேகப்பிரியனாக விளங்குகிறார். இவருக்கு பால்,பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருநீறு அபிஷேகம் சிறப்பானது. இவர் மொட்டைத் தலையுடன் காட்சியளிக்கிறார். ஆனால், அபிஷேகத்தின் போது ஒரு குடுமி இருப்பதைக் காணமுடியும். ஸ்தல புராணத்தில் முருகனின் குடுமியழகு பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.

கேரள மக்கள் குவிவது ஏன்?
போகர், புலிப்பாணி சித்தர்களால் வழிபாடு செய்யப்பட்ட பழநி முருகன் கோயிலில், சேரமன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். மூலவர் தண்டாயுதபாணி, சேரநாடான கேரளாவை நோக்கி மேற்குமுகமாக வீற்றிருக்கிறார். இதனால், கேரளமக்கள் இக்கோயிலுக்கு அதிகம் வருகின்றனர்.

கந்தசஷ்டி தோன்றிய கதை தெரியுமா?

படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். (தட்சனே அடுத்த பிறவியில் சூரபத்மனாக பிறந்தான். தட்சனின் மகள் பார்வதி. பார்வதியின் மகன் முருகன். இதன் படி பார்த்தால் முருகனுக்கு சூரபத்மன் தாத்தா உறவு வருகிறது என்ற கருத்தும் உள்ளது.)
அடுத்து காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர்.
காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், குழந்தைகளே! வடதிசைநோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். இவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றனர்.  

இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன்  சிவனிடம் கேட்டான். பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அவனுக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், எனக் கேட்டான். பெண்ணையன்றி வேறு யாரால் ஜீவர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது அவனது கணக்கு. இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரிடம் ஆசி பெற்று தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான்.
அசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றின! அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கிறது. பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர். மேலும் முருகப் பெருமான் சிவாக்னியில் தோன்றியவராதலால் ஆறுமுகமே சிவம்-சிவமே ஆறுமுகம் என்பதுண்டு. அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க... அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். இத் திருவுருவைப் பெற்றதால் ஆறுமுகசுவாமி என்ற பெயர் முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது. அத்துடன் இந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி ஒரே குழந்தையாக ஸ்கந்தம் (சேர்த்தல்) செய்ததால் முருகன் ஸ்கந்தப்பெருமான் ஆனார்.  முருகன் என்றால் அழகன். கோடி மன்மதர்களை விட அழகாக இருந்தான் அவன்.முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. அஞ்சும் முகம் தோன்றும் போது இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள். உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை, என்றார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில்  சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.

தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர். சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், உலகாள வந்த முருகனுக்கு இது சாதாரண விஷயம். அவர் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். ஏ சிறுவனே! நீயா என்னைக் கொல்ல வந்தாய். பச்சை பிள்ளையப்பா நீ! உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. பாலகா! இங்கே நிற்காதே, ஓடி விடு, என்று பரிகாசம் செய்தான். முருகன் அசரவில்லை. தன் உருவத்தைப் பெரிதாக்கி அவரைப் பயமுறுத்தினான். அதன் மீது சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார் முருகன். உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான். மிகப்பெரிய அலைகளுடன் முருகனைப் பயமுறுத்திப் பார்த்தான். உடனே நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது. இருப்பினும், முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்றும், அது பாவமென்றும் அவன் கருதினான். அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு தான், கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா! என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும், என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.

முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். (நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்பர்.  சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.)வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார். சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. பகைவனுக்கும் அருளும்பரமகாருண்ய மூர்த்தி யான அவர், சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். இச்செயலால்வைதாரையும் வாழவைப்பவன் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தைக் காணலாம். சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.

கிருத்திகை என்றால் திருத்தணி. (இங்கு மட்டும் சூரசம்ஹார விழா நடைபெறாது). தைப்பூசம் என்றால் பழனி. கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர். வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால் தான், வேல் வேல் வெற்றி வேல் என்று முழங்குகிறார்கள் பக்தர்கள். அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது. சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது கந்தசஷ்டி ஆயிற்று. முருகப் பெருமான் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம். கந்தசஷ்டி திருநாளில் சக்திவேலுடன் கூடிய முருகப்பெருமானை வணங்கி நற்கதி பெறுவோம்.

Thursday, November 8, 2012

இறைவன் எப்போது அழுகிறார்?

ஒரு குழந்தை எப்போது சிரிக்கும், எப்போது அழும்? என்றே கூற முடியாத போது, கடவுள் சிரிப்பாரா, அழுவாரா என்பதை எப்படிக் கூறுவது? இறைவன் பரபிரம்மசொரூபியாக இருக்கும்போது, குணாதீதனாக- ஆனந்த சொரூபியாகத் திகழ்கிறார். அதே இறைவன் லீலையில், மனிதனாக அவதரிக்கும்போது அவருக்குச் சிரிப்பும் அழுகையும் சகஜமே. பரபிரம்ம ஸ்வரூபி ஸ்ரீராமர், மனிதனாக வந்து சீதையைக் காட்டில் பிரிந்தபோது துன்பத்தில் அழுதார். மாய வலையில் சிக்கி பரபிரம்மமே அழுதது... ஆம், ஆண்டவன் சிரிக்கிறார்; அழுகிறார்- அதுவும் மனிதர்களைப் பார்த்து! மேலும் இறைவனை மனிதன் சிரிக்கவும் வைக்கிறான், அழவும் வைக்கிறான். இறைவனின் சிரிப்பு இரு விதம். 1. பரிகாசச் சிரிப்பு, 2. பிரசன்ன சிரிப்பு.

சிவபெருமானின் கண்ணீரும் சிரிப்பும்: தாரகாசுரனின் மூன்று மகன்களும் சிவபக்தர்களாக இருந்தார்கள். ஆனால் காலப்போக்கில் அகங்காரம் பிடித்து, தாங்களே கடவுள் என்று எண்ணித் தாறுமாறாக வாழ ஆரம்பித்தனர். எவ்வளவு அருமையான பக்தர்கள் இப்படி ஆகிவிட்டார்களே என்று வருந்திக் கண்ணீர் வடித்தார் சிவபெருமான். சிவனின் - ருத்திரனின் அக்ஷத்திலிருந்து (கண்கள்) திவலையாகக் கண்ணீர் வடிந்தது. அதுவே ருத்ராக்ஷமானது! அந்த மூவரும் கட்டுக்கடங்காமல் போகவே, தேவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த அசுரர்களுடன் போர் புரிய ஒரு தேரை உருவாக்கினார்கள். ஒவ்வொருவரும் போருக்கான ஆயுதமாகவும், தேரின் பாகங்களாகவும் உருமாறினார்கள். சிவனின் பராக்கிரமத்தை மறந்து தேவர்கள் ரதத்தைச் செலுத்தும்படி அவரிடம் வேண்டினார்கள். ஈசன் ரதத்தில் ஒரு காலை வைத்தார். உடனே ரதம் நொறுங்கியது. இவ்வளவு சக்திமிக்க சிவபெருமானைப் புரிந்து கொள்ளவில்லையே என தேவர்களுக்கு ஆச்சரியம். இதைக் கண்டு இறைவன் சிரித்தார்; சிரித்தபடி அசுரர்களின் மூன்று பலமான கோட்டைகளைப் பார்க்க, மூன்றும் அக்கணமே சாம்பலாயின. அழிந்தவை, அசுரரின் அகங்காரக் கோட்டை மட்டுமல்ல, தேவர்களின் அறியாமைக் கோட்டையும்தான்! இப்படி சிவன் அழுதார், ருத்திராக்ஷத்தைப் படைத்தார்; சிவன் சிரித்தார், திரிபுரத்தை எரித்தார்.

கண்ணீருடன் பெருமாள்: திருக்கோட்டியூர் நம்பி என்ற வைஷ்ணவ அடியார் எழுதிய வார்த்தா மாலை என்ற கிரந்தத்தில் வரும் ஒரு பாடல் பெரும் உண்மைகளைக் கூறும். கடவுள் மனிதனைப் படைத்து ஏதோ ஒரு மகத்தான காரியத்தைப் புரிய உலகிற்கு அனுப்புகிறார். ஆனால் அவன் இங்கு வந்ததும் எந்நேரமும் எதையாவது பிடித்துக் கொண்டுச் சுற்றித் திரிகிறான். எதற்காக? அனைத்தும் வயிற்றுக்காகத்தான். உணவு உடலுக்குப் போகிறது. அவ்வுடல் ஆண்டு அனுபவித்த பின் இறுதியில் மண்ணிற்குப் போகிறது. இறைவன் அளித்த உயிரோ கர்மத்தோடு போகிறது. நல்லவை செய்திருந்தால் நல்லவிதமாகப் போகும். தீயதைச் செய்திருந்தால் தீயதாகப் போகும். இப்படி, தான் படைத்த மனிதன் மண்ணோடும் கர்மத்தோடும் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வதைப் பார்த்து, இறைவன் உயர்ந்த காரியம் செய்ய உலகிற்கு அனுப்பி வைத்தேன்; இவன் இப்படி ஆகிவிட்டானே! என்று கண்ணீர் வடிப்பாராம்.
இதனை திருக்கோட்டியூர் நம்பி கூறுகிறார்:
விருத்தி சோறோடே போகும்
சோறு உடம்போடே போகும்
உடம்பு மண்ணோடே போகும்
உயிர் கர்மத்தோடே போகும்
ஈஸ்வரன் கண்ண நீரோட கை வாங்கும்.
உலகியலில் உழன்று லவுகிக நினைவுகளிலேயே ஊறிக் கிடப்பவர்களைப் பார்த்து தெய்வம் சிரிக்கிறது - பரிகாசமாக!

நாம் மூழ்கி நீராடிய நதிகள் பாட்டிலானது எப்படி?

ஒரு காலத்தில் நாம் ஆற்றில் மூழ்கி நீராடினோம். இப்போது, ஆறுகள் எதிலும் தண்ணீர் இல்லை. தப்பித்தவறி வந்தாலும் அது சுத்தமாக இல்லை. ஆறுகளை எப்படியெல்லாம் சீரழிக்க வேண்டுமோ அந்தளவுக்கு அவமானப்படுத்தி விட்டோம்! பூமி மாதாவுக்கே பொறுக்கவில்லை. இனி எதற்கு உங்களுக்குத் தண்ணீர்? என ஓடுவதையே நிறுத்தி விட்டாள். வருணனும் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறான். பெய்தால் மொத்தமாகப் பெய்து ஆற்றின் அருகிலேயே நெருங்க விடாமல் செய்து விடுகிறான். இந்த நிலை ஏன் ஏற்பட்டதென்றால், சாஸ்திரப்படி நாம் நடந்து கொள்ளவில்லை. ஆற்றுநீரை வாயில் எடுத்து, ஆற்றிலேயே உமிழக்கூடாது. நீர் மொண்டு கரைக்கு வந்து வெளியே தான் உமிழ வேண்டும். ஆறுகளின் உருவம் மற்றும் ஓடும் நீர் குறித்து பரிகாசம் செய்யக்கூடாது. இரவில் ஆறு, அருவிகளில் நீராடக் கூடாது. கிணறுகளில் இரவு நேரத்தில் தோண்டி, வாளிகளை உள்ளே போட்டு நீர் இறைக்கக்கூடாது. இவ்வாறு செய்தால் இரவில் உறங்கும் நதிதேவதைகளை எழுப்புவதாக அர்த்தம். (உறங்குபவர்களை தெரிந்தே எழுப்புவது கொடிய பாவம்). காலில் நேரடியாக தண்ணீர் ஊற்றி கழுவக்கூடாது. தண்ணீரை முகந்து கை வழியே வழியவிட்டு தான் கால் கழுவ வேண்டும். ஏனெனில், தண்ணீரில் வருணன் இருக்கிறான். அவனை நேரடியாக காலில் போட்டு மிதிக்கக்கூடாது. காலைத் தேய்த்துக் கழுவ கைகளையே பயன்படுத்த வேண்டும். ஒரு காலை மற்றொரு காலால் தேய்த்தால், அவ்விடத்தை விட்டு லட்சுமி புறப்பட்டு போய்விடுவாள். அவளுக்கு இந்தச் செயல் பிடிக்கவே பிடிக்காது. உடலில் துணி இல்லாமல் குளிக்கக்கூடாது. இதனால் தான் குழந்தைகளுக்கு கூட அரைஞாண் கயிறைக் கட்டி விடுகிறார்கள். இதை மீறி யாராவது நடந்தால் அடுத்த பிறவியில் பட்டமரமாகப் பிறப்பார்கள் என்கிறது சாஸ்திரம். இதில் ஏதாவது ஒன்று இப்போது நிகழ்கிறதா! இல்லை... எனவே நதிகள் நம்மிடம் கோபித்துக் கொண்டன. தண்ணீர் இல்லை. ஆறு சுருங்கி 20 ரூபாய் பாட்டிலாக நம் கையில் இருக்கிறது. இதே நிலை நீடித்தால் பாட்டில் தண்ணீருக்கும் ஆபத்து தான்!

Monday, November 5, 2012

சாப்பாடு விஷயத்தில் சாஸ்திரம்... சொல்றதைக் கேளுங்க!

தனக்குத்தானே சோறிட்டுக் கொள்வது ஆயுளைக் குறைக்கும். இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித்தயிர், இலைக்கறி (கீரை), நெல்லிக்காய் இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் லட்சுமி அவ்வீட்டில் வாசம் செய்யமாட்டாள். பால்சோறு சாப்பிடலாம். கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் ஆயுள் வளரும். மேற்கு நோக்கினால் பொருள் சேரும். தெற்கு நோக்கினால் புகழ் வளரும். வடக்கு மட்டும் கூடாது. நோய் வரும். சோறு, நெய், உப்பு ஆகியவற்றை கையால் எடுக்கக்கூடாது. கரண்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

கடவுளுக்கு பறவை, விலங்குகள் வாகனமாக இருப்பது ஏன்?

அனைத்து உயிர்களும் கடவுளின் அம்சமே. இன்னும் சொல்லப்போனால், கடவுளின் முன், நேர்எதிர் குணம் கொண்ட உயிர்கள் கூட சேர்ந்திருக்கும். பாம்பும், மயிலும் முருகனிடமும், பாம்பும், கருடனும் விஷ்ணுவிடமும், சிங்கமும், காளையும் சிவபார்வதி முன்னிலையிலும் சாந்தத்துடன் கூடி இருப்பதைக் காணலாம். எதிரெதிர் குணமுள்ள விலங்குகளே, கடவுளின் முன் கூடி வாழும் போது, ஒரே இனத்தில் பிறந்த மனிதன் அன்புடன் கூடி வாழ்ந்தால் என்ன என்பதை இது வலியுறுத்துகிறது.

Thursday, November 1, 2012

மரத்தின் அடியில் ஏன் தெய்வங்களை வைத்தனர்?

அரசமரம், வேப்பமரம் இரண்டுக்கும் கீழே விநாயகர் மற்றும் நாகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்வது வழக்கமாக இருக்கிறது. இதன் ரகசியம் என்ன தெரியுமா? மழை பெய்தாலோ, நல்ல வெயில் அடித்தாலோ குடை வேண்டும். அரசமரத்திலும், வேப்பமரத்திலும் மழை மற்றும் கோடை காலத்தில் இலைகள் நெருக்கமாக இருக்கும். தன் கீழே பிரதிஷ்டை செய்யப்படும் பிள்ளையாரையும், நாகராஜாவை யும் அவை குடைபிடித்து பாதுகாப்பதாக ஐதீகம். இயற்கையும் இறைவனை வணங்கு கிறது என்பது ஒரு ரகசியம். பனிக்காலம் இலையுதிர் காலம். அப்போது, இந்த மரங்கள் இலையை உதிர்த்து விட்டு கட்டைகளுடன் நிற்கும். அதாவது, குடையை மடக்கி விடும் எனலாம். அப்போது, சூரியன் தன் கதிர்களை இந்த இடைவெளி வழியே பாய்ச்சி, விநாயகரையும், நாகரையும் வழிபடுவான். அதுமட்டுமல்ல, வெயில், மழை காலத்தில் மரத்துக்கு கீழே மனிதர்கள் ஒதுங்குவார்கள். பனிக்காலத்தில் இளவெயில் பட்டால் தான் உடலுக்கு உஷ்ணம் கிடைக்கும். சீதோஷ்ண நிலையால் அவர்களைக் கஷ்டப்படுத்தி விடக்கூடாது என்ற கருணை யுடன் தெய்வங்கள் மரத்தடிகளை தங்கள் இருப்பிடமாக்கிக் கொண்டு விட்டனர் என்பது இன்னொரு ரகசியம். மரத்தடியில் ஒதுங்கும் சாக்கிலாவது, அங்கிருக்கும் இறைவனை ஒருதடவையாவது மனிதன் வணங்கிவிட மாட்டானா என்ற மகான்களின் ஆதங்கம், மரத்தடி தெய்வ பிரதிஷ்டையின் மற்றொரு ரகசியம்.